என் மேகம் ???

Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts
Showing posts with label கண்ணீர் அஞ்சலி. Show all posts

Tuesday, June 15, 2021

அப்பாவும் நானும்

காலம் முழுவதும் போற்றும் நினைவுகளைத் தந்துவிட்டு, இன்றோடு அப்பா மறைந்து 30 நாட்கள் ஆகிவிட்டது.   

அன்பு மட்டும் அல்ல கண்டிப்பும் நிறைந்தவர் அப்பா. படிப்பில் கண்டிப்பு மற்றவற்றில் சுதந்திரம்.  தன் காலத்து அப்பாக்கள்  போல் அல்லாது எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் புரியவே எனக்கு நிறைய நாள் தேவைப்பட்டது. பக்கத்து வீட்டில் அப்பாக்கள் வரும் நேரம் உள்ளே ஓடும் குழந்தைகளும் அம்மாக்களும் இருக்க, எப்பொழுதோ வந்து விட்ட அப்பா நம்மை அழைக்க கூட இல்லை என்பதன் சுதந்திரம் வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகம் காணும்பொழுது புரிந்தது.

நேரம் தவறாமை நேர்மை இதெல்லாம் அப்பாவிடமிருந்து கற்றவை. அப்பாவின் அன்பு கடுமையுடன் கூடியது. எந்த அளவு கோபம் வருமோ அதே அளவு அன்பும் உண்டு. 11ம் வகுப்பிலும் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றது ஒன்று. பள்ளி செல்ல  பேருந்தில் ஏற்றிவிட்டு பின்னால் சைக்கிளில் வந்து பள்ளியை அடைந்து விட்டேனா என பார்க்க வருவது என்பதெல்லாம் அப்பாவால் மட்டுமே முடியும். உடல் நலமில்லை என்றால் அம்மாவிடம்  இது எண்ணை அதிகம்  , அது சரியில்லை என்ற கோபத்தின் பின்னுள்ள அன்பு பிள்ளைகள் வரும் பொழுதுதான் புரிகிறது. 


என்ஜினீயரிங் படிக்கும் எண்ணமெல்லாம்  இல்லை. பயாலஜி தான் பிடிக்கும் என்றாலும், கிடைத்த வாய்ப்பை  நீ விடக்கூடாது, பின்னால் வருத்தப்படக்கூடாது என்று சொன்னதோடு அல்லாமல் எந்த கோர்ஸ் டாப், என்று பார்த்து விட்டு வந்து...கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சிறந்தது...ஏசியில் வேலை பார்க்கலாம் என்று பார்த்து பார்த்து சேர்த்தது அப்பா தான். பெண் பிள்ளைக்கு எதற்கு என்ஜினீயரிங் என்ற சிலரின் குரல்களை எல்லாம் செவி மடுக்காமல் கல்லூரியில் சேர்த்த பொழுது தெரியவில்லை...அவர் வரையில் அவர் செய்தது எனக்கு எத்தனை பெரிய மைல்கல் என்று. 


கல்லூரியில் இருந்து வர ஆறு மணிக்கு மேல் ஆனால் அந்த பெரிய அரசு  குடியிருப்பின் இரண்டு கேட்டிலும் மாறி மாறி காத்திருப்பார் எந்த பக்கமும் நான் வரலாமென... நடுவில் வீட்டிற்கு சென்று ஒருமுறை தான் விட்டு விட்டோமோ என ஒரு பார்வை வேறு. அந்த செயலுக்கு பின்னால் இருக்கும் பொறுமை அப்பொழுது  புரியவில்லை. 


கூட்டுப்புழுவாக இருந்த என்னை , தைரியமாக வேலை கிடைத்ததும் சென்னையில் விடுதியில் சேர்த்து இன்று இங்கு இருக்க , அவர் பார்த்து பார்த்து செய்தவை ஏராளம். தினம் தனியே விடுதிக்கு சென்றாலும் அவர் வந்தால் விடுதி வரை வந்து உள்ளனுப்பிவிட்டு 7கி.மீ. நடந்து ஊருக்கு பஸ் பிடிக்க செல்வார்.  பிள்ளைகளின் படிப்பு , வேலை,  விடுதி , திருமணம் எல்லாவற்றிலும் அவர் எடுத்த சிரத்தையும் அன்பும் எங்களின் வரம்.  


நடையும் மிதிவண்டியும் அவருக்கு பிரியமானவை. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுதும் சரி, ஒய்வு பெற்ற பின்பும் சரி... வெகு நாட்களுக்கு அவை தான் அவரது ஊர் சுற்றலுக்கு துணை, மெல்ல மெல்ல அவரிடமிருந்து ஒவ்வொன்றாக பறிக்கப்படும்வரை. 



அப்பாவுக்கும் நல்ல  நினைவு சக்தியும் கூட... பிள்ளைகளுடன் வீட்டிற்கு சென்று கிளம்பினால்.. தேடி தேடி..யோசித்து யோசித்து நாங்கள்  விட்டு வரும் அத்தனை பொருட்களும் எடுத்து கொடுப்பார். தன்  63 வயதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கை அடிபடும்வரை சிரசாசனம் செய்வார். சைக்கிளில் தான் சென்னை உலா... கிட்டதட்ட பத்து கி.மீ  தொலைவில் இருக்கும் இடங்களுக்கு கூட சைக்கிளில்  சென்று வருவார். கை குணமானவுடன் சைக்கிளை ஓரம் கட்டினோம். அப்புறம் பஸ்  அல்லது நடை தான். 

எந்த பொருள் வீட்டிற்கு வாங்க வேண்டும் என்றாலும் எத்தனை முறை வேண்டும் என்றாலும் செல்வார்.  கிட்டதட்ட  15 கி .மீ தள்ளி வசிக்கும் எனக்கும் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அம்மா செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்  (எவ்வளவு சின்ன அளவாக இருந்தாலும் ..) பஸ் ஏறி வந்து கொடுத்துவிட்டு சென்று விடுவார் . ஒரு நாள் தி.நகரில் விழுந்து கால் முறிந்த பிறகு கூட குணமாகி மீண்டும் பஸ்  + நடை தொடர்ந்தது. 


பெற்றோருக்கு என்றும் பிள்ளைகள் தான் என்பது போல் பேத்திகளுக்கு தின்பண்டங்களுடன் எனக்கு பிடித்த கேக் வேறு வாங்கி வருவார்...அப்பா எனக்கு வயசு ஆகிவிட்டது ...வாயை கட்டணும் என்று சொன்னாலும்...மீண்டும் அந்த கேக் வரும். 


எப்படி எலும்பு முறிந்தது என்று தெரியவில்லை...ஆனால் சுளுக்கு என்று ஒரு வாரம் சிரமப்படடார்... எலும்பு முறிவு என்று அறிந்த பொழுது இன்பக்ஷன் ஆகி இருந்தது. ஆப்பரேஷன் முடிந்து நன்கு நலம் பெற்றார் போல தான் இருந்தது. சுறுசுறுப்பானவர் வெறித்து பார்த்ததும்...ஞாபக சக்தி உடையவரின் ஞாபகம் குறைந்த பொழுதும் ...அறியவில்லை இனி அப்பாவை வேறு  மாதிரி பார்க்க போகிறோம் என்று. அல்செமீர் என்ற அந்த நோய் அப்பாவை மாற்ற ஆரம்பித்தது. 

என்றாலும்  அந்த சிரிப்பு , பாசம், சில வேளைகளில் கிண்டல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எட்டி பார்க்கும். சில நேரம் யாரோ போல் அமர்ந்து இருப்பார். ஒரு காலத்தில் பிடித்த அந்த நடை கூட அவருக்கு அலுப்பானது. தினம்  சிரசானமும் பிராணாயாமம் செய்து ஓடி ஓடி உழைத்தவரா  என்று தோன்றும். 

அப்பாவுக்கு அல்செமீர் முன் வரை எல்லாம் தானே பார்த்து கொள்வார். அம்மா அவரை பற்றி கவலை படாது எங்கும் செல்லலாம். 

முடிவில் ... கோவிட் 2வைத்து அலை கோர தாண்டவம் ஆடிய பொழுது ...அப்பாவின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக மருத்துவமனை கிடைக்காது அலைந்து ஏதோ ஒன்றில் சேர்த்து ... நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்  என்பது போல் ஆகிவிட்டது...கொடூரமான நிலை...கொஞ்ச நாட்கள் அவரை நாங்கள் பார்த்துக் கொண்டது போதும் என்று எண்ணி விட்டார் போல... அவரது 76ம் பிறந்த நாள் அன்று வீட்டை விட்டு மருத்துவமனை  அனுப்பினோம்... ஒரு வாரம் கழித்து ...அம்மாவின் 69ம் பிறந்த நாளுக்கு வீடு திரும்பவில்லை... எப்பொழுதும் மனைவி பிள்ளைகளை பார்த்துக் கொண்டவரை , மனைவி பிள்ளைகளால் விடை கொடுக்க இயலவில்லை... 

இறையே என்றீரோ ...
அம்மா என்றீரோ ...
அப்பா  என்றீரோ ...
அன்பே என்றீரோ...
மகனே என்றீரோ...
மகளே என்றீரோ...
மக்களே என்றீரோ...

மண்ணோடு உறைந்தீரோ
காற்றோடு கலந்தீரோ
நெருப்போடு ஒளிர்ந்தீரோ
நீரோடு கரைந்தீரோ
விண்ணோக்கி விரைந்தீரோ..


மயில் இறகாக 
மனம் வருடும் 
மகிழ்ந்து இருந்த 
மறவா தருணங்கள் 


நீர்க்குமிழி வாழ்க்கை
பட்டென்று வெடித்தாலும்
நீங்கா நினைவுகளால்
நிலைத்து நிற்கும்

ஒருவரின் வாழ்வின்  ஒரு  பகுதியை இப்பக்கத்தில் கொண்டு வரலாம் என்ற அறியாமையில் சிரிக்கிறேன். அப்பாவின் ஒரு துளி அன்பை இங்கு நிரப்பி சற்றே  ஆறுதல் கொள்கிறேன். 





Tuesday, May 18, 2021

அன்புள்ள அப்பா

அப்பா..அப்பா



பேரன்பு
கொஞ்சம் கோபம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இன்னும் என்ன சொல்ல‌...

என்ன தவம் செய்தேனோ
உங்கள் மகளாக நான் வரவே
சுடுசொல் சொன்னதுண்டு
ஆனால்
அரவணைப்பு தான்
 நினைவில் உள்ளது...

நினைவுகள் மங்கினாலும்
நீங்கவில்லை
அன்பும் சிரிப்பும் விகடமும்

கடுமையான காலம்தான்
என்றாலும்  இத்தனை நாள்
உங்கள் அன்பை 
வரமாய் தந்த
 கடவுளுக்கு நன்றி

என்றும் பெருமைதான்
பிள்ளைகளைக் கண்டு உங்களுக்கு
எங்களுக்கும் பெருமை தான்
வரமாக வாழும் பெற்றோரால்

எங்கள் ஒவ்வொரு மேம்பாடும்
உங்கள் எண்ணத்தின் விதைகளே
நீங்களின்றி நாங்கள் இல்லை

சரியாக கொடுக்க இயலாவிட்டாலும்
பிரியாவிடை தான்
என்றும் எப்போதும்
 எங்களோடு நீங்கள் இருப்பீர்கள்
அன்புள்ள அப்பா

Thursday, February 10, 2011

அன்புள்ள மாமாவுக்கு...

உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்; மாமாவுடன் விவாதம் செய்தால் நேரம் ஓடுவது போல்....

”ஹாலில் இந்த சுவரை ஒரு ரெண்டு அடி இழுத்தால் தான் கொஞ்சம் நல்லா இருக்கும்”, மாமா சொன்ன பொழுது மனம் ஒப்பவில்லை தான். ஒரு அர்த்தமற்ற விவாதத்திற்குப் பின் அரைமனதுடன் ஒத்துக்கொண்டேன். ஆனால் இப்பொழுது அந்த ரெண்டடி இழுப்பின் அத்தியாவசியம் தெரியும். இப்படி வீட்டின் ஒவ்வொரு அடியிலும்....

தென்னங்கன்று நட இடமில்லை என்று நான் அம்மாவிடம் விவாதம் செய்து மறுத்து வர, ஆனால் மாமா தென்னங்கன்றை வாங்கி வந்து இடம் பார்த்து வைத்து.. இன்று வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி தோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும்....

ஐயாப்பா டெய்லி நைட் வந்து எங்களை மட்டும் பார்த்துட்டு போவார் என்று இன்னும் சொல்லும் கிள்ளைகளின் மழலையிலும்...

ஒவ்வொருமுறை சுற்றுலா செல்லும் பொழுது, அப்பா இருந்தால் வந்திருப்பார் என்று கணவரும், மாமாவுக்கு இப்படி வர்றது பிடிக்கும், நிறைய விஷயம் சொல்லுவார் என்று நானும் சுற்றுலாவின் ஒவ்வொரு சுற்றிலும்...

என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நினைவுகள் நிழலாக உடன் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.


இந்த வருடம் ரொம்பவே மிஸ் செய்கிறோம். முன்பெல்லாம் ஊருக்குப் போகக் காரணம் தேவையில்லை. அது ஒரு திட்டமிட்ட பயணம். இப்பொழுது... அத்தையும் இங்கிருப்பதால் காரணமின்றி செல்லத் தோன்றுவதில்லை.

எத்தனை விவாதம் அவருடன்!!! புத்தகம், சுற்றுலா, உறவுகள், பெண்ணுரிமை, பிள்ளை வளர்ப்பு, ஆத்திகம், நாத்திகம், சமையல், தோட்டம், நினைவுகள் என்று.... அப்பாவுடன் சண்டை போடும் உரிமையுடன் எத்தனை பேச்சுக்கள்/விவாதங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ எல்லாம்... குறைத்திருக்கலாமோ? இல்லை... மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....

Wednesday, February 10, 2010

நினைவு அஞ்சலி

படிக்கப்படாத புத்தகங்கள்
புரட்டிக் கொண்டே இருக்கின்றன
மனதின் பக்கங்களை...

தோட்டத்துச் செடிகள்
பரப்பிக் கொண்டே இருக்கின்றன
நினைவுகளின் வாசத்தை...

வீட்டுச் சுவர்கள்
விளம்பிக் கொண்டே இருக்கின்றன
ஏதேனும் ஒரு நினைவை...

நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?


உருண்டோடி விட்டன இரு வருடங்கள் மாமா மறைந்து... கடைசியாக தொலைபேசியில் தான் பேசினேன். அப்பாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது குழந்தைகளைப் பெற்றோர் உதவியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாமா குழந்தைகளைக் கவனிக்க வரட்டுமா என்றார். ஊர் விட்டு ஊர் அலைய வைக்க வேண்டாம் என்று, நான் சமாளித்துக் கொள்வேன் என்றேன். அப்பொழுதும் விடவில்லை , "அப்பாவால் சாமானெல்லாம் வாங்கிப் போட முடியாதில்லையா... நான் வந்து பார்க்கிறேன்" என்றார். "இல்லை மாமா நீங்கள் அலைய வேண்டாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்" என்றேன். இப்பொழுது நினைத்தாலும் அந்த அன்பில் மனம் நெகிழும்.

Tuesday, February 10, 2009

மாமாவின் நினைவுகள்

பிப். 10. அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? நாட்கள் உருண்டோடி வருடமாகிவிட்டது. காலம் வலிகளின் தீவிரத்தைக் குறைக்கிறது. சென்ற ஆண்டு மறைந்துவிட்ட மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். எனது மரணத்தைப் பற்றிய பதிவுகள் அவரது பிரிவின் தாக்கமே...

பெண்ணுக்கு வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் கணவன் மட்டுமல்ல புகுந்த வீட்டு சொந்தங்களும் புரிதலுடன் வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களுடன் உண்டாகும் பிணைப்பு அன்பினால் மட்டுமே. திருமணம் என்ற பந்தத்தினால் கிடைக்கும் புது சொந்தங்களின் பிணைப்பும் அவ்வாறே.

திருமணமான ஒரு வாரத்துள் அருகில் இருப்பவர்களுக்கு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பூண்டு உரித்துக் கொண்டிருந்தவரை ஆச்சரியமாகப் பார்த்தேன். ஆண்கள் அடுப்படியில் உதவுவது என்பது எனக்கு ஆச்சரியம். அந்த ஆச்சரியம் தொடர்ந்து கொண்டே இருந்தது. எனது வளைகாப்பிற்கு பூச்சடை செய்ய பூ தொடுத்தார். கேலி செய்து சிரித்த பெண்களிடம் "நம்ம வீட்டுப் பெண்ணுக்கு தானே செய்கிறேன்" என்றார். ஈகோ வீட்டிற்குள் தலையெடுக்காது இருந்தால் இன்பமே என்று புரிய வைத்தார். வீட்டு வேலை என்றாலும் அலுவலக வேலை என்றாலும் அதே சுறுசுறுப்பு, வேகம் மற்றும் உழைப்பைக் காணலாம்.

வீட்டில் உறவுகளுக்குள் ஒரு பிரச்னை என்று நான் கலங்கி இருந்த பொழுது அவர் கூறிய அறிவுரை கோடி பொன் பெறும். "வாழ்க்கை என்றால் பிரச்னை வரும் , போகும். இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்கலாமா? தைரியமா என்ன பண்ணணும்னு பார்க்கணும்.
நீ கவலைப்படாமல் இரு நான் கவனிச்சுக்கிறேன்" என்றார். இன்றும் பிரச்னை என்றாலே எனக்குள் ஒலிக்கும் இச்சொற்களால் பிரச்னை ஒன்றுமில்லாததாகத் தோன்றிவிடும்.

அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேலை, வீடு என்று திணறிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு பொறுப்பை முழுமையாக ஏற்றார். முழுமை என்றால்... சமையல், தோட்டம், குழந்தை வளர்ப்பு என்று அனைத்தும். இதற்கு நடுவில் அவரை அலுவலக நிமித்தமாக உதவி கேட்போருக்கும் உதவிக்கொண்டு... எப்படி அவருக்கு அவ்வளவு வலிமையோ?

நான் கருவுற்றிருந்த பொழுது, சிறுநீரகக் கல்லுக்கு மருந்து உட்கொள்ளக் கூடாது என்றார் மருத்துவர். சாப்பிடும் எனக்கு தினமும் வாழைத்தண்டும், கீரையும் அலுத்துப் போனது, அவருக்கு நறுக்கி சமைக்க அலுக்கவில்லை. மனைவி, மகன், மருமகள் என அனைவருக்குமே அவர் ஒருமுறையாவது மருத்துவமனையில் உதவி இருப்பார். தனக்கு என்று இருந்த பொழுது யாரையும் இருக்க விடமாட்டார். "போய் குழந்தைகளைக் கவனி", அவ்வளவுதான்.

வீடு நிறைய குழந்தைகள் இருந்தால் புன்முறுவலுடன் இரசித்துக் கொண்டிருப்பார். குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிக் கொண்டு அவர்கள் இழுப்புக்குச் சென்று கொண்டிருப்பார். மதுரையில் இருந்து யார் வந்தாலும் பேத்திகளுக்கு சாத்தூர் சேவு வந்து விடும். அது பெரிதல்ல, எனக்கு கருப்பட்டி மிட்டாய் பிடிக்கும் என அவர் சாத்தூர் செல்லும் பொழுதெல்லாம் மறக்காது வாங்கி வருவார். மருதமலையில் இலந்தை வடை கேட்டு என் கணவரிடம் கெஞ்சும் நேரத்தில் அவ்ர் ஒரு இலந்தை வடை கடையே கொண்டுவந்து கையில் கொடுத்துவிட்ட பாசத்தை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. "அமாவாசையாவது ஒண்ணாவது சிக்கன் சாப்பிடுங்க" என்று எங்களிடம் கூறுவார். அமாவாசைக்கு நீங்க சாப்பிடாதீங்க என்று சொல்லும் அத்தையின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து அவர் சாப்பிட மாட்டார்.

திருமணமான புதிதில் முதலில் பயம் கலந்த மரியாதை உண்டு. புத்தக வாசிப்பினால் தான் அது உரிமை கலந்த மரியாதை ஆனது. தந்தை போன்ற உரிமையுடன் சரிசமமாக பேசும் உரிமையைத் துவக்கி வைத்த பொன்னியின் செல்வனுக்கு என் நன்றிகள். எனக்கு பிடித்த "உடையார்" நாவலை அவரிடமும் படிக்கக் கொடுத்து , கட்டிடம் பற்றியும் அவருக்குத் தெரியும் ஆதலால், கோயில் கட்டியது பற்றி எனக்குப் புரியாத்தை அவரிடம் பேசி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். எத்தனை பகுதிகள் படித்தாரோ தெரியவில்லை..

முடிந்தவரை ஏதேனும் வேலைகள் செய்து கொண்டிருப்பார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து, யோகா செய்துவிட்டு, டி.வி பார்த்தவாறு வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, காய்கறிகள் எல்லாம் அரிந்து விடுவார். தோட்ட வேலையும் நடுவில் பார்த்துக் கொள்வார். ஏதேனும் செடிகள் புதிதாக வளர்த்துக் கொண்டே இருப்பார். சமையல் செய்ய வேண்டுமெனில் அதுவும் முடித்துவிடுவார். நடுவில் அலுவலக நண்பர்களுக்கு அலுவல் விஷயமாகவும் உதவிக் கொண்டிருப்பார். உறவு நட்பு என எவ்வட்டத்திலும் குடும்பம், அலுவல் என எதுவாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தன்னால் இயன்றவரை உதவுவார்.

சாத்தூர் அருகே உள்ள சிற்றூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு ஒரு நாள் வேலை முடித்துவிட்டு, மறுநாள் சென்னையில் நண்பர் வீட்டு கல்யாண்த்திற்கு வந்திருப்பார். எதைப் பற்றி வேண்டுமென்றாலும் அவரிடம் பேசாலாம். எப்படியாவது தெரிந்து வைத்திருப்பார். வீட்டில் என்ன ஒரு செயல் என்றாலும் நாங்கள் மட்டுமல்ல என் பெற்றோர் கூட அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்தால் தான் திருப்தி. நான்கு வருடங்களாகத் தான் மதுரையில் இருந்தார். அதற்கு முன் எங்களுடன் சென்னையில் இருந்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார். எனது இரு குழந்தைகளின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக உண்டு. அதன் பிறகும் இங்கு ஓரிரு நாட்களுக்கு வந்தால் கூட அதிகாலையில் வெங்காயம், பூண்டு உரிக்கப்பட்டு இருக்கும். எத்தனை சிறு இடைவேளையிலும் முடிந்த அளவு உதவிடுவார்.

அவர் மருத்துவமனையில் இருக்கும் தகவல் அறிந்து, உடனே அதிர்ஷ்டவசமாக ட்ரெய்னில் என் கணவருக்கு இன்னொருவரின் டிக்கட் கிடைத்தது. எல்லாம் நல்லவையாக அமையும் என்று எண்ணினோம். தந்தையைக் காணக் கிளம்பியவர், செல்ல முடிந்தது என்னவோ தாயின் துக்கத்திற்குத் தோள் கொடுக்க. சர்க்கரை நோய் இருந்ததால் நெஞ்சு வலியின் தீவிரம் தெரியாது போய், வாயுத் தொல்லையாக எண்ணிவிட்டு, தெரிந்த பொழுது மருந்துகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

நட்பு, உறவு என ஒரு பெரிய வட்டம் வந்த பொழுது புரிந்தது எத்தனை பேருக்கு அவர் உதவி இருக்கிறார் என்று. வாழ்ந்தால் இப்படி எல்லோரும் "இப்படி ஒரு நல்லவர் இனி இல்லையே" என்று சொல்லுமாறு வாழ்ந்திருக்க வேண்டும் என்று புரிய வைத்தது.

Sunday, February 24, 2008

கண்ணீர் அஞ்சலி






பெயர் : வ. பாலசுப்பிரமணியன்




தோற்றம்: 06.03.1945 மறைவு: 10.02.2008




இவர் எனது மாமனார். சொந்த மாமாவைப் போல் அன்பும் அரவணைப்பும் அளித்தவர். சமையல் , குழந்தை பராமரிப்பு உட்பட வீட்டு வேலை என்றாலும், எத்தகைய வெளி வேலை என்றாலும் ஈடுபாட்டுடன் ஈகோ இன்றி செய்யும் ஓர் அற்புதமான மனிதர்...எங்கள் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் ஒரு வழிகாட்டியாக இருந்தவர்...வாழ்வில் எதையும் எளிதாக எடுத்துக் கொண்ட ஓர் உன்னதமான மனிதர்...நெஞ்சு வலியையும் எளிதாக எடுத்துக் கொண்டதால், திடீரென இவரை இழந்து தவிக்கிறோம்...எந்த ஒரு இறப்பிலும் திகிலுறும் நான், இந்த மறைவில் அவர் ஒரு காவல் தெய்வமாக இருப்பார் என்று உறுதியாக நம்பும் அளவு, நற்செயல்களையே புரிந்து கண்டுள்ளேன்...அந்த ஜோதி மறைந்து விட்டதில் ஒளியின்றி தவிக்கும் எங்களின் கண்ணீர் அஞ்சலி...


படிக்கப்பட்ட புத்தகத்தின்

மடிக்கப்பட்ட அடையாளங்களுடன்

படித்தவருக்கு முடிவு சொல்ல

மெளனமாகக் காத்திருக்கின்றன...

பிரிக்கப்பட்ட பலகாரப் பொட்டலம்

பிரித்தவர் உண்டு முடிக்க

மேசையில் திறந்து கிடக்கின்றது...

தோட்டத்துச் செடிகள் எல்லாம்

வாட்டத்துடன் காத்திருக்கின்றன

தண்ணீர் விட மறந்து விட்டாரென...

யார் சொல்வது இவற்றிடம்?

கொடிய கனவென விழித்திட மாட்டோமா

என்று ஏங்கும் நெஞ்சமும்...

புகைப்படத்தில் அவர் புன்னகையுடன்

தோற்று வாடிய பூமாலையும்...

சாமிகிட்ட போய்ட்டாங்க, வர மாட்டாங்க...

என்ற பேத்திகளின் மழலையும்

உணர்த்தும் நிரந்தர பிரிவை...

மழலையரின் விளையாட்டில்

புன்னகையுடன் பூரித்த முகம்

கண்ணில் நிற்கிறது...

வாழ்க்கை என்பது பிரச்னை நிறைந்தது

சமாளித்து நிற்பது பெருமை

அழுது கலங்குவது மடமை

என்று கூறிய மொழி

நெஞ்சில் நிற்கிறது...

பூண்டு குழம்பு என்றாலும்

கோயில் வேலை என்றாலும்

ஊருக்கு ஒன்று என்றாலும்

ஓடி உழைக்கும் வேகமும், ஈடுபாடும், நேர்த்தியும்

எல்லோருக்கும் ஊக்கம் அளிப்பவை

மருத்துவமனை அறிவிப்பு பலகை

ஓர் உண்மையை அறிவிக்கிறது

மறையும் முன் உன் முத்திரையை பதி..

அருகே பொருத்தமாக தங்கள் பெயர்

மனம் கூறுகிறது, முத்திரை அல்ல...

தாங்கள் பதித்தது அழுத்தமான பாதை...

யமன் உயிரைப் பிரித்து இருக்கலாம்

உள்ளத்தின் நினைவுகளை அல்ல

புகைபடத்தில் தெரியும் உயிரோட்டத்தை அல்ல

இறையாக எங்களுடன் வாழ்வீர் என்ற நம்பிக்கையை அல்ல

என்றாலும் மனம் அரற்றுகிறது...

தோளிலும் மாரிலும் சுமந்த கிள்ளைகள்

பாசத்தைக் கொட்டி வளர்த்த மழலைகள்

அக்குருத்துகள் வளர்ந்த பின்

உள்ளத்தில் சுமக்குமா இப்பேரன்பினை என்று...