என் மேகம் ???

Monday, March 21, 2011

ஊரும் உறவும்...

நிகழும் வரை எண்ணியதில்லை... நெடுநாட்கள் வாழ்ந்த ஊரும் அன்னியமாகும் என்று. கோவையில் வளர்ந்தாலும் பெற்றோர் இடம் மாறியவுடன் ஊர் அன்னியமானது. வாழ்க்கைப்பட்ட ஊரும் அப்படி ஆகி விடும் என்று எண்ணியதில்லை. என்றாலும் மாமா மறைந்த பின், அத்தை இங்கு வந்த பின் ஓரிரவு பயணம் என்ற ஊர் தூரமாகித்தான் போனது.

என்றாலும் அதை விடக்கூடாது என்பது போல், சொந்த ஊரில் விசேசம் என்றால் மதுரையில் தங்கி வீட்டில் சில மணித்துளிகளேனும் செலவழிப்பது வழக்கம். திருமணமாகி வந்த பொழுது. தெருவில் ஒவ்வொரு வீடும் பரிச்சயம். ஊருக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் அட்டண்டன்ஸ் கொடுப்பதற்கும், மறுநாள் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு ஸ்பெசாலிட்டியும் வந்துவிடும். வாய்த்துடுக்காகப் பேசினாலும் மறந்து அன்பு காட்டும் நட்பு வட்டம்.அந்த அன்பை மகிழ்ச்சி பகிரும் சுபதினங்களிலும் காணலாம், துக்கம் பகிர நேரும் துயரத்திலும் காணலாம்.

இப்பொழுது அனேகமாக அருகில் இருந்தவர் பலர் இடம்மாறிவிட்டனர். வாழ்க்கையே மாற்றம் நிறைந்தது தானே? என்றாலும் இருப்பவர்கள் காட்டும் அன்பு அலாதியானது. இதோ, குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, வேலைகள் முடித்து நிம்மதியாக வரலாம். அவர்களும் சுகமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். இங்கு போல் அவர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலை இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், சிரமம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் ஹோட்டல் சென்று உண்ண முயல்வோம். பெரும்பாலான நேரங்களில் அது தோல்வி தான்.வேண்டாம் என்றாலும் விருந்துபசரிப்பில் நனைந்து திரும்பும் பொழுது தோன்றும், “ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.

Sunday, March 13, 2011

குட்டி ஆமைகளின் கடற்பிரவேசம்

சென்ற பதிவில் ”சுட்டீஸுடன் டர்டில் வாக்” ஆலிவ் ரிட்லீ ட்ர்ட்டில் முட்டை போட்டதா.... மார்ச்சில் இருந்து முட்டை பொரிக்கும் என்றார்கள். பெசண்ட் நக்ரில் இருந்து மெரினா செல்லும் வழியில் பீச் ஓரத்தில் உள்ளது "hatchery". hatchery என்றால்... வேலி போட்டு, மணலில் முட்டைகள் இயற்கையாகப் பொரிக்க வைத்துள்ளனர். வெளிவரும் நேரம் (பெரும்பாலும் மாலை...). கூடை போட்டு மூடி விடுகின்றனர். பின்னர் கூடையில் அவற்றை எடுத்து கடல் நோக்கி விடுகின்றனர். இந்த மாதம் தினம் மாலை 5:30க்கு மேல் சென்றால் பார்க்கலாம். பார்ப்போமா?

hatchery


பொரித்த ஆமைகளைக் கூடையில் அள்ளுகின்றனர்


கூடையிலே (கருவாடு இல்லை....) குட்டி ஆமை



கொஞ்சம் கிட்ட் பார்ப்போமா?


செல்லக்குட்டி...

கடற்பிரவேசம்

எவ்ளோ சின்னதா இருந்தாலும் தடங்கள் பதிக்காமலா?



ஒரு இரண்டு நிமிஷம் டைம் இருந்தால், இந்த குட்டி ஆமைகள் கடல் நோக்கி போனதை இந்த மூணு வீடியோ க்ளிப்ல பாருங்க... அதற்கு அப்புறம் ஆமை நடையையே நீங்க வேற மாதிரி தான் நினைப்பீங்க....


குட்டி ஆமைகளின் கடல் நோக்கி பயணம்




நான் தான் ஃபர்ஸ்ட்



ஹை..வீடு வந்துடுச்சு...



எப்படி இருக்கு? ஆயிரத்தில் ஒண்ணு தான் பிழைக்குமாம். இது இரண்டு ஆமை போட்ட முட்டைகளில் இருந்து வந்தவை. கடவுளே எல்லாம் பொழச்சு ரொம்ப நாள் வாழட்டும்!!! இதை ஒரு வேலையாகக் க்டமையுடன் செய்யும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்....

Friday, March 11, 2011

வானம்

வெட்டவெளியில் படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணும் கணங்கள் வாழ்வின் சில சுவாரசிய கணங்கள். சில்லென்ற காற்றுக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. நிலவிருந்தால் வானத்தின் மீது கவனம் செல்வதில்லை; மேகத்திடை மறையும் நிலவைத் துரத்தியபடி மனமும் சென்றுவிடும். நட்சத்திரங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கும் வானம் இன்னும் அழகு. கரிய வானம் அழகாவதோடு, அந்த நீண்ட வெளியில் எண்ணங்கள் தடையின்றி பயணம் செய்யும்.

சிறு வயதில் நிலாச் சோறு உண்டு வானத்தை இரசித்ததுண்டு. ஊரில் காரையில் தான் தூக்கம். நட்சத்திரங்களில் உருவங்கள் தேடிக்கொண்டே உறங்கிப் போவோம். நட்சத்திர ஓளியில் விளையாடிய இரவுகளும் ஏராளம். பதின் வயதில் கோபம் வரும் பொழுதெல்லாம் தோட்டத்தில், சலவைக்கல்லில் உட்கார்ந்து கொண்டு வானம் பார்த்தால், மனம் இலேசாகிப் போகும். அதன் பின் வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் நட்சத்திர இரவுகள் தொலைந்து போயின. நிலவுடன் ஒட்டியும் விலகியும் செல்லும் ஒற்றை நட்சத்திரம் மட்டும் அவ்வப்பொழுது கண்ணில் படும்.

வானத்தை நினைவுபடுத்தும் வேலையை குழந்தைகள் செய்கின்றனர். அம்புலி காட்டி ”நிலா நிலா ஓடி வா...” எனும் பொழுது நிலவும், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...” என்று நட்சத்திரங்களும் மீண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின்றன. (ப்ளாக்கால் என்வானம் என் கணினியில் அடங்கியது... என்றாலும் வானம் தொலைவில் தான் நின்றது). மழலைகள் வளர்ந்து நிலவைத் தேடாது சாப்பிட ஆரம்பித்தவுடன் மீண்டும் வானம் தொலைவானது... பரபர வாழ்க்கையில்.

ஏதோ நினைவுகளுடன் விழி உயர்த்தி பார்த்தபொழுது மீண்டும் வானம் நெருக்கமானது. இந்த வானம் நோக்கிதான் எத்தனை கேள்விகள் பயணித்திருக்கும்... படிப்பு, வேலை, துணை, வீடு, வாகனம் , பிள்ளைகள் என்று எல்லா கனவுகளும் எத்தனை நட்சத்திர இரவுகளின் இருளில் பயணித்துள்ளன.... இன்று அந்த கேள்விகளுக்கு விடை இருக்கிறது. குழந்தைகள் பற்றிய அதே கேள்விகள் இப்பொழுது மீண்டும் பயணிக்கின்றன. அந்த இருள்வெளி நட்சத்திரங்களுடன் ஏதோ ஒருவிதத்தில் மனதை இலகுவாக்குகிறது.

விரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...