
என் பெண் வகுப்பில் ஒரு பெண் கொஞ்சம் தகராறு செய்வாள். அவளைப் பற்றி ஏதேனும் இவள் கூறிக் கொண்டிருப்பாள். பிரிவதும் சேர்வதும் தானே குழந்தைகள்? பொதுவாக இவள் மனதை மிகவும் பாதிக்காத விஷயம் நடக்கும் வரை நான் இவள் கூறுவதை கேட்பதோடு நிறுத்திக் கொள்வேன். அவள் ஏதேனும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வேன். அன்று என்னிடம், தனது ஆசிரியை ஒருவர் என்னை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறினாள். அந்த பெண் வராத ஒரு நாள் அவளைப் பற்றிய புகார்களை வகுப்பு மாணவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே சில பெற்றோரிடம் பேச அந்த ஆசிரியை விருப்பப்பட்டார்.
நான் அவளிடம், முதலில் நான் அவள் காப்பாளரிடம் பேசி விட்டு பின் தேவை என்றால் , ஆசிரியையிடம் வருவதாகக் கூறினேன். பின், "பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள்" போல நீங்கள் அந்த பெண் இல்லாத பொழுது பேசுகிறீகள். அவள் வந்தால் எல்லா புகாரும் மறைந்து விடும். இதற்கு நான் வேறு வர வேண்டுமா என்றேன்?
என் பெண் கூறிய பதில் அழகாக இருந்தது. அவள் டி.வியில் பார்த்தாளாம், இப்படி பூனைக்கு மணி கட்ட விரும்பும் எலிகள் சிதறி ஓடிவதை. பின்பு எலிகள் என்ன செய்யும்? பூனையிடம் சென்று "இந்தா உனக்கு ஓர் அழகான பரிசு" என்று மணியைக் கொடுக்குமாம். பூனையும் அதை விரும்பி அணிந்து கொள்ளுமாம். இது தான் புது முறையாம். எனவே, அவள் அப்பிரச்னையை அவளே பார்த்துக் கொள்வதாகக் கூறினாள். அவள் "நான் பார்த்துக் கொள்கிறென்" என்று கூறுவதைக் கேட்க இனிமையாக இருந்தது. ம்.. அவளது தனித்தன்மை வளர்வதை உணர முடிந்தது.
எனக்கு ஒரு நல்ல கதையும் தத்துவமும் கிடைத்தது.