என் மேகம் ???

Wednesday, June 30, 2010

கனவு கலைப்பு

தேவதைகளின் நட்பு
உல்லாச பயணம்
ஐஸ்கிரீம் தீவு..

ஏதோ ஒன்று...
கலைந்து தான் போகிறது

பள்ளி செல்ல
மகளின்
துயில் கலைக்கும் வேளையில்...

Monday, June 28, 2010

தத்துவம் நம்பர்...

சில சமயம் தத்துவார்த்தமான சிந்தனைகளில் மன்சு போகும் தெரியுமா...அப்ப சில சமயம் "மொக்கை" தத்துவமும் "வாழ்க்கை" தத்துவமும் பிச்சுகிட்டு வரும். இப்பவே சொல்லிட்டேன் இதைப் படிச்சுட்டு திட்டாதீங்க.. இன்னிக்கு எனக்குள் உதிச்ச இந்த இரட்டை தத்துவம் தான் பதிவு.

சரி.. இன்னிக்கு சாப்பிட்டுட்டு இருந்தோமா... (யார் சமைச்சதுங்கற இரகசியம் எல்லாம் சொல்ல மாட்டேன்), பிரியாணியும் இருந்தது. அதில போட்ட பட்டை, கிராம்பு, ஏலக்காய் etc etc இங்கிலீஷ்ல என்ன தமிழ்ல என்னனு ஒரு பேச்சு... அப்ப தோணுச்சு
"எந்த மொழியில பட்டை, கிராம்பு, ஏலக்காய் பத்தி தெரிஞ்சுகிட்டாலும் சமைக்க தெரிஞ்சா தான் பிரியாணி வரும்" (ஹ்ம்.. கிட்ட தட்ட இதைத் தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுனு சொல்லி வச்சிருக்காங்க)

இப்படி ஒரு தத்துவம் தோணினதால, ஒரு சின்ன விசயத்துல காயம்பட்ட மனசு இன்னும் தத்துவார்த்தமா யோசிச்சு சொன்னது, "சில சமயம் நாமே வலிய போய் கேட்காமலே உதவி செஞ்சா, அவங்களுக்கு உதவியோட அருமை புரியறது இல்லை...உதவியும் வாங்கிட்டு...பிரதிபலனா காயப்படுத்துவாங்க" (ஹ்ம்...கிட்டதட்ட இதைத்தான் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைனு சொல்லி வச்சிருக்காங்க சுற்றம் என்ன ... நட்பு முதற்கொண்டு எல்லா வட்டத்துக்கும் பொருந்தும்)

Wednesday, June 23, 2010

ஒரு கணம்...

மகிழ்ச்சியில்
பகிர்ந்து கொண்ட
தித்திக்கும் கணங்கள்...

சோகத்தில்
தோள் சாய்த்த
ஆறுதல் கணங்கள்...

தடுமாற்றத்தில்
கை கொடுத்த
உதவி கணங்கள்...

சச்சரவுகளும்
சமாதானமும் நிறைந்த
சிறுபிள்ளை கணங்கள்...


எல்லாவற்றையும்
மறக்கச் செய்யும்
கணமும் உண்டு...

ஈகோ தலையெடுத்து
உறைந்து போன
ஒரு கணம்....

Tuesday, June 15, 2010

தூக்கம், கடன், இடம்...

தூக்கம்
பொம்மையைத் தாலாட்டி
தூங்க வைக்கிறாள்
சின்னக் குழந்தை..
குழந்தையைத் தூங்கவைக்க
வழியறியாது
விழித்திருக்கிறாள் தாய்...

கடன்
அன்புடன் தான்
கொடுக்கப்பட்டது கடன்
கடனாக மட்டுமே
திருப்பப்பட்ட பொழுது
தொலைக்கப் பட்ட அன்பு
மனதைக் காயப்படுத்தியது...


இடம்
கடந்து செல்லகிறது
வெற்று வாகனம்
அறிந்தவரெனினும்
மனதில் இடமில்லாமல்
வெறுமையால் அடைக்கப்பட்டு
இருக்க இடமின்றி செல்கிறது

Sunday, June 13, 2010

அருவிக் குளியல்

வழக்கமான ஊட்டி கொடைக்கானல் அல்லாது எங்கு செல்லலாம் என்ற பொழுது நினைவு வந்தது கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் அண்ணியின் அழைப்பு. எனவே அருவியில் நனைந்து வருவோம் என பிடித்தோம் நெல்லை எக்ஸ்ப்ரஸ். அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருந்தது கல்லிடைக்குறிச்சி. வெயில் இருந்தாலும் வழியெங்கும் பசுமை மனதையும் கண்ணையும் குளிர்வித்தது. கோவையின் சிறுவாணி நீர் சுவை சென்னை வந்ததோடு மறந்து போயிருந்தது. மீண்டும் இனிப்பான தாமிரபரணி நீரை ருசிக்க இனிமையாக இருந்தது.




அலுப்பு தீர குளித்து, உண்டு உறங்கி முதலில் சென்றது பாபநாசம் தலையணை. தண்ணீர் அழகாக ஓடிக் கொண்டிருந்தது. சிறிதாக வழிந்து விழும் இடத்தில் படிகள் போன்ற அமைப்புண்டு. அதில் அமர்ந்து குளிக்கலாம்... அப்படியே மேலேறி நீரில் நடக்கலாம். அருகில் இருந்து படம் எடுக்க இயலவில்லை... கூட்டம்... எனவே அகஸ்தியர் அருவி போகும் வழியில் இருந்து ஒரு வியூ.

தலை அணை


மறுநாள் ப்ளான் அகஸ்தியர் அருவி , காரையார் அணை. (வருடம் முழுதும் தண்ணீர் இருக்குமாம்) அகஸ்தியர் அருவியில் ஆசை தீர குளித்து விட்டு அருகில் ஒரு வியூ பாயிண்ட்; அதன் பின் காரையார் அணை சென்றோம். மூன்று வகை குரங்குகள் காண முடிந்தது; மிலா ஒன்று குறுக்கே ஓடியது; புள்ளிமான் கூட்டம் ஒன்று மரங்களுக்கிடையே வேடிக்கை பார்த்தது; ஆங்காங்கே மயிலகளும் தட்டுபட்டன.


அகஸ்தியர் அருவி


வியூ பாயிண்ட் வியூஸ்



பசுமை


உணவு உண்ண ஓர் இடம்



நீரோட்டம் என்றால் மீன் பிடிக்காமலா? (கிடைத்தது தலைபிரட்டை... அதாங்க tadpole)


அன்பான குடும்பம்




காரையார் அணையில் படகு மூலமாக பாண தீர்த்தம் செல்லலாம் ; ஒருவருக்கு 20 ரூ படகில் செல்ல. "சின்ன சின்ன ஆசை" பாடலி வரும் இடம் என்று சொல்லிக் கொண்டே சென்றோம். படகு நெருங்கும் பொழுதே "சோ" என்று என்று கொட்டும் அருவி மனதைக் கவர்ந்தது. நல்ல வெயில். அருவி என்றாலே அதை அடைய நாம் கொஞ்சம் மேலேறத் தான் செல்ல வேண்டும்... வெயில் என்பதால் நீரளவு கம்மி... எனவே மழைக்காலங்களை விட கூடுதலாக நடந்து சென்று அருவியின் அருகில் ஒரு துளியாக உணர்ந்தோம். "ஆண்கள்", "பெண்கள்" என்று மாற்றி மாற்றி சிறிது நேரம் குளிக்க அனுமதித்தார்கள். தண்ணீ "சில்லென்று" மேலேவிழுந்தது. முதல் நிலை நீர் என்பதால் சுவையோ சுவை. இடத்தை விட்டு அகல மனமே இல்லை.

பாண தீர்த்தம்




காரையார் படகு பயணத்தின் பொழுது தெரிந்த காட்டுத்தீ


மறுநாள் கல்லிடைக்குறிச்சி ஆற்று நீரில் ஆசை தீர நீராடினோம்.



அன்று மாலை "ஆதிவராக" சுவாமி கோவிலுக்கு ஒரு விசிட். இங்கே அக்ரகாரம் இருக்காம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அம்மாவிடம் "அதுக்கென்ன" என்றேன். இல்லை... வீடெல்லாம் நீளமா இருக்குமாம் என்றார். சட்டென்று மருமகள் அவள் தோழி இல்லத்துள் அழைத்துச் சென்றாள். பக்கவாட்டில் அறைகள் இல்லாமல் நெடுகச் சென்றது வீடு. ஒரு நூறு வருஷத்துக்கு முன்பு நான் இருந்திருந்தால் இங்கு கால் வைத்திருக்க முடியாது என்று எண்ணிக்கொண்டேன். அதன்பின் கோயில் விசிட்... மடியில் இலட்சுமியைத் தாங்கி வராக அவதாரத்தில் பெருமாள் காட்சி தந்தார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் பெரிதாக இருந்தது.


மறு நாள் மணிமுத்தாறு அருவி. டேமில் இருந்து வரும் நீர் ஆதலால் சில்லென்று இல்லை. என்றாலும் அருவி நீரில் மூச்சு முட்ட குளிப்பது சுகம் தானே!!! யாரும் இல்லை... நானும் என் பெண்ணும் அருவியில் அமர்ந்து குளித்தோம். ஆசை தீர குளித்துவிட்டு மணிமுத்தாறு அணையை ஒரு பார்வை பார்த்து விட்டு புறப்பட்டோம் குற்றாலம் நோக்கி.


மணிமுத்தாறு



குற்றாலத்தில் தண்ணீர்வரத்து இல்லை. ஐந்தருவியில் குழாயில் வருவது போலவும், மெயின் ஃபால்ஸில் தலையை நனைக்கும் அளவுக்கும் நீர் வர, அதற்கும் ஒரு க்யூ நின்றது. சொம்பு வைத்து நீர் பிடித்து குளிக்கவும் செய்தனர். அங்கிருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது செங்கோட்டை. அங்கிருந்து தினமும் புனலூருக்கு ஒரு பாசஞ்சர் ட்ரெய்ன் உள்ளது. இயற்கை காட்சிகளை இரசித்து செல்ல அருமையான வாய்ப்பு. 9:45க்கு ஒன்று புறப்பட்டது. நபர் ஒருவருக்கு 4 ரூபாய் என்று தென்மலைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டோம்.



பச்சை பசேல் என்று இயற்கை சிரிக்கிறாள்.



வழியில் மூன்று குகைப்பாதைகள். அதில் ஒன்று கிட்டதட்ட ஒரு மைல் நீளமாம். கும்மிருட்டில் நல்ல வேளையாக கோச்சில் லைட் எரிகிறது. மற்ற இரண்டும் சின்ன குகைகள் தான்.




தென்மலையில் இறங்கினோம். சுற்றுவதற்கு நிறைய இடம் இருந்தாலும், சற்று தொலைவில அணைக்கும், மான் சரணாலயத்திற்கும் ஒரு பஸ்ஸில் டூர் இருந்தது. அதன் பின் காரில் பாலருவி சென்றோம். நல்ல வெயில். ஆனால் அருவியை நோக்கி நகர நகர சில்லென்று இருந்தது. இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனி இடம். பெண் காவலர்களும் உண்டு. உடைமாற்றும் அறைக்கு சென்ற பொழுது பெண்காவலர் அமைதியாக வந்து காவல் இருந்து விட்டு பின் மீண்டும் அருவி நோக்கி சென்றார். பாலருவி குளியலுடன் அருவிப்பயணம் முடிந்தது.


தென்மலையில் இருந்து இறங்கும் வழியில் இரயில் செல்லும் பாலம்


தாமிரபரணி நீரின் சுவையோடு அழகான நினைவுகளும் மனதோடு ஒட்டிக்கொண்டது.