என் மேகம் ???

Friday, October 24, 2008

டெஸ்க்டாப் நிலவுகள்


என்னை அழைத்த தீஷு அம்மாவிற்கு நன்றி.

என் டெஸ்க்டாப்பிற்கு ஒளியூட்டுவதும்
என் கண்ணிற்கு குளிரூட்டுவதும்
என் வானத்தின் நிலவுகள் தான்




நான் அழைக்க விரும்புவது:

ஜீவன்
இராமலஷ்மி மேடம்
புதுகை தென்றல்

ஒரு காலை பொழுது

மண்ணின் மணத்தோடும்
மழையின் ஓசையோடும்
என்முன் மலர்ந்தது ஒரு நாள்

நறுமணத்தை முகர்ந்து
மெல்ல அனுபவிக்கும் இயல்புடன்...
இந்நாளை ருசிக்க விழைகிறது மனம்.

அதிகாலை மலர்ந்த மலரில்
உறங்கும் பனித்துளி போல்
கனவுகளின் இனிய தாக்கத்தில்
புன்னகை உன் முகத்தில் உறங்குகிறது

புன்னகை கலைக்காது உன்
உறக்கத்தை கலைக்க யோசிக்கிறேன்...

மென்மையாக முத்தமிட்டு
புன்னகை கலையாது துயிலெழுப்பி
கதை பேசி காலை கடன் முடித்து
பசித்த பின் ருசித்து உணவு உண்டு

எலி வாலா அணில் வாலா
என்று கூரையில் பார்த்து சிரித்த
என் பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து
முத்தமிட்டு வழியனுப்ப யோசிக்கையில்

அவசரமாக நினைவு வருகிறது
பள்ளி பேருந்தின் நேரம்
மென்மையான முத்தத்துடன் மட்டுமே
தொடங்கியது அந்த பரபரப்பான காலை...

Wednesday, October 22, 2008

தித்திக்கட்டுமே தீபாவளி!!!!

என் கணவரது அலுவலகத்தில், தீபாவளி நெருங்கும் வேளையில், ஆதரவற்ற சில குழந்தைகளின் விருப்பங்களைக் கண்டறிந்து, நிறைவேற்ற விரும்புவர்கள் செய்யலாம் என்று ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்கள். அவர்கள் விருப்பப் பட்டிருந்ததெல்லாம் டிரஸ், வாட்ச், பொம்மை, பள்ளிப் பை, ஜியாமெட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களே. நல்லதொரு முயற்சியாகத் தெரிந்தது. பகிர்ந்து கொள்ளுவது சந்தோஷத்தை பன்மடங்காக்கும். எனவே இந்த தீபாவளியை நாமும் இன்னொருவரின் சின்ன மகிழ்ச்சிக்காக நம்மால் முடிந்த அளவில் செலவிட்டால், தித்திக்குமே தீபாவளி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Friday, October 17, 2008

அன்புத் தொல்லை

பெண் பிள்ளைகள் என்றாலே அப்பா மீது தனிப்பாசமும் உரிமையும் இருக்கும். எங்க வீட்லயும் இதே கதை தான். ஆனாலும் அப்பப்ப குட்டீஸ் எல்லாம் அம்மா பக்கம் சாய்ந்து "மகளிர் அணி" உருவாக்கி கலாய்ப்போம்.

போன வாரம் , ஊரைச் சுத்திட்டு வந்து மதியம் நல்லா படுத்து தூங்கிட்டு இருந்தோம். பெரியவங்க தூங்கினால் சின்னவங்க தூங்கறது மரியாதை இல்லைங்களே, அதனால் என்
பொண்ணுங்க முழிச்சிட்டு விளையாடிட்டு இருந்தாங்க...திடீர்னு குட்டிப் பெண்ணின் அழுகை.

விஷயம் என்ன என்றால், பொண்ணு எதுக்கோ அப்பாவை எழுப்பி இருக்காள். அப்பா திடீரென எழுப்பப்பட்டதால் மிரண்டு போய் ஒரு கத்து கத்த, பொண்ணு டென்ஷன் ஆய்ட்டா... சும்மாவா... அம்மா திட்டலாம், அப்பா திட்டலாமா?

"ஏண்டா செல்லம் அப்பாவை எழுப்பின, அம்மாவை எழுப்பக் கூடாதா?", நான்
"நீ தூங்கிட்டு இருந்தம்மா. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எழுப்பலை", குட்டிப்பொண்ணு

ஆஹா... இது அப்பா மேல உள்ள உரிமையா?, அம்மா மேல உள்ள பாசமா?... என்ன லாஜிக்கோ? ஒண்ணும் புரியல. ஆனால் சிரிப்பு வந்தது.

Wednesday, October 15, 2008

புரிந்து கொள்வாயா பெண்ணே?

எனக்கு கிடைக்காதவை, உனக்கு கிடைக்க வேண்டும்
என்று கனவு கண்டதில்லை, ஆனால் நடந்தது...

மகிழ வேண்டிய தருணத்தில், மனதோரம் ஒரு தவிப்பு
எனக்கு கிடைத்தவை, உனக்கு கிடைக்கவில்லை பெண்ணே!!!

தெருப்புழுதியில் விளையாடி, அடுத்த வீட்டில் உறவாடி
நான் கொண்ட இன்பம் எல்லாம்
கணினி விளையாட்டும், தொலைக்காட்சி பெட்டியும் தந்திடுமா?


உன் விடுமுறை என் விடுமுறை அல்லாததால்
உற்றாரோடு அளவளாவும் சுகத்தை
வார இறுதிக்குள் சுருக்கிவிட்டேன்....

களைப்புடன் வீடு திரும்பும் தாயை
கன்னம் நனைய, முத்தமழையில் வரவேற்கும் உனக்கு

பள்ளிவிட்டு வருகையில் அன்பாக வரவேற்று
ஆசை முத்தம் பல தந்து, இனிமையாய் சிற்றுண்டி
அன்னை தரும் சுகத்தை தரவில்லை நான்.

அம்மா, மனைவி, மருமகள், மகள், என்ற பல அடையாளங்களில்
என் அடையாளத்தை இருத்திக் கொள்ளும் போராட்டத்தில்
நீ இழப்பதை ஈடு செய்வேனா கண்ணே?

என் அன்னை கட்டிக்கொண்ட நெருப்பை
இப்பொழுது நான் உணர்வது போல்
உன் அடையாளங்களை நீ தேடும் பொழுது
என்னைப் புரிந்து கொள்வாயா பெண்ணே?

சினிமா - கேள்வி பதில்

சினிமா விளையாட்டில் சேர்த்துக் கொண்ட சந்தனமுல்லைக்கு நன்றி. சின்ன வயசில சினிமான்னா, பெரியவங்க கூட்டமெல்லாம், சின்னவங்களை உறங்க வைத்து விட்டு செகண்ட் ஷோ போவது என திட்டமிடுவார்கள். இது தெரிந்து நாங்கள்லாம் திட்டம் போட்டு விழித்தும் , கண்ணசந்த வேளையில் மாயமாக பெரியவர்கள் மறைந்து விடுவார்கள். என்றாலும் சில ஹிட் படங்கள் கண்ணில் காட்டப்படும். டி.வி வந்த பிறகு நிறைய பார்த்த்து ரீஜனல் ஃபிலிம்ஸ் தான். கூட்டத்துக்கு பயந்து சினிமா போவது குறைந்த பொழுது, ஈ.சி.ஆரில் வீடு அமைய, பிரார்த்தனாவும் மாயாஜாலும் வா வா என்று அழைக்க, மீண்டும் ரெகுலர் சினிமா விசிட்டர் ஆகிவிட்டேன். ஜம்மன்று மெத்தை விரித்து கணவரும் குழந்தைகளும் துயில, இயற்கை காற்றில் சினிமா பார்ப்பதும் நன்றாகத் தான் உள்ளது.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நினைவு தெரிந்து ஸ்கூலில் "காந்தி" படம் கூட்டிட்டு போனது புகை போல் நினைவில் உள்ளது. எல்லாம் வரிசையாக் போய் இருக்கையில் அமர்ந்தது (புகையில்) தெரிகிறது. வேறொன்றும் நினைவில் இல்லை. திகிலோடு பல் டாக்டரிடம் பல்லைக் காட்டிவிட்டு அதை விட திகிலானது "நூறாவது நாள்" படம். அப்புறம் "the car" பார்த்து இராத்திரி எல்லாம் ஹெட்லைட் துரத்தினது... ஆனா எப்பவும் இருந்த கேள்வி, "இவங்க எல்லாம் எங்கிருந்து வராங்க எப்படி போறாங்க...ரேடியோக்குள்ள இருக்கிற மாதிரி ஸ்க்ரீனுக்குள்ள இருப்பாங்களோ?"

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
"சரோஜா" - இந்த ஞாயிற்றுக்கிழமை தான் (சுற்றத்துடன் செல்லும் ஜாலிக்காக) இரண்டாவது முறையாகப் பார்த்தோம். சீரியசாக ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ரிலாக்ஸ் செய்யும் காமெடியை இரசித்தோம்.

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?சமீபத்தில் டி.வி.யில் ""பஞ்ச தந்திரம்" படம் பார்த்தேன். "பின்னாடி என்ன இருக்கு" போன்ற காமெடிகளை மீண்டும் மீண்டும் இரசித்து பார்த்தேன். 3 மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தால் தலை வலிக்கிறது. எனவே வீட்டில் உட்கர்ந்து படம் பார்க்கக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்...

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?காலேஜ் கட் அடித்து எல்லாரும் "கிழக்கு சீமையிலே" பார்த்த பொழுது "ஏனிந்த கொலை வெறி" என்று மனம் கனத்தது.
"கன்னத்தில் முத்தமிட்டால்..." தாயாகவும், மனைவியாகவும் . சில காட்சிகளை மிகவும் இரசித்த படம்.
"பருத்தி வீரன்" - கிளைமாக்ஸ் பார்த்து இனிமேல் இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு "நோ" என்று உறுதி எடுக்க வைத்த படம்.

ஏனோ கனமான கதையுள்ள நாவல்களை மீண்டும் படிக்க விழைவது போல் சினிமாவை என்னால் ஏற்க முடியவில்லை. கவலை மறந்து சிரிக்க வைக்கவே விரும்புகிறேன்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?சினிமா தான் அரசியலுக்கு நுழைவாயில் போலிருக்கும் இன்றைய நிலைமை...

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?வாரமலர் "துணுக்கு மூட்டை" கிசுகிசு வாசிச்சு துப்பறிய முயற்சிப்பேன். ஆ.வி. படிச்சுட்டு லஞ்ச் டைம்ல டிஸ்கஸ் செய்வேன். ஆனால் சினிமா செய்திக்குனு தனியா வாங்கி வாசிக்க மாட்டேன்.

தமிழ் சினிமா இசை?
குழந்தைகள் இரசிப்பதால், அவர்களோடு சேர்ந்து குத்து பாட்டு இப்ப பிடிக்குது. மனதை கொள்ளை கொள்ளும் "மெலடி" ரொம்ப பிடிக்கும். எதுவாக இருந்தாலும் வார்த்தைகளோடு இரசிப்பதில் தான் எனக்கு சுகம். இப்ப பண்ற ரீ-மிக்ஸ் எல்லாம் ஒரிஜனலை மறக்க வைப்பதால் பிடிக்கவில்லை.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் எப்பொழுதாவது இடம் உண்டு. "தாரே ஜமீன் பர்..." நெஞ்சை நெகிழ வைத்தது.

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?வெள்ளித்திரை மட்டும் தாங்க தொடர்பு. இந்த லெவல்ல இருந்தாலே அது நல்லாதான் இருக்கும்.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?அதுக்கென்னங்க... அமோகமா இருக்கும். அப்பப்ப நல்ல படம் வரும். வரிவிலக்கு இல்லைனா தமிழ் படம்னு சொன்னால் தான் தமிழ் பட டைட்டில்னு தெரியும். இன்னும் கொஞ்ச நாள்ல வரிவிலக்கு கொடுத்தா தான் பாட்டெல்லாம் புரியும், அப்புறம் வரிவிலக்கு கொடுத்தால் தான் தமிழ்ப்படம்னு புரியும். 70 வயசு ஹீரோ 15 வயசு பொண்ணோட டூயட் பாடிட்டு 17 வயசு பொண்ணை அக்கானும் 20 வயசு பொண்ணை அம்மானும் கூப்பிடுவாங்க. சூப்பர் மேக்கப், சூப்பர் நடிப்புனு புகழுவோம்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு நோ ப்ராப்ளம். எத்தனை நல்ல புத்தகங்கள் உள்ளன வாசிப்பிற்கு? பிள்ளைங்கள கூட்டிட்டு போகலாமானு கவலைப் பட வேணாம். எல்லாம் நன்மைக்கே...
தமிழர்கள்... கில்லாடிங்க அவங்க... வேற பொழுதுபோக்கை உருவாக்கிடுவாங்க...


நான் யாரை அழைப்பது? ஏற்கனவே நிறைய பேர் எழுதிட்டாங்க போல இருக்கே. அதனால் இஷ்டம் இருக்கறவங்க எடுத்து எழுதுங்க. நன்றி..

Monday, October 13, 2008

என்னுலகம் நீயானாய்...

பொருள் தேடும் உலகத்தில்
பொருள் விளங்கா வாழ்க்கையில் - அரும்
பொருளாக வந்து - வாழ்விற்குப்
பொருள் தந்தவளே...

கோபம் கொண்டு நான் சீறினாலும்
கொஞ்சிப் பேசி சிரித்து
பஞ்சாய் என் கோபம் பறக்கையிலே
தஞ்சம் அடைந்தேன் உன் சிரிப்பினிலே...

சொன்ன சொல் கேளாது
சொன்னதையே சொல்லும்
உன் கிள்ளைப் பேச்சினிலே
என் பிடிவாதம் மறந்தேன் செல்லமே...

என் நெஞ்சோடு சாய்ந்து
நான் மட்டும் உன்னுலகமென
துன்பமின்றி நீ உறங்கையிலே
என்னுலகம் நீயானாய்...

Wednesday, October 8, 2008

புதுவரவுக்கொரு பூச்செண்டு

பூத்துக் குலுங்குகிறது அக்டோபர்
பூமகனே உன் வரவால்...

வளர்பிறையில் வந்தவனே
வளமோடு வாழ்ந்திடுவாய்!!

அத்தை என அழைக்க
அருமையாய் வந்தவனே...

புரட்டாசியில் பிறந்தவனே
புகழோடு வாழ்ந்திடுவாய்!!!

மென்னகை புரிபவனே
மேன்மையோடு இருந்திடுவாய்!!!

அத்தை அடிக்க மாட்டேன்
அரளிப் பூச்செண்டாலே

அன்பாகத் தந்திடுவேன்
அழகான பூச்செண்டு...

பூமகனை ஈன்றெடுத்த பூவைக்கும்
பூரித்து நிற்கும் புதுத்தந்தைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(அக்டோபர் 1-ல் இவ்வுலகில் அடியெடுத்து வைத்த குட்டிப்பயலுக்கு அத்தையின் வாழ்த்து)