என் மேகம் ???

Friday, July 30, 2010

இருக்கலாம்...

ஒரு நொடியில்...

நிகழ்ந்து இருக்கலாம்
நிகழாது இருக்கலாம்
விபத்து

முடிந்து இருக்கலாம்
முடியாது இருக்கலாம்
வாழ்க்கை

இனிப்பாக்கலாம்
இருட்டாக்கலாம்
இருக்கும் நொடிகளை

Tuesday, July 27, 2010

கொலை செய்யாதீங்க ப்ளீஸ்....

சிறகு விரிக்கப்போகும் பிள்ளைகளைக் காணும் ஆயிரம் ஆசைகளுடன் இறைவனுக்கு நன்றி கூறி வாகனத்தில் வரும் ஒரு குடும்பம்.

மதம் பிடித்த யானையாக கட்டுப்பாடின்றி காரில் வரும் ஒரு கும்பல்.

மத யானையின் வழியில் இருந்து விலகி வந்தாலும் தடைகளைத் தகர்த்து நாசம் செய்திடும் யானை..

யாருக்கு என்ன என்று யோசிக்கிறீர்களா? எங்கோ ஒரு குடும்பம் அழிகிறது (அ) பிள்ளையோ/தாயோ/தந்தையோ அன்புக் குடும்பத்தை இழந்து தனிமரம் ஆகின்றனர் (அ) யாரையாவது இழந்து தவிக்கும் குடும்பம்

எங்கேனும் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது... குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களால்.
"குடி குடியைக் கெடுக்கும்"... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் பிறர் குடியைக் கெடுக்கும். தற்கொலையே குற்றம்... கொலை செய்ய ஏன் துணிகிறீர்கள்?

கொலை செய்யாதீங்க ப்ளீஸ்....குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும் கொலைக்கான முயற்சிதான்

நீர்க்குமிழிக் கனவுகள்

நீர்க்குமிழி ஊதுகிறாள்
சின்னப் பெண்

வண்ணமயமாக பறக்கின்றன
என் கனவுகள் போல

காலம் போல காற்று
பட்டென உடைக்கிறது

கலகலவென சிரித்து
மீண்டும் ஊதுகிறாள்

சிறுமியாக மாறிடும்
கனவொன்று மிதந்து செல்கிறது
நீர்க்குமிழியாக...

Monday, July 26, 2010

சக்குவின் ஆபீஸ் உத்யோகம்

என் பேரு சக்கு... சகுந்தலானு சொன்னா யாருக்கும் தெரியாது. தலைப்பைப் பார்த்து ஆபீஸ்ல உத்யோகம்னு நினைச்சுடாதீங்க... நான் வீட்டு வேலை பார்க்கற ஆளு. அப்புறம்னு கேக்கறீங்களா, என் ஆபீஸ் உத்யோகம் பத்தி சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி செல்வி பத்தி சொல்லணும்.

செல்வி ஒட்டு உறவெல்லாம் கிடையாது... என் சிநேகிதி. சின்ன வயசு சிநேகமும் கிடையாது. ஒரு நாலஞ்சு வருஷப் பழக்கம் ... அவ்வளவுதான். அதுக்குள்ள நகமும் சதையுமா பழகிட்டோம். அவ புதுசா எங்க பேட்டைக்கு குடி வந்தாள்... நல்ல சிரிச்ச மூஞ்சி, நைச்சியமான பேச்சுனு எனக்கு பிடிச்சு போச்சு. என்னவோ ஒரு பாசம்... நிறைய உதவி செய்வேன். அதெல்லாம் சொல்ல வரலை...அவளும் நல்லா தான் பழகுவாள்... அப்பப்ப கொஞ்சம் வியாபார புத்தியைக் காட்டுவானாலும் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன்...

ம் அவ ஒண்ணும் வியாபாரி இல்லை... என்னை மாதிரி வீட்டு வேலை செய்யறவ தான்.. அப்பப்ப கையில காசு இருந்தால் அப்பளம், துணினு இங்கிட்டு வாங்கி அங்கிட்டு வித்துடுவா. அவசரத்துக்கு என்கிட்ட கைமாத்து வாங்கினால் உடனே கொடுக்காமல் புது சேலையைக் கட்டிட்டு வந்து அழகா இருக்கானு கேட்பாள். அடுத்த மாசம் திருப்பி கொடுக்கறேம்பா. அடுத்த மாசம் துணில காசைப் போட்டுட்டு "கொஞ்சம் இருக்கா, காசு புரட்டிடறேன்" அப்படீம்பா. அந்த காசை இட்லிகடை ஆயாவுக்கு நான் கடனா கொடுத்திருந்தா மாசம் ஒரு தரம் இட்லியாவது தரும். இவ என் காசை வச்சிட்டு வியாபாரம் பண்ணுவாள்... நான் கம்னு இருப்பேன்... அதென்னவோ மனசுல தோணினாலும் கண்டுக்காமல் இருப்பேன். ஆனால் காசைக் கரெக்டா திருப்பி கொடுத்துடுவா.

சரி.. இப்ப என்ன அவளுக்குங்கறீங்க... நான் யமுனாக்கா வீட்ல வேலை பார்த்துட்டு இருந்தேனா... அந்த அக்கா என்னை அவங்க வேலை பார்க்க்ற ஆபீஸ்ல சேர்த்து விட்டாங்க. எனக்கும் ஆபீஸ் உத்யோகம் கிடைச்சுது... உத்யோகம் என்ன உத்யோகம்... அதே பெருக்கறதும் தொடைக்கறதும் தான்.. ஆபீஸ் போறேன்னு சொல்லிக்கலாம். இப்ப செல்விக்கு ஆபீஸ் ஆசை வந்துடுச்சு. "யக்கா... அந்தம்மாட்ட சொல்லி எனக்கொரு வேலை போட்டு கொடுக்க சொல்லேன்" அப்படீனு ஆரம்பிச்சுது. எனக்கு சங்கடமா போச்சு. யமுனாக்காக்கு செல்வியை ஏனோ பிடிக்காது "அவ பேச்சும், பார்வையும்... ரொம்ப தளுக்கா பேசறா...எனக்கு பிடிக்காது" அப்படீனு சொல்லி வீட்டு வேலைக்கே அவளை எடுத்துக்கலை. இதை அவகிட்ட சொல்லி மனசைக் கஷ்டப்படுத்த இஷ்டமில்லாமல், நேரம் கிடைக்கிறப்ப யமுனாக்காகிட்ட சொல்லி பார்க்கலாம்னு இருந்தேன்.

ஒரு நாள் பார்த்தால் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாமேனு வெளிய நின்னுட்டு இருந்தது. அன்னிக்கு யமுனாக்காவை வழில பார்த்தேன். "யக்கா... நம்ம செல்வி வந்துருக்கு. நல்ல பொண்ணு தான். உங்க ஊர்ப்பக்கம் தான் அது. பேச்சு இருந்தாலும் வீட்ல பிக்கல் பிடுங்கல் கிடையாது ஒழுங்கா வேலைக்கு வரும்னேன்". அக்கா சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க. அதுக்கு வேலை கிடைச்சிடுச்சு. அட!!! ஒரே இடம் வேலை; எனக்கு ஒரே சந்தோஷம்... மறு நாள் அவளைப் பார்க்கறேன்; மூஞ்ச வெடுக்குனு வெட்டிகிட்டு போறாள். எனக்கு ஒண்ணும் புரியல... சரி வேலை கிடைச்ச பவுசுனு விட்டுட்டேன்.

சிரிச்ச மூஞ்சியா தெரிஞ்ச முகம் விடியா மூஞ்சியா மாறிடிச்சு. தினம் அது கூட முகத்த தூக்கி வச்சுட்டு வேலை செய்ய வேண்டியதா போயிடிச்சு. ஒரு நாள் மனசு கேக்காம "ஏண்டி செல்வி என்ன ஆச்சு உனக்கு?" அப்படீனேன். அவ்ளோதான் "வெளங்குவியாடீ நீ.. எனக்கு வேலை கிடைக்க கூடாதுனு என்ன மாய்மாலம் பண்ணின... எனக்கு இந்த ஊரு இல்ல... பிக்கல் பிடுங்கல் கிடையாதுனு சொன்னியாமே!!! இதெல்லாம் சொன்னால் இவ அடிக்கடி ஊருக்குப் போய்டுவாள், சொகுசுக்காரி வேலைக்கு வர மாட்டானு வேலை தர மாட்டாங்கனுதான செஞ்ச...நீயெல்லாம் ஒரு பொம்பளைனு பழகினேன் பாருனு" காறி துப்பிட்டாள்.

எனக்கு யார் கூடயும் சண்டை போட பிடிக்காது. நல்லது செய்யப் போய் இப்படி பேச்சு வாங்கினதுல மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இப்படி செஞ்ச உதவி எல்லாம் மறந்து எப்படி பழிபோடறானு மனசு தவிச்சுது... எனக்கும் காறித் துப்பத்தெரியும். போய் தொலையுதுனு விட்டுட்டேன். தினம் முகத்துல முழிக்கறது விதி... இனி ஜென்மத்துக்கும் புது சிநேகிதம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இது தான் கதையானு கேக்கறீங்களா? கடைசியா ஒண்ணு சொல்லணும். இரண்டு மாசத்தில ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. ரெண்டு பேரும் திரும்ப வீட்டு வேலை தான் செய்யறோம். இப்ப நான் இருக்கேன், செல்வி இருக்கா, எங்க மனக்கசப்பு இருக்குது ஆனால் மனக்கசப்புக்கு காரணமான ஆபீஸ் உத்யோகம் தான் இல்ல.

Thursday, July 22, 2010

மருத்துவமனை பொழுதுகள்

தூய்மையின் நெடியா
வலியின் நெடியா
என்று புரியாது
நகரும் நொடிகள்....

வந்து செல்வோருடன்
வந்து செல்லும்
அலுப்பும் மாற்றமும்

வீட்டின் நிம்மதி
பணத்தின் மதிப்பு
நட்பின் ஆறுதல்
உறவின் பலம்
என்று...
வாழ்க்கை பாடத்துடன்
ஊர்ந்து செல்லும்
மருத்துவமனையில் பொழுதுகள்

Monday, July 19, 2010

நாங்க நாய் வளத்த கதை...

"உங்க ஆத்தா கிளி வளத்தா...மாடு வளத்தா... கோழி வளத்தா...முயல் வளத்தா... ஏன் பாம்பு கூட வளத்தா (அம்மாவும் பாம்புகளும் என்று தனிப்பதிவு போடுமளவு அம்மாவுக்கும் பாம்புக்குமான தொடர்பு விசேஷமானது).... நாய் தான் வளர்க்கலை.." என்ற வசனத்துடன் தான் அம்மாவின் நாய் வளர்ப்பு துவங்கியது. எங்களை வளர்த்து திருப்தி அடையாமல் குவாட்டர்ஸில் வீடு மாறி சற்றே பெரிய வீடு வந்ததும், அம்மாவின் நாய் ஆசை தீவிரமானது. கொழுக் மொழுக் என்று சுற்றித்திரிந்த தெரு நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

மணி என்று அதற்கு பெயரிட்டோம். எங்களைப் பொறுத்தவரை நாய் என்றால் "மணி (அ) சீஸர்" என்ற பெயரிலோ ... நிறத்தைப் பொறுத்து "ப்ரளனி, வைட்டி, பிளாக்கி" என்ற பெயரிலோ அழைக்கப்பட வேண்டும். எங்கள் நாய்க்கு கறுப்பு , வெள்ளை என்று இரு நிறமும் இருந்ததால் நிறப்பெயரின் குழப்பம் தவிர்க்க மணி என்று அழைக்கப்பட்டது. மிக்க நன்றி உணர்வுடைய நாய்... காலையில் ஊர் சுற்றினால் மாலை வீடு வந்து சேர்ந்து விடும். இரண்டு நாட்கள் காணவில்லை என்று தேடினால்.... விஷம் சாப்பிட்டு இறந்து கிடந்தது.

சில நாட்கள் சும்மா இருந்த அம்மாவால் வெள்ளை வெளேரென்று "கஷ்க் மொஷ்க்" என்று தாய் மடி விட்டு பிரிந்து சில நாளே ஆன அந்த நாய்க்குட்டியின் மீது கண் வைக்காமல் இருக்க இயலவில்லை. வந்து ஒரு வாரம் கூட இல்லை... வெராந்தாவில் சுற்றிக் கொண்டிருந்த குட்டியை ஒரு ரவுடி நாய்க்கூட்டம் அள்ளிச் சென்று குதறிச் சென்று விட்டது. பைரவருக்கு ஒரு பூஜை போட்டு அம்மா நாய் வளர்க்கும் ஆசைக்கு மூட்டை கட்டினார்கள்.

விடாது கருப்பு என்பது போல் ... இப்பொழுது நாய் ஆசை என் தம்பிக்கு பிடித்தது. எங்கள் குடும்ப நண்பர் கே.சி மாமா என்று இருந்தார். அவர் வீட்டில் ஏராளமான நாய்கள். நல்ல அல்சேஷன் குட்டி ஒன்றை எங்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். உயர்சாதி நாயென்று அதற்கு "சீஸர்" பெயர் சூட்டப்பட்டது. அப்பொழுது நான் "வைட்டி" என்று அழகான முயல் வளர்த்து வந்தேன். நண்பனின் எதிரி, எனக்கும் எதிரி என்று சீஸ்ர் எனது எதிரி ஆனான். ஆனால், முதன் முதலில் சீசரும் வைட்டியும் சந்தித்தபொழுது இருவருமே தலை தெறிக்க வந்த பாதையில் ஓடினார்கள். மழை இரவு ஒன்றில் வைட்டி குட்டி ஈன்றிருந்த வேளையில் சீசரும் வராந்தாவில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குள் பிரச்சனை இல்லை.

ஒரு மதிய வேளையில் குழாயில் இருந்து கொட்டும் நீரைப் பார்த்து சீஸர் வெறித்தனமாகக் குரைத்த பொழுது அந்த சந்தேகம் எழுந்தது. அன்றே மிருக வைத்தியர் அழைக்கப்பட்டு அதன் நோய் உறுதி செய்யப்பட்டது. வைத்தியர் ஊசி எடுத்து வரச் சென்ற இடைவெளியில் தப்பித்து சென்றாலும், வளர்த்த தன் எசமானனுக்கு கட்டுப்பட்டு வந்தது அந்த நன்றி உள்ள ஜீவன். எதிரி என்றாலும் மனம் கரைந்தது. சீஸரைப் புதைத்து கல்லொன்று நினைவாக வைத்தோம். பைரவருக்கு மீண்டும் ஒரு பூசை; நாய் ஆசை முற்றிலும் ஒழிந்தது. தெருவில் போகும் நாய்க்கு மீந்த சோறு மட்டும் போடுவோம்.

என்றாலும்... கடைசியாக நிகழ்ந்த நிகழ்வும் சொல்லத்தான் வேண்டும். நந்தினி பிறந்திருந்த நேரம்... தாய்ப்பால் அருந்திவிட்டு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தது அந்த அழகான வெள்ளைக்குட்டி. "இந்த நாய் வளர்ப்போம்; பால் வைப்போம்" என்று சிரட்டை எடுத்தார் என் கணவர். எல்லா கதையும் சொல்லி, "தயவு செய்து நாய் வளர்ப்பு வேண்டாம். பால் வைக்க வேண்டாம்" என்று நானும் என் அம்மாவும் கெஞ்சினாலும் ," இதெல்லாம் ஒரு காரணமா" என்று அதற்கு பாலூட்டி மகிழ்ந்தார். மறுநாள் பால் கிண்ணத்துடன் நாங்கள் குட்டியைத் தேடினோம்.... நம்புங்கள் .... எங்கள் வீட்டைச் சுற்றி மூங்கில் மரங்கள் உண்டு. அவற்றிடையே கழுத்தை நுழைத்து மூச்சு திணறி உயிர் இழந்திருந்தது அந்த அப்பாவி ஜீவன். ஒரு கணம் எனக்கு அது கழுத்தை நுழைத்து தற்கொலை செய்தாற் போல் இருந்தது... மணியின் மரணம் கூட தற்கொலையோ என்று எண்ணத்தூண்டியது இந்நிகழ்வு.


இந்த கதை எல்லாம் சொல்லி நாய் வளர்க்கக்கூடாது என்றால் "அட போம்மா.... நாங்க நல்லா நாய் வளர்ப்போம் ; வாங்கி கொடு" என்கிறார்கள் குட்டீஸ். பட்... எனக்கு அவங்களை வளர்க்கவே டைம் பத்தலை... இதில் நாய் வேறயா... எனவே மீன், லவ் பேர்ட்ஸ் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு நாய் படற பாட்டைக் கேட்டிருந்தால் நீங்களும் சொல்லுங்க. ..

Thursday, July 15, 2010

அவனும் அவளும்...

அம்மாவின் வலியினிடையே
அழுகையின் ஓசையுடன் தான்
இவ்வுலகைக் கண்டார்கள்
அவனும் அவளும்...


குப்புற விழுந்து
விழுந்து எழுந்து
கொஞ்சு மழலை பேசி
தளிர் நடை பயின்று
இல்லம் மகிழ வளர்ந்தனர்
அவனும் அவளும்...


அவள்...
பொம்மைகளைத் தாலாட்டி
சொப்பில் சமைத்த பொழுது
அவன்...
பைக்கும் காரும்
ஓட்டிப் பழகினான்

அவளால் அடுக்கப்பட்ட பொருட்கள்
அவனால் கலைக்கப்பட்டது
அவள் மீண்டும்
அடுக்கினாள் அழுதுகொண்டே
அவன் மீண்டும்
கலைத்தான் சிரித்துக் கொண்டே

பாடங்களும் பரீட்சைகளும்
ஒன்றானாலும்...

பழக்க வழக்கங்களும்
கட்டுப்பாடுகளும்
அவளுக்கு அறிமுகமானது

பருவத்தின் திமிரும்
சுதந்திரக் காற்றும்
அவனுக்கு அறிமுகமானது

அவள்...
கனவுகளின் வாசத்தில்
இராஜகுமாரனைத் தேடினாள்

அவன்..
கனவுகளின் உலகில்
தேவதைகளுடன் வாழ்ந்தான்

காலம் என்னும் புதிரால்
அவளுக்கு
அவன் இராஜகுமாரன் ஆனான்
அவனுக்கு
அவள் மனைவி ஆனாள்

அவள் வீடு அம்மா வீடானது
அவன் வீடு புகுந்த வீடானது
இல்லத்தின் அரசியாக
அவள் வேலைக்கு வந்தாள்

பெயர் முதற்கொண்டு
எல்லாம் மாறி அவள் வந்தாள்
கண்ணீர் கூட கண்களுக்குள் என..

இன்றும்
அவள் கனவுகளை
அடுக்கிக் கொண்டிருக்கிறாள்
அவன் ...
கலைத்துக் கொண்டிருக்கிறான்

Wednesday, July 14, 2010

என்னத்த சொல்ல?

குட்டிப் பெண்ணுக்கு திடீரென 2012 பயம். “அம்மா காலண்டர்-ல தேதி தீர்ந்துட்டால் உலகம் அழிஞ்சுடும். நாமெல்லாம் செத்துடுவோம்” என்று ஒரே அழுகை. வேறு காலண்டர் வாங்கலாம். எங்க பாட்டி, பாட்டிக்கு பாட்டி எல்லாம் வாழ்ந்த உலகத்தில், நீ பாட்டியாகி வாழ்வாய் என்றெல்லாம் கூறி சமாதானம் செய்ய முயன்றேன். ம்ஹூம் ... திடீரென சற்றே யோசித்து, “செத்து போனால் மேலேயா போவோம்” என்றாள். “ஆமாம்” என்றேன். “அங்கே டி.வி இருக்குமா?” என்றாள். “ம்” என்றேன். ”அப்ப சரி ” என்று சென்றுவிட்டாள். ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?


“அம்மா காலிஃப்ளவர் ஃப்ரை பண்ணிக் கொடும்மா... ரொம்ப நாள் ஆச்சு” என்றாள்.
“சரியா வர மாட்டேங்குது கொஞ்ச நாள் ஆகட்டும்” என்றேன்
“முயற்சி செய் அம்மா, உனக்கு நல்லா வரும்” என்றாள் (சுட்டி டி.வி டோரா எபக்ட்)
“அட சே!!! கடைக்கு காலிஃப்ளவர் சரியா வர மாட்டேங்குது , சமைக்க சரியா வர மாட்டேங்குதுனா சொன்னேன்” . ஹ்ம்ம்.... என்னத்த சொல்ல?

Thursday, July 8, 2010

மனம்

மனம் ஒரு குளம்
கலங்கித் தெளிந்தது
கல்பட்டு குளம்
கல்லெறிந்தவன் அறியவில்லை...
பதறி நிற்பவை
மீன்களும் பறவைகளும்

மனம் ஒரு மாயை
நேர்மனதிற்கு
கோணல்கள் தெரிவதில்லை
கோணல் மனதிற்கு
நேர்மனதும் கோணல் தான்

மனம் ஒரு கண்ணாடி
தன்னை மட்டும்
கண்டு கொண்டிருந்தால்
மற்றவர் மனம்
பார்ப்பதில்லை

Wednesday, July 7, 2010

பாடம்

சற்றே குறைந்தாலும்
ஏற்றாத பேருந்து
தந்திடும் பாடம்...
சில்லறையின் மதிப்பு

இலட்சம் கோடியின்
மதிப்பு தெரிய
தேவைப்படுவதில்லை...
பாடம்

சிலவேளைகளில்...
பணத்தின் நிராகரிப்பில்
நிம்மதி உண்டு
பலருக்கும் ...
புரியாத பாடம்

Tuesday, July 6, 2010

வலிமையற்ற தோளினாய் போ போ போ

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.