என் மேகம் ???

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



(படம்: இணையம்)

விடிந்து விடும்
என்ற நம்பிக்கையில் தான்
விழிகள் திறக்கிறோம்

வாழ்வோம்
என்ற நம்பிக்கையில் தான்
வாழ்ந்து பார்க்கிறோம்

புதுமை தரும்
என்ற நம்பிக்கையில் தான்
புத்தாண்டு என்கிறோம்

நல் புதுமைகள் தந்திட
எங்கும் அமைதி தவழ்ந்திட
மேன்மேலும் உலகம் செழித்திட
மானுடம் என்றும் தழைத்திட
பூத்திடுவாய் புத்தாண்டே!!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, December 29, 2008

பறவைகள் பலவிதம்...



கிருஸ்துமஸ் அன்னிக்கு புலிகாட் போகலாம்னு ப்ளான். ஆனால் சில மக்கள் அங்கே குடும்பத்தோடு போக வேண்டாம்னு அறிவுரை வழங்கியதால் (அப்படியா? எனி கமெண்ட்ஸ்?), வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைச் சரணடைந்தோம்.

அங்கே மதிய சாப்பாடு கிடைக்காது என்று புளிச்சோறும், தயிர்ச்சோறும் எடுத்துக்கொண்டோம். காரில் ஒரு மழலைப்பட்டாளத்தோடு காலை பத்து மணிக்குப் பயணம் தொடங்கியது. பரனூர் வரை சாதாரண காட்சிகள் தான். ஆனால் பரனூரில் இருந்து சில தொலைவு வரை இயற்கை காட்சி மிக மிக அழகாக இருந்தது. நம் சென்னை அருகிலா இது என்று ஆச்சரியப்படுத்தியது. வேடந்தாங்கலுக்குப் பிரியும் ஒரு கிளைச் சாலையை இம்முறை ஒழுங்காகப் பார்த்ததால் ஊரைச் சுற்றாமல் நேராக வேடந்தாங்கலுக்குப் போகும்பொழுது மணி 12.30.

பனங்கிழங்கு அவித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். நெல்லிக்காயும் , கொய்யாவும் பச்சை பனங்கிழங்கும் கிடைத்தன. 20 ரூபாய்க்கு பைனாகுலர் வாடகைக்குக் கொடுத்தார்கள். 20ருபாய்க்கு வாங்கும் பைனாகுலரை விட கொஞ்சம் பரவாயில்லை. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றோம்.



மிக அழகான அமைதியான இடம். ஆரவாரமில்லாத கூட்டம். தண்ணீர் ஏரியில் தளும்பிக் கொண்டிருக்க, சற்று தொலைவில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்தும், அமர்ந்தும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தன. நாங்கள் கரையில் நடந்தவாறு இயற்கையைப் பருகிக் கொண்டிருந்தோம். நாரை, கொக்கு, அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, நீர்க்காகம், வாத்து என்று பலப்பல பறவைகள். சென்ற முறை பல பறவைக் குஞ்சுகளைக் காண முடிந்தது. இம்முறை ஒரே ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு தருவதை மட்டுமே காண முடிந்தது. மீதியெல்லாம் வளர்ந்து விட்டன போலும்.

கரை நெடுக வெயிலின் கடுமை தெரிய விடாத நிழல் தரும் மரங்கள். ஆங்காங்கே நின்று காண வாட்ச் டவர், மற்றும் நின்று காண வசதியாக "platform" இருந்தது. வழி முழுமையும் ஓய்வெடுக்க பெஞ்சுகள், தாகம் தீர்க்க குடிநீர் குழாய், கழிவறை வசதி என்று எல்லாம் இருந்தன. முன்பெல்லாம் குரங்குகள் நிறைய இருக்கும், இம்முறை அவ்வளவாகத் தட்டுப்படவில்லை.

கட்டி வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, மேலும் சிறிது நேரம் பறவைகளை இரசித்தோம். குழந்தைகள் எல்லாம் நடைபாதையில் ஓடி விளையாடினர். நேரம் சென்றதே தெரியவில்லை. நான்கு மணிக்குப் பின்பு இன்னும் பல பறவைகள் வர ஆரம்பித்தன. ஐந்து மணிவரை இரசித்துவிட்டுக் கிளம்பினோம். வேடந்தாங்கலை விசிட் அடிக்க சரியான நேரம் நவம்பர் முதல் சனவரி வரை என தமிழ்நாடு சுற்றுலா வலைதளம் கூறுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

இந்த பதிவில் நான் சொல்லும் விஷயம் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். என்றாலும், சிலருக்குப் புதிதாகத் தெரிந்து ஒரு சிறு எண்ணம் தோன்றலாம் என்றே இப்பதிவு.

கிருஸ்துமஸுக்காக அலுவலகத்தில் வசூலித்த சிறு நன்கொடை தொகையை ஓர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்கச் சென்றிருந்தோம். அவர்கள் தாய் தந்தை அற்றவர் என்று மட்டுமல்லாது, பெற்றோர், உற்றோர் இருந்தும் இல்லாதவர்கள். கிட்டதட்ட 50 பேர் கொண்ட அவ்வில்லத்திற்கு ஒரு நாள் உணவுக்கான தொகை 1500 ருபாய்கள். எனக்கு ஒரு 365 பேர் ஒரு நாள் உணவுச் செலவை ஏற்றுக் கொள்ளக் கிடைத்தால், இக்குழந்தைகளுக்கான ஒரு வருட சாப்பாட்டு பிரச்னை தீர்ந்து விடும் என்று அவ்வில்லத் தலைவி ஒரு brochure கொடுத்தார்கள். இது போக துணிமணி, படிப்பு என்று அவர்கள் செலவுகளைக் கவனிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த இன்னோர் ஆதரவற்றோர் இல்லத்திலும், ஒரு குழந்தையைப் பேண ஒரு வருடத்திற்கு அவர்களுக்குத் தேவைப்படும் தொகை 5000 (அ) 6000 என்று இருக்கும். அதாவது 500 ரூபாய் கொடுத்தால், ஒரு குழந்தைக்கு ஒரு மாதச் செலவு கிடைத்துவிடும். உங்கள் அருகில் இருக்கும் இது போன்ற ஆதரவற்றோர் இல்லம் இருந்தால், வருடத்தில் ஒரு நாளாவது இது போன்ற உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். இந்த ஊக்கம் மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு தர உறுதுணையாக இருக்கும்.

Wednesday, December 24, 2008

வெற்று எண்ணங்கள்

தேடித் தேடிக்
கொடுத்த புத்தகம்.
அவர்
படித்துக் கொண்டிருக்கும் பொழுது
கதை பிடித்திருக்கிறதா என்று
தொண்டை வரை வந்தது கேள்வி...
கதையை முடிக்கட்டும்
என்று காத்திருந்தது
இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறது...
கதை முடிந்து விட்டது

***************

வெற்றிடம்...
அறிவியல் விளக்கம்
காற்றில்லாத இடம்
எப்படி இருக்கும்?
மூச்சு திணறுமா?
புரியவில்லை...
அந்த வெற்றுத்திண்ணையைக்
காணும் வரை

**************


நெஞ்சு நிறைந்த பயங்களுடன்
ஒரு தாயின் அறிவுரை...
பயப்படக் கூடாது
தைரியமா இருக்கணும்

***********

Friday, December 19, 2008

ஒரு தாயின் பரவசம்




கிட்டதட்ட 4 வருடங்களுக்கு முன், சற்றே ஓய்வு கிடைத்திருந்த பொழுது, புத்துணர்வு பெற்ற மனம், வார்த்தைகளைக் கோர்த்து விளையாடியது. பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என தாய்மை தந்த பரவசத்தை ஒரு நோட்டுப்புத்தகத்தில் பொன்னிற எழுத்து பதியும் பால்பாயிண்ட் பேனாவின் உதவியுடன் உருவானது "என் வானம்". "முதலில் என்னை கவனி" என்னும் விதமாக அடிக்கடி என் குழந்தைகளால் அது ஒளித்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன் என் தோழியரிடம் பகிர்கையில், முல்லையின் யோசனைப்படி பதிவுலகில் உருவானது "என் வானம்". "என் நட்சத்திரங்களை" மட்டுமே வலையேற்றப்பட்ட நேரத்தில் காணாமல் போனது, சமீபத்தில் கிடைத்தது. அதில் குழந்தையின் முதல் சில வளர்ச்சியைப் பற்றி எழுதிய தாய்மையின் பரவசத்தை, இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

"எனக்குப் பிடித்த சில நினைவுகளை பதித்துக் கொள்ள ஆசை. பசுமரத்தாணி போல் சில பதிந்தது என எண்ணினாலும். மணலில் பதித்த எழுத்துக்களாய் காலமெனும் அலைகள் கலைப்பதைத் தடுக்க முடியவில்லை. சில பொன்னான நினைவுகளைப் பொன்னெழுத்தில் பொறிக்க விழைந்தேன்.

நந்தினி, யாழினி என இருமலர்களின் நறுமணம்.
நந்தினி - இள ரோஜா நிறத்தில் நாவை நீட்டி கொட்ட கொட்ட விழித்துப் பார்த்த அழகு
யாழினி - வெள்ளை ரோஜாவாக கண்களை மூடித் தூங்கிய அழகு

இது பிறந்தவுடன் கண்ணில் கண்ட நீங்கா நினைவுப் பதிப்பு.

இந்த செல்லங்களின் சேட்டை எண்ணாற்றவை. பூவொன்று மலர்வது கண்முன்னே தெரியாமல் நிகழ்வது போல் தான் குழந்தையின் வளர்ச்சி. வாழ்க்கையை அழகுப்படுத்துவதே குழந்தைகள் தான். KIDS MAKE THE LIFE COLORFUL. அம்மா, அதன் பொக்கை வாய்ச் சிரிப்பும், மின்னும் கண்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வள்ளுவரும், பாரதியும் எழுதியதை அனுபவித்தாலன்றி முழுதாக உணரமுடியாது. அந்த பிஞ்சு கைகள் மடங்கி இருப்பது அழகு என்றால், அக்கைகளுக்குள் என் விரல் உறங்குவது, பூ மெத்தையில் புரளும் சுகம். கண் மலர்ந்து சிரித்தாலும், கண் மூடி உறங்கினாலும், சிரிப்பின்றி பார்த்தாலும் ... ஒவ்வொரு அசைவிலும் உள்ளம் சிலிர்க்கின்றது.

குழந்தை பாலருந்தி, என் அருகாமையில், அணைப்பில் உலகத்தைப் பற்றிய கவலையின்றி மயங்குவதென்பது விவரிக்க இயலா இன்பமயமானது. வளர, வளர அதன் சேட்டைகள் சிலிர்ப்பானது. அந்த கைகளும், கால்களும் தூக்கத்தில் தான் ஓய்வெடுக்குமா? கைகளைச் சுழற்றுவதும், கைகளைப் பிசைவதும், கையால் காலைப் பற்றுவதும், பிஞ்சு காலால் என் மார்பில் உதைப்பதும், கொடுக்கும் பொருளைப் பற்றிக் கொண்டு அதைப் படுத்தும் பாடும்.. அப்பப்பா... அந்த கணத்தின் இனிமை விளக்க இயலாதது.

கடவுள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு விலங்காக உடைப்பாராம், கண், காது, கைகள் என ...அதன் பிறகே கண் தெரிவது, காது கேட்பது , ஒரு சாய்வது, குப்புற விழுவது என்று ஒவ்வொரு வளர்ச்சியுமாம், என் பெரியம்மா கூறுவார். பிறந்து சில நாள் கழித்து , தலையை இடதும் வலதுமாக உருட்டும் அழகென்ன.. வேகமென்ன .. பின் மெள்ள, மெள்ள குப்புற விழ எடுக்கும் முயற்சிகள்... ஒருசாய்ந்து படுத்து, கையை ஊன்றி, உடலைத் திருப்பி, பின் தலையை உருட்டி, தலையைத் தூக்கியவுடன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கையில் இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி ஒரு தாயிடம்.

அந்த தொட்டிலில் செய்யும் குறும்புகள்.. அழகாக சேலையை ஜன்னல் திரை போல் விலக்கி, எட்டிப் பார்த்து சிரிக்கும் அழகென்ன.. தடாலென தலையைத் தொங்க விட்டு "ஏய்" என்று அழைக்கும் அழகென்ன.. வலக்கையால் இடக்காலைத் தூக்கிப் பிடித்துத் தூங்க எங்கே கற்றாய் பெண்ணே? உன் அக்கா இப்படி இருக்கையில் கால் மேல் கால் போட்டுத் தூங்கும் அழகே தனி. நீ தொட்டிலுள் மீன் போல் கால்களை உதைத்து உதைத்து நீந்தும் தங்க மீன்."

Thursday, December 18, 2008

வறியார்க்கொன்று ஈவதே..

முகம் இறுக, உள்ளே மனம் உருக நகர வேண்டிய கட்டாயங்கள் பல நேரம் வந்ததுண்டு. பெரும்பாலும், சிக்னலில் பச்சைக் குழந்தையுடனோ, பச்சிளம் பாலகர்களோ கையேந்தும் பொழுது தான் பெரும்பாலும் இந்நிலை. ஒன்றிரண்டு ரூபாய் கொடுப்பதால் ஒன்றும் குறையாது... ஆனால், இவர்கள் ஒரு கும்பலாகச் செயல்படுகிறார்கள், இதற்கென குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள் என கேள்விப்படும் பொழுது, சொல்ல முடிய வருத்தம் மனதைப் பிசைய, முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

சிறு வயதில் வீட்டிற்கு கையேந்தி வருவோர் பலர் உணவிற்கு ஏந்துவர். வீட்டில் இருக்கும் டிபனோ, குழம்போ கொடுத்தால் சந்தோஷமாக எடுத்துச் செல்வர். ஆனால் நாட்பட நாட்பட, காசுக்காக மட்டுமே கை நீட்டுகின்றனரே ஒழிய உணவு விரும்பப்படுவதில்லை. தீபாவளி பலகாரங்கள் விதிவிலக்கு. இப்பொழுதெல்லாம் மினிமம் ஒரு ரூபாயேனும் கொடுக்க வேண்டும். காலணா, எட்டணாக்கள் பத்து, இருபது பைசாக்கள் போல் காணாமல் போய் கொண்டிருக்கின்றன.

பல நேரங்களில் பலர், எதேனும் இல்லத்திற்கு என கையில் ஒரு ரசீது புத்தகத்துடன், கோயிலுக்கு என்று உண்டியலுடன், கல்யாணத்திற்கு எனத் தட்டுடன், படிப்பிற்கு என்று நோட்டுப் புத்தகத்துடன்...இவர்களது காரணங்கள் உண்மை என்றால் இயன்ற அளவு கொடுக்க மனம் இருந்தாலும், பல நேரங்களில் பொய்யாக இருப்பதால், தயக்கம்... உண்மை தானா அல்லது ஏமாற்றுத் தொழிலா? என்று கேள்வி.

இந்த கேள்விகளால், இப்பொழுது நான் கொடுப்பதென்னவோ, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மட்டும் தான். அவை பற்றியும் சில சமயம் தாறூமாறான செய்திகள். எதையாவது நம்பத்தானே வேண்டும், எனவே பதிவு செய்யப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நம்பிக் கொடுக்கிறேன். என்றாலும் , நம்பிக்கையின்மையால் எத்தனையோ உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு கிடைக்காமல் போகும் நிலை நிச்சயம் இருந்திருக்கலாம்.

ஆனால் யோசனை வரும் எப்படி ஒரு உலகத்தை நம் சந்ததியருக்கு விட்டுச் செல்லப் போகிறோம்?
நட்பாக மூன்றாமவர் சிரித்தால், எதற்காக என்ற கேள்விக்குறி...
உறவினரையும் நம்பாதே என்ற செய்திகளால் குழப்பம்...
எதை நம்புவது, யாரை நம்புவது என்ற ஒரு நம்பிக்கையற்ற உலகை...

என்ன செய்யலாம் இதை மாற்ற?

Tuesday, December 16, 2008

அழகான வேஷதாரியே...



பூக்களுக்கு மேக்கப் போடணுமா, அதன் அழகை ரசிக்க? குழந்தைகளுக்கு வேஷம் போடணுமா அவர்களை ரசிக்க? என்றாலும், இந்த சுட்டீஸ் வேஷம் போட்டாலும் போடாவிட்டாலும் அழகு தான்.



நந்தினி ப்ரீ-கேஜி போகும்பொழுது , நல்லா குறள் சொல்லுவானு, திருவள்ளுவர் வேஷம் போட கூட்டிட்டு போனால், சேலை கட்டி அம்மனாகணும்னு அடம். அம்மனுக்கு ஒரே கிராக்கி, கிடைக்கலை. அப்புறம் அவங்க கிருஷ்ணரா தான் வருவேன்னுட்டாங்க. இப்படி அவங்க இஷ்டத்துக்கு போட்டால் தானே அவங்க சிரிப்பாங்க... அழ வைக்கவா வேஷம் போடறோம்?


கொஞ்ச நாள் முன்னாடி தான் யாழினிக்கு "முட்டைகோஸ்" வேஷம் போடச் சொன்னாங்க. இந்த மேடம், கிருஷ்ண ஜெயந்திக்கு அழகா கிருஷ்ணர் வேஷம் போட்டால், ஒரு ஃபோட்டோ எடுக்கறதுக்குள்ள, எல்லாத்தையும் கலைச்சுட்டு சிரிப்பாங்க. இவங்களை எப்படி முட்டைகோஸ் ஆக்கறதுங்கற கவலையை, எங்கே ட்ரெஸ் கிடைக்குங்கற கவலை மறக்க வச்சது. திருவான்மியூர்ல இருந்து மைலாப்பூர், ஐஸ் ஹவுஸுனு சுத்தி, வடபழநில பிடிச்சேன். (பேசாமல் அடையார்ல ஒரு கடை ஆரம்பிச்சரலாமானு யோசிக்கிறேன்...)



வேஷம் போடற நாள் வந்துச்சு. அம்மாடி, அழகழகா பட்டாம் பூச்சியா, குட்டீஸ்... பூ, வண்டு, தேவதை, முயல், மயில், காய்கறி, பழம் ... எல்லாம் அவங்க தான். இந்த அம்மா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை டாய்லட் போற ஆளு , என்ன செய்வாங்களோனு, கடைசி நிமிஷம் தான் டிரஸ்சை போட்டு விட்டோம். இங்கே ,எங்களுக்கு ஒரே டென்ஷன் டிரஸ் குத்துமோ, வேர்க்குமோ, டாய்லட் போக வேண்டி இருக்குமோ, தாகமா இருக்குமோ, பசிக்குமோ அப்படி இப்படினு நல்லா பண்ணணுனங்கிற கவலை தவிர எல்லா கவலையும். பாருங்க, கிட்டதட்ட முக்கால் மணி நேரம் காத்திருந்து மேடையில பண்ணிட்டு ஓடிவராங்க. அவங்களுக்கு ஒரே சந்தோஷம். அடுத்த நிமிஷம் ட்ரெஸ் கழட்டியாச்சு.

அப்பாடானு இருந்தது. இப்பல்லாம் ஏதாவது நிகழ்ச்சிக்கு தேர்வு பண்ணிணாலும் சந்தோஷமா இருக்கு, தேர்வு பண்ணாட்டியும் சந்தோஷமா இருக்கு (அலைச்சலும் டென்ஷனும் மிச்சம்). வர வெள்ளிக் கிழமை மேடம் ஸ்கூல்ல ஏரோப்ளேன் ஓட்டணுமாம் ;-).

உங்க பிள்ளைங்களுக்கு வேஷம் போட உடை வாங்க சென்னையில் சில கடைகள் இங்கே...

Monday, December 15, 2008

வண்ண வண்ண பொம்மைதான்...




குட்டிப் பெண்ணுக்கு இப்பொழுது விவரம் தெரிவதால், பல விஷயங்களை நான் காரணத்தோடு மறுக்கிறேன். பொம்மை (பார்பி ரொம்ப காஸ்ட்லி, வேண்டாம்), டி.வி (முதலில் ஸ்கூலுக்கு ரெடியான பின் என்பது இப்பொழுது ஸ்கூல் விட்டு வந்த பின்) என்று விதிமுறைகள் போட்டாச்சு. முதலில் பயங்கர எதிர்ப்பு (முன்பெல்லாம் அழுகையை நிறுத்த முடியாது) கிளம்பினாலும், நான் அசைந்து கொடுக்காததால், மேடம் பின்பற்றுகிறார்கள். நான் இல்லாத பொழுதும், அவள் டி.விக்கான விதிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல விஷயம்.

கையில் ஒரு "கிஃட் வவுச்சர்" கிடைத்தது என்று ஒரு பொம்மைக் கடையுள் நுழைந்தோம். உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் பார்பி பொம்மைகளை விரும்பினார்கள். உண்மையில் எதை எடுப்பது எதை விடுவது என்று தோன்றும் அழகழகான பொம்மைகள். பெரியவள் திணறினாள். அது/இது என்று ரொம்ப குழம்பி, ஒரு வழியாக ஒன்றை எடுத்தாள். நான் அவளிடம், "இந்த பார்பி பொம்மை வைத்து எவ்வளவு நேரம் விளையாடுவாய்? அவளும் அது தான் எடுக்கப் போகிறாள். நீ கொடுக்கும் அந்த காசுக்கு அந்த மென்பொம்மைகள் எடுத்தால் பெரிதாகவும் இருக்கும், ரொம்ப நாள் விளையாடலாம்", என்றேன். அவள் கொஞ்சம் யோசித்து, சரி என்று ஒரு பிங்க் டெடி எடுத்து மிக சந்தோஷமானாள்.

சின்னவள் செய்தது தான் ஹைலட். மேடம் பார்பி பொம்மைகளை ஒரே ஒரு பார்வை பார்த்தார்கள், டக்கென்று முடிவு செய்தார்கள். மற்றொன்று இன்னும் அழகாகத் தோன்ற, அதைக் காட்டினேன். "இல்ல, அது காஸ்ட்லி" என்றாள். (எல்லாம் ஒரே விலை தான்). வேறு எந்த பொம்மைக்கும் அவள் தாவவில்லை. எடுத்த முடிவு எடுத்தது தான் என்பது போல், "ம் , கிளம்பலாம்" என்றாள். அவள் கசின்களுக்குத் தேர்வு செய்யும் பொழுதெல்லாம், இம்மியும் சலனப்படாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் செயலும் பாரட்டுகுரியதாக இருந்த்தால், பாராட்டி முத்தமளித்தேன். பொம்மையை விட இப்பரிசு அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.

Thursday, December 11, 2008

மெளனம்


நீ சிரித்திருந்த போழுது...


மெளனம் சங்கீதமானது

சொல்லாத மொழிகள்
மயிலிறகாக வருடின

காரணங்கள் எதுவும்
நமக்குள் தேவைப்படவில்லை

மெளனம்...
இனிய மொழி ஆனது

ஆனால்...
நீ முறைத்திருந்தபொழுது...



மெளனத்தின் ஓசை
செவியில் அறைகிறது

பேசாத வார்த்தைகள்
மனதைக் குத்துகின்றன

கூறாத காரணங்கள்
நன்றாகப் புரிகிறது

மெளனத்தின் கனத்தை
இனி சுமக்க முடியாது

இந்த இரும்புத்திரையை
இனிய மொழியாக்குவோம்

வளரும் பெண் இவள்...

ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்ல புது காரணம் வேணுமா என்ன? வயிறு வலிக்குது, வேன் கூட்டமா இருக்கு, பரத் அடிக்கிறான், மஞ்சரி என் பக்கத்தில் உட்காரலை, மோனிஷா என் கண்ணைக் குத்தறாள், தூக்கம் வருது, டயர்டா இருக்கு, தலை வலிக்குது ... மேலும் , மேலும்....

அப்படி இப்படினு பேசிப் பார்த்தால் தான் நிஜ காரணம் வரும்.ஒரு காரணம், மேடம் வந்தவுடன் என் பெற்றோர் சற்று தொலைவில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். எனவே மேடம் மிஸ் பண்ணியது அந்நேரத்தில் சுட்டி டி.வி.யில் வரும் டோரா. அதனால் ஸ்கூல் போக விருப்பமில்லை. "சரி , டோரா சி.டி வாங்கி தரேன் ஆசை தீர பாரு", என்றவுடன் ப்ராப்ளம் தீர்ந்தது. (இந்த டோரா அதன் பிறகு 2 முறை வரும், ஆனால் மேடமுக்கு ஒண்ணு விடாமல் பார்க்கணும்.. சலிக்கவே சலிக்காதா??)

இன்னிக்கு பரத் அடிக்கிறான் தான் காரணம். நிஜ காரணம் போலும்...
"சரி மிஸ்ட்ட சொல்றேன்", என்றேன்.
"இல்லை , வேன்ல அடிக்கிறான்" , என்றாள்
"சரி ஆயாம்மாட்ட சொல்றேன்", என்றேன்

என்ன நினைத்தாலோ தெரியவில்லை, ஸ்கூலில் நுழையும் பொழுது, "நீ சொல்ல வேண்டாம், நானே சொல்லிக்கிறேன்", என்றாள். ஆச்சரியமாக இருந்தது. தன் நண்பர்கள் பற்றி பெற்றோர் ஆசிரியரிடம் கூறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றுகிறது?. ஆனால் நினைத்துக் கொண்டேன் "ம்.. என் குட்டிப் பெண் வளர ஆரம்பித்து விட்டாள்."

"ம்.. அழாமல் ஸ்கூலுக்கு போகணும், சரியா?"
"நான் அழாமல் ஸ்கூலுக்குப் போறேன். நீ அழாமல் ஆபீஸுக்கு போ."

ஸோ ஸ்வீட் செல்லக்கட்டி

Wednesday, December 10, 2008

காகம் கடிகாரம் கத்தி

"காக்காக்கு சோறு வச்சிட்டு வா. நம்ம முன்னோர்கள் எல்லாம் வருவாங்களாம்", என்று அம்மா சொன்ன பொழுது வேடிக்கையாக இருந்தது. சரி காக்காக்கு இப்படியாவது உணவு கிடைக்குதே என்று வைப்பேன். ஆனால் இழப்புகளின் துயரம் உணர்ந்து, என்ன தான் நடக்கிறது என்ற கேள்விகள் எழும் பொழுது, இதையும் செய்வோம் என்று ஒரு பழக்கம் வந்துவிட்டது. சில நேரங்களில் உணவு வைத்துவிட்டு , இது தாத்தா, அது பாட்டி, அது மாமா என்று எண்ணும்பொழுது தோன்றும் , "இந்த பழக்கத்தினால தான் தினம் அவங்களை நினைக்கிறோம். இல்லைனா காலில் சக்கரத்தை கட்டி ஓடிட்டு நினைவு நாள் அன்னிக்கு மட்டும் நினைப்போம்".

அப்பா ஒரு சுவர்க் கடிகாரம் வச்சிருப்பார். பெண்டுலம் வச்ச கடிகாரம். இன்னி வரைக்கும் அதுக்கு சாவி கொடுத்து ஓட வச்சிட்டிருக்கார். அது மணி அடிக்கும் பொழுதெல்லாம் "மாம்ப்பா (அம்மாவின் அப்பா) மணி அடிக்கிறார்", என்பார். போட்டோவில் மட்டுமே பார்த்த மாம்ப்பா மிகவும் நெருங்கினாற் போல் தோன்றும்.

அம்மாகிட்ட ஒரு கத்தி இருக்கும். இப்ப அதுக்கு கால் நூற்றாண்டுக்கு மேல ஆச்சு. காய் நறுக்கும் பொழுது எல்லாம் "உங்க ஐயாப்பா (அப்பாவின் அப்பா) கொடுத்த கத்தி, எப்படி வச்சிருக்கேன் பார்", என்பார்கள். சமீபத்தில் தான் அது ரொம்ப கூர்மையாகி விட்டது. எனவே ஒரு ஓரமாக இன்னும் இருக்கிறது. முகம் பார்க்காத ஐயாப்பாவை நினைவுறுத்தும் கத்தி.


ஒரு பேனாவை எடுத்து எழுதிக் கொண்டிருந்தேன். "அம்மா இது ஐயாப்பா கொடுத்த பேனா" என்றாள் என் மகள். அவள் முகத்தில் ஏக்கம். அடிக்கடி பேனா தொலைக்கும் நான், அதை பத்திரமாக எடுத்து வைத்தேன், சமீபத்தில் எங்களைத் துயரத்தில் ஆழ்த்திச் சென்று விட்ட என் மாமனாரின் நினைவாக அவரது செல்ல பேத்திக்கு.

Tuesday, December 9, 2008

விடுகதை

என் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.

1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என் குட்டிப் பெண்ணின் டாப் 1 இது)

2. அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.

3. வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு

4. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

5. வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.

6. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

7. மழையில் பூக்கும் பூ

8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.

9. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்

10. வெள்ளிக் கிணத்துல தண்ணி


விடைகள்
தென்னை மரம், வானம் - நட்சத்திரம், முட்டை, ஆட்டுக்கல், கண், கொசு, குடை, செருப்பு, வாய், தேங்காய்

Monday, December 8, 2008

குழலினிது யாழினிது

குட்டிப் பெண்ணுக்கு ஒரு வாரம் கழிச்சு ஸ்கூல். எல்லாம் நிஷா புயலின் உபயம். மேடமுக்கு பள்ளி செல்ல மனமில்லை. நான் வீட்டில் இருப்பேன் என்ற உறுதி மொழி வாங்கி பள்ளிக்குச் சென்று வந்தாள். எனக்கு நெட் சதி செய்ததால் வேலை செய்வது சிரமமாக இருந்தது. அவளிடம் அனுமதி பெற்று அலுவலகம் செல்லலாம் என்றிருந்தேன்

"குட்டிம்மா, நான் ஆபீஸ் போய்ட்டு சாயங்காலம் வந்துடறேன்."
"முடியாது, எனக்கு நீ வேணும்"
"சரி. நான் வீட்ல இருந்தால் டி.வி. பார்க்கக்கூடாது"
"முடியாது, எனக்கு நீ வேணும்"
சற்று பொறுத்து... "சரி நீ போ. நான் சமத்தா இருக்கேன்"

இது போன்று தான் முன்பொருமுறை மேடம் டிரஸ்ஸிங் டேபிளை உருட்டிக் கொண்டிருந்தாள். "பாப்பா, எல்லாத்தையும் இறைக்காதே..", என்றேன். உடனே என் கைப்பையை எடுத்து கொடுத்து, "ம். நீ ஆபீஸ் போ" என்றாள்.

----------

பெரியவளை சாப்பிட சொல்லி தொண்டை வறண்டு விட்டது. மணி "1:50".
"இங்க பாரு முள், 11க்கு வர்றதுக்குள்ளே சாப்பிடணும்"
"சின்ன முள்ளு தானே, சாப்பிட்டுடுவேன்"

---------
அவளது சித்தப்பா குழந்தையைப் பாட்டு பாடி, கதை கூறி தூங்க வைத்தேன். இவளுக்கும் சேர்த்து தான்.
அவள் தூங்கிய பின் "இனிமேல் நீ எனக்கு பாட்டு பாடாதே, கதை சொல்லாதே , எல்லாம் அவளுக்கே செய்"
"என்ன செல்லம், உன் தங்கச்சி தானே"
"ஆனால் நீ எனக்கு மட்டும் தான் அம்மா, என்னை மட்டும் தான் கொஞ்சணும்"
"அப்ப கிரியைக் கொஞ்சக் கூடாதா?" (கிரி 2 மாதம் முன் பிறந்த என் மருமகன்)
"அவன் சின்ன பையன் அவனை மட்டும் கொஞ்சு. மத்தவங்க எல்லாம் வளர்ந்தாச்சு, அதனால் என்னை மட்டும் கொஞ்சு"
-------------

Friday, December 5, 2008

பாட்டியின் நினைவுகள்


இன்று குழந்தைகளுக்கு சலிக்காமல் கதை கூறுகிறேன் என்றால் அது என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான். அவர்கள் கூறியது என்னவோ நாலு கதைகள் தான் என்றாலும் திரும்பத் திரும்ப கேட்டாலும் திகட்டா இன்பம் உடைய கதைகள். "மாம்மை கதை சொல்லுங்க" என்றவுடன் "பிறந்த கதை சொல்லவா , வளர்ந்த கதை சொல்லவா" என்று ஆரம்பித்து சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் கதை கூறுவார்கள்.

கடைசி வரை மண் அடுப்பில் மண் பாத்திரத்தில் அவர்கள் செய்யும் கத்தரிக்காய் புளிக்குழம்பின் ருசி இன்னும் நினைவு இருக்கிறது. காலையில் மொச்சை பயறு அவித்து வரும் பாட்டியிடம் எங்களுக்குத் தவறாது வாங்கி கொடுப்பார்கள். பின் எல்லோருக்கும் காலணா கொடுத்து, கடையில் ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்வார்கள். அவர்கள் முறுக்கு இடிக்க வைத்திருக்கும் (என்ன பெயர் அதற்கு... வெற்றிலை இடிப்பார்களே...), அவருக்குப் பின் பொருட்கள் யாருக்கு என சண்டை போடுவோம். ஆடி மாதம் ஆனால் , ஆடி விரதம் அனுஷ்டித்து, சிவகாசியில் இருந்து பஸ் பிடித்து கோவை வந்து விரத கொழுக்கட்டையைத் தரத் தவறியதே இல்லை.

சமீபத்தில் மாம்மையின் வீடு இருந்த பக்கம் , கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பின் சென்றிருந்தேன். முன்னர் ஊரில் பன்றிகளும் கழுதைகளும் நிறைய காணலாம். கட்டு ஒட்டுவதும், தீக்குச்சி அடுக்குவதும் வீதிக்கு வீதி இருக்கும். இப்பொழுது அவ்வளவாகக் கண்ணில் படவில்லை.மாம்மை வீட்டுத் திண்ணை அப்படியே இருந்தது. பல பக்கத்து வீடுகள் முன்பிருந்த அதே தோற்றத்துடன் இருந்தன. உள்ளே மாறி இருக்கலாம். சில சின்ன வீடுகள் நன்றாகக் கட்டப்பட்டிருந்தன. அங்கே கடவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். இன்றும் அப்படியே மரத்தடியில் சின்ன மண்டபத்தில் இருந்தார். அதே போல் பிள்ளையார் மேலிருந்து விபூதி எடுத்து வைக்கும் பொழுது, சிறு பிள்ளைகளாக அந்த கடவுக்குள் நுழைந்து பிள்ளையாரை அடிக்கடி தொழுத நினைவுகள் இனிமையாக இருந்தன. சின்ன சின்ன விஷயங்கள் கூட மலரும் நினைவுகளாக மனதை மயக்குகின்றன.

Tuesday, December 2, 2008

நீயின்றி....




காதைக் கிழிக்கும் அமைதியுடன்
காலை மலர்ந்தது...

முத்தமில்லா கணங்கள்
சத்தமின்றி ஊர்ந்தன...

இறைக்கப் படாத பொருட்கள்
கிழிக்கப் படாத காகிதங்கள்
சிந்தப் படாத வண்ணங்கள்
என
களையிழந்து உள்ளது வீடு

விடுமுறை முடியும் முன்
விரைந்து வா மகளே!!

நீ வந்து உயிரூட்ட
காத்துக்கிடக்கிறது உன் வீடு.

ஆராரோ ஆரிராரோ...

குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... தாலாட்டு. நம் பாட்டையும் கேட்க ஆள் இருக்கிறது என்ற சந்தோஷத்துடன் பாடல் வரும்... அதைக் கேட்டுத் துயிலும் உயிரைக் கண்டு மனம் நெகிழும். உண்மையில் "இது தூங்கும் நேரம்", என்று ஒரு பழக்கம் கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தது.

என் தாய் "பூஞ்சிட்டு கன்னங்கள்..." என்று பாட ஆரம்பித்ததில் நான் மிகவும் கவரப்பட்டு, அதன் பிறகு பல பாடல்கள் பாடித் தாலாட்டியுள்ளேன்.

"ஆராரோ ஆரிராரோ...
என் கண்ணே ஆரடிச்சா..."

என்று என்றோ தமிழ் பாடத்தில் படித்த தாலாட்டு பாடல் முதற்கொண்டு ...

"மானே கண்ணுறங்கு...மயிலே கண்ணுறங்கு" என்ற பாடல்களில் என் கற்பனைக்கேற்ப பல கொஞ்சல்களைச் சேர்த்து...

"ஆயர் பாடி மாளிகையில்..." என்று தாலேலோ பாடி

முடிவில் தஞ்சமடைந்தது என்னவோ தமிழ் சினிமாவில் தான். "பூஞ்சிட்டு கன்னங்கள்..." (இன்றும் என் பெண்களின் நேயர் விருப்பம் இதுதான்), "பச்ச மலை பூவு..", "தென்னையில் தொட்டில் கட்டி..." , "தேனே தென்பாண்டி மீனே...", "தென்பாண்டி சீமையிலே..." என்று பல பாடல்கள் இதில் அடக்கம்.

வருடங்கள் கடந்து விட்டாலும், என் மனதை விட்டகலாது மனதை நெகிழ/மகிழ வைத்த தாலாட்டு நிகழ்வுகள்:

நெகிழ்ச்சி
நந்தினி காது வலியில் துடித்துக் கொண்டிருந்த பொழுது "ஆயர்பாடி மாளிகையில்" இரவு வெகுநேரம் பாடினேன். நிறுத்தினால் வலியில் துடிப்பதால் பல முறை பாட வேண்டி இருந்தது. மருந்து கொடுத்தும் காது மிகவும் வலித்ததால் "சாமிட்ட வேண்டிக்கோ, சரியாகிடும் என்றேன்". சற்று நேரம் கழித்து "வேண்டிட்டேனே...ஏன் சரியாகலை" என்ற கேள்விக்கு விடை கூற இயலாது தாலாட்டைத் தொடர்ந்தேன்.

மகிழ்ச்சி

தூங்காது தொல்லை கொடுத்த குட்டிப் பெண்ணைத் தாலாட்டிப் படுக்க வைக்க முடியவில்லை என்று, காரில் ஏற்றி (ஊர் சுற்றினால் காற்றுக்கு சில சமயம் நன்கு தூக்கம் வரும்), கொஞ்ச நேரம் வேடிக்கை காட்டிவிட்டு, "நீ சும்மா அம்மா மேல சாஞ்சுக்கோ", என்று கூறி மெல்லத் தாலாட்ட ஆரம்பித்தேன். சட்டென்று அவள் எழுந்து, என் வாயை மூடினாள். "நான் தூங்க மாட்டேன்" என்று கூறினாள். அந்த செய்கை சிரிக்க வைத்தது. என்றாலும் சமயம் பார்த்து தாலாட்டித் தூங்க வைத்தேன்.

இப்பொழுதும் வாய்ப்பு கிடைத்தால் தாலாட்டு பாடாமல் இருப்பதில்லை. வெகுநாட்களுக்குப் பின்பு, சகோதரன் குழந்தையைத் தாலாட்டு பாடித் தூங்க வைத்த பொழுது, மிகவும் நிறைவாக இருந்தது.

தாலாட்டு பற்றி விக்கிபீடியாவில் இங்கு காணலாம்.
சில தாலாட்டுப் பாடல்களை இங்கு காணலாம்.

Friday, November 28, 2008

ஏன் கொடுத்தாய் ஆறறிவு?

இறைவா!
ஏன் கொடுத்தாய் ஆறறிவு?
இல்லாதிருந்தால்..
தற்காப்புக்காக மட்டுமே
தலைகள் விழுந்திருக்கும்.

இன்றோ....
இனமென்றும், மதமென்றும், மொழியென்றும்
மண்ணென்றும், பொன்னென்றும், போதையென்றும்,
மனமென்றும், மனச்சிதைவென்றும்...
நித்தம் ஒரு காரணமென்று
எண்ணற்ற காரணங்கள்
எண்ணற்ற தலைகள்..

ஆறறிவு என்பது
அன்பால் உலகை உய்விக்க
அமைதி பூமி உருவாக்க
என்று அனைவரும்
உணர்வது எப்பொழுது?
கூறிடுவாய் இறைவா!!

Thursday, November 27, 2008

பத்தோடு ஒன்று பதினொன்று



பத்தோடு ஒன்று பதினொன்று என
காதலில் கசிந்துருகி
ஊடலில் பிணங்கி
வருடங்கள் உருண்டோடின
இனிய நினைவுகள்
மனதை நனைக்கின்றன..



நம் தோட்டத்தில்
முட்கள் அவ்வப்பொழுது
முளைத்து மறைந்தன
நாம் நட்ட பூச்செடிகள்
என்றும் பூத்துக் குலுங்குகின்றன

வளர்பிறையாக இரு நிலவுகள்
நம் வானத்தில்...



அன்று ஒற்றைக் குடையுள்
இருவரும் நனைந்த மழை
இன்றும்
மனதை நனைக்கின்றது...

நிலவுகள் தம் வானத்தில்
நீந்தும் அவ்வேளையில்
காத்திருப்போம்
அம்மழைக் காலத்திற்கு...




(படங்கள் : இணையம்)

டிஸ்க்கி: இது எனது 50-வது பதிவு. இதைத் தொட ஊக்கமளித்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.

Tuesday, November 25, 2008

அது ஒரு மழைக்காலம்




மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க
தேடி வந்த மாப்பிள்ளைக்கு
எண்ணி வைங்க
தேடாத மாப்பிள்ளைக்கு
சூடு போடுங்க...


முறுக்கைக் கொறித்தபடி, பாடல் பாடி, கையில் கிடைத்த காகிதமெல்லாம் படகாக மாறிய மழைக்கால நினைவுகள் மனதை நனைக்கின்றது. இன்று, என்னருகே என் பெண்கள் "மழையே மழையே சீக்கிரம் போயிடு..." என்று டோராவைப் பாடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு நாள் குடை கொண்டு போகாது வெளியே சென்றிருந்தோம். லேசாகத் தூறியது மழை.

"அம்மா, மழை பெய்யுது, வா காருக்குப் போகலாம்" என்றனர் குட்டீஸ்.
"ம்... கொஞ்சம் மழையில நனைஞ்சு தான் பாருங்களேன்" என்றேன் நான்.
"நீ தானேம்மா மழைல நனைஞ்சா சளி பிடிக்கும்னு சொல்லுவ?"
"ம்... அப்புறம் மழையை அனுபவிக்கத் தெரியாமல் போய்டும். அதனால லேசா தூறும் வரைக்கும் கொஞ்சம் நனைவோம்...நாங்கள்ளாம் என்ன பாடுவோம் தெரியுமா? "மழை வருது, மழை வருது...."

சுகமாக இருந்தது அந்த தூறல்.

Friday, November 21, 2008

தாய்மை என்றோர் உணர்வு...

அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். "அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து அக்குழந்தையின் மேல் போட, சட்டென்று எழுந்து அந்த பெண் பூவைத் தட்டி விட்டாள்". "சினிமாத்தனமாக இருக்கு", முணுமுணுத்தவாறு, பத்திரிகையைத் தூக்கி எறிந்தாள்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
யாரோ தொடும் உணர்ச்சியில் திடுக்கிட்டு விழித்தாள். ஜன்னலருகே கணவன் கோபத்துடன் நிற்பது தெரிந்தது. கையில் குச்சி, அவளை ஜன்னல் வழியாகத் தொட்டு எழுப்ப. "எத்தனை தடவை பெல் அடிக்கிறது. எழுந்து வந்து கதவைத் திற..." என்றான்.


இரண்டு வருடங்களுக்குப் பின்...
சட்டென்று விழிப்பு தட்டியது. கண்கள் உடனே தொட்டிலுக்குச் சென்றது. குழந்தை விழிப்பதற்கான ஆயத்தங்களுடன் நெளிய ஆரம்பித்திருந்தாள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தொட்டிலை ஈரமாக்கிவிட்டு அழ ஆயத்தமானாள். மெல்ல எடுத்து மார்போடு அணைக்கையில் , அந்த குட்டிக் கதை நினைவுக்கு வந்தது. "உண்மை தான்", என்று நிறைவோடு மனம் முணுமுணுத்தது.

Thursday, November 20, 2008

பூனைக்கு மணி கட்டுவது யாரோ?




என் பெண் வகுப்பில் ஒரு பெண் கொஞ்சம் தகராறு செய்வாள். அவளைப் பற்றி ஏதேனும் இவள் கூறிக் கொண்டிருப்பாள். பிரிவதும் சேர்வதும் தானே குழந்தைகள்? பொதுவாக இவள் மனதை மிகவும் பாதிக்காத விஷயம் நடக்கும் வரை நான் இவள் கூறுவதை கேட்பதோடு நிறுத்திக் கொள்வேன். அவள் ஏதேனும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வேன். அன்று என்னிடம், தனது ஆசிரியை ஒருவர் என்னை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறினாள். அந்த பெண் வராத ஒரு நாள் அவளைப் பற்றிய புகார்களை வகுப்பு மாணவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே சில பெற்றோரிடம் பேச அந்த ஆசிரியை விருப்பப்பட்டார்.

நான் அவளிடம், முதலில் நான் அவள் காப்பாளரிடம் பேசி விட்டு பின் தேவை என்றால் , ஆசிரியையிடம் வருவதாகக் கூறினேன். பின், "பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள்" போல நீங்கள் அந்த பெண் இல்லாத பொழுது பேசுகிறீகள். அவள் வந்தால் எல்லா புகாரும் மறைந்து விடும். இதற்கு நான் வேறு வர வேண்டுமா என்றேன்?

என் பெண் கூறிய பதில் அழகாக இருந்தது. அவள் டி.வியில் பார்த்தாளாம், இப்படி பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள் சிதறி ஓடிவதை. பின்பு எலிகள் என்ன செய்யும்? பூனையிடம் சென்று "இந்தா உனக்கு ஓர் அழகான பரிசு" என்று மணியைக் கொடுக்குமாம். பூனையும் அதை விரும்பி அணிந்து கொள்ளுமாம். இது தான் புது முறையாம். எனவே, அவள் அப்பிரச்னையை அவளே பார்த்துக் கொள்வதாகக் கூறினாள். அவள் "நான் பார்த்துக் கொள்கிறென்" என்று கூறுவதைக் கேட்க இனிமையாக இருந்தது. ம்.. அவளது தனித்தன்மை வளர்வதை உணர முடிந்தது.

எனக்கு ஒரு நல்ல கதையும் தத்துவமும் கிடைத்தது.

Wednesday, November 19, 2008

இன்று என்பது பரிசு

ம்ம்... என் பெண் வளர்கிறாள் என்று பல விஷயங்களில் தெரிகிறது. அப்படி ஒண்ணு தான், நமக்கு கிடைக்கும் அறிவுரைகள். உண்மையில் இந்த வயதில் (10) இவ்வளவு யோசிக்கிறார்களே என்று ஆச்சரியமாக உள்ளது. அன்று, இரவு நேரங்கழித்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். பல இடங்களில் கல்லூரி படிக்கும் வயது பெண்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.

நான்:
ம்.. நீ பெரியவள் ஆனால் எப்படி இருக்கப் போறியோ?
அவள் : அம்மா, நம்மகிட்ட மூணு இருக்கு, "நேற்று, இன்று நாளை". நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். நேற்று என்பது முடிந்து விட்டது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். இன்று தான் இப்ப நம்மகிட்ட இருக்கு , அதனால் அதைப்பத்தி மட்டும் யோசிக்கணும்

நான் : அப்ப நாளைக்கு என்ன லன்ச் தருவனு, ஏண்டி இன்னிக்கே கேக்கற?
அவள்: நாளைக்கு என்ன பண்றதுனு நிச்சயம் ப்ளான் பண்ணுவ, அதனால் கேட்கிறேன். இது ரொம்ப கிட்ட இருக்கு , அதனால் இதைப் பத்தி பேசலாம்.

ரொம்ப தெளிவாத் தான் இருக்காங்க. இவள் என்று இல்லை, என் தோழியின் பெண்ணும் ஏறக்குறைய இவள் வயது தான். அம்மா எதைப் பற்றியாவது கவலைப்பட்டால் "ஏம்மா இதுக்கெல்லாம் கவலைப்படற... இன்னிக்கு நடக்கறதை யோசி" என்று கூறுகிறாள்.

மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர்த்து விட்டு போனாள் "நேற்று என்பது வரலாறு, நாளை என்பது புதிர், இன்று என்பது பரிசு... பரிசை அனுபவி" (Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

உண்மைதானே??

Friday, November 14, 2008

யா(ழ்)ங்கிலம்

குழந்தைகள் பேசுவது இனிமை. அவர்கள் தாய்மொழி பேசினாலே புரியாது, ஆனால் இனிக்கும். மழலை மாறாத என் மகள் ப்ரீ-கேஜியிலிருந்து எல்.கே.ஜி செல்லும் பொழுது கூறியது "நான் இங்கலீஷ் கத்துக்கப் போறேன்" என்பதே (சுட்டி டி.வி வழியாக அவங்க தமிழ் நல்லாவே கத்துகிட்டாங்க :-)). மேடம் இப்ப "டாக் இங்கலீஷ்" என்றால், ஒரு டேப்பை ஓட்டுவார்கள். ஒன்றும் புரியாது. ஆனால் "accent" மட்டும் இருக்கும். தமிழ் பேசுவது போல் இருக்காது. இதோ அவள் ஆங்கிலம் (அவளைப் பேச வைக்க நடு நடுவே எழும் குரலை மன்னிக்கவும்)


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 13, 2008

இனிதாகத் தொடங்கட்டும் காலை...

குழந்தைகளைக் காலையில் எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்புவது ஒரு பெரிய வேலை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் தான் விடியும். குழந்தைகளைப் பொறுத்தும் உள்ளது. சின்னவள் காது பட "என் பொண்ணு தங்கம், அம்மா கேட்கறதுக்கு முன்னாடி பல் தேச்சுட்டு பால் எங்கேனு கேட்பாள்" என்றால் போதும், அடுத்த நிமிடம் சொன்னது நடக்கும். பெரியவளுக்கு இதெல்லாம் "ஜுஜுபி". எவ்ளோ பார்த்திருக்கிறோம் நாங்க என்று, கெஞ்சினால் மிஞ்சும் டைப்.

காலையில் எழும் பொழுதே காலை வேலைகளின் திட்டத்தை ஒத்திகை பார்க்கும் நான், குழந்தைகளை எழுப்பும் விதம் பற்றி ஆழ்ந்து யோசித்தது கிடையாது. நேரம் இருந்தால் கொஞ்சல், கெஞ்சல் இல்லாவிட்டால் மிரட்டல் என்று தான் ஓடும்.

சமீபத்தில் தோழி ஒருவர் "எனக்கு குழந்தைகள் காலையிலேயே சிரித்தபடி எழுவது தான் பிடிக்கும். எனவே முடிந்தவரை மிரட்டாது எழுப்ப பார்ப்பேன் என்றார்" என்றார். அட, நாம் ஏன் யோசிக்கவில்லை என்று தோன்றியது. ஒரே டெக்னிக்கிற்கு எல்லா நாளும் சிரித்து எழ வைக்க அவர்கள் என்ன சாவி கொடுத்த பொம்மைகளா? அதன் பிறகு ஆழ்ந்து கவனித்ததில் , பள்ளியில் ஏதேனும் சுவாரஸ்யமான பிக்னிக் செல்வது என்றால், புதிதாகக் பள்ளிக்கு ஏதேனும் கொண்டு செல்ல வேண்டி இருந்தால் அவர்களாகவே சுறுசுறுப்புடன் எழுந்து விடுகிறார்கள் என்பதை.

எனவே நமது வேலை அந்த மாதிரி ஏதேனும் செய்வது. சில சமயம் அம்மாவை ஆச்சர்யப்படுத்த என்று நான் வாக்கிங் சென்று வருவதற்குள் ரெடி ஆவார்கள். சின்ன சின்ன டெக்னிக் கூட வேலை செய்தது. சும்மா போய் தட்டி எழுப்பாது "கிச்சு கிச்சு" மூட்டுவேன். அவர்கள் எழும் வரை விட மாட்டேன். சிரித்து சிரித்து அவர்கள் எழும் பொழுது சுறுசுறுப்பும் சேர்ந்து இருக்கும். சில சமயம், ஒரு வாழ்த்து அட்டை பண்ணனும், சீக்கிரம் பாலைக் குடிச்சிட்டு பண்றியா என்றால் ஆவலாக ஓடி வருவார்கள்.

இப்பொழுது எல்லாம் முடிந்த வரை அவர்கள் சிரிப்புடன் எழ வைக்கவே முயற்சிக்கிறேன். என்ன கொஞ்சம் டெக்னிக் யோசிக்க வேண்டி உள்ளது, ஆனால் முயற்சி வெற்றி பெற்றால், எரிச்சல் இல்லாது சிரிப்புடன் எழும்பொழுது மனம் நிம்மதியாக உள்ளது; இனிதாகத் தொடங்குகிறது காலை...

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்.


முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்

பரிசும் பாராட்டும்

கை நிறைய பரிசுகளுடன்
களித்து இருந்தாள் என் மகள்

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாக
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

பின்னாளில் ஒரு நாள்
எத்தனை உயரம் சென்றாலும்
எத்தனை திறன் இருந்தாலும்

என்றோ செய்த
உப்பில்லா சாம்பார் மட்டுமே
பேசப்படும் நேரத்தில்...

நிறைகள் எல்லாம் கடமையாகவும்
குறைகள் மட்டுமே கருத்தாகவும்
மாறும் நேரத்தில்...

மனதிற்கு இதம் தர வேண்டும்
சில கதகதப்பான நினைவுகளென
மேலும் மேலும்
அள்ளித் தந்தேன் பாராட்டுக்களும்
ஆசை முத்தங்களும்

காடு... ப்ராஜெக்ட் காடு...


குட்டிப் பெண் ஸ்கூலில் "விலங்குகள்" பற்றி ப்ராஜெக்ட்டாம். எனவே காடு செய்யச் சொன்னார்கள். அதாவது பெற்றோருக்கு ஹோம்வர்க். நம்ம செய்யறதை இப்பவாது பார்க்க ஆள் இருக்காங்கனு, நாங்களும் ரொம்ப உற்சாகமா ஒரு காட்டை உருவாக்கிட்டோம்.

நாங்கள் எல்லாம் உடனே கூட்டுக் குடும்பமாக உட்கார்ந்து காடு செய்தோம். மான் நந்தினி வரைந்து வண்ணம் தீட்டியது. மரங்களும் புதர்களும் அவளின் அப்பா/சித்தப்பாக்கள் வரைந்து தர , வண்ணம் தீட்டியவர்கள் நந்தினி & யாழினி. Deforestation என்று தெர்மாகோலை கொடுத்துடு என்று ஐடியா கொடுத்த குட்டீஸின் மாமாவுக்கும் நன்றி.

என்ன மிருகம் எல்லாம் இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்... எது எல்லாம் 3D என்று சொல்லுங்கள்...

Tuesday, November 11, 2008

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

வழக்கம்போல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு வீட்டில் நடந்து கொண்டிருந்தது. சச்சரவில் சத்தம் காதைத் துளைக்க, பெரியவளை அடக்கிவிட்டு சின்னவளிடம் கேட்டேன்:

"அக்கா ரொம்ப வம்பு பண்றாள் இல்லை"
"ஆமாம்"
"பேசாமல் மதுரைக்கு அனுப்பவா?"
""ம். சரி"
"அங்கேயே இருந்து படிக்கட்டுமா?
"ம். அவள் நிக்கி அக்கா, டிலானி அக்காவோட விளையாடிட்டு இருக்கட்டும்"
"அப்ப அக்கா வேண்டாமா?"
இதுவரை டாண் டாணென்று பதில்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கேள்விக்கு மட்டும் சற்று மெளனம், பின் "இல்லைமா எனக்கு அக்கா வேணும்".

"அக்காவை ஹாஸ்டல்ல சேர்க்கட்டுமா?"
"வேண்டாம்மா இங்கேயே இருக்கட்டும்".

இந்த அன்பு பூரிக்க வைக்கின்றது. பெரியவளும் அன்புக்கு குறைந்தவள் அல்ல. ஒரு நாள் சின்னவள் பெரிய கரண்டியை வைத்து பெரியவள் முதுகில் ஒரு அடி போட்டாள். எதற்கு? அவள் அக்கா என்று அழைத்து இவள் திரும்பவில்லை என்று. நாங்களே மிரண்டு விட்டோம். "நல்லா ஒரு அடி கொடு, அப்ப தான் அவளுக்கு வலினா என்னனு புரியும்" என்றதற்கு, பெரியவள் அந்த அழுகைக்கு நடுவிலும் இலேசாகத் தொட்டுவிட்டு
"அடிச்சுட்டேன்" என்றாள். பாசத்தின் வெளிப்பாட்டில் அவ்விடம் சிரிப்பை எதிரொலித்தது.

**********************

பாலருந்திக் கொண்டே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் சென்றது பால் கோப்பையில் பால் குறைந்தாற் போல் இல்லை. இது பரிசு தரும் நேரம் என்று எண்ணிக்
கொண்டேன். "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு ரெண்டு சாக்லேட்" என்றேன். அறிவிப்பிற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை. "யார் முதல்ல பால் குடிக்கிறாங்களோ அவங்களுக்கு முத்தம்" என்றேன். மட மட என்று காலியானது கோப்பை, பரிசிற்கு போட்டி வேறு. இந்த பரிசை கொடுக்கவோ பெறவோ கசக்குமா?

"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு"


***************************
"அம்மா இன்னிக்கு நான் தான் உனக்கு சோறுட்டுவேன்", என்று எண்ணி நான்கு பருக்கை கையில் எடுத்து , அவர்களுக்கு செய்வது போல், கடுகு, கறிவேப்பிலை நீக்கி தரும்பொழுது புரிகிறது...

"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"

***********************

Monday, November 10, 2008

என் கேள்விக்கு என்ன பதில்?

குழந்தைகள் என்றாலே "இதனால் என்ன ஆகும், என்ற விளம்பரம் போல்", ஓயாத அவர்களின் கேள்விகள் தான். கேள்வி கேட்பது ஈஸி, பதில் சொல்வது ... என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், குழந்தைகள் வேறு எங்கு கேட்க முடியும் பெற்றோர், ஆசிரியரைத் தவிர. ஆசிரியரிடம் கூட சில எல்லைகள் உண்டு, பெற்றோரிடம் தேவைப்படாது (குழந்தையாக இருக்கும் வரையாவது...).

சிலரிடம் பேசும் பொழுது , குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற இயலுவதில்லை என்று புரிகிறது. என்றாலும் குழந்தைகளிடம் நாம் கவனமாக பதில் உரைக்க வேண்டும். "இப்படி எல்லாம் கேள்வி கேட்காதே", என்றால், "எப்படி எல்லாம்" என்று எப்படி தெரியும் அவர்களுக்கு? இது, கேள்வி கேட்காதே என்று தான் அவர்களுக்குத் புரியும். சில முறைகள் "தெரியாது" என்று கூறினால், "இதுவும் தெரியாதோ", என்று கேள்விகள் அவர்களிடமிருந்து வராமலே போகக்கூடும்.

கேள்வி-பதில் தான், பல விஷயங்களைப் புரிந்து கொள்ள மிகுந்த உதவி செய்யும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே முடிந்த வரை குழந்தைகளின் வயதிற்கேற்ப பதில் கூற முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவர்களது கேள்விகளுக்கு மதிப்பு கொடுத்து பதில் சொல்ல முயற்சிப்பதே, அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், அவர்களுடனான நெருக்கமும் அதிகரிக்கும். அவர்கள் வளர வளர அவர்களது தனித்தன்மையும் வளர்கிறது என்று உணர்ந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

Friday, November 7, 2008

எலும்பு சூப்


புதுகைத் தென்றலின், தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, வாரத்திட்டம் -6 பார்த்து, நம்மளும் ஒரு சூப் ரெசிபி போடலாம்னு பார்க்கிறேன். ரெசிபினு ஒண்ணு போடறது இதான் முதல் முறை. படம் எல்லாம் இல்லை, இந்த ஞாயிற்றுக்கிழமை செய்தால் ஃபோட்டோ புடிச்சு போடறேன்.




எங்கள் ஊரில், உடம்பை கொஞ்சம் தேற்ற வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டால் போதும், தினம் ஒரு வகை என எலும்பு சூப், ஆட்டுக்கால் சூப், நாட்டுக்கோழி சூப் என்று போட்டுத் தள்ளி விடுவார்கள். சைவத்தை விட அசைவ சூப் ரொம்ப சிம்பிள் வேலை போல் எனக்கும் ஒரு ஃபீலிங். இங்கே கொடுத்து இருக்கும் ரெசிபியை ஆடு/கோழி வகையறா சூப்பிற்கு உபயோகிக்கலாம்.

தேவையானவை:


நெஞ்செலும்பு - கால் கிலோ
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்றவாறு

அரைக்க:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி

அலங்கரிக்க
கொத்துமல்லி நறுக்கியது சிறிதளவு


செய்முறை:


முதலில் அரைக்கக் கொடுத்துள்ள சாமான்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நெஞ்செலும்பைச் சேர்த்து சற்று வதக்கிவிட்டு, 4 தம்ளர் தண்ணீரும், தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். குக்கரில் 4 விசில் வந்த பின்பு, தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக விடவும் (கோழி என்றால் 4 விசிலே போதும்). தேவை என்றால் சிறிது கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். நன்கு கலந்து, கொத்துமல்லி தூவி பறிமாறவும்.

Wednesday, November 5, 2008

சின்ன சின்ன கேள்விகள்???

"ஏம்மா எப்ப பார்த்தாலும் என்னையே சொல்ற?", பெரியவளின் கேள்வி. "நீ பெரியவள், அதனால் நீ தான் விட்டுக்கொடுக்க வேண்டும்", என்றவுடன் சின்னவளிடம் பெரியவளின் முணுமுணுப்பு , "இன்னும் கொஞ்ச நாளில் நீயும் பெரியவள் ஆவ, நீயும் அம்மாட்ட திட்டு வாங்குவ". (எவ்வளவு வளர்ந்தாலும் சின்னவள் சின்னவளாகத் தான் இருப்பாள் என நான் கூறியது அவளுக்குப் புரியவில்லை)

******************************

திடீரென்று ஒரு நாள் என் சுட்டிப் பெண் , "அம்மா எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பீங்க?" என்றாள். திரு திரு என்று விழித்து "ஏன்" என்றோம். "அப்ப தான் நிறைய கிப்ட் கிடைக்கும்" என்றாள். (ஓ... பரிசுகளின் உண்மை விலை தெரியும் வரை இப்படியே கவலை இன்றி இரு பெண்ணே...)

***********
"அப்பா, நான் பெரியவள் ஆகி என்ன செய்யப் போறேன்?"
"நல்லா படிச்சா எங்களை மாதிரி கம்ப்யூடர்-ல வேலை பண்ணலாம்".
(படிக்காட்டி நிறைய சாய்ஸ் என்று அவரும் கூறவில்லை... அவளும் கேட்கவில்லை...)
*********************************
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து "பூவா தலையா" விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அருகில் வந்து, "அம்மா, ஒரு ரூபாய்ல ஒண்ணும் பண்ண முடியாது தானே?" என்றாள். சாக்லேட் வாங்கலாம் என்பது தவிர என்ன பதில், ஏன் இந்த கேள்வி என்று யோசித்துக் கொண்டே, சட்டென்று நினைவு வர, "வெய்ட் பார்க்கலாம்" என்று பதில் கூறினேன். அவளுக்கு எடை பார்ப்பது பிடிக்கும். சற்று நேரம் தேடி ஒரு ரூபாய் நாணயத்தைக் கையில் கொடுத்த பொழுது புரிந்தது, "தொலைந்த நாணயம் தேட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியில் உதித்த கேள்வி" என்று.
****************************
மாமாவின் குட்டிப்பயலோடு விளையாடிக் கொண்டிருந்தாள். என்னடா செல்லம்... தம்பி உன்னையே பார்க்கிறான் பாரு என்றவுடன், வெட்கப் பார்வை. சற்று நேரம் கழித்து... "நான் ஆரஞ்ச் ட்ரெஸ் போட்டது தான் தம்பிக்கு ரொம்ப புடிச்சிருக்கு... அதனால் இனி நான் ஆரஞ்ச் ட்ரெஸ் தான் போடுவேன். ஏம்ப்பா, நான் பெரியவள் ஆனால் என்ன ட்ரெஸ் போட்டால் தம்பிக்கு பிடிக்கும்?" (குட்டீஸ் உலகத்தில இது எத்தனை பெரிய பிரச்னை? நீ எது போட்டாலும் பிடிக்கும்டா செல்லம்...)
*************************

Tuesday, November 4, 2008

வயது தந்த பாடம்

பல பிள்ளைகளைப் போல் எங்களுக்கும் பெற்றோரை மகிழ்விக்க ஆசை தான். நட்சத்திர விடுதி, விமானப் பயணம், வெளிநாடு என எல்லாம் இன்று அனுபவிக்க அன்று பாடுபட்டு அவர்கள் படிக்க வைத்ததன் பலன் தானே?

சும்மா கூப்பிட்டால் வருவார்களா? பிறந்த நாள் கொண்டாட்டம், L.T.A என்று காரணம் சொல்லி, நட்சத்திர விடுதி, விமானப் பயணம் எல்லாம் அவர்களையும் பார்க்க வைத்தாயிற்று. அடுத்தது வெளிநாடு. திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் என்று ஒரு டூர் போகலாமா என்று யோசித்தோம். பிள்ளைகள் சற்று பெரிதானால் சுற்றுலா நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் தலை தூக்க, பிள்ளைகளின் வயதைக் கருதி திட்டத்தை சற்றுத் தள்ளிப் போட்டோம். எதிர்பாராத விதமாக, வீட்டில் ஓர் இழப்பு. பிள்ளைகளின் வயதைக் கருதியவர்கள், பெற்றோருக்கு வயதாகிறதே என்று யோசிக்க மறந்தோம். நாம் பொறுப்பான பெற்றோராக யோசிப்பது போல், பெற்றோரின் பொறுப்பான பிள்ளைகளாகவும் யோசித்திருக்க வேண்டும் என்று மனதை உறுத்துகிறது.

Friday, October 24, 2008

டெஸ்க்டாப் நிலவுகள்


என்னை அழைத்த தீஷு அம்மாவிற்கு நன்றி.

என் டெஸ்க்டாப்பிற்கு ஒளியூட்டுவதும்
என் கண்ணிற்கு குளிரூட்டுவதும்
என் வானத்தின் நிலவுகள் தான்




நான் அழைக்க விரும்புவது:

ஜீவன்
இராமலஷ்மி மேடம்
புதுகை தென்றல்

ஒரு காலை பொழுது

மண்ணின் மணத்தோடும்
மழையின் ஓசையோடும்
என்முன் மலர்ந்தது ஒரு நாள்

நறுமணத்தை முகர்ந்து
மெல்ல அனுபவிக்கும் இயல்புடன்...
இந்நாளை ருசிக்க விழைகிறது மனம்.

அதிகாலை மலர்ந்த மலரில்
உறங்கும் பனித்துளி போல்
கனவுகளின் இனிய தாக்கத்தில்
புன்னகை உன் முகத்தில் உறங்குகிறது

புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...

மென்மையாக முத்தமிட்டு
புன்னகை கலையாது துயிலெழுப்பி
கதை பேசி காலை கடன் முடித்து
பசித்த பின் ருசித்து உணவு உண்டு

எலி வாலா அணில் வாலா
என்று கூரையில் பார்த்து சிரித்த
என் பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து
முத்தமிட்டு வழியனுப்ப யோசிக்கையில்

அவசரமாக நினைவு வருகிறது
பள்ளி பேருந்தின் நேரம்
மென்மையான முத்தத்துடன் மட்டுமே
தொடங்கியது அந்த பரபரப்பான காலை...

Wednesday, October 22, 2008

தித்திக்கட்டுமே தீபாவளி!!!!

என் கணவரது அலுவலகத்தில், தீபாவளி நெருங்கும் வேளையில், ஆதரவற்ற சில குழந்தைகளின் விருப்பங்களைக் கண்டறிந்து, நிறைவேற்ற விரும்புவர்கள் செய்யலாம் என்று ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவர்கள் விருப்பப் பட்டிருந்ததெல்லாம் டிரஸ், வாட்ச், பொம்மை, பள்ளிப் பை, ஜியாமெட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களே. நல்லதொரு முயற்சியாகத் தெரிந்தது. பகிர்ந்து கொள்ளுவது சந்தோஷத்தை பன்மடங்காக்கும். எனவே இந்த தீபாவளியை நாமும் இன்னொருவரின் சின்ன மகிழ்ச்சிக்காக நம்மால் முடிந்த அளவில் செலவிட்டால், தித்திக்குமே தீபாவளி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Friday, October 17, 2008

அன்புத் தொல்லை

பெண் பிள்ளைகள் என்றாலே அப்பா மீது தனிப்பாசமும் உரிமையும் இருக்கும். எங்க வீட்லயும் இதே கதை தான். ஆனாலும் அப்பப்ப குட்டீஸ் எல்லாம் அம்மா பக்கம் சாய்ந்து "மகளிர் அணி" உருவாக்கி கலாய்ப்போம்.

போன வாரம் , ஊரைச் சுத்திட்டு வந்து மதியம் நல்லா படுத்து தூங்கிட்டு இருந்தோம். பெரியவங்க தூங்கினால் சின்னவங்க தூங்கறது மரியாதை இல்லைங்களே, அதனால் என்
பொண்ணுங்க முழிச்சிட்டு விளையாடிட்டு இருந்தாங்க...திடீர்னு குட்டிப் பெண்ணின் அழுகை.

விஷயம் என்ன என்றால், பொண்ணு எதுக்கோ அப்பாவை எழுப்பி இருக்காள். அப்பா திடீரென எழுப்பப்பட்டதால் மிரண்டு போய் ஒரு கத்து கத்த, பொண்ணு டென்ஷன் ஆய்ட்டா... சும்மாவா... அம்மா திட்டலாம், அப்பா திட்டலாமா?

"ஏண்டா செல்லம் அப்பாவை எழுப்பின, அம்மாவை எழுப்பக் கூடாதா?", நான்
"நீ தூங்கிட்டு இருந்தம்மா. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எழுப்பலை", குட்டிப்பொண்ணு

ஆஹா... இது அப்பா மேல உள்ள உரிமையா?, அம்மா மேல உள்ள பாசமா?... என்ன லாஜிக்கோ? ஒண்ணும் புரியல. ஆனால் சிரிப்பு வந்தது.

Wednesday, October 15, 2008

புரிந்து கொள்வாயா பெண்ணே?

எனக்கு கிடைக்காதவை, உனக்கு கிடைக்க வேண்டும்
என்று கனவு கண்டதில்லை, ஆனால் நடந்தது...

மகிழ வேண்டிய தருணத்தில், மனதோரம் ஒரு தவிப்பு
எனக்கு கிடைத்தவை, உனக்கு கிடைக்கவில்லை பெண்ணே!!!

தெருப்புழுதியில் விளையாடி, அடுத்த வீட்டில் உறவாடி
நான் கொண்ட இன்பம் எல்லாம்
கணினி விளையாட்டும், தொலைக்காட்சி பெட்டியும் தந்திடுமா?


உன் விடுமுறை என் விடுமுறை அல்லாததால்
உற்றாரோடு அளவளாவும் சுகத்தை
வார இறுதிக்குள் சுருக்கிவிட்டேன்....

களைப்புடன் வீடு திரும்பும் தாயை
கன்னம் நனைய, முத்தமழையில் வரவேற்கும் உனக்கு

பள்ளிவிட்டு வருகையில் அன்பாக வரவேற்று
ஆசை முத்தம் பல தந்து, இனிமையாய் சிற்றுண்டி
அன்னை தரும் சுகத்தை தரவில்லை நான்.

அம்மா, மனைவி, மருமகள், மகள், என்ற பல அடையாளங்களில்
என் அடையாளத்தை இருத்திக் கொள்ளும் போராட்டத்தில்
நீ இழப்பதை ஈடு செய்வேனா கண்ணே?

என் அன்னை கட்டிக்கொண்ட நெருப்பை
இப்பொழுது நான் உணர்வது போல்
உன் அடையாளங்களை நீ தேடும் பொழுது
என்னைப் புரிந்து கொள்வாயா பெண்ணே?

சினிமா - கேள்வி பதில்

சினிமா விளையாட்டில் சேர்த்துக் கொண்ட சந்தனமுல்லைக்கு நன்றி. சின்ன வயசில சினிமான்னா, பெரியவங்க கூட்டமெல்லாம், சின்னவங்களை உறங்க வைத்து விட்டு செகண்ட் ஷோ போவது என திட்டமிடுவார்கள். இது தெரிந்து நாங்கள்லாம் திட்டம் போட்டு விழித்தும் , கண்ணசந்த வேளையில் மாயமாக பெரியவர்கள் மறைந்து விடுவார்கள். என்றாலும் சில ஹிட் படங்கள் கண்ணில் காட்டப்படும். டி.வி வந்த பிறகு நிறைய பார்த்த்து ரீஜனல் ஃபிலிம்ஸ் தான். கூட்டத்துக்கு பயந்து சினிமா போவது குறைந்த பொழுது, ஈ.சி.ஆரில் வீடு அமைய, பிரார்த்தனாவும் மாயாஜாலும் வா வா என்று அழைக்க, மீண்டும் ரெகுலர் சினிமா விசிட்டர் ஆகிவிட்டேன். ஜம்மன்று மெத்தை விரித்து கணவரும் குழந்தைகளும் துயில, இயற்கை காற்றில் சினிமா பார்ப்பதும் நன்றாகத் தான் உள்ளது.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நினைவு தெரிந்து ஸ்கூலில் "காந்தி" படம் கூட்டிட்டு போனது புகை போல் நினைவில் உள்ளது. எல்லாம் வரிசையாக் போய் இருக்கையில் அமர்ந்தது (புகையில்) தெரிகிறது. வேறொன்றும் நினைவில் இல்லை. திகிலோடு பல் டாக்டரிடம் பல்லைக் காட்டிவிட்டு அதை விட திகிலானது "நூறாவது நாள்" படம். அப்புறம் "the car" பார்த்து இராத்திரி எல்லாம் ஹெட்லைட் துரத்தினது... ஆனா எப்பவும் இருந்த கேள்வி, "இவங்க எல்லாம் எங்கிருந்து வராங்க எப்படி போறாங்க...ரேடியோக்குள்ள இருக்கிற மாதிரி ஸ்க்ரீனுக்குள்ள இருப்பாங்களோ?"

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"சரோஜா" - இந்த ஞாயிற்றுக்கிழமை தான் (சுற்றத்துடன் செல்லும் ஜாலிக்காக) இரண்டாவது முறையாகப் பார்த்தோம். சீரியசாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ரிலாக்ஸ் செய்யும் காமெடியை இரசித்தோம்.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?சமீபத்தில் டி.வி.யில் ""பஞ்ச தந்திரம்" படம் பார்த்தேன். "பின்னாடி என்ன இருக்கு" போன்ற காமெடிகளை மீண்டும் மீண்டும் இரசித்து பார்த்தேன். 3 மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தால் தலை வலிக்கிறது. எனவே வீட்டில் உட்கர்ந்து படம் பார்க்கக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்...

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?காலேஜ் கட் அடித்து எல்லாரும் "கிழக்கு சீமையிலே" பார்த்த பொழுது "ஏனிந்த கொலை வெறி" என்று மனம் கனத்தது.
"கன்னத்தில் முத்தமிட்டால்..." தாயாகவும், மனைவியாகவும் . சில காட்சிகளை மிகவும் இரசித்த படம்.
"பருத்தி வீரன்" - கிளைமாக்ஸ் பார்த்து இனிமேல் இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு "நோ" என்று உறுதி எடுக்க வைத்த படம்.

ஏனோ கனமான கதையுள்ள நாவல்களை மீண்டும் படிக்க விழைவது போல் சினிமாவை என்னால் ஏற்க முடியவில்லை. கவலை மறந்து சிரிக்க வைக்கவே விரும்புகிறேன்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?சினிமா தான் அரசியலுக்கு நுழைவாயில் போலிருக்கும் இன்றைய நிலைமை...

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?வாரமலர் "துணுக்கு மூட்டை" கிசுகிசு வாசிச்சு துப்பறிய முயற்சிப்பேன். ஆ.வி. படிச்சுட்டு லஞ்ச் டைம்ல டிஸ்கஸ் செய்வேன். ஆனால் சினிமா செய்திக்குனு தனியா வாங்கி வாசிக்க மாட்டேன்.

தமிழ் சினிமா இசை?
குழந்தைகள் இரசிப்பதால், அவர்களோடு சேர்ந்து குத்து பாட்டு இப்ப பிடிக்குது. மனதை கொள்ளை கொள்ளும் "மெலடி" ரொம்ப பிடிக்கும். எதுவாக இருந்தாலும் வார்த்தைகளோடு இரசிப்பதில் தான் எனக்கு சுகம். இப்ப பண்ற ரீ-மிக்ஸ் எல்லாம் ஒரிஜனலை மறக்க வைப்பதால் பிடிக்கவில்லை.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் எப்பொழுதாவது இடம் உண்டு. "தாரே ஜமீன் பர்..." நெஞ்சை நெகிழ வைத்தது.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?வெள்ளித்திரை மட்டும் தாங்க தொடர்பு. இந்த லெவல்ல இருந்தாலே அது நல்லாதான் இருக்கும்.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அதுக்கென்னங்க... அமோகமா இருக்கும். அப்பப்ப நல்ல படம் வரும். வரிவிலக்கு இல்லைனா தமிழ் படம்னு சொன்னால் தான் தமிழ் பட டைட்டில்னு தெரியும். இன்னும் கொஞ்ச நாள்ல வரிவிலக்கு கொடுத்தா தான் பாட்டெல்லாம் புரியும், அப்புறம் வரிவிலக்கு கொடுத்தால் தான் தமிழ்ப்படம்னு புரியும். 70 வயசு ஹீரோ 15 வயசு பொண்ணோட டூயட் பாடிட்டு 17 வயசு பொண்ணை அக்கானும் 20 வயசு பொண்ணை அம்மானும் கூப்பிடுவாங்க. சூப்பர் மேக்கப், சூப்பர் நடிப்புனு புகழுவோம்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு நோ ப்ராப்ளம். எத்தனை நல்ல புத்தகங்கள் உள்ளன வாசிப்பிற்கு? பிள்ளைங்கள கூட்டிட்டு போகலாமானு கவலைப் பட வேணாம். எல்லாம் நன்மைக்கே...
தமிழர்கள்... கில்லாடிங்க அவங்க... வேற பொழுதுபோக்கை உருவாக்கிடுவாங்க...


நான் யாரை அழைப்பது? ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்க போல இருக்கே. அதனால் இஷ்டம் இருக்கறவங்க எடுத்து எழுதுங்க. நன்றி..

Monday, October 13, 2008

என்னுலகம் நீயானாய்...

பொருள் தேடும் உலகத்தில்
பொருள் விளங்கா வாழ்க்கையில் - அரும்
பொருளாக வந்து - வாழ்விற்குப்
பொருள் தந்தவளே...

கோபம் கொண்டு நான் சீறினாலும்
கொஞ்சிப் பேசி சிரித்து
பஞ்சாய் என் கோபம் பறக்கையிலே
தஞ்சம் அடைந்தேன் உன் சிரிப்பினிலே...

சொன்ன சொல் கேளாது
சொன்னதையே சொல்லும்
உன் கிள்ளைப் பேச்சினிலே
என் பிடிவாதம் மறந்தேன் செல்லமே...

என் நெஞ்சோடு சாய்ந்து
நான் மட்டும் உன்னுலகமென
துன்பமின்றி நீ உறங்கையிலே
என்னுலகம் நீயானாய்...

Wednesday, October 8, 2008

புதுவரவுக்கொரு பூச்செண்டு

பூத்துக் குலுங்குகிறது அக்டோபர்
பூமகனே உன் வரவால்...

வளர்பிறையில் வந்தவனே
வளமோடு வாழ்ந்திடுவாய்!!

அத்தை என அழைக்க
அருமையாய் வந்தவனே...

புரட்டாசியில் பிறந்தவனே
புகழோடு வாழ்ந்திடுவாய்!!!

மென்னகை புரிபவனே
மேன்மையோடு இருந்திடுவாய்!!!

அத்தை அடிக்க மாட்டேன்
அரளிப் பூச்செண்டாலே

அன்பாகத் தந்திடுவேன்
அழகான பூச்செண்டு...

பூமகனை ஈன்றெடுத்த பூவைக்கும்
பூரித்து நிற்கும் புதுத்தந்தைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(அக்டோபர் 1-ல் இவ்வுலகில் அடியெடுத்து வைத்த குட்டிப்பயலுக்கு அத்தையின் வாழ்த்து)

Tuesday, September 30, 2008

டாம் அண்ட் ஜெர்ரி

"அம்மா, அக்கா என் மிக்கி மவுஸ் பில்லோவைத் தொடறா"
"அம்மா , எனக்கு தான் முதல்ல சாப்பிட..."
"அம்மா , அக்காவைத் தள்ளி உட்காரச் சொல்லு, என்னைத் தொடறாள்..."

காலை என்றாலே "வீய்ய்ய்..." என்ற அலறலுடன் குட்டிப் பெண்ணின் அட்டகாசம் தாங்காது. தலைக்கு குளிச்சு, துவட்டாமல், ஊரைச் சுத்தி பீச்ல தண்ணில நனைஞ்சா என்ன ஆகும்னு நந்தினி ஆராய்ச்சி செஞ்சு காய்ச்சல் வரும்னு கண்டு பிடிச்சாள்.

இப்போ குட்டிப் பெண் என்ன செஞ்சா?

"அக்கா, இந்தா என் பில்லோ, நல்லா படுத்துக்கோ"
"அம்மா, அக்காவுக்குப் பசிக்குதாம் , உடனே சாப்பிட கொடு... அம்மா இப்பவே கொடு, அக்காவுக்கு ரொம்ப பசிக்குதாம்..நான் தான் அக்காவுக்கு ஊட்டி விடுவேன்..."
"அக்கா, நான் உன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிடறேன்..."
"அம்மா , அக்காவுக்கு புறா சத்தம் கேட்டால் கூட பயமா இருக்காம், நான் அவ பக்கத்திலேயே படுத்துக்கறேன்..."

அக்காவுக்கு காய்ச்சல் சரியான உடனே, "அம்மா, அக்கா என் மிக்கி மவுஸ் பில்லோவைத் தொடறா" ....

மாறிவிட்டதடி என்னுலகம்

கடலோரம் என்றாலே
ஆர்ப்பரிக்கும் அலைகளும்
தீப்பிழம்பாய் சூரியனும்
சிலு சிலுவென்ற காற்றும்
தடம் பதியும் மணலும்
மனம் கொள்ளை கொள்ளும்...

இன்று மனதில் நிற்பதெல்லாம்
அலைகளின் வரவில்
ஆர்ப்பரிக்கும் மழலைகள் ...
செங்கதிரோன் செவ்வொளியில்
பூரிக்கும் உன் கன்னங்கள் ..
சில்லென்ற காற்று
சிலுப்பி விடும் உன் குழல்கள்..

மாறிவிட்டதடி என்னுலகம்...

அலைகள் கலைக்கும் மணலில்
எழுத்து எதற்கு என்றவள் தான்
உன் சிரிப்பிற்காக, அழிய அழிய ...
எழுதிக் கொண்டேயிருக்கிறேன்

மணல் வீட்டை கலைத்தவரிடம்
கோபம் கொண்டவள் தான்
நீ கலைப்பதற்கென்றே
கோட்டைகள் கட்டுகிறேன்
உன்னுடன் சேர்ந்து நானும்
கலைத்துச் சிரிக்கிறேன்...

குப்பையாகும் வீடென்று
பொறுக்காத சிப்பிகளெல்லாம்
இன்று நம் கையில்
நம் வீட்டை அழகுப்படுத்த...

என் அருமை பெண்ணே
உன்மயமானதால்
மாறிவிட்டதடி என்னுலகம்...

Monday, September 29, 2008

தேடலில் கிடைத்தவை...


கதை கேட்டு பூரிக்கும்
உன் முகத்திற்காகத்
தேடிச் சென்றேன்,
புத்தகங்களிலும், நினைவுகளிலும்...

புத்தகத் தேடலில் கிடைத்தவை
தேவதைகளும், பூதங்களும்
ஆயிரத்தோர் இரவுகளும்
இன்னும் பலவும்
இன்றும் தேவைப்படும்
அழகான நீதிகளும்...

நினைவுகளின் தேடலில் கிடைத்தவை
பாட்டி சொன்ன கதைகளும்
தூண்டப்பட்ட என் கற்பனைகளும்...

Sunday, September 28, 2008

கற்றது கைமண் அளவு...

என் பெண்ணிற்குச் சிறு கதைகள் படிக்கும் பழக்கம் அவளுக்கு கதைகள் பாடப் புத்தகத்தில் வரும் பொழுதே ஏற்படுத்தினோம். கதை புத்தகங்கள் பல வாங்கிக் கொடுத்து, படிக்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல, ஒரு பக்க கதைகள் அவளுக்கு சலித்துப் போவது போல் தெரிந்தது. எனவே நூலகத்தில் அவள் வயதிற்கு (9) உரிய சற்று பெரிய கதைகளாக , புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்தேன். ஒரு பக்கத்திற்கு மேல் படிக்கவில்லை என்றதும், அவளுக்குப் பிடிக்கவில்லை என்று எண்ணினேன். பின் ஒரு நாள், அவளுடன் கதை படிக்க நானும் அமர்ந்தேன். அப்பொழுது தான் புரிந்தது, நாவல் போல் தொடர்ச்சியாகப் படிப்பது புதிதாக இருப்பதால், தடுமாறுகிறாள் என்று. ஓரிரண்டு அத்தியாங்கள் அவளுடன் சேர்ந்து நானும் படித்தேன். அதன் பிறகு அவள் புரிந்து சுவாரஸ்யத்துடன் படிக்கலானாள். இப்பொழுதெல்லாம், அவளே அவள் விருப்பத்திற்கு ஏற்ப புத்தகங்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கிறாள். அவளுக்கென வாசிப்பில் பிடித்தவை, பிடிக்காதவை என ஒரு தனித்தன்மை உருவாகுவதைக் காண வியப்பாக உள்ளது.

சிறு சிறு விஷயம் என்று நாம் குழந்தைகளிடம் பல விஷயங்களைக் கவனிப்பதில்லை. சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் , எப்பொழுது விரல் பிடிக்க வேண்டும், எப்பொழுது விட வேண்டும் என்று உணர்ந்து, அவர்களுக்கு நாம் சரியான நேரத்தில் வழிகாட்டலாம்.

Wednesday, September 24, 2008

நல்லா ஊதித் தள்ளுங்க...

கடந்த வாரம் ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. ஏ.சி கோச் தான் டிக்கட் கிடைத்தது. குளு குளு என்று போவது பெரிய விஷயம் கிடையாது. நாம் போகும் பொழுது தான், யாராவது புகைஞர் வந்து ஊதித் தள்ளுவார். ஏ.சி பஸ்ஸிலோ, கோச்சிலோ இதை சகித்துக் கொள்வது போன்ற கொடுமையை சொல்ல முடியாது. சும்மா ஊதினாலே மூச்சு திணறும், ஏ.சி கோச்-ல மூச்சு நின்னுடுமோனு இருக்கும். இந்த தடவையும் அதே ப்ரச்னை தான். யார் எவர் என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாத கையாலாகாத்தனத்துடன் தான் இருக்க வேண்டி உள்ளது. எனக்கு "wheezing" உள்ளதால், சற்று சிரமமாக இருந்தது. ஒரு சிறு பிள்ளைகக்கோ, அல்லது வயதானவருக்கோ அலர்ஜி என்றால் எத்தனை சிரமம்?

இவங்க கையில் ஒரு ஸ்ப்ரே கொடுத்து, பக்கத்தில இருக்கிறவங்க மேல் ஸ்ப்ரே பண்ணுங்க, நல்லா மூச்சு திணறட்டும் என்று கூறினால் செய்வார்களா? (நிச்சயம் 50% செய்ய மாட்டார்கள் என்று தோன்றுகிறது). புகைப்பதும் கிட்ட தட்ட அதைத் தான் செய்கிறது என்பதை ஏன் இவர்கள் உணர்வதில்லை?

அவர்கள் புகைக்கும் பொழுது அருகில் ஒரு கைக்குழந்தையோ, கருவில் ஒரு குழந்தையோ இருக்கலாம், அவர்களும் இந்த நச்சுப் புகையை நுகரலாம் என்பது இவர்களுக்கு தெரியுமா?

அருகில் இலேசான ஆஸ்துமாவில் துன்புறுபவர்கள், இந்த புகையால் மேலும் அவதிப்படுவார்கள் என்று அறிய மாட்டார்களா?

இன்று. மாரடைப்பு என்பது வெகு சகஜமாகி விட்டது. இப்பொழுது புகைக்கா விட்டாலும் முன்பு புகை பிடித்திருந்தால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இன்று பல விஷயங்களில் விழிப்புணர்வூட்ட ஊடகங்கள் உள்ளன. என்றாலும் இதெல்லாம் தெரிந்தே புகைக்கிறார்கள்.

தன்னைப் பற்றி நினைக்க வேண்டாம் என்றால், இருந்தால், "passive smoking" என்று மற்றவர்கள் திணறடிக்கப்படுகிறார்கள், இல்லை என்றால் அவரை நம்பி இருப்பவர்கள் தான் துன்பப்படுவார்கள்.

இதெல்லாம் சிகரட்டை வாயில் வைக்கும் பொழுது யோசித்தால் நிச்சயம் இப்பழக்கம் குறைந்து நின்று விடும் என்று தோன்றுகிறது.

எதை பற்றியும் கவலை இல்லை, என் இஷ்டம் என்றால் "நல்லா ஊதித் தள்ளுங்க..."

Friday, September 19, 2008

என் பெண் வளர்கிறாள்...

மெதுவாகச் சுற்றிய என் உலகம்
வேகம் கொண்டது, உன் வரவால்

நேற்று போல் உள்ளது
நீ என் கைகளுக்குள்
கவலையின்றித் துயின்றது...

இன்று
என் தோளை எட்டிப் பிடித்து
என்னை அணைத்து சிரிக்கிறாய்...

என் கண்ணீர் மட்டும் துடைத்தவள்
கண்ணீருக்குக் காரணம் தேடுகிறாய்

கதைகள் கேட்டு மகிழ்ந்தவள்
கதை கூறி மகிழ்விக்கிறாய்

தாலாட்டுகளில் கண் மலர்ந்தவள்
உன் மடியில் என்னைத் தாலாட்டுகிறாய்

என்ன செய்யலாம் என்று கேட்டவள்
இப்படி செய்யலாமா என்று கேட்கிறாய்


உன் ஒவ்வொரு வளர்ச்சியிலும்
நான் முகம் மலர்கிறேன்
உன் முக மலர்ச்சியில்
நான் புத்துயிர் பெறுகிறேன்.

Wednesday, September 17, 2008

குடும்ப விஷயம்???

இந்த குட்டீஸ் சுட்டி டி.வி. பார்த்து பண்ற காமெடி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. அதுங்க ப்ரெண்ட்ஸ் வீட்ல கேட்டால் "சேம் ப்ள்ட்..." என்று சிரிக்கிறார்கள்.

நாலு வயசுல நான் குடும்பத்த பத்தி பேசினேனானு தெரியல. ஆனா என் பொண்ணு பேசறா. அவ ப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தா. அவளுக்கு டிபன் ரெடி பண்ணிட்டிருந்தாங்க.

"ஆண்ட்டி, என்ன டிபன் தரப் போறீங்க?"
"தோசை"
"மொறு மொறுனு சுடுங்க, அப்ப தான் என் அக்காக்கு பிடிக்கும்"
"சரிம்மா"
"எனக்கும் மொறு மொறுனு சுடுங்க, ஏன்னா நாங்கள்ளாம் ஒரே குடும்பம்"
"!!!!!"

அவங்க வீட்டு காமெடி... சின்னவ எதையோ கீழ போட்டு உடைச்சிட்டா. பெரியவ வெளில யார் கிட்டயோ இத சொன்னாளாம். வீட்ல வந்து சின்னவ சொல்றா "அம்மா, நான் கீழ போட்டு உடைச்சத எல்லாம் இவ வெளிய போய் சொல்றா. அப்படி சொல்லலாமா ? இதெல்லாம் நம்ம குடும்ப விஷயம் இல்லையா?"

சுட்டி டி.வி. effect என்று குடும்பமாக் சிரித்து வைத்தோம்.

Tuesday, September 16, 2008

கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.

மன்னித்தல்
-----------------
எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...

விட்டுக் கொடுத்தல்
------------------------------
என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார் டாக்டர்" என்று எப்பொழுதும் சண்டையாம். "நீ என்ன" என்றேன். "நான் நர்ஸ்" என்றாள். "நீ ஏன் டாக்டர் இல்லை" என்றேன். "எல்லாரும் டாக்டர் ஆனால், யார் தான் நர்ஸாக இருப்பதாம்", என்றாள். நியாயமான பேச்சு என்று தோன்றியது.

நம்பிக்கை
---------------
பள்ளியில் போட்டி ஒன்று முடித்து வந்திருந்தாள். "என்ன பரிசு கிடையாதா?", என்றேன். "நீ தானம்மா சொல்லி இருக்க, ப்ரைஸ் வாங்குவது முக்கியம் இல்லை, பங்கெடுப்பது தான் முக்கியம்", என்றாள். அவள் ஆணித்தரமாக கூறியது, நான் கூறும் விஷயங்கள் அவள் மனதில் பசுமரத்தாணி போல் பதிகின்றன என்பதை பறை சாற்றின.

செய்யக்கூடாதது
--------------------------
மற்றொரு நாள், கீதை போட்டியில் கல்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றாள். கேட்ட டேப்பை வாங்கிக் கொடுத்தேன். கற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது, கற்றுக் கொடு என்றாள். என்னால் சமஸ்கிருத உச்சரிப்பைக் கற்று சொல்லித் தர முடியாது என்றேன். பின் அவள் ஆர்வத்துக்காக ஒத்துக் கொண்டேன். அலுவலக மற்றும் வீட்டு வேலைகளுடன் இதையும் இழுத்துச் செய்ததால் ஒரு நாள் விளையாட்டாக, "இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுக்கிறேன், ஒழுங்கா பரிசு வாங்கிட்டு வரணும்", என்றேன். ஒரு நாள், தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள், பரிசு கிடைக்கவில்லை என்றாள். நன்றாக சொன்னாய் அல்லவா , அது போதும் என்று கூறினேன். பின் ஒரு நாள் அவள் ஆசிரியையைக் காணச் சென்ற பொழுது, "தோல்வியை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள், அன்று முழுவதும் தலைவலி என்று அழுது கொண்டிருந்தாள்", என்றார். எனக்கு அதிர்ச்சி, அன்று அவள் ஆணித்தரமாகப் பேசிய மொழிகளை நான் எத்தனை முறை என் தோழியரிடம் கூறி
பெருமையுற்றேன். அவளுடன் பேசிய பின்பு தான் புரிந்தது, நான் அன்று விளையாட்டாகக் கூறிய மொழிகள் அவள் மீது இத்தனை அழுத்ததைக் கொடுக்கும் என்று நான் உணரவில்லை. நாம் விளையாடுகிறோமா அல்லது உண்மை கூறுகிறோமா என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணக்கூடாது. நாம் தான் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற மற்றொரு விஷயம், சொன்னதை செய்தல். எப்பொழுதும் வாக்குறுதி கொடுத்து மறந்து விடாதீர்கள். நாம் அவர்கள் அசைவுகளை கவனிக்கிறோமோ இல்லையோ, அவர்கள் நமது ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறார்கள். சின்னதாக சாக்லேட் வாங்கி கொடுக்கிறேன் என்று, சொன்னால் கூட கடைபிடிக்க முயலுங்கள். முடியாவிட்டால், காரணம் கூறி மன்னிப்பு கேட்பது தவறல்ல. அப்பொழுது தான் அவர்களுக்கும் சொன்னதை செய்யும் பழக்கம் ஏற்படும்.

இவ்விஷயத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. தாய் நண்டு தன் சேய்க்கு நடை பயில கற்றுக் கொடுக்கிறது. பக்கவாட்டில் நடக்கும் பழக்கம் உள்ள அது, தன் குட்டி நேராக நடக்க ஆசைப்படும். எனவே நேராக நடக்க கூறும். ஆனால் குட்டி நண்டால் நடக்க முடியாது. கோபமுற்ற தாய் நண்டு, குட்டியைத் திட்டும். அப்பொழுது குட்டி நண்டு கூறும், "நீ ஒரு முறை நடந்து காட்டு அம்மா, அப்புறம் நான் நடக்கிறேன்", என்று.

மிக உண்மை. நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

Friday, September 12, 2008

அம்மா என்னை கவனி...

குழந்தைகள், நம் கவனம் முழுவதும் தங்கள் மீதிருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதம் அழகானது..

*****************

அவளுக்கு ஆறு இதழ் பூ வரைந்து வண்ணமடிக்க கொடுத்து விட்டு , ஒரு பக்கம் படித்து விடலாம் என்று புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஒரு வரி படிப்பதற்குள், "அம்மா நீ ஒரு கலர் அடிப்ப்பியாம் , நான் ஒரு கலர் அடிப்பேனாம்", என்று குரல். சரி என்று, ஒரு வண்ணம் தீட்டி, "ம்... நீ அடி" என்றேன். "நீ ரொம்ப அழகா அடிக்கிறமா... நீ அடி, நான் பார்க்கிறேன்" என்றாள். "நீ நல்ல மேனேஜரா வருவ" என்று வாழ்த்தி வண்ணமடித்தேன். புத்தகம் படிக்காமல் அவளை கவனிக்க இந்த வழிமுறை.


**********************************

"அம்மா, நான் சாக்லேட் சாப்பிடட்டுமா?"
"ம்"
"சொல்லும்மா நான் சாக்லேட் சாப்பிடட்டுமா"
"ம்"
"வாயைத் திறந்து பேசும்மா.நான் சாக்லேட் சாப்பிடட்டுமா?"
"சரி"

(எதுக்கும் ஒரு மெயில் தட்டிடுங்க (அத்தாட்சிக்கு).. என்று ஆபீஸில் கூறுவது போல் எனக்கு இந்த உரையாடல் தோன்றும்)

**********************************

புத்தகமும் செய்தித்தாளும் கிடந்தது. ஆவலுடன் புத்தகத்தை எடுத்தேன். "அம்மா எனக்கு அந்த புக்-ல் ஒரு முக்கியமான விஷயம் படிக்கணும்". (அவள் படிப்பது எல்.கே.ஜி). செய்தித்தாளைக் கொடுத்தேன். "நான் பேப்பர் படிக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா", என்று என் புத்தகம் பறிக்கப்பட்டது (எனக்கு பேப்பர் படிப்பதில் ஆர்வமில்லை என்று அவளுக்குத் தெரியும்).

*********************************
கொஞ்சம் செய்தித்தாளில் படம் காட்டி ஆர்வம் உண்டாக்கினால் , செய்தித்தாள் படிக்கும் பொழுது பறிக்கும் பழக்கத்தைத் தடுக்கலாம் என்று என் கணவர், அவளை அருகில் இருத்தி, படம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். "அப்பா, கண்ணை மூடிக்கங்க, நான் ஒரு சர்ப்ப்ரைஸ் காட்டறேன்" என்றாள். அவரும் செய்தார். செய்தித்தாள், பழையவை சேகரிக்கப்படும் இடத்திற்கு மாறியது தான் அவள் கூறிய "சர்ப்ப்ரைஸ்"

*********************************

வீட்டில் இருந்தால் எனனை கவனி என்பது தான் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் செய்தி.

Thursday, September 11, 2008

ஸ்கூலுக்கு போகமாட்டேன்...

இன்று குட்டிப் பெண்ணுக்கு உருளைக்கிழங்கை சார்ட் பண்ண சொல்லி இருந்தார்கள். சார்ட் செய்த பின் என் கணவர் அவளுக்கு உருளைக்கிழங்கைப் பற்றி நாலு வரி சொல்லிக் கொடுத்தார். அனாவசியத்துக்கு கார்போஹைட்ரேட்சை இழுத்தார். அவள் வாயில் நுழையவில்லை, ஏதோ கூறினாள். அவள் அக்கா சிரித்தாள். கொஞ்ச நேரம் கழித்து , எனக்கு வயிறு வலிக்குது" என்று குட்டிப் பெண் படுத்து விட்டாள். மெல்ல அவளிடம் சென்றேன். "என் செல்லமே, நீ போய் உருளைக்கிழங்கு சார்ட்டை கழுத்தில மாட்டி நின்னா போதும். மிஸ் ஒண்ணும் பேச வேண்டாம்னு சொல்லிட்டாங்க. வயறு வலிக்குதுனா படுத்து ரெஸ்ட் எடு, சரியாகிடும்". கொஞ்ச நேரம் கழித்து, சார்ட்டுடன் மேடம் ஸ்கூலுக்கு ரெடி.

முன்பொரு முறை அவள் அக்காவுக்கும் இதே சிண்ட்ரோம் தான். அடிக்கடி வயிறு வலிக்கிறது என்றாள். மெல்ல விசாரித்த பொழுது தான் தெரிந்தது, அவள் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு ப்ராக்டீஸ் செய்ய, வேறோர் இடத்திற்குச் செல்கிறாள். ஏனோ, புது ஆசிரியர்கள், புது மாணவர்களைக் கண்டதும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்துள்ளது. அதனால் தான் வயிற்று வலி. ஆண்டு விழா நிகழ்ச்சியிலிருந்து அவளை விலக்கச் சொல்லி ஆசிரியரிடம் கூறிய பின்பு வயிற்று வலி வரவில்லை. அடுத்த வருடம் அவளே விரும்பி ஆண்டு விழாவில் பங்கெடுத்தாள்.

எனவே குழந்தைகள் ஏதேனும் காரணம் கூறி பள்ளிக்குச் செல்ல அடிக்கடி மக்கர் செய்தால், என்ன காரணம் என்று பார்க்க முயலுங்கள். என்றும் அவர்கள் "இதனால் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்" என்று கூற மாட்டார்கள். நாம் தான் கவனமாக் அவ்ர்களின் அசைவுகளை கவனிக்க வேண்டும்.

Wednesday, September 10, 2008

பட்டறிவு

பிடிக்காத எழுத்துக்கள்
பிடிக்கத் தொடங்கியது
புரியும் வயது வந்தபின்...

வெள்ளித்திரை காதல்கள்
மனதைத் தொட்டது
திருமணத்திற்குப் பின்...

மனதை உருக்கிய சில நிகழ்வுகள்
மனதை உலுக்கியது
தாய்மைக்குப் பின்...

பத்து வயதில் படித்த புராணங்கள்
இப்பொழுது சொல்வது
வேறு பல செய்திகள்


பட படத் தான் புரிகிறது
வாழ்க்கையின்
வெவ்வேறு பரிமாணங்கள்

Tuesday, September 9, 2008

பூரிப்பூ



வீட்டின் முன் அழகாக பூத்திருந்தது அந்த பூ. "இக்ஸோரா" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பூவை "இட்லி பூ" என்போம். என் பெரியம்மா என் குட்டிப் பெண்ணிடம் "இட்லி பூ" பூத்திருக்கு பார் என்றார். அவள் "பூரி பூ" எங்கே என்றாள்? அதற்கு அவர் , கண்ணாடி பார், உன் முகத்தில் உள்ளது "பூரிப்பு" என்றார். நல்ல டைமிங் என்று இரசித்தோம்.

Monday, September 8, 2008

இழப்பு

மரணத்தின் நிழல்
வாசலில் விழும்வரை
அதைப் பற்றிய
யோசனைகள் குறைவுதான்....

நேசித்தவரின் இழப்பில
உருவான வெற்றிடத்தில் தான்
மரணத்திற்குப் பின்?...
போன்ற கேள்விகள் தோன்றுகின்றன

காலதேவனின் வருகையில்
வேதனையுடன் கூடிய
கூக்குரல்தான் அதிகம்...

காலம் செல்ல செல்ல
அந்த வெற்றிடம்தான்
மூச்சை அடைத்து
வலியை ஏற்படுத்துகிறது...

அதே காலம் செல்ல செல்ல
வெற்றிடம் பழகிப் போய்
வலிகள் வடுக்களாகின்றன...

மரணத்தின் மன்றத்தில்
குற்றவாளியாக இருப்பதை விட
சாட்சியாக இருப்பது தான்
திகிலுறச் செய்கிறது...

Tuesday, September 2, 2008

குழலினிது யாழினிது ...

யாழினி 1,2,3 எழுதிக் கொண்டிருந்தாள். 1,2,3,4,6,7,8,9,10.
நான்: 5 எங்கே?
அவள்: நான் எடுக்கலைமா...
****************************

திருப்பதியில் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. எனவே என் குட்டிப் பெண்ணிடம் அனுமதி வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று பேச்சு கொடுத்தேன். ஸ்கூல்ல இப்ப தான் days, months எல்லாம் சொல்லிக் கொடுத்து உள்ளார்கள்.

குட்டிம்மா அம்மா ஒரு கல்யாணத்துக்கு திருப்பதி போகணும், ஒரு நாள்ள வந்துடுவேன். நீ சமத்தா மாம்மை (தாய் வழி பாட்டி) கூட இருப்பியா?

இல்லம்மா நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
"டேஸ்" ஆனாலும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
"டேஸ்" முடிந்து "மந்த்ஸ்" ஆனாலும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
"மந்த்ஸ்" முடிந்து என் "பர்த் டே" வந்தாலும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி
என் ஒவ்வொரு பர்த் டேக்கும் நீ என் கூட தான் இருக்கணும்.
சரி

அப்புறம் ஒரு திருப்பதி டாலருக்கும், மோதிரத்துக்கும் அனுமதி வாங்கிச் சென்று வந்தேன்.
****************************
அவள் அத்தையிடம் டி.வி போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாள். டி.வி. போட்டால் அவள் தூங்க மாட்டாள் என்று , "என்னால் டி.வி போட முடியாது" என்று அத்தை கூறினாள். எங்க குட்டி மேடத்தின் பதில்... "எதையும் முடியாதுனு சொல்லக்கூடாது அத்தை. முதல்ல முயற்சி செய்யணும். முயற்சி செஞ்சா தான் சாதிக்க முடியும்" (இது எல்லாம் சுட்டி டிவி effect. அது குழந்தைகள் தமிழ் வார்த்தைகள் பேச நிறையவே உதவுகிறது. என் மகள் அடிக்கடி கூறும் இவ்வாக்கியங்கள் இனிமையானவை...
ஏதாவது உதவி வேணுமா அம்மா?
கண்டிப்பா செய்றேன்
நிச்சயமா செய்றென்
முயற்சி செய் அம்மா)
*******************************

Thursday, August 28, 2008

குழந்தைகளும் , கதைகளும் கற்பனைகளும்....

"இப்பல்லாம் பிள்ளைகளுக்கு நீ கதை சொல்லி சோறூட்டுவது இல்லை", என்பது என் கணவரின் புகார். உண்மை தான், "காக்கா வந்து பாப்பாட்ட, அக்கா அக்கா நான் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட மாட்டியானு கா கா னு
கத்துச்சாம்" என்று தொண்டை வரள பறவைகள் போலவும் மிருகங்கள் போலவும் கத்தி கதை சொல்லி சாப்பிட வைத்த நாட்கள் உண்டு. இப்பொழுதெல்லாம், நிறைய வேலைகள் இருப்பதால், "முழுங்கு ...பத்து சொல்றதுக்குள்ள முழுங்கு..." என்று கூறி ஊட்டுவது வழக்கமாகி விட்டது.



இரவு தூங்க கதை சொல்லும் வழக்கம் கூட, கதையின் சுவாரசியத்தில், பிள்ளைகள் தூங்காது விழித்து இன்னொரு கதை சொல்லு என்று கூறுவதால், நின்று விட்டது. என்றாலும், சமீபத்தில் வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் கதை சொல்லும் வழக்கம் தொடங்கியது. அது குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி விடுவதைக் காண இனிமையாக உள்ளது.


இப்படித் தன் நேற்று நான் என் நான்கு வயது பெண்ணிடம் ஒரு கதை கூறி விட்டு, நீ ஒரு கதை சொல்லு என்றேன். எப்பொழுதும் வேகுவட்டி (விறகுவெட்டி) கதையும், காக்கா கதையும் கூறுபவள், நான் சொன்ன கதையையே மாற்றிக் கூறியது இரசிக்கத்தக்கதாக இருந்தது. மேலும், என் பெரிய பெண் சினன வயதில் கதை கேட்கும் பொழுது போடும் கண்டிஷன் போலவே, ஒரு கருத்து அவள் கூறிய கதையில் இருந்ததாகத் தோன்றியது. அவள் போட்ட கண்டிஷன் "கதையில் யாரும் செத்துப் போகக் கூடாது... கெட்டவங்க எல்லாம் நல்லவங்களாக வேண்டும்.."


நான் கூறிய கதை:

ஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான தோட்டம் வச்சிருந்தாராம். அவருக்கு ஊருக்குப் போக வேண்டி இருந்ததாம். செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தனுமே, யார் கிட்ட சொல்லலாம்னு யோசிச்சாராம். தோட்டத்தில் இருந்த
குரங்குகளைக் கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , செடிக்கெல்லாம் தண்ணி ஊத்தி பாத்துக்குவிங்களானு கேட்டாராம். அதுங்களும் சரினு சொல்லிச்சாம். அவர் போனப்புறம், அதுங்கள்ளாம், "சின்ன வேர் இருக்கிற செடிக்கு கொஞ்ச தண்ணியும், பெரிய வேர் இருக்கிற செடிக்கு நிறைய தண்ணியும் ஊத்தணும்" அப்படீனு சொல்லிட்டு, ஒவ்வொரு செடியா பிடிங்கி பார்த்து நட்டு வச்சு தண்ணி ஊத்துச்சாம். பிடிங்கி வச்சதால் செடியெல்லாம் செத்துப் போய்டுச்சாம். ஒரு வேலையை கொடுக்கும் போது, யோசிச்சு செய்றவங்ககிட்ட கொடுக்கணும்.


அவள் கூறிய கதை:

ஒரு தோட்டக்காரர் இருந்தாராம். அழகான முயல் வளர்த்தாராம். அவருக்கு ஊருக்கு போக வேண்டி இருந்ததாம்.முயலுக்கெல்லாம் சாப்பாடு போடனுமேன்னு யோசிச்சாராம்.தோட்டத்தில் இருந்த குரங்கை கூப்பிட்டு, நான் ஊருக்குப் போகணும் , முயலைப் பார்த்துக்குவியானு கேட்டாராம். குரங்கு சரினு சொல்லிச்சாம். "முயல் என்ன சாப்பிடும்னு கேட்டுச்சாம்". (ஆகா, என்ன ஒரு முன்யோசனை) "கேரட் சாப்பிடும்". அப்புறம் குரங்கு முயல் கையை கடிச்சிடிச்சாம். (ஏண்டி கடிச்சுது?) ம்ம்.. முயல் குரங்குக்கு தெரியாம கைல மருதாணி போட்டுச்சாம், அதனால் கடிச்சுது (என்ன ஒரு கற்பனை). முயல் வந்து தோட்டக்காரர் கிட்ட குரங்கு என் கையை கடிச்சுதுனு சொல்லிச்சாம். உடனே தோட்டக்காரர் குரங்கை மரமா மாத்திட்டாராம் (இது Fairy Tales பாதிப்போ?). அப்புறம் முயலைக் கூட்டிட்டு ஊருக்குப் போய்ட்டாராம். (உன் பொறுப்பை நீ தான் ஏற்க வேண்டும் என்கிறாளோ?)

நான்கு வயது பெண் முற்றிலும் வேறாக யோசிக்கிறாள் என்பது இனிமையாக இருந்தது. கற்பனையைத் தூண்டும், இந்த கதை கூறும் வழக்கத்தை விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.