என் மேகம் ???

Wednesday, December 22, 2010

துரத்தும் கனவுகள்

யானையும் பாம்பும்
இனம்புரியா உணர்வுகளும்
துரத்தும் கனவுகளில்
அலுப்பு கொண்டு...
புது கனவுகளைத்
துரத்திச் சென்றேன்


வயிற்றுப்பாடே கனவென்ற
அவலநிலைக் கனவுகளும்
சொகுசுகள் மட்டும்
மலைப்பாம்பாய் சுற்றிய
சைக்கோ கனவுகளும்
வன்முறையும் கொடூரமும்...

துரத்தத் தொடங்க...

சிறுவர் கனவினுள்
அடைக்கலம் புகுந்தேன்
சாக்லேட்டும் தேவதைகளும்
பனிப்பொழிபவும் மலர்களும்
பேசும் விலங்குகளும்
இரசிக்கத் தொடங்கையில்

என் வருகையால்...
எங்கிருந்தோ வந்தன
பேய்களும் பிசாசுகளும்
திக்கற்ற காடும்
வெற்று வீடுகளும்

பதறிச் சென்று
குழந்தையின் கனவில்
நுழைந்திட முயன்றேன்
புன்னகை கவராது
கனவுக்குள் வ்ழியில்லை
கனவுள் செல்லவில்லை

என்ன கனவோ?
குழந்தை சிரித்தது
குழந்தைச் சிரிப்பை
கனவாகக் கொண்டுவந்தேன்
புன்னகையுடன் விழித்தேன்

Monday, December 20, 2010

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை வந்து பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், சென்னையில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு சென்றது மிகக்குறைவே!!! சென்ற வாரம் புனித ஜார்ஜ் கோட்டை செல்ல முடிவு செய்தோம். கடற்கரை ஓரத்தில் சில்லென்ற காற்று வீச, கோட்டைக்கு எதிரே இருந்த் பூங்காவில் காரை நிறுத்தினோம். இப்பொழுது சட்டமன்றம் அங்கில்லாததாலோ என்னவோ, வாகனங்கள் ஏதும் காணவில்லை. இந்தியாவின் உயரமான கொடிக்கம்பத்தில் கம்பீரமாகப் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய கொடி வரவேற்றது.



புகைப்படம்: வலை




நுழைவாயிலில் கையெழுத்திட்டு, சிறு அகழிபோன்றதொரு அமைப்பைக் கடந்தோம். சின்ன சின்ன பீரங்கிகள் அணிவகுத்து நின்றன. வலப்புறம் கண்காட்சியகம் நின்றது. வெள்ளியன்று சென்றதால் கண்காட்சியகம் விடுமுறையென மாதா கோயில் சென்றோம். அது, 1678-80 AD காலகட்டத்தில் கட்டப்பட்டது. சர்ச்சை சுற்றிலும்... கல்லறைகள் 1700 காலகட்டத்தைச் சுற்றி இருந்தவர்களின் கல்லறைகள். சின்ன சின்ன கல்லறைகள் முதல் பல வருடம் வாழ்ந்து மறைந்தவரின் கல்லறைகள். பலருக்கு எங்கோ பிறந்து இங்கு விதி முடிந்திருந்தது ... மூன்று நூற்றாண்டுகள் கடந்து நிற்பது போன்ற உணர்வு மனதைப் பிசைந்தது.

மாதா கோயில் விரிந்து இருந்தது; பெரிய பெரிய கதவுகளும் சன்னல்களும் என்று பிரும்மாண்டமாகத் தெரிந்தது. குழந்தையுடன் மறைந்த தாய், திருமணமான மூன்றே மாதங்களில் மறைந்த ஆசை மனைவி, அன்புக் கணவன், நெருங்கிய தோழமை, மேலதிகாரி பணியாளர் என்று பலரின் மறைவின் பின்னணிகளை தாங்கி நின்றன சுவர்களும் தூண்களும். சில இடங்களில் மரணத்திற்கு வருந்தும் பளிங்குச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மேற்கத்தியரோடு, இந்தியரைக் குறிக்கும் தாடியுடன் ஓர் உருவமும், சற்றே மொட்டைத்தலையுடன் ஓர் உருவமும் காண முடிந்தது. ஞானஸ்தானத் தொட்டி ஒன்றும் இருந்தது. அக்கோயிலில் ஞானஸ்தானம் செய்யப்பட்டவர்கள், திருமணம் செய்து கொண்டவர்கள், கல்லறையில் புதைக்கப்பட்டவர்கள் என்று பல கோப்புகள் இருந்தன. எழுத்துக்கள் முத்து முத்தாக அழகாக இருந்தன.


ஞாயிறன்று மீண்டும் அருங்காட்சியகம் சென்றோம். அன்று சர்ச்சுக்கு விடுமுறை. இந்த அருங்காட்சியகம் முன்பு மீட்டிங், லாட்டரி, பொழுதுபோக்கு, தேநீர் விடுதி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டது. பின்பு பண்டகச்சாலையாகவும் இருந்துள்ளது. மூன்று தளங்களில் காட்சியகம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இரண்டு தளங்களுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி. நுழைவுச்சீட்டு ஐந்து ரூபாய்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மிக வலுவான கோட்டை என்று சொல்ல இயலாது.. ஆனால் மிக வலுவான ஒரு சரித்திரத்தை உருவாக்கிய பங்கு இதற்கு உண்டு. இந்த கோட்டை கட்டப்படாது இருந்தால் இந்திய சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கலாம். அப்பொழுது சூரட்டில் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை இருந்தது. இந்த கோட்டை கட்ட அனுமதி கேட்டு வந்த பதில் பட்டும்படாமலும் இருந்தது. அந்த கடிதம் உரிய நேரத்தில் வந்திருந்தால், ஒருவேளை கோட்டை கட்டப்படாது போயிருக்கலாம். ஆனால்... காலம் தன் கோலம் வரைந்தது. பிரிட்டிஷ் சரித்திரத்தின் மிகப்பெரிய ராஜ்யமும், இந்திய சரித்திரத்தின் வலிகள் நிறைந்த காலமும் கோட்டையின் அஸ்திவாரத்தில் தொடங்கியது. இங்கிலாந்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் புனித ஜார்ஜின் நினைவாக கோட்டைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது முதலில் வர்த்தக பரிமாற்றத்திற்காகக் கட்டப்பட்டது தான்... பின்னர் அரசியல் கோட்டையானது.

கீழ்தளத்தில் சிறு பீரங்கிகள், கோட்டைக் கதவுகளைத் தகர்க்க உதவும் கருவி, போரில் பயன்படுத்திய குண்டுகள் (எம்டன் என்பது சென்னையைத் தாக்கிய ஜெர்மானிய கப்பல் என்று அறிந்தேன்), சீருடைகள், போருடைகள், படைக் கொடிகள், பதக்கங்கள், வாட்கள், துப்பாக்கிகள், போர்சிலீன் பாத்திரங்கள், கலைப்பொருட்கள்,கோட்டையின் மாதிரி ... என்று பலவும் கண்காட்சியில் இருக்கின்றன.

மேல்தளத்தில் பகோடா (அ) வராகன் முதற்கொண்டு, பணம், அணா, பைசா , ரூபாய் என்று பல்வேறு காலங்களில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இருக்கின்றன. பல மேற்கத்திய அதிகாரிகள், இராணிகள் மற்றும் நவாபுகளின் படங்களும் பார்வைக்கு உள்ளன. ஆங்கிலே ஓவியர்கள் இருவர் நம் நாட்டைச் சுற்றிப்பார்த்து வரைந்த பதிப்போவியங்கள் நாம் காணவேண்டிய ஒன்று. திருச்சி மலைக்கோவில், மதுரை அரண்மனை, ஆற்காடு, ஆரணி, காஞ்சீபுரம் மற்றும் சென்னையின் சில இடங்களில் காணப்படும் அமைதியும் அழகும் மனதை ஈர்க்கின்றன.

எல்லாம் பார்த்து வெளிவரும் பொழுது மனம் சற்று அழுத்தமாகத்தான் இருந்தது. நாம் அடிமையாகக் கிடந்த காலத்தை நினைவுறுத்தும் சின்னம் அல்லவா?


குறிப்பு: பாதுகாக்கப்படும் சின்னம் ஆதலால், புகைப்படம் எடுக்கவில்லை. பிளாஷ் இல்லாமல் புகைப்படமெடுக்கலாம், ஆனால் நான் எடுக்கவில்லை.

Sunday, December 19, 2010

பாட்டும் பரதமும்


இந்த பாட்டும் பரதமும் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க அனுப்பியதென்னவோ படிப்பைத் தவிர ஏதேனும் கற்றுக் கொள்ளட்டும் என்று தான். அவளுக்கு மிக விருப்பம். எனவே தொடர்கிறது. என்றாலும், எனக்கோர் ஏக்கமுண்டு... எனக்கு இதெல்லாம் தெரியாது... அவளைப் பாடச்சொல்லியோ ஆடச்சொல்லியோ இரசிக்கும் பொறுமையும் கிடையாது. டி.வி.யில் “தகதிமி” என்றோ “சரிகம” என்றோ இருந்தால் அடுத்த சேனலுக்கு ஓடும் ஆள் நான்.

இப்படி இருக்கையில் தான் பெண்ணுக்கு சலங்கை அணி விழா வந்தது. அதாவது, இதுவரை காலை வைத்து சத்தம் செய்து நடன்ம் ஆடியவர்கள், இனி, சலங்கை அணியும் தகுதி அடைந்து சலங்கை ஒலியில் ஆடும் தகுதி பெறுகிறார்கள். ஒரு level என்று வைத்துக் கொள்ளலாம் (என் புரிதல் தவறெனில் திருத்தவும்). நெருங்கிய உறவினர்களை உரிமையாகவும் , நெருங்கிய தோழமைகளை முடிந்தால் வரவும் என்று வற்புறுத்தாமலும் அழைத்தேன். எனக்கே பாட்டும் பரதமும் போர் என்றால், அவர்கள் பாவம் எனக்காக வந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமே என்றுதான் அளவான அழைப்பு.


ஆனால் சலங்கை அணி விழா சிறப்பாகவே அமைந்தது. எனக்கு அது ஒரு வித்யாசமான் சுவாரஸ்யமான அனுபவம். ஆசிரியர் ஒவ்வொரு தாளக்கட்டு மற்றும் முத்திரை பற்றி சொல்லி அபிநயம் பிடிக்க வைத்ததில் சுவாரசியமாகச் சென்றது நிகழ்ச்சி. முடிவில் “தீராத விளையாட்டுப் பிள்ளை...” என்று கண்ணனுடன் ஆடியபொழுது எல்லோரும் சொக்கித்தான் போனோம். பரதம் கூட சுவாரஸ்யமாக இருக்கும் என்று பலரிடமும் சொல்லத் தொடங்கினேன்.

அடுத்து பாட்டு... கச்சேரி என்றால் என்ன என்று அவளுக்கு அறிமுகப்படுத்த “சென்னையில் திருவையாறு” செல்ல டிக்கட் எடுத்தார் அவள் அப்பா. எனவே... கச்சேரி களைகட்டியது. “மிருதங்கம்”, “கடம்”, “தம்புரா”, “கஞ்சிரா”, “வயலின்” என்று பக்கவாத்தியங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினேன் (எல்லாம் கேள்வி ஞானம் தான்). “தம்புரா” சத்தமே கேட்கலையே அது எதுக்கு என்றாள். (கேட்ட ஆளைப் பாருங்க...). என்றாலும் மனம் தளராது, அவளுக்கு “தம்புராவின்” ஒலியை உணர்த்தி (ஒருமாதிரி அதுதான் தம்புரா சத்தம் என்று அறிந்திருந்தேன்), அது இலயம் சேர்க்கும் என்றேன் (இலயம்??... no explanations please....). ஏன் நிறைய இராமர் பாட்டு என்றாள். பாடப்பட்ட சிவன் பாட்டு ஒன்றை நினைவுறுத்தினேன். என்றாலும் நிறைய இராமர் பாட்டு என்றாள்.

"இவர் பட்டம்மாள் என்ற இசை மேதையின் பேத்தி” என்று அவளுக்கு சில அறிமுகங்கள் கொடுக்க முயன்றேன். அவங்க அம்மா யாரு... அவங்க இவங்க பாடறதைப் பார்க்க வரலையா என்ற கேள்விகளுக்கு நான் விழித்திருந்தேன். சில பாடல்களுக்கு அவள் தாளம் போட்டாள் (இராகம் தெரியவில்லை, தாளம் தெரிந்திருந்தது; எனக்கு ரெண்டும் ஒண்ணு தான்). எல்லோரும் தலையையோ கையையோ ஆட்ட நான் கொஞ்சம் கூச்சத்துடன் விழித்துகொண்டிருந்தேன். ஆனால், “நித்யஸ்ரீ” அவர்களின் பாடல் கேட்க மிக இனிமையாக இருந்தது. இராகம், தாளம், சுருதி, இலயம் எதுவும் தெரியாவிட்டாலும் இசைவெள்ளம் மனதை மகிழ்வித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் மெய்மறந்து பாடுவதைக் கண்ட பொழுது “Bliss" என்று தோன்றியது என்றார் கணவர். பக்கவாத்தியங்களின் இசைமட்டும் இருந்த நொடிகளும் இசையின் இனிமையைப் பறைசாற்றின.

மனதில் இருக்கும் சில "prenotions" தள்ளி வைத்துவிட்டு பார்த்தால்தான் சில விஷயங்களின் அழகை சிறிதேனும் இரசிக்க இயலுகிறது.

ஓசை விரிவடைந்தால் இசை
அசைவு விரிவடைந்தால் நடனம்
புன்னகை விரிவடைந்தால் சிரிப்பு
மனம் விரிவடைந்தால் தியானம்
வாழ்க்கை விரிவடைந்தால் விழா
பக்தன் விரிவடைந்தால் இறைவன்
உணர்ச்சிகள் விரிவடைந்தால் மெய்மறந்த இன்பம்
வெறுமை விரிவடைந்தால் பேரின்பம்

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


Wednesday, December 8, 2010

காயங்கள்

அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

Saturday, December 4, 2010

கேள்விகள்

பிறப்பு
இறப்பு
இரு வரிகளிடை
விரிந்து கிடக்கிறதா?
சுருங்கிக் கிடக்கிறதா?
வாழ்க்கை...

--------------

கைநிறைய
வாழ்க்கை கொடுத்து
விரலிடுக்கில்
கசிய விட்டான்...
கையில் இருப்பதை
ருசிக்கவா?
கசிவதைக் கண்டு
கலங்கவா?

------------

Thursday, December 2, 2010

பயணக் குறிப்புகள்

வாழ்க்கையே ஒரு நெடும் பயணம் தான். அது முடிவதற்குள் ஒவ்வொருவருக்கும் பல விதமான அனுபவங்கள். வாழ்வின் அனுபவங்கள் என்று பார்த்தால், நான் பார்த்த, கேட்ட, படித்த என்ற அனுபவங்கள் மண்ணின் ஒரு துகள் அளவு கூட கிடையாது. என்றாலும், மனதை ஒரு நொடியேனும் தொட்டுச் சென்ற நொடிகளைப் பதிவு செய்யும் ஆசையுடன் இந்த குறிப்புகள்.

எங்கே தொடங்குவது என்று யோசித்தபொழுது, வாழ்வின் தொடக்கமான பிறப்பே , யாரிடம் தொடங்கியது என்று அறியாதவர்களின் தேடல் நினைவுக்கு வந்தது. இந்த அனுபவங்கள் இல்லையென்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்...” அமுதாவின் தேடலைப் புரிந்திருக்க இயலாது.

அன்று விடுதியில் அந்த பெண்ணைப் பார்த்தவுடன் எங்கள் புருவம் உயர்ந்தது. தென்னாட்டுப் பெண்ணாக உருவம் இருக்க, பேசியது என்னவோ ஆங்கிலம்... அதுவும் accent-உடன். அலட்டலோ என்றெண்ணியபடி பெயர் கேட்டோம், “எம்மா” என்றாள். “ஹேமா” தான் சரியாக விழவில்லையோ என்றெண்ணினோம். உண்மையில் அவள் பெயர் எம்மா தான். பால்குடி வயதிலேயே வறுமையின் பிடியினால் வெளிநாட்டிற்கு தத்தாகச் சென்றிருந்தாள். வயது வந்தவுடன் தன் தாயைத் தேடி ஒரு மாத விடுப்பில் வந்திருந்தாள். மதுரை அருகே ஏதோவொரு கிராமத்தில் வீட்டு வேலை செய்பவர் என்ற தகவல் மட்டுமே அவளிடம் இருந்தது. அவள் அம்மா கிடைத்தாரா எனத் தெரியவில்லை, ஆனால் அவளது தேடல் ஒரு கேள்வியாக மனதில் தங்கி விட்டது.

நாங்கள் குடியிருந்த வீட்டில் வளைய வருவாள் பதின் வயதில் ஒரு பெண். காலில் கொலுசொலிக்க, கையில் வளை குலுங்க முகம் முழுதும் சிரிப்புடன் அவள் வந்தால் அந்த பகுதியே கலகல என்று இருக்கும். அவள் தாய்க்கு அவளைக் கண்டாலே முகம் பொலிவுறும். சில நாட்கள் காணவில்லை. என்ன என்று விசாரித்ததில், “அவள் தத்து பிள்ளை” என்ற உண்மையை யாரோ அவளிடம் கூற அவள் தன் கூட்டிற்குள் சுருண்டு கொண்டாள். என்ன என்று சொல்ல? பெண் வேண்டுமென ஆசையாக தத்தெடுத்த பெற்றோருக்கும் வேதனை. சில நாட்களில் நாங்கள் அங்கிருந்து குடி பெயர்ந்ததால் அந்த பெண் மீண்டும் கலகல என்று ஆனாளா என்று தெரியவில்லை. ஆனால் தன்னைப் பெற்றோர் இவரில்லை என்றால் ஏற்படும் அதிர்ச்சி அலைகள் மனதைத் தொட்டுச்சென்றது.

ஆதரிக்க யாருமின்றி தடுமாறும் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம் என்றால், தத்தெடுக்கப்பட்டு பெற்ற பிள்ளையாக வளர்த்தாலும், உண்மை தெரியும் வேளையில் பிள்ளைகளின் வேதனை ஒரு விதம்.

வாழ்க்கையில் தான் எத்தனை விசித்திரங்கள்?

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்