என் மேகம் ???

Sunday, February 28, 2010

மீன் பிடிக்க போவோமா?



மீன் பிடித்து இருக்கிறீர்களா? சிறுவயதில் ஆற்றிலும் அருவியிலும் குளிக்கும் பொழுது, "ஒன் டூ த்ரீ" என்று சொல்லி துண்டை விரித்து மீன் பிடித்துள்ளோம். அது அடுத்த நொடி துள்ளி குதித்து மாயமாகும். இது தான் எனது மீன் பிடி அனுபவம். கோயிலுக்கு போவோமா என்றால் குட்டீஸ் எல்லாம் கிளம்புவதாக இல்லை. மீன் பிடிக்க போவோமா என்று தூண்டில் போட்ட உடன் எல்லாரும் ரெடி. இப்பொழுது தூண்டில் வேண்டுமே? தொடங்கின முயற்சிகள்.

தூண்டில் பண்ண என்ன எல்லாம் வேண்டும்? எனக்கு தெரியவில்லை. ஆனால் நந்துவின் சித்தப்பா சித்திக்கு தெரிந்திருந்தது. "ஆப்பரேஷன் ஃபிஷ் கேட்ச் தொடங்கியது". மண்புழுவுக்கு மண்ணைக் கிளறினால், சின்ன பூச்சிகள் தான் சிரித்தன. எனவே மைதாமாவில் கேசரி பவுடர் போட்டு பிசைந்தோம். மைதா மாவு மெதுவாக நீரில் கரையுமாம், எனவே வேறெந்த மாவை விட மைதா தேர்வு பெற்றது. மீன் பிடிக்க கொக்கியும் தூண்டில் பண்ண நரம்பும் ஃபேன்ஸி ஷாப்பில் கிடைத்தது.





தூண்டிலை நீரில் மிதக்க வைக்கவும், மீன் மாட்டினால் அறிந்து கொள்ளவும் ஒரு மிதவை தேவைப்பட்டது. சென்ற முறை கோயிலில் பொறுக்கிய மயிலறகு உதவியது. இறகுகளை விலக்கிவிட்டு, அந்த இறகு காம்பை மிதவை ஆக்கினோம்.




பெரிய குச்சியின் நுனியில் நரம்பைக் கட்டி விட்டு, பின் இறகு காம்பை நன்கு சுற்றி, சற்று இடைவெளி நரம்பை விட்டு, நுனியில் கொக்கி மாட்டினால் தூண்டில் ரெடி. மைதா மாவை சின்னதாக எடுத்து புழு போல் கொக்கியில் மாட்டினால் "ஒன் டூ த்ரீ" சொல்லி மீனைப் பிடிக்க வேண்டியது தான்.




தூண்டிலைப் போட்டுக் காத்திருக்க வேண்டும். உணவு நீரின் அடியில் செல்ல மிதவை நீரில் மிதக்க, மீன் மாவை உண்ணத் தலைப்பட்டால், இறகுக்காம்பு அசையும்; ஒரு சுண்டு சுண்டி தூண்டிலை எடுத்தால் மீன் மாட்டி இருக்கும்.



சொல்வது எளிதாக இருக்கிறது, ஆனால் மீன் என்னவோ நந்துவின் சித்தி போடும் தூண்டிலுக்கு தான் சிக்கியது.



ஆறு மீன்களைப் பிடித்து, இரசித்து மீண்டும் நீரிலேயே விட்டு விட்டோம். தூண்டில் பண்ண நந்துவின் சித்தப்பா போட்ட டீல் அது. டீல் இஸ் எ டீல் இல்லையா? எனவே மீன்கள் துள்ளி மறைந்தன.




சுவாரசியமான பொழுதை முடித்து பரபர உலகிற்கு மீண்டும் வந்தோம்... தூண்டிலில் சிக்கிய மீன்களாக....

Tuesday, February 23, 2010

உடை சுதந்திரம்

காற்றை ஆடையாக்கி
துள்ளித் திரியும்
குழந்தை அவள்

பொம்மைகளுக்கு
உடை உடுத்தி
சிரித்திருப்பாள்

குழந்தையென்றாலும்
ஒரு நாள்...
ஆடை கட்டாயமானது

சின்னப்பெண்ணிடம்
யாசித்து நிற்கின்றன
ஆடை களைந்த பொம்மைகள்

பொம்மைகளேனும்
இருக்கட்டும் ஃப்ரீயாக
என்கிறாள் குழந்தை

கோபம் கொள்கிறாள் தாய்...
ஆப்பிள் உண்ட
ஏவாளின் மீது

Saturday, February 20, 2010

கிறுக்கல்கள்

வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டினால் பதின்மத்தின் பக்கங்கள் பெரும்பாலும் குழப்பமான கிறுக்கல்களாகவே தெரிகிறது.

பதின்மம்... தனது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு போராட்டமாக இருந்ததோ என்று தோன்றுகிறது. “படிப்ஸ்” என்று மட்டுமே இருந்தாலும், பல குழப்பங்களுடன் தான் இருந்தது பதின்மம். ஒழுங்காகப் பள்ளி வந்து கொண்டிருந்த ரெஹானா, பர்கானா, அனிதா எல்லாம் பள்ளியில் இருந்து திடீரென நின்ற பொழுது... , பசங்க பொண்ணுங்க என்ற பாகுபாடின்றி கிரிக்கெட், செவென் ஸ்டோன்ஸ், மசாமஸ் என்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது பானு திடீரென வாசற்படி தாண்டி வரமறுத்தது என்று... வகுப்பில் சின்ன பெண்கள் எல்லாம் படித்துக்கொண்டிருக்க, பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் மட்டும் என்ன தான் பேசி சிரித்துக்கொள்கிறார்களோ என்று...

சந்தோஷமாக வெளியே செல்ல கிளம்பிய காலம் போய், வெளியே சென்றால் என்ன அத்துமீறல்களோ என்று மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது வீட்டுக்குள் சுருங்கிக் கொண்ட காலமும் அதுதான்.”படி தாண்டாதே” என்று அம்மா கூறவில்லை, நானே வீட்டிற்குள அடைந்து கொண்டேன். வாசிப்பு என்ற பொன்னுலகம் என்முன் விரிய ஆரம்பித்ததும் அப்பொழுது தான். என்னவென்றே புரியாத மன உளைச்சல்களோடு மூச்சிரைப்பு நோயும் உச்சகட்டத்தை அடைந்து என்னைப் பாடாகப் படுத்தியது. அம்மாவையும் அப்பாவையும் மிகவும் கவலைப்படுத்துவேன். விளையாட்டு என்ற ஒன்று என்னிடம் இருந்து அன்னியப்பட்டுப் போனது.

பள்ளியில் உணவு இடைவேளையில் மாடிப்படிகளில் அமர்ந்து, நானும் ஸ்ரீதேவியும் கேட்க சாரதா அழகாக கல்கியின் பொன்னியின் செல்வனை இரசித்துக் கூறுவாள், இரசித்துக் கேட்போம். வந்தியத் தேவனையும், குந்தவியையும், அருண்மொழியையும் வானதியையும் நினைத்து நினைத்து சிரிப்போம். மரணத்தின் தீவிரம் புரிந்ததும் இந்த பருவம் தான். சாரதாவின் அப்பாவிற்கு கேன்சர் என்று ஒரு முறை அவள் வீட்டிற்கு சென்றிருந்தோம். சில நாள்கள் கழித்து அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதைக் கனமாக்கியது. “இந்த வருஷம் எங்க வீட்ல நெல்லி நிறைய காய்த்தது... ஏதோ நடக்கும்னு தெரியும்” என்று அவள் கூறியது இன்னும் ஒலிக்கிறது. இப்பொழுதும் தோட்டத்தில் நெல்லியோ மல்லியோ நிறைய காய்த்தால், பூத்தால் மனதுள் திகில் குடியேறும்.

ஒழுங்காக படித்துக் கொண்டிருந்த உமா மகேஸ்வரி காதல் என்று ஓடிப்போனாள். ஒரு மாதம் கழித்து கணவனிடம் அடி உதை வாங்கிக் கொண்டிருந்தாள். சுமதியும் காதலனுடன் ஓடிபோய் விஷம் குடித்தாள். காதலன் இறந்துவிட, அவன் போட்ட 7 பவுன் சங்கிலியைத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பழையபடி சிரித்து வளைய வந்தாள். இருவரின் இந்த கதைகள் காதல் என்பது ஒரு க்ரேஸ் என்ற என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.

பத்தாம் வகுப்பில் மார்க்‌ஷீட் வாங்கிவிட்டு அண்ணன் கல்யாணத்திற்கு ஊருக்கு சென்று விட்டேன். வருவதற்குள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கும் நாள் கடந்துவிட்டதால் இடம் இல்லை என்று சொல்லிவிட, அரசு பள்ளியில் இருந்தவளை கான்வெண்ட்டில் சேர்த்து விட்டனர். தாவணியில் சென்று கொண்டிருந்தவள் ஸ்கர்ட் & ப்ளவுஸ் என்று மாறியது வித்யாசமாக இருந்தது. சுற்றி எல்லோரும் ஆங்கிலத்தில் பேச, நான் ஒரு தனி தீவாக உணரத்தொடங்கினேன். மெல்ல என்னுள் தாழ்வு மனப்பான்மை புகுந்தது. (இன்று வரை அது ஏதேனும் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு திடீரென்று உறக்கம் கலைந்து எழும் :-)) நாகலஷ்மி என்ற ஆங்கில ஆசிரியை அதை உணர்ந்து என்னை வெளியே கொண்டுவர முயற்சித்தார். எனக்கென சின்ன நட்பு வட்டம் கிடைத்தது சற்றே ஆறுதல். என்றாலும் மிகுந்த மன அழுத்தம் கொண்ட நாட்களும் அதுவே. அடிக்கடி உண்டியல் காசு பஸ் செலவுக்கும், அப்பாவின் மோதிரம் ஸ்கூல் பீஸுக்கும் மாயமாகும் வேளையில், என் உடல் நலக்குறைவால் மிகவும் மனம் வருந்திக்கொண்டிருந்த பெற்றோரிடம் பள்ளி பிடிக்கவில்லை என்று சொல்லாது தோட்டத்தில் இருளிடம் என் கண்ணீரைப் பகிர்ந்து கொண்டேன்.

இதோ முடிந்துவிடும் பள்ளிபடிப்பு என்று இருந்த வேளையில், கல்லூரியிலும் பெரும்பாலோர் ஹாஸ்டலராக இருக்க, நட்பு வட்டம் பெரிதாக இல்லை. ஆண்/பெண் நட்பின் எல்லைக்கோடு பற்றி கேள்விகளும் பதில்களும் எனக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. கிட்டதட்ட கான்வெண்ட் போல் தான் என்றாலும் சில நட்புக்களால் மனம் சற்றே தெளிவாக இருந்தது. எல்லா வேளைகளிலும் எனக்கென்ற முகம் “படிப்பு” என்று மட்டுமே இருந்தது. பெரும்பாலும் பேசியதில்லை. அமைதியான பார்வையாளராக இருந்துள்ளேன். ஆனால் எனக்குள் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. கவிதைகள் காகிதங்களில் எழுதப்பட்டு கசக்கி எறியப்பட்டன. (கற்பனை தான் எத்தனை சுகம்... கண்ணாடி மாளிகை என்றாலும் கற்பனை தான் எத்தனை சுகம்) தாழ்வு மனப்பான்மையை விரட்டி மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சிகள் நடந்தன. கல்லூரி இறுதியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் கூட, தன்னம்பிக்கை என்பது சென்னையில் வந்து வேலை செய்ய ஆரம்பித்த பின் தான் வேரூன்றியது. உற்சாகம், விளையாட்டு எல்லாம் மீண்டும் என்னிடம் குடிவந்தது. உடல்நலமும் மேம்பட்டது. தோழி பாரதியின் உற்சாகமான நட்பு மிக முக்கியமானது.

இன்று யாரேனும் “you are aggressive", "talkative" , “டீச்சரா இருந்திருப்பீங்களோ” என்று கூறும் பொழுது இருளில் கரைந்த அந்த கண்ணீர்க்கணங்களைப் எண்ணி சிரிக்காது இருக்க இயலவில்லை. வெகு நாட்களாக மனதில் கனத்துக் கிடந்த பதின்மம் பற்றி கூற அழைத்த அமித்து அம்மாவிற்கு நன்றி.

Wednesday, February 10, 2010

நினைவு அஞ்சலி

படிக்கப்படாத புத்தகங்கள்
புரட்டிக் கொண்டே இருக்கின்றன
மனதின் பக்கங்களை...

தோட்டத்துச் செடிகள்
பரப்பிக் கொண்டே இருக்கின்றன
நினைவுகளின் வாசத்தை...

வீட்டுச் சுவர்கள்
விளம்பிக் கொண்டே இருக்கின்றன
ஏதேனும் ஒரு நினைவை...

நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?


உருண்டோடி விட்டன இரு வருடங்கள் மாமா மறைந்து... கடைசியாக தொலைபேசியில் தான் பேசினேன். அப்பாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது குழந்தைகளைப் பெற்றோர் உதவியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாமா குழந்தைகளைக் கவனிக்க வரட்டுமா என்றார். ஊர் விட்டு ஊர் அலைய வைக்க வேண்டாம் என்று, நான் சமாளித்துக் கொள்வேன் என்றேன். அப்பொழுதும் விடவில்லை , "அப்பாவால் சாமானெல்லாம் வாங்கிப் போட முடியாதில்லையா... நான் வந்து பார்க்கிறேன்" என்றார். "இல்லை மாமா நீங்கள் அலைய வேண்டாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்" என்றேன். இப்பொழுது நினைத்தாலும் அந்த அன்பில் மனம் நெகிழும்.

Monday, February 1, 2010

மயிலிறகோ நினைவுகள்

தைப்பூசம்.... ஊரில் குலதெய்வ வழிபாடு. பெளர்ணமி இரவில் விளக்கு பூஜையும், மறு நாள் சிறப்பு பூஜையும் என்று வருடா வருடம் இருக்கும். நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் பழநியில் இருந்து எடுத்து வைத்த பிடி மண்ணாக கம்பந்தட்டைகளுக்கு கீழ் இருந்த முருகன், இன்று கோயிலும் மண்டபமுமாக வளர்ந்திருந்தார். சாத்தூரில் இருந்து சில கி.மீ தொலைவில் பனையடிப்பட்டியில் கோயில் அமைந்திருக்கிறது. வழியில் சாலையில் சோள/கம்பந் தட்டைகளைப் போட்டு, வண்டி ஏறி செல்ல செல்ல தான்யங்களை உதிர்த்துக் கொள்கிறார்கள். ஆங்காங்கே தான் பசுமை தெரியும்... மற்றபடி வெய்யிலின் உக்கிரத்தை ஏற்றுவது போல மஞ்சள் நிறத்தில் சோளக்கதிர்களும் கம்பங்கதிர்களும்...




திருமணமான உடன், குழந்தைகள் மொட்டை என்பது தவிர இந்த வழிப்பாட்டிற்கு பரபர சென்னையில் இருந்து செல்வது என்பது எங்களுக்கு இயலாதது தான். எப்பொழுதும் அத்தையும் மாமாவும் தவறாமல் செல்வார்கள் எங்களுக்கும் சேர்த்து. சென்ற முறை, நினைவில் மட்டுமே மாமா தங்கியதால் செல்ல அனுமதி இல்லை. இந்த முறை அத்தைக்கும் அலைச்சல் இயலவில்லை என்று எப்பொழுதும் செல்பவர்களைத் தவிர குடும்பத்தினர் எல்லோரும் சென்றிருந்தோம். எப்பொழுது நாங்கள் சென்றாலும் இதை செய், அதை செய் என்று அத்தை மாமா சொல்ல ஈடுபாட்டுடன் செய்வோம். இந்த முறை இருவரும் இன்றி உற்றாரும் உறவினரும் இருந்தாலும் அன்னியமாக இருந்தது வழிபாடு; பெரியவர்கள் இருக்கும் பொழுதை விட இல்லாத பொழுதுதான் அவர்களின் சிறப்பு அழுத்தமாகப் புரிகிறது... எத்தனை வயதானாலும்... சில நினைவுகள் மயிலிறகாக மனதை வருடினாலும் மீண்டும் வராத காலங்கள் என்று மனதையும் பாரமாக்கும்.




முருகனைக் காண்பதை விட மயிலைக் காணத்தான் குழந்தைகள் ஆர்வத்துடன் இருந்தார்கள். பூஜை, அன்னதானம் முடிந்ததும் மயிலைத் தேடி குயில்களுடன் கிளம்பினோம். முட்புதர்களும் பார்த்தீனியமும் மண்டிக்கிடந்த நிலத்தில் நடந்தோம்.




“புளியந்தோப்பில் மயில் அடையும்” என்றார் ஆடு மேய்ப்பவர். குயிலொன்று கால்கள் பின்ன “புலி வருமா” என்று தயங்கியது. அது ரசத்துக்கு போடும் புளி என்று தெளிவு படுத்தி நடந்தோம். ஆங்காங்கே மயில் இறகுகள் மழலைகளுக்காக இறகை உதிர்த்து சென்றிருந்தன.



கிள்ளைகளின் முன் ஓடி மறைந்தன இரு மயில்கள்; வானில் பறந்து மறைந்தது மற்றொரு மயில். நான்கைந்து புளியமரம் தோப்பாக நின்றது. மயிலைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் இறகுகள் சேகரித்தனர் குழந்தைகள். மயிலிறகு மட்டுமல்ல... பருந்து, குயில் என்று எல்லா பறவைகளின் இறகுகளும் கோலமிட்டிருந்தன மழலைகளுக்காக. உறவோடு கூடி திண்ணையில் ஆடி, ஆற்றில் நீராடி என்ற காலங்களைத் தர இயலாவிட்டாலும் மயிலிறகைத் தேடிய பொழுதுகள் இதமாக இருக்குமா அவர்கள் மனதில்?



சாத்தூரில் சேவும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கினோம். முன்பெல்லாம் ஓலைப்பெட்டியில் மணமுடன் வரும்... பின் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு வரும்... இப்பொழுது ப்ளாஸ்டிக் கவர் தான்...அதனால் தான் ருசி குறைந்துவிட்டதோ?

மெலிதான பாரம் மனதில் தங்க முடிந்தது கோயில் பயணம்.