என் மேகம் ???

Tuesday, April 27, 2010

நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா?

கதை சொல்லிகள் பற்றிய பதிவுகள் படிக்கும் பொழுதே மனதை நிறைத்து நின்றனர் அம்மாவும் மாம்மையும். குழந்தை பருவத்தில் இருந்து வாழ்க்கை முழுக்க அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் கதைகளை... கதை சொல்லிகளிடமிருந்து.

மாம்மை .... கதை என்றவுடன் இவர் நினைவு தான் மனதை நிறைக்கின்றது. மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி. ஏதேதோ கதைகள் கூறுவார்... "பொன்னேங்கர தாசி கதை" , செவ்வாய்க்கிழமை விரதக் கதை , இலச்சுமி கதை , அவ்வை கதை, விக்ரமாதித்யன் கதை, இராமன் கதை, பாண்டவர் கதை, என்று பல கதைகள் அடக்கம். அவர் கூறும் பாம்பு கதைகள் சுவாரசியமானவை... சுடுகாடு வரை வந்து எட்டிப்பார்க்கும் கொம்பேறி மூர்க்கன், கண்ணைக் கொத்தும் பச்சை பாம்பு, பழி வாங்கக் காத்திருந்து திருமணத்தன்று பூவிலிருந்து தீண்டிய பூநாகம் என்று சுவாரசியங்கள் நிறைந்தவை. அது போக அவ்வப்பொழுது "கொழுக்கட்டையை" "அத்திரி பாச்சா" என்று சொல்லி மனைவியின் உடம்பை "கொழுக்கட்டை" போல் வீங்க வைத்த முட்டாள் மாப்பிள்ளை, மாவுக்கு ஆசைப்பட்டு ஆட்டுரலில் தலை விட்ட மாப்பிள்ளை என்ற நாடோடிக் கதைகளும்... சில கதைகளே என்றாலும் எல்லா கதைகளும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது... இன்றும் நினைத்தால் இனிக்கும் கதைகள். குழந்தைகளுக்கு நன்கு கதை சொல்வதாக நினைத்துக்கொள்ளும் எனக்கு, யோசித்துப்பார்த்தால் அவரது திறமையில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை என்றே தோன்றுகிறது.

ஐயம்மை... இவர்களும் கதை சொல்வார்கள்... திகிலூட்டும் பேய்க்கதைகள். சுள்ளி பொறுக்க சென்ற பொழுது நடுக்காட்டில் அழைத்த முனியும், கன்னிப்பெண்ணைப் பிடித்தாட்டிய பேயும், யாருக்கு உடல் நலமில்லை என்றாலும் "எல்லாம் அவளால் தான்" என்று இறந்து போன யாரோ ஒருவரையும் பற்றியும் கூறி திகிலூட்டுவார். திகிலாக இருந்தாலும் கதை கேட்டுவிட்டு பின்னர் பயந்து கொண்டிருப்போம். இப்பொழுது சிரிப்பாக இருப்பது அப்பொழுது திகில் தான்.

அம்மா... எனக்கு அம்மா சொன்ன கதைகள் நினைவில் இல்லை. ஆனால் அம்மா என் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டுவது கண்டு தான் நான் கதை சொல்லக் கற்றுக் கொண்டேன். நாய், பூனை காக்கா என்று எதையாவது வைத்து அவர் கதை கூறும் சுவாரசியத்தில் குழந்தைகள் இரண்டு வாய் அதிகம் உண்ணுவர். டி.வி.யில் ஒருமுறை கதைசொல்லி ஒருவர் குழந்தைகளுக்கான கதை ஒன்றை அபிநயத்தோடு கூறிய பொழுது கதை சொல்வது என்பது ஒரு தனி கலை என்று தோன்றியது. இப்பொழுது என் இரு பெண்களும் அழகாகக் கற்பனை கலந்து கூறும் கதைகள் இனிமை... இனிமை... இனிமை...

அம்புலி மாமா, பாலமித்ரா, கோகுலம் , சிறுவர் மலர் மற்றும் படக்கதைகள் தந்த சுவாரசியங்கள் தனி ரகம். இன்றும் தேவதைக்கதைகளும், நாடோடிக் கதைகளும் மனதை மயக்குகின்றன. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த அந்த மாயா உலகிற்கு இட்டுச் செல்லும் கலை கதைசொல்லிகளுக்கு மட்டுமே கைவரும். "நிலவில் இருக்கும் முயலும்", "கடலுள் உப்பை இன்னும் சிந்தும் கருவியும்" என்று இன்னும் பாட்டி சொன்ன கதைகள் கூறும் பொழுது கதை சொன்ன முன்னோரும் கதையோடு நம்முடன் வாழ்கின்றனர்.

Friday, April 23, 2010

பானகம்

சமீபத்தில் "தோசா காலிங்" சென்றிருந்தேன். மெனுவில் "பானகம்" இருந்தது. விளக்கத்தில் "பனம்பழமும் கருப்பட்டியும் கலந்த பானம்" என்று குறிப்பு இருந்தது. குடித்துப் பார்த்தேன்... கருப்பட்டியின் சுவையுடன் சற்றே வித்யாசமாக இருந்தது.


சிறு வயதில் வீட்டில் விழா என்றாலும் சரி ஊர்த்திருவிழா என்றாலும் சரி... அண்டா நிறைய பானகம் கரைக்கப்பட்டு தம்ளர் தம்ளராக காலியாகும். இந்த பானகம் வெல்லம், புளி/எலுமிச்சை சாறு மற்றும் ஏலப்பொடி சேர்த்து செய்யப்பட்டது. இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

அதன் பிறகு நன்னாரி சர்பத் அந்த இடத்தைப் பிடித்தது. மஞ்சள் நிறத்தை விட சிவப்பு நிறம் தான் பிடிக்கும். அதைக் குடித்து வாய் சிவப்பதை இரசிக்கலாமே!!! எலுமிச்சை, சர்பத், தண்ணீர் ஐஸ்பார் என்று ஒரு பெரிய குண்டா நிறைய கரைத்தால்... குடித்துக்கொண்டே இருப்போம் கோடை வெயிலுக்கு. ”கண் மார்க்” சர்பத் என்று தேடி வாங்குவோம். நாக்கில் சிவப்பு நிறம் ஒட்டுவது போல் இன்றும் மனதோடு இருக்கும் ருசி அது. இன்றும் ஊருக்கு சென்றால் சர்பத் கடை தேடித்தான் கால்கள் ஓடும். தண்ணீருடன் ஒரு ருசி, சோடாவுடன் ஒரு ருசி என்று இன்றும் என்னுடைய all time favorite சர்பத் தான்.

அதன் பிறகு ரஸ்னா சீசன். பவுடராக ஒரு பாக்கட், சிரப்பாக ஒரு பாக்கட் என்று சற்றே வித்யாசமாக சுவையுடன் வரும் அதைக் கலப்பதே ஒரு தனி கலை. அந்த பவுடரையும் சர்க்கரையும் கரைத்து சிரப்பை சேர்த்து, துணியில் வடிகட்டி கான்ஸண்ட்ரேட் தனி கவனத்துடன் தயாராகும். அப்புறம் தண்ணீர் சேர்த்து, கடையில் இருந்து ஐஸ்பார்களை வாங்கி வந்து ரஸ்னா ரெடியானால் "ஐ லவ் யூ ரஸ்னா" என்று அந்த குட்டிப்பெண்ணை எண்ணியபடி நாமும் ருசிக்கலாம். இன்றும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் ருசி தனி.

சமீப நாட்களாக இந்த வேலை எல்லாம் கிடையாது... மிராண்டா, பான்டா, கோக் , பெப்ஸி என்று பெரிய பாட்டில்கள் வாங்கப்பட்டு தொண்டையை நனைக்கின்றன. இதன் ருசியும் தனிதான்... ஏனோ எனக்கு நாவில் ஒட்டாத ருசி...

Tuesday, April 20, 2010

அம்மாவின் பொய்கள்

அசோகமித்திரனின் "ஒற்றன்" நாவல் படித்தேன். அயோவா நகரில் உலகின் பல பகுதியில் இருந்து வந்து தங்கி கருத்துக்கள் பரிமாறிய எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை புனைகதையுருவில் இலேசான நகைச்சுவை இழையோட எழுதி உள்ளார். சுவாரசியமாக உள்ளது.

திடீரென ஒரு சந்திப்பில் கூடி இருக்கும் எழுத்தாளர்கள் அவரவர் மொழியில் பாட்டுப்பாட அழைக்கப்படுகிறார்கள். எல்லோரும் பாடுகிறார்கள்.

"என் அறையைப் பகிர்ந்த எழுத்தாளனிடம் நான் ஒரு இரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். "உனக்குத் தெரியுமா? நான் பாட்டேதும் பாடவில்லை, எங்கள் தமிழ் மொழியின் முப்பது எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டு பாடினேன்"

அவன் வியப்படைவதாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படி சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழி எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்"


"அம்மாவின் பொய்கள் " என்ற அத்தியாயத்தில் வந்த ஞானக்கூத்தன் கவிதை மிகவும் பிடித்தது.

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
அத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சென்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

–ஞானக்கூத்தன்


Monday, April 19, 2010

குழந்தை மனமும் பெரிய மனமும்

அன்று குட்டிப்பெண் காலையிலேயே மூட் அவுட். பின்னே? அவளது பிரிய தலையணை உறை எங்களால் தூக்கி எறியப்பட்டது. டிவி பார்க்கும் பொழுது, உணவு உண்ணும் பொழுது, படுக்கும் பொழுது, விளையாட்டுக்கு இடையில் என்று அந்த தலையணை உறை அணிவிக்கப்பட்ட தலையணை அவளுடன் தான் உறைந்து இருக்கும்.

அது படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல... வீடு முழுதும் இழுக்கப்பட்டு அழுக்காகும்... திடீர் என நாங்கள் கவனித்து துவைத்து காயப்போட்டால், அது காய்ந்து வரும் வரை இவள் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை. எவ்வளவு துவைத்தாலும் அழுக்காகத் தெரிகிறது என்ற பின் தான் தூக்கி போட முடிவு செய்தோம். அவளுக்கு தெரியாமல் செய்வதாக செய்தாலும், அவளுக்கு தெரிந்துவிட்டது. அது தான் காலை நேரத் தலையாயப் பிரச்னை....

ம்... நான் கூட சிறு வயதில் அம்மா தூக்கிப் போட்ட எனது ஆரஞ்சு பாவாடை சட்டை நினைத்து நிறைய இரகளை பண்ணி இருக்கிறேன். அது இப்பொழுதும் என்னுள் ஒரு ஏக்கப் பெருமூச்சைக் கொண்டு வரும். இன்று நான் கவனித்துப் பார்த்தால்... இதே போல் தான் மோகிக்கு மெல்லிய துணி, நிவிக்கு மிக்கி மவுஸ் போர்வை, அபிக்கு நூல்கள் தொங்கும் துணி என்று ஏதேனும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது.

வேறு விஷயங்கள் நுழைய நுழைய இந்த குழந்தைத்தனமான ஈர்ப்புகள் மறைகின்றனவா?.... இல்லை யோசித்துப் பார்த்தால்... தீங்கில்லா சில குழந்தைதனங்கள் என்று மறையும் என்றெண்ணியபடி கோபம், ஆசை, போட்டி, பொறாமை என்ற பெரியதனமான அழுக்குகளைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம்...

Monday, April 5, 2010

குட்டி தேவதைக்குப் பிறந்த நாள்

இன்று எங்கள் குட்டி தேவதை யாழினிக்குப் பிறந்த நாள். சாக்லேட்டுகளுடன் பிறந்தநாளைக் கொண்டாட ஸ்கூலுக்கு சமர்த்தாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள் தேவதை. அவளது ஒவ்வொரு வளர்ச்சியும் மனதுள் வியப்புக் குறிகளை நிரப்பிக்கொண்டே தான் இருக்கிறது.



இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்குட்டிக்கு



தித்திக்கும் தேவதையின் பிறந்தநாளின் கூடுதல் மகிழ்ச்சி, இந்த வார தேவதையில் “வலையோடு விளையாடு” பகுதியில் இந்த வலைத்தளம் பற்றிய தொகுப்பில் யாழின் இனிய லூட்டிகள் இடம் பெற்றிருப்பது.