என் மேகம் ???

Monday, November 21, 2011

தி குட் விட்ச்

உறவினர் வீட்டில் குழந்தையைக் காணச் சென்றிருந்தோம். குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “ட, டு, டி” என்று தொடங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து மற்றொரு வீட்டிற்குச் சென்றோம். கோழிக் குஞ்சு இருந்தது. அதன் பெயர் கேட்டாள். “பெயர் வைக்கவில்லை... நீயே சொல்லு” என்றார்கள். "அம்மா கோழிக்குஞ்சுக்கு பெயர் வைக்கணும், “கோ”னு ஆரம்பிக்கிற பெயர் சொல்லு" என்றாள் :-)


----------------------------------------------------
குழந்தைகள் தினம்... வந்துவிட்டது மாறுவேடப் போட்டி...
”அம்மா, நான் princess இல்லைனா fairy”
“எல்லாரும் அதானே போடுவாங்க, ஏதாவது வித்யாசமா போடேன்...”
ம்ஹூம், எதற்கும் உடன்படவில்லை... அழகான டிரஸ் வேண்டும்... என்பது தான் விஷயம். சரி, பரிசு என்பது விட இஷ்டப்பட்டதஒ போடட்டும் என்றாலும் princess/fairy இல்லாமல் அவளுக்கு பிடிப்பது போல் என்று யோசித்தேன். witch வேஷம் போடுவோமா.... நீ நல்ல witch-ஆ இரு ; மேஜிக் பண்ணுவோம் என்றேன். மேஜிக் வேலை செய்தது. என் கணக்கு, ஒரு நாள் சமாளித்துவிட்டால் மறுநாள் கடைக்கு சென்று அவளுக்கு பிடித்தாற் போல் ஏதாவது ஒன்றை வாடகைக்கு எடுத்து மேடமை சமாளிக்கலாம் என்பது தான். ஆனால் மேடம், “யாழினி, தி குட் விட்ச்” என்று மிஸ்ஸிடம் பெயர் கொடுத்துவிட்டு வந்து, பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் உத்தரவிட்டு விட்டார்கள்.

நான் எண்ணியது போலவே கடையில் “விட்சா? அப்படீனா?” என்று கேட்டார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். மேடமிடம் அவங்க பிறந்த நாளுக்கு வாங்கின டிரஸ் ஒண்ணு அழகா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும். அதைப் போட முடிவு செஞ்சோம். விட்ச் பறக்க ஒரு விளக்குமாறு வாங்கினோம். சின்ன மந்திர கோல் கையில் கொடுத்தாச்சு. இப்ப பாக்கி, தலையில் தொப்பியும், மேஜிக்கும்.... சாக்லேட் & பூக்கள் வேண்டும் என்று requirements ரெடி... ப்ராஜெக்ட் என் கையில்...

விட்ச் தொப்பியாக உருமாற ஏற்றதாக வீட்டில் ஒரு தொப்பி இருந்தது. அதற்கு, டிரஸுக்கு மேட்சாக பிட் துணி வாங்கி தொப்பியில் ஒட்டி, கூரான வடிவில் உச்சியிலும் தைத்து ஒரு பூவும் (குட் விட்ச் இல்லையா?) வைத்து விட்டேன். தொப்பியில் நாலு சாக்லேட், இரண்டு ரோஜா போட்டு சார்ட் பேப்பரால் தைத்து விட்டேன். இனி “அப்ராகடப்ரா..” என்று சொல்லி கையைத் தொப்பியில் விட்டு நைசாக சார்ட்டைக் கிழித்தால் கையில் சாக்லேட் அண்ட் பூக்கள்... அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. “I am a witch, as you think me not bad witch. I use magic for good things..." என்று வசனம் பேசி மேஜிக் செய்யத் தயாராகிவிட்டாள்.


அம்மா, சாக்லேட் எல்லாம் கொடுத்தால் எனக்கு தான் ப்ரைஸ், என்று மேடம் விளக்குமாறுடன் பறக்க ஆரம்பித்தார்கள். எனக்கு சற்றே பயம். பரிசு கிடைக்காவிட்டால்... எதற்கு தான் போட்டி வைத்து சிறிசுகளை ஏமாறச் செய்ய வேண்டுமோ? “பாப்பா ப்ரைஸ் கிடைகாட்டா...” அவளைத் தோல்விக்கு தயார் செய்யும் நோக்கத்துடன் நான் கேட்க, அவளோ, “கிடைகாட்டா என்னம்மா? ஜாலியா பார்டிசிப்பேட் பண்ணேன்னு நினைச்சுக்குவேன்” என்றாள். அள்ளி அணைத்துக் கொண்டேன்.

மேடம் மூன்றாம் பரிசுடன் வந்தார்கள். மற்றவர்கள் போட்ட பல வேடங்கள் பற்றி சொன்ன பொழுது, சும்மா மாறுவேடப் போட்டி வைத்து எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்திருந்தால் பரிசு கிடைக்காது எந்த குழந்தையும் ஏமாறி இருக்காது என்று தோன்றியது.

ஆனால் விட்ச் கதை இங்க முடியல... மேடம் ஆண்டு விழா பாட்டுக்கு இருந்தாங்களாம். ஆனால் பாட்டு சரியா வரலைனு வேண்டாம்னுட்டாங்களாம். அப்ப இன்னொரு மிஸ், “நீ தான் விட்ச் வேஷம் போட்ட... என் நாடகத்தில நீ தான் விட்ச்...” அப்படீனு வாய்ப்பு கொடுத்துட்டாங்க... “பார்த்தியா ... பாட்டுல இல்லைங்கறதால தான் நீ இப்ப நாடக்த்தில...” அப்படீனு பெரியவங்க சின்னவங்களை தேத்தறது... அட அட!!!!

Wednesday, November 16, 2011

அதீதத்தில் என் கவிதை

ஆக்ரமிப்பு
---------

குறுக்கு சாலை
கடக்கும் வாகனங்கள்
கடத்திச் செல்கின்றன
குழந்தைகளின்
தெருவிளையாட்டுக்களை...


இரவும் பகலும்
ஓயாமல் பேசும்
தொலைக்காட்சி பெட்டிகள்
பறித்துக் கொள்கின்றன
பாட்டியின் கதை நேரத்தை...

பலூன் சுடுதலும்
இராட்டினங்களும்
சுருக்கி விடுகின்றன
மழலைப் பாதங்களுடன்
அலைகளின் விளையாட்டை...


அதீதம் நவம்பர் 14 2011 இதழில் வெளிவந்துள்ளது இக்கவிதை.

என் கவிதை ஒன்று முதன்முறையாக மின்னிதழில் வெளியிடப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.