என் மேகம் ???

Thursday, January 28, 2010

இங்கிலீஷ் அமெரிக்கா

குட்டிப் பெண்ணுக்கு ஊருக்கு போவது முன்பெல்லாம் பிடிக்காது. இப்ப "மீ த ஃபர்ஸ்ட்". ஆனால் மேடம் அஞ்சு நாள் ஊருக்கு போகணும்னு கிளம்புவாங்க... அப்புறம் போன உடனே "வீட்டுக்கு போகலாம்னு" ஆரம்பிப்பாங்க... இப்ப அப்படி ஊருக்கு போகணும்னு சொன்னவங்க கிட்ட
"நீ ஊருக்கு போ...நான் அமெரிக்கா போறேன்..." என்றேன்.
"இங்கிலீஷ் அமெரிக்காவா தமிழ் அமெரிக்காவா?"
"ம்...இங்கிலீஷ் அமெரிக்கா"
"சரி போ"


*****************************

மேடம்க்கு லீவு... எனக்கு ஆபீஸ்... ஆனாலும் பெரியவங்களை தொந்தரவு படுத்தக் கூடாதே!! எப்பவும் போல் குளி, சாப்பிடு என்றேன்... கோபம் வந்துவிட்டது. "நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு இருப்ப. நான் என் இஷ்டத்துக்கு இருக்கக்கூடாதா?". ஒரு நிமிஷம் என்ன சொல்றதுனு புரியலை... அப்புறம் , "எல்லாமே நீயா செய்யறப்ப உன் இஷ்டத்துக்கு இரு" என்றேன்... நியாயமாகப் பட்டது போல்.. ஒத்துக்கொண்டாள்

*****************************

ஆபிளில் இருந்து சீக்கிரம் வந்து பீச்சுக்கு அவளுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு காக்கை கூட்டம் இருந்தன. நம்ம குட்டீஸ்க்கு உடனே சந்தேகம் வருமே ... ஒரு புழுவைப் பார்த்தால் கூட அதோட அம்மா அப்பா எங்கே என்று கேட்டு ..எல்லாம் ஆபீஸ்ல இருந்து வர்ற வரை அது விளையாடும்னு சமாளித்தாலும் கேள்வி கேட்டு...
"இதெல்லாம் அம்மா காக்காவா அப்பா காக்காவா?"
"ரெண்டும் இருக்கு"
"எதெல்லாம் அம்மா காக்கா?"
"தெரியலை பார்க்கலாம்"
அப்பொழுது சில காக்கைகள் பறந்தன.
"அதெல்லாம் ஏன் சீக்கிரம் போகுது"
"ம்... அதெல்லாம் வீட்டுக்கு போகுது"
"ஓ!! அப்ப அதெல்லாம் அம்மா காக்காவா?"
"..."

***********************
ஃபைட்டர் ஃபிஷ் முட்டை போட்டிருந்தது. எனவே பெண் மீனைத் தனியாக போட்டோம்.
"மேல் ஃபிஷ் என்ன பண்ணும்?"
"மீன் குட்டியைப் பாதுகாக்கும்..."
ஏனோ அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.

மாலை அலுவலகத்திற்கு ஃபோன். "அம்மா... முட்டை எல்லாம் காணோம். இந்த மேல் பைட்டர் தின்னுடுச்சு போல... நாம தப்பு பண்ணிட்டோம். அடுத்த தடவை ஃபீமேல் ஃபைட்டரை தான் பாதுகாக்க விடணும்"

************************

Tuesday, January 26, 2010

காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...

பெட் வேண்டும் என்று வீட்டில் குழந்தைகள் ஒரே கெஞ்சல். மீன் உண்டு. அடுத்த படியாக பராமரிக்க எளிது என்று லவ் பேர்ட்ஸ் வாங்கினோம். வரும் பொழுதே சின்னப் பெண்ணிடமிருந்து கேள்வி, "அது ரெண்டும் லவ் பண்ணுதா அம்மா?". அவ்வப்பொழுது இப்படி ஏதேனும் ஒரு கேள்வி வந்து கொண்டேதான் இருக்கும் விளம்பரம் கண்டாலோ, படம் பார்த்தாலோ... "நீங்க ரெண்டு பேரும் எப்ப ஃபர்ஸ்ட் பார்த்தீங்க? என்ன பேசினீங்க?". வியப்பாகத் தான் உள்ளது கேள்விகள். சிரித்துக் கொண்டே பதில்கள் சொல்ல கற்றுக்கொண்டோம். மனம் கொசுவர்த்தி சுற்றியது...

அன்று பள்ளியில் இருந்து வந்த பொழுது அடுப்படியில் புதிதாக பெண் ஒருவர் இருந்தார். புன்னகைத்தவரை யோசனையுடன் பார்த்தபடி அம்மாவை நோக்கினேன். தீவிரமாக சமையல் செய்து கொண்டிருந்தார் அம்மா; என்னைப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுது ஊருக்கு வந்தாலும் சிரிப்போடு கும்மாளம் அடிக்கும் அண்ணன் , ஹாலில் சற்று சீரியசாக சிரிக்க முயன்றார். சற்று நேரத்தில் புரிந்துவிட்டது... இருவரும் ஊரை விட்டு ஓடி வந்திருந்தார்கள் என்று. எப்படி லவ் பண்ணி இருப்பார்கள் என்ற கேள்வி மனதைப் பிறாண்டியது. டி.வி நிகழ்ச்சிகள் கூட சென்சார் செய்யப்பட்ட காலகட்டம், "லவ்" என்று சொல்வதே தவறாக இருந்தது... "ஹீரோவும் ஹீரோயினும் இது பண்ணுவாங்க" "வில்லன் அந்த பொண்ணை இது பண்ணிடுவான்" என்ற "இது" அதன் இடம் பொறுத்து பொருள் கொள்ளப்பட்டது. மனதைப் பிறாண்டிய கேள்வியைக் கேட்க இயலாமலே அவர்கள் ஊருக்கு போய்விட்டார்கள்.

ஊரில் திருவிழாவுக்கு வந்த எல்லா உறவினர்களும் கூடியிருந்தோம். குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, அடுப்படியில் வேலை உள்ளதா என எட்டிப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்த அண்ணியிடம் இரகசியமாக, "அண்ணி, அண்ணனை எப்ப நீங்க முதல்ல பார்த்தீங்க?" என்றோம். அண்ணியின் முகம் பூவாக மலர "நான் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்ட்ல நிப்பேன். உங்க அண்ணனும் அங்க வருவாக... .". அண்ணி சொல்ல ஆரம்பித்த வேளையில், "அதுக தான் கூறு இல்லாமல் கேக்குதுனா நீயும் இப்படி கூறுகெட்டதனமா சொல்லிட்டு இருப்பியா?" என்ற அம்மாவின் கத்தலில் எங்கள் அவை கலைந்தது. "எப்படி லவ் வந்து இருக்கும்" என்ற கேள்வி பதில் இல்லாமலே எல்லோர் மனதிலும் தங்கி விட்டது.

”அண்ணி உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க” என்று அம்மா முன்பாக அண்ணியிடம் கேட்க எனக்கு தைரியம் வந்தது எனது திருமணத்திற்குப் பின் தான்.

இப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டே தான் உள்ளன

Monday, January 25, 2010

சாலையோரம் - தொடர் பதிவு

சாலையோரம் தொடர் பதிவிற்காக தீபா அழைத்திருந்தார். நான் வாகனம் ஓட்டுவதில்லை... சாலை பயத்தால்... சாலை ஓரம் இரண்டு நிமிடம் நின்று போக்குவரத்து நிறைந்த பாதையைப் பாருங்கள்... எல்லா வாகனங்களுக்கும் ஒரு ஒற்றுமை... வேகம்... வேகம்... வேகம்... எதைப் பிடிக்க இவ்வளவு வேகம் என்று தோன்றும். நிதானமாகச் செல்பவருக்கு வசை கிடைக்கும். ஆங்காங்கே இடித்தாலும் குறையாத வேகம்... சாலையைக் கடப்பவரைப் பற்றி கவலைப்படாத வேகம்.. இது என்று நிதானம் ஆகுமோ என்ற பயம் வேகமாக மனதைக் கவ்வும்.

தீபா அழகாக சொல்லி இருப்பார் "It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.". வரக்கூடாத திசையில் வந்து நேராக மோதி நம்மை முறைப்பார்கள். அன்று சாலையில் காரைத் திருப்ப இடது புறம் வரும் வண்டிகளையும், பக்கவாட்டிலும் பார்த்துக் கொண்டே திருப்பினால், எதிர் திசையில் சைக்கிளில் ஒருவர் மோதுவது போல் வருகிறார். எத்தனை பக்கம் பார்க்க இயலும்? கொஞ்சம் சுற்று என்றாலும் சரியான வழியில் வருவது நன்று.

மற்றோருநாள் காரைத் திருப்ப முயலும் பொழுது, கிடைத்த சிறு சந்தில் , வேறு இரு வாகனங்கள் ஓவர்டேக் செய்ய முயன்று... முன் கதவு ஜாம் ஆகிவிட்டது. உள்ளே குழந்தை இருந்ததால் நியாயம் பேசவும் நேரம் இல்லை. ஏன் இந்த வேகம்? முன்னால் செல்லும் வாகனத்தில் குழந்தை இருக்கலாம், கர்ப்பிணி இருக்கலாம், நோயுற்றவர் இருக்கலாம்... ஒரு சிறு இடி கூட அது பெரிய விஷயம் ஆகலாம். வேகம் விவேகமல்ல....

மற்றொன்று நெரிசல். நாம் நெரிசல் நேருவதைத் தவிர்க்கலாம். வரிசையாக எல்லோரும் நிற்பார்கள். சிலர் மட்டும் வேகமாக முன்னால் சென்று சாலையின் நடுவில் நின்று, எதிர்ப்பக்கம் வாகனம் வருவதைத் தடுப்பார்கள். அப்புறம் ட்ராபிக் ஜாம் தான். யாரும் நகர முடியாது. சத்யம் தியேட்டர் வாயிலில் காட்சிக்கு நேரம் இருந்ததால் சாலையோரம் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. ஒரு பக்கம் போக்குவரத்து ஒழுங்காக சென்று கொண்டிருக்கிறது. ஒருத்தன் சாலையை மறித்துக் கொண்டு காரில நடுவே புக முயல்கிறான். மற்றவர்ளுக்கு இடையூறு செய்து அப்படி என்ன அவசரம் ? அவனை விட்டால் தான் போக்குவரத்து சீர்படும் என்பதால் அவனுக்கு நடுவில் வழிவிட வேண்டி இருந்தது. இது போல் நடு சாலையில் முந்தி சென்று நெரிசலை உண்டாக்காதீர்கள்.

இரவில் வாகனம் ஓட்டுவதில் பல சிக்கல்கள். "ஹை பீம்" போட்டுவிட்டு வரும் வாகனத்தால் முன்னால் இருக்கும் வாகனம் தெரிவதில்லை. என் கணவர் எப்பொழுதும் ஹை பீம் போட விரும்புவதில்லை. அன்று அப்படி தான் .. எதிரே வரும் வாகனங்களின் "ஹை பீம்" வெளிச்சம் மறைந்ததும் பார்த்தால் சற்றே முன்னால் இருளின் அரக்கன் போல ப்ரேக் லைட் இன்றி செல்கின்றது ஒரு லாரி. நாம் லோ பீம் போட்டால் எதிரில் வரும் வாகனத்தின் ஹை பீமில், முன்னால் இருக்கும் ஓளியற்ற வாகனங்கள் தெரிவதில்லை. முதலில் லாரிகள் ப்ரேக் லைட் ஒழுங்காகப் போட்டால் நிறைய விபத்துக்கள் தவிர்க்கப்படும். நாமும் லோ பீமில் ட்ரைவ் பண்ண முயல்வது நல்லது.

வாகனம் ஓட்டுபவரும் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வேலைப்பளுவால் மனச்சோர்வடைந்த உறவினர், பைக்கில் ஒரு விநாடி நிலை குலைந்து போனார்... தலைக்கவசம் இருந்த்தால் சிறு சிராய்ப்புடன் தப்பினார். ஆனால் அந்த சில மணி நேரங்கள் அவரது குடும்பத்தினர் தவித்த தவிப்பு.... இரு சக்கர வாகனம் என்றால் தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள். உங்கள் நன்மைக்காகவும் மற்றவர் நன்மைக்காகவும், உடல் சோர்வோ மனச்சோர்வோ உணர்ந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்; சிறிதளவு மது எடுத்துக் கொண்டாலும் வாகனம் ஓட்டாதீர்கள்.

எல்லோருக்கும் தேவை நிதானம்... சற்று முன்பே கிளம்பினால் வேகம் தேவைப்படாதே!!! வேகம் எமனின் கோட்டை தவிர எந்த கோட்டையையும் பிடிக்க விடாது; தேவையற்றது வேகமும், நெரிசல் உண்டாக்குவதும்.

அடிக்கடி பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் சைரன் அடித்தாலும், நகர இயலாத நெரிசலால் வேகமாக செல்ல இயலாததைக் காணலாம். வி.ஐ.பி கள் சாதாரணமாக செல்ல சாலையில் வழி ஏற்படுத்தப்படும் ஊரில் , துடிக்கும் உயிருக்கு செல்ல முடியாத நெரிசல் என்பது வேதனையான விஷயம்.

தங்கள் அனுபவங்களைப் பகிர நான் அழைப்பது
அமித்து அம்மா
பின்னோக்கி
அகஆழ்

அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?

என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...
பிடித்தவை மறந்தே போயிருந்தாள்.

Tuesday, January 19, 2010

நினைவுகள்

எதற்காகவும் எதுவும் நிற்பதில்லை
காலம் நிற்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது

குழந்தைகள் வளர்கிறார்கள்
நாளை உலகை வெல்ல
பிரிந்து செல்லலாம்

பெரியவர்களுக்கு வயதாகிறது
காலத்தை வெல்ல
காற்றோடு கரையலாம்

இல்லாத வலியையும்
இருக்கின்ற சுகத்தையும்
என்றும் தந்திடும் ...
நெஞ்சோடு உறைந்த நினைவுகள்

Sunday, January 10, 2010

வாழ்க்கை




புதிர்கள் நிறைந்த பாதைகளுடன்
விரிந்து கிடந்தது வாழ்க்கை
எதைத் தொட்டால் வெற்றியென
அலுப்புடன் தேடினேன் பதில்களை...

பதில்கள் தேடிக்கொண்டிருந்தவளிடம்
கேள்வியுடன் வந்தாள் மகள்
போட்டி ஒன்றில் கலந்திடவே
புது யோசனை ஒன்று கேட்டு...

அலுத்துப் போன மனதிற்கு
யோசிக்க விருப்பம் இல்லை
பரிசு கிடைக்க வேண்டுமெனில்
பழகியதைச் செய்திட சொன்னது

சிரித்துக் கொண்டே வாழ்க்கையை
எளிதாக விளக்கினாள் சின்ன பெண்
போட்டியில் பங்கு பரிசுக்கல்ல..
என் மகிழ்ச்சிக்கு என்றாள்

வாழ்க்கை கூட இப்படிதான்
அனுபவித்து வாழ்ந்திட தான்
புரிதலுடன் புதிர்களை
சுவாரசியமாக நோக்கினேன்


(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

Friday, January 8, 2010

டிசிப்ளின்

விநாயகம் மாமாவை உங்களுக்கு தெரியுமா? வெள்ளை வெளேரென்ற வேட்டியும் மடிப்பு கலையாத சட்டையுமாகத் தான் இருப்பார். எப்பொழுதும் "டிசிப்ளின்" தான் அவர் முதல் கவனம். எங்கள் வீட்டில் அவர்தான் மெத்தப் படித்தவர்; பட்டதாரி. எல்லோருக்கும் அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதனால் பெரியவர்கள் குடும்பப்பிரச்னை என்றால் அவரிடம்தான் தீர்வு கேட்பார்கள்; குழந்தைகள் அவர் முன் வர பயப்படுவார்கள்.

வால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், "வாங்க மாமா!!! எப்படி இருக்கீங்க?" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே "அடடே!!!" என்றார். "நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.

மாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் "டிசிப்ளின்" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.

மெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். "அடடே!!! பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா?" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வாயெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். "டிபன் டிசிப்ளின்" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.

மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை "கொய்யாப்பழம்" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். "அடடே!!!" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். "அடடே!!" "பழத்த கழுவாமல் சாப்பிடலாமா? இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா", என்றார்.

வந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். "டிசிப்ளின்" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். "போய் விளையாடு" என்றார். "இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...

அவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா "விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.

Wednesday, January 6, 2010

என் சுவாசக் காற்றே!!!

ரொம்ப நாள் ஆச்சு குட்டீஸ் பத்தி எழுதி. ம்... நான் படிக்கும்பொழுது பண்ணலைனாலும் என் பொண்ணுக்கு செஞ்சத பதிவு செய்ய தான் இந்த பதிவு.

"அம்மா ஹாலிடேஸ்க்கு human body வர்க்கிங் மாடல் பண்ணனும்" - நந்தினி
"respiratory system பண்ணலாமா?"
"அது சிம்பிள் வேண்டாம்"
"circulatory, skeletal, nervous, digestive, excretory" என்று எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் பண்ணுவதாக சாக்கு. இப்ப நான் என்னத்த தேட? மிஞ்சியது ஹார்மோன் & இம்யூன் தான். சின்னதாக உருண்டையாக இருக்கும் இரும்புமணிகளைப் போட்டு, அப்படியே காந்தம் வச்சு நகர்த்தி, வைரஸ் வந்தால் வெள்ளை அணுக்கள் இப்படி தான் போராடும்னு செய்யலாமா என்றெல்லாம் யோசிச்சு.... அப்புறம் செய்து பார்க்க காந்தம் கிடைக்காததால் விடுமுறை முடியும் தருணத்தில் , "ஒண்ணு சுவாசக்குழாய் இல்லாவிட்டால் ஒண்ணுமில்லை" என்றவுடன் வேறுவழியின்றி அவளும் சரி என்றாள். சிம்பிள்தான் என்றாலும் அவ்வளவு சிம்பிளாக இல்லை இந்த வடிவம் வருவதற்கு.

கொஞ்சம் நெட்டின் உதவியுடனும் கொஞ்சம் சொந்த யோசிப்புடனும் இதோ மாடல்:



ஒருT பைப்பின் இருபுறமும் பலூன், நடுவில் சின்ன இதயம். ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் அடியை வெட்டி இன்னொரு பலூனின் பகுதி diaphragm ஆனது. டப்பாவின் மூடிப்பகுதியில் இன்னொரு பலூனின் பகுதி கழுத்தாக இணைக்கப்பட்டு, சின்ன ஓட்டை வழியாக சின்ன ப்ளாஸ்டிக் டப்பா நுழைக்கப்பட்டது தலைக்காக. தலையின் வரைவு மற்றும் அலங்காரம் நந்தினி.. பலூன் உபயம் யாழினி... ஆக்கமும் இயக்கமும் நாங்கள் என்று இது ஒரு கூட்டு முயற்சி...

இப்பொழுது குழாய் வழியாக காற்றை செலுத்தினால் ... மூச்சு உள்ளிழுத்தல் (Inhale)
சுவாசப்பை விரிவடைகிறது...




இப்பொழுது குழாய் வழியாக காற்றை வெளி இழுத்தால் ... மூச்சு வெளியேற்றல் (Exhale)
சுவாசப்பை சுருங்குகிறது...


எப்பூடி?

Monday, January 4, 2010

வந்தாச்சு புதுவருஷம் புத்தகங்களுடன்...

ஒரு வழியாக 2009க்கு விடை கொடுத்து அனுப்பிட்டு 2010க்குள் நுழைந்தாயிற்று. புத்தகலிஸ்டை கடைசி நேரம் வரை ஒத்தி போட்டதில் அப்படி ஒண்ணு இல்லாமலே தான் புத்தக கண்காட்சிக்கு கிளம்பினோம். (கண்டிப்பா புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்று குட்டிப்பெண்கள் மாலை முதல் போட்டிருந்த சின்ன ஆடல்/பாடல் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் மாமாவோடு சேர்ந்து உறியடியை கொஞ்சம் மாற்றி பொம்மை தொங்கவிட்டு கண்கள் கட்டி பிடிக்க வைத்த விளையாட்டு, பின் டம்ப்ஷராட்ஸ் விளையாட்டு என்று பன்னிரெண்டு மணிக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லும் வரை மழலைகளோடு நேரம் ஓடிவிட்டது)

குட்டீஸ் எல்லாம் பாட்டி வீட்டில் விட்டு விட்டு (இல்லைனா ஒரு ஸ்டாலுக்கு மேல பார்க்க முடியாது... நிறைய புக்ஸ் வேணும் என்ற கண்டிஷனை ஏற்றுக்கொண்டோம்), கரெக்டா ஒரு மணிக்கு கண்காட்சி இடத்துக்கு நுழைஞ்சோம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வயிற்றுக்கு தந்துவிட்டு தெம்போடு கண்காட்சிக்குள்ளே நுழைஞ்சோம். வாசல்ல கிடைச்ச பதிப்பகம் பற்றிய கையேடும் , என்.ஹச்.எம்-மின் வரைபடமும் ஸ்டால்களைக் கண்டுபிடிக்க உதவியது. எதுவுமே முதலில் குழந்தைகளுக்கு என்றாகிவிட்ட வாழ்க்கையில் புத்தகங்களும் அவர்களுக்கு முதலில் என்று ப்ராடிஜி ஸ்டாலுக்குள் நுழைந்தோம். வாசிப்பில் நந்தினிக்கு ஆங்கிலத்தில் இருக்கும் ஈடுபாடு தமிழில் வரவழைக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. இந்த் முறை ப்ராடிஜி உதவி செய்தது. "ஹெய்டி" (சுட்டி டி.வியால் அவளுக்கு மிக விருப்பம்) மற்றும் "தும்பிக்கை எப்படி வந்தது" புத்தகங்கள் அவளது கவனத்தைக் கவர்ந்து வெற்றிகரமாகத் தமிழில் கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இன்னும் சில புத்தகங்கள் தேர்வு செய்து அடுத்து நான் ஆவலுடன் சென்றது...

"வம்சி பதிப்பகத்திற்கு"... நம் எழுத்துக்களையும் நமக்குத்தெரிந்தவர்களின் எழுத்துக்களையும் பதிப்பில் காண்பது மகிழ்ச்சி தானே!!! மாதவராஜ் அவர்களின் நான்கு புத்தகங்களையும் (குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது - சொற்சித்திரங்கள்
கிளிஞ்சல்கள் பறக்கின்றன - வலைப்பதிவு கவிதைகள்
மரப்பாச்சியின் ஆடைகள் - வலைப்பதிவு சிறுகதைகள்
பெருவெளிச் சலனங்கள் - வலைப்பதிவு அனுபவங்கள்)
வாங்கினேன். இதில் எனது கவிதையும், அனுபவக்குறிப்பும் இடம் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் அயராத முயற்சியால் வந்த புத்தகங்களைத் தொகுத்த மாதவராஜ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்தோருக்கும் வாழ்த்துக்கள். அதன் பின் கால்கள் ஓயும்வரை சுற்றி நான் தேர்வு செய்த புத்தகங்கள் கீழே... கண்மணி குணசேகரனின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்று சரியாகத் தேடுவதாக நம்பிக்கொண்டு உறுதியாக தவறான பதிப்பகத்தில் தேடியதால் அதை மிஸ் செய்து விட்டேன்.. ஆங்காங்கே புத்தக விமர்சனங்களில் படித்த நூல்களை நினைவு கூர்ந்து தேர்ந்தெடுத்தேன். சில விரும்பிய புத்தகங்களை பட்டியல் தயாரிக்காததால் பதிப்பகம் அறியாமல் விடுபட்டுவிட்டது. அடுத்தமுறை ஒழுங்கான திட்டமிடல் வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

முடிவில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த விஷயம் நாங்கள் தேர்வு செய்த அளவிற்கு புத்தகங்களை குழந்தைகளுக்கும் தேர்வு செய்தது தான்.

வாங்கிய புத்தகங்கள்:

மேலே குறிப்பிடப்பட்ட மாதவராஜ் அவர்களின் தொகுப்புகள்
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
காட்டில் ஒரு மான் - அம்பை
மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துராமலிங்கம்
ஒரு கடலோரகிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
ஒற்றன் - அசோகமித்திரன்
நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ்.ரா
குறுஞ்சாமிகளின் கதைகள் - கழனியூரன்
கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி
மனிதனும் மர்மங்களும் - மதன்
செங்கிஸ்கான் - முகில் (சரித்திரம் மீது திடீரென முளைத்த எனது ஈடுபாடு பற்றி பிறிதொரு பதிவில் சொல்கிறேன்)

குழந்தைகளுக்கு:

NationalBook Trust India பதிப்பில்:

A story about water
Nine Little Birds
குலோபா எலியரசியும் பலூன்களும்
A Real Giraffe
Tale of a Moustache

ப்ராடிஜி பதிப்பில்:

விண்வெளியில் விக்கி
புல்புல் கொடுத்த பெட்ரோல்
fishy fishes
தும்பிக்கை வந்தது எப்படி?
ஹெய்டி

Usbourne Young Readers பதிப்பில்

Dinosaurs next door

இது போக சில பம்பர் ஆக்டிவிடி புக்ஸும், Scholastic-ல் 3D புக்ஸும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தன.

இனி புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும் ...