என் மேகம் ???

Showing posts with label குட்டீஸ் அறிவுரை. Show all posts
Showing posts with label குட்டீஸ் அறிவுரை. Show all posts

Thursday, November 20, 2008

பூனைக்கு மணி கட்டுவது யாரோ?




என் பெண் வகுப்பில் ஒரு பெண் கொஞ்சம் தகராறு செய்வாள். அவளைப் பற்றி ஏதேனும் இவள் கூறிக் கொண்டிருப்பாள். பிரிவதும் சேர்வதும் தானே குழந்தைகள்? பொதுவாக இவள் மனதை மிகவும் பாதிக்காத விஷயம் நடக்கும் வரை நான் இவள் கூறுவதை கேட்பதோடு நிறுத்திக் கொள்வேன். அவள் ஏதேனும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வேன். அன்று என்னிடம், தனது ஆசிரியை ஒருவர் என்னை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறினாள். அந்த பெண் வராத ஒரு நாள் அவளைப் பற்றிய புகார்களை வகுப்பு மாணவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே சில பெற்றோரிடம் பேச அந்த ஆசிரியை விருப்பப்பட்டார்.

நான் அவளிடம், முதலில் நான் அவள் காப்பாளரிடம் பேசி விட்டு பின் தேவை என்றால் , ஆசிரியையிடம் வருவதாகக் கூறினேன். பின், "பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள்" போல நீங்கள் அந்த பெண் இல்லாத பொழுது பேசுகிறீகள். அவள் வந்தால் எல்லா புகாரும் மறைந்து விடும். இதற்கு நான் வேறு வர வேண்டுமா என்றேன்?

என் பெண் கூறிய பதில் அழகாக இருந்தது. அவள் டி.வியில் பார்த்தாளாம், இப்படி பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள் சிதறி ஓடிவதை. பின்பு எலிகள் என்ன செய்யும்? பூனையிடம் சென்று "இந்தா உனக்கு ஓர் அழகான பரிசு" என்று மணியைக் கொடுக்குமாம். பூனையும் அதை விரும்பி அணிந்து கொள்ளுமாம். இது தான் புது முறையாம். எனவே, அவள் அப்பிரச்னையை அவளே பார்த்துக் கொள்வதாகக் கூறினாள். அவள் "நான் பார்த்துக் கொள்கிறென்" என்று கூறுவதைக் கேட்க இனிமையாக இருந்தது. ம்.. அவளது தனித்தன்மை வளர்வதை உணர முடிந்தது.

எனக்கு ஒரு நல்ல கதையும் தத்துவமும் கிடைத்தது.

Wednesday, November 19, 2008

இன்று என்பது பரிசு

ம்ம்... என் பெண் வளர்கிறாள் என்று பல விஷயங்களில் தெரிகிறது. அப்படி ஒண்ணு தான், நமக்கு கிடைக்கும் அறிவுரைகள். உண்மையில் இந்த வயதில் (10) இவ்வளவு யோசிக்கிறார்களே என்று ஆச்சரியமாக உள்ளது. அன்று, இரவு நேரங்கழித்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். பல இடங்களில் கல்லூரி படிக்கும் வயது பெண்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.

நான்:
ம்.. நீ பெரியவள் ஆனால் எப்படி இருக்கப் போறியோ?
அவள் : அம்மா, நம்மகிட்ட மூணு இருக்கு, "நேற்று, இன்று நாளை". நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். நேற்று என்பது முடிந்து விட்டது, அதனால் அதை பத்தி யோசிக்க வேண்டாம். இன்று தான் இப்ப நம்மகிட்ட இருக்கு , அதனால் அதைப்பத்தி மட்டும் யோசிக்கணும்

நான் : அப்ப நாளைக்கு என்ன லன்ச் தருவனு, ஏண்டி இன்னிக்கே கேக்கற?
அவள்: நாளைக்கு என்ன பண்றதுனு நிச்சயம் ப்ளான் பண்ணுவ, அதனால் கேட்கிறேன். இது ரொம்ப கிட்ட இருக்கு , அதனால் இதைப் பத்தி பேசலாம்.

ரொம்ப தெளிவாத் தான் இருக்காங்க. இவள் என்று இல்லை, என் தோழியின் பெண்ணும் ஏறக்குறைய இவள் வயது தான். அம்மா எதைப் பற்றியாவது கவலைப்பட்டால் "ஏம்மா இதுக்கெல்லாம் கவலைப்படற... இன்னிக்கு நடக்கறதை யோசி" என்று கூறுகிறாள்.

மறுநாள் என் பெண் வந்து இன்னொரு பொன்மொழியும் உதிர்த்து விட்டு போனாள் "நேற்று என்பது வரலாறு, நாளை என்பது புதிர், இன்று என்பது பரிசு... பரிசை அனுபவி" (Yesterday is a history, Tomorrow is a mystery, Today is Present ... Enjoy the present)

உண்மைதானே??