என் மேகம் ???

Wednesday, March 7, 2012

பயணங்கள்

வாழ்க்கை என்ற பயணத்தில் தான் எத்தனை அனுபவங்கள். சற்றும் குறைந்ததல்ல ஊர்ப் பயண அனுபவங்கள். சிறு வயதில் பெரும்பாலும் பேருந்து பயணங்கள் தான். சன்னலை ஒட்டி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கி வழிந்தால் ஊர் வருவதே தெரியாது. சிறு வயதில் இரயில் பயணங்கள் கம்மிதான். என்றாலும் உடன் வருபவர்களுடன் உரையாடல்களுக்கு பஞ்சமிராது. கை முறுக்கு, புளி சாதம் என்று எல்லாமும் பகிர்ந்து பயணம் சுகமாக இருக்கும். இதெல்லாம் இப்பொழுது மயக்க பிஸ்கட் பயத்தில் போனவைதான். யாரோ சிலர் செய்யும் தவறால் யார்மீதும் நம்பிக்கை இன்றி போய்விட்டது.


கிட்ட‌த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் முத‌ல் விமான‌ப் ப‌ய‌ண‌ம். ஆஸ்திரேலியாவிற்கு செல்ல சிங்க‌ப்பூர் வ‌ழி ப‌ய‌ண‌ம். சிங்க‌ப்பூர் இற‌ங்கும்பொழுதே இளைப்பு சேர்ந்து கொண்ட‌து. கைப்பையை சும‌க்க‌ முடியாத‌ அள‌வு இளைத்த‌து. சொல்லாம‌லே உதவினார் கேர‌ளாவைச் சேர்ந்த‌ ஒருவ‌ர். முன்பின் தெரியாத‌வ‌ரிட‌ம் ந‌ன்றி கூறி தொலைபேசி எண் ப‌கிர்ந்து கொண்டேன். அடுத்த‌ வார‌மே சிட்னியில் யாரையோ காண‌ வ‌ந்த‌வ‌ர், அவ‌ர்க‌ள் ஊரில் இல்லை என்று தொட‌ர்பு கொண்டார், நானும் க‌ண‌வ‌ரும் அழைத்து வ‌ந்து ஓர் இர‌வு த‌ங்க‌ வைத்து வ‌ழி அனுப்பினோம். இப்ப‌டி முன் பின் தெரியாத‌வ‌ருட‌ன் இன்று தொலைபேசி எண் கொடுப்பேனா என்று யோசித்தால் இல்லை என்று தான் தோன்றுகிற‌து.


ச‌மீப‌த்தில் இர‌யிலில் சென்று கொண்டிருந்தோம். சுட்டி குழ‌ந்தை ஒன்று பேச்சுக்கு இழுத்த‌து. குழ‌ந்தைக‌ள் சுட்டியாக‌ இல்லாவிட்டால் இன்றைய ப‌ய‌ண‌ங்க‌ளும் சுவார‌சிய‌மின்றிதான் இருக்கும். சொந்த‌ ஊர் ஒன்றாக‌ இருக்க‌ அம்மாக்க‌ளிடையே பேச்சு துவ‌ங்கிய‌து. எந்த‌ தெரு என்று துவ‌ங்கிய‌ பேச்சில்...சிறு வ‌யதில் ஓடி விளையாடிய‌ ஒருவரின் உற‌வு என்று புரிந்த‌து. அத‌ன் பின் சில‌ க‌தைக‌ள் என்று சுவார‌சிய‌மான‌து ப‌ய‌ண‌ம். பேச‌ வைத்த‌ சுட்டிக்கு தான் ந‌ன்றி சொல்ல‌ வேண்டும்.


தற்பொழுது பய‌ண‌த்தை சுவார‌சிய‌மாக்கும் உரையாடல்க‌ள் குறைந்துவிட்ட எத‌ன் மீதும் ந‌ம்பிக்கை அற்ற நிலையை என்னென்ப‌து?

Wednesday, January 18, 2012

அதீதத்தில் “காட்சிப்பிழை”

அவரவர்க்கு தான் தெரியும் இழப்பின் ஆழம். சின்ன சின்ன விஷயங்கள் இருக்கும் வரை தெரிவதில்லை. ஆனால் இனி கிடைக்கவே கிடைக்காது, அந்த முகத்தைப் பார்க்க முடியாது என்ற உணர்வில் தோன்றும் வலி அவரவர்க்கே தெரியும். வாழ்வின் பாதையில் போகப் போகத்தான் அதிகம் கடந்து செல்கின்றன வெற்றிடங்கள்....என்றாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.

அதீதம் ஜனவரி 6, 2012 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்துள்ளது “காட்சிப்பிழை

ஒவ்வொரு நொடியும்
ஏற்படுகின்றன
சில வெற்றிடங்கள்

ஒருவருக்கேனும்
நிரப்பவே இயலா
வெற்றிடமாக...

உறைந்து போன
கணங்களின்
நினைவுத்துளிகளாக

காலத்துடன்
கடந்து செல்கின்றன
வெற்றிடங்கள்

விடை காண நேரமின்றி
கடந்து போகின்றன
சில கேள்விகளும்

வெற்றிடம் நோக்கிய
பயணம் என்றாலும்
மறக்க வைக்கும்...


காட்சிப் பிழையாக
நீண்டு தெரிகிறது
வாழ்க்கை

Saturday, December 24, 2011

அதீதத்தில் “மழை”

சென்னையில் மழை பொழிந்ததொரு பொழுதில் எழுதியது தான் இப்பொழுது அதீதம் டிசம்பர் 11, 2011 இதழில் வெளிவந்துள்ளது.

மழை
---------
குழந்தையின் கேள்விகளாக
ஓயாது பொழிகிறது

மண்வாசனை போல்
நினைவுகளைக் கிளறும்

அடித்து வரும் குப்பைகளாக
வலிகளையும் அள்ளிவரும்

துடைக்கப்பட்ட முற்றமாக
அமைதியும் தந்து செல்லும்

முத்தென்று ஆர்ப்பரிப்பாள்
விண்மகள்

மரகதமென்று பூத்திருப்பாள்
மண்மகள்