என் மேகம் ???

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்




அதற்குள் ஒரு வருடமா என்று வேகமாக ஓடிவிட்டன நாட்கள்... குழந்தைகள் செய்யும் மாயம் தான் காலச்சக்கரத்தை மிக வேகமாக சுழற்றுகிறது. இரட்டை குதிரை சவாரி உற்றார் உதவியால் நன்கு செய்ய முடிந்தது. வாசிப்பில் பல நல்ல நூல்களைப் படிக்க முடிந்தது. நல்ல எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ள உதவும் பதிவுலகிற்கு நன்றிகள். தற்பொழுது “டாலர் தேசம்” படித்துக்கொண்டிருக்கிறேன். மனதை ஈர்க்கும் நடையுடன் லேசான நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கும் அமெரிக்க சரித்திரம், புத்தகத்தை கீழே வைக்க விடமாட்டேன் என்கிறது. இந்த வருடம் புத்தாண்டை புத்தகக்கண்காட்சியில் தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு இனியதொரு ஆண்டாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

Wednesday, December 30, 2009

மார்கழிப் பூவே!!!

வானிலை காரணமாக குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதிகாலை கடற்கரையைக் காண நேரம் அமைந்தது. பூசணிப்பூக்கள் அழகாக மலர்ந்ததைக் கண்டதும் நினைவு வந்தது , அன்று மார்கழி பிறக்கிறதென்று. ஒரு பூவைப் பறித்துக் கொண்டேன். முதல் நாளேனும் பூசணிப்பூவை வைத்துவிட வேண்டும் என்று மகிழ்வோடு எண்ணியபடி... இந்த மாதிரி வழக்கங்கள் சின்ன சின்ன மகிழ்ச்சி தருகின்றன அல்லவா?

மார்கழி என்றாலே சில ஆண்டுகளுக்கு முன்பே விட்டுவிட்டு வந்த கோவையின் பனிபடர்ந்த பொழுதுகள் மனதுள் வந்து போகும்... அது ஒரு காலம்... சென்னை என்பதே வெகு தொலைவு என்று எண்ணி வாழ்ந்த காலம். காலை நாலு மணிக்கு எழும் அம்மாவுடன் உடலுக்கு ஆகாதென்றாலும் எழுந்து தலை குளித்து, துண்டை தலையில் கட்டிக்கொண்டு தெருவில் கோலம் போட்ட காலம். வாசல் முற்றம் அடைக்க கோலம் வரைந்து... மார்கழி என்றால் நட்சத்திரக் கோலங்கள் தான் (அட!! வலையில் தேடினால் கிடைக்கவில்லை. அருங்கோண வடிவ கோலத்தின் பக்கங்களில் அதே போல் கூம்பாக வருமாறு இழுத்துவிட்டால் நட்சத்திர வடிவில் கிடைக்கும் கோலம் வாசல் அடைத்து மலரும்) . வெள்ளி என்றால் தவறாமல் கோலம் முடிந்தவுடன் பிள்ளையார் கோவில் தான். மார்கழி வெள்ளியில் மட்டுமே கிடைக்கும் கல்யாணி மாமியின் அந்த ருசியான அளவாகச் செய்யப்பட்ட பூரணக் கொழுக்கட்டைக்காக கோயில் விஜயம் தவற விடப்படாது.



வாசல் கூட்டி, சாணம் தெளித்து முதல் நாள் ஒரு பூ, அடுத்த நாள் இரண்டு என்று முப்பதாம் நாள் முப்பது பூக்களுக்கு நடக்கும் கதைகள் தனி. மார்கழி மாதம் முழுக்க பால்காரம்மாவுக்கு டிமாண்ட்தான். சாணம் எடுத்து வைக்க சொல்லி வீட்டுக்கு வீடு வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல், நீங்களே வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்றுவிடுவார். விட்டோமா பார் என்று சட்டியையும், முறத்தையும் தூக்கிக் கொண்டு மாட்டு கொட்டிலுக்கு முற்றுகை துவங்கும். அதுவும், இந்த போகியன்று... கிட்டதட்ட எல்லோரும் மாட்டு வால் அருகே நின்று கொண்டு அது திரும்பும் திசையெல்லாம் சென்று கொண்டிருப்போம். காலையில் சாணி கரைத்து தெளிக்கப்படும் நீரால் புறப்படும் மண்வாசனை சாணிப்பவுடர் வந்த பொழுதே குறைய ஆரம்பித்தது. சாணி மெழுகப்பட்டிருக்கும் வீட்டின் அழகே தனி.




அடுத்து பூக்கள்... எங்கள் குடியிருப்பில் தோட்டம் ஒன்று உண்டு. ஒரு காவலர் எங்கள் நண்பர் மற்றொருவர் உள்ளே விட மாட்டார். நண்பர் காவல் என்றால் அனுமதியுடன் உள்நுழைந்து ஆடி பாடி களித்து, செர்ரி பழங்கள் பறித்து உண்டபின் செம்பருத்தி செடியெல்லாம் மொட்டுக்கள் இன்றி மொட்டையடிக்கப்படும். வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என்ற வண்ணங்களிலும் சாதா, அடுக்கு, மிளகாய் என்று வகைகளிலும் அவை எங்கள் நீர் தொட்டியில் மறு நாள் காலை மலர்ந்து, கோலத்தின் மேல் சாணத்துடன் சேர்ந்து அழகு சேர்க்கும். நண்பரல்லா காவல் என்றால், நைசாக உள்நுழைந்து வெற்றிகரமாக மொட்டுக்கள் பறிக்கப்பட்டு திட்டு வாங்கிக்கொண்டே தப்பித்து வீடு வருவோம்.

பூக்கள் என்றால் செம்பருத்தியும் பூசணிப்பூவும் மட்டும் தானா? ”டிசம்பர் பூக்கள்” என்று மணமற்ற அழகு பூக்கள். வெள்ளை, ரோஸ், வயலட், நீலம், மஞ்சள் என்று பூத்துக் குலுங்கும். புது நிறம் கண்டுவிட்டால் அதைப் பதியம் போட தேடி அலைவோம். நிறம் நிறமாக அப்பொழுது பிடித்த மலர்கள், ஏனோ இப்பொழுது விருப்பமில்லை. முல்லையும் மல்லியும் மட்டுமே சூடப் பிடிக்கின்றது.

நினைவுகள் மனதில் ஓட வீடு வந்தோம். கோலமின்றி வாசல் வெறிச்சென்றிருந்தது. கோலமிட ஆசையுடன் கோலப்பொடி எடுத்த பொழுது தான் “இன்னிக்கு அமாவாசை... கோலம் போடக்கூடாது” என்று குரல் கேட்டது. பூவை ஓரமாக வைத்து விட்டு மார்கழியை மறந்து பரபர வாழ்வில் ஐக்கியமானேன். சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருகின்றன... சில பழக்க வழக்கங்கள் மகிழ்ச்சி தருவதில்லை...

Wednesday, December 23, 2009

மறக்க முடியுமா?

வாட்சும் மோதிரமும்


கொசுறு (ம்... வாட்ச் ஸ்ட்ராப் என்ன அழகு?)



மறக்கப்பட்ட அழியா நினைவுகள்

Thursday, December 17, 2009

கோலங்கள்



சில்லென்று மனம் குளிர
பனித்துளிகளில் துளிர்த்தது
புள்ளி கோலம்




இலைகளின் ஊடே
வெயில் போட்டது
கோட்டு கோலம்




பூக்கள் மலர்ந்து
மணத்தோடு தந்தது
வண்ணக் கோலம்




வானிலை மாற
மழை இட்டது
இழை கோலம்




மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம




எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...



<படங்கள் இணையம்>

Wednesday, December 16, 2009

நண்டு வருது, நரி வருது...

குழந்தை பிறந்து வளரும் வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் சில பாடல்கள் உண்டு. கேட்க, பாட இனிமையான பாடல்கள் அவை. நான் கேட்ட சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன். சில பாடல்கள் மருவி இருக்கலாம். தவறு இருந்தால் திருத்துங்கள். உங்களுக்குத் தெரிந்ததும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*********************
பெயர் வைக்கும்பொழுது முறத்தில் (சொளவு என்பது வழக்கு) சேலை, வேஷ்டி வைத்து, குழந்தையைக் கிடத்தி இலேசாகப் புடைப்பார்கள். அப்பொழுது பாடும் பாடல்

சொளவு நிறையத் தந்தவரே
உலகு நிறைய தா!!!
(இதை உழவு நிறைய என்றும் சொல்கிறார்கள். எது என்று எனக்குத் தெரியவில்லை)

************************
சின்னக் குழந்தையில் இருந்து அதன் இரு கைகளை நாடியில் குவித்து, பின்பு விரிக்கும் இவ்விளையாட்டிற்குப் பாடல்

சொட்டை , சொடக்கு
சோத்துப்பானை டொமக்கு...

ஒவ்வொரு சொல்லுக்கும் நாடியில் கையைக் குவித்து வைக்க வேண்டும். "டொமக்கு" என்று உரக்கக் கூறிக் கையை நாடியிலிருந்து எடுத்து விரிக்கும் பொழுது குழந்தை சிரிக்கும்.
************************

கைகளைப் பூவாகப் பாவித்து விரித்து, கையை ஆட்டிப் பாட, பின் நம்மோடு சேர்ந்து குழந்தையும் பூ போல் கையை விரித்து சிரிக்கும்

மாம்பூ மகிழம்பூ
மாமா கொடுத்த
மல்லிகைப்பூ

தாம்பூ தாழம்பூ
தாத்தா கொடுத்த
தாமரைப்பூ

***************************

பேச்சு சொல்லிக் கொடுக்கையில்

முதலில் அஃகு, அங்கு...

பின் அத்தை என்று சொல்லிக் கொடுக்க...இடது கையை விரித்து வலது கை ஆட்காடி விரலால் இடது கையின் நடுவில் குத்தி குத்தி...

அத்தத்த நெய்யூத்து
பிஞ்சு கத்தரிக்காயாம்
இன்னும் கொஞ்சம் ஊத்து

**********************

கொஞ்சம் வளர்ந்த பின், கையைப் பிடிக்க சொல்லும் பாட்டு:

மாக்கொழுக்கட்டை
மஞ்சள் கொழுக்கட்டை
மாமியார் பிடித்த
மண் கொழுக்கட்டை
பிள்ளையார் பிடித்த
பிடி கொழுக்கட்டை

இதில், நம் கைவிரல்களை மடக்கி ஒவ்வொரு வரிக்கும் குழந்தையின் கைகளில் வைக்க வேண்டும். கடைசி வரிக்கு நம் கையைப் பிடிக்கச் சொல்லிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

***************************

மேலும் சில பாடல்கள்:
---------------------

பருப்பு கடை, பருப்பு கடை
இது சோறு, இது குழம்பு, இது கீரை, இது தயிர், இது பொரியல்
அம்மாக்கு கொஞ்சம், அப்பாக்கு கொஞ்சம்,
பாட்டிக்கு கொஞ்சம், தாத்தாக்கு கொஞ்சம்,
பாப்பாக்கு கொஞ்சம்

கழுவி கழுவி ஊத்து...
நண்டு வருது, நரி வருது...
நண்டு வருது, நரி வருது...
(கிச்சு கிச்சு மூட்டுதல்)


இந்த பாட்டுக்கு கற்பனை சேர்த்துட்டு சாய்ந்தாட வேண்டியதுதான்...
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
மணிவிளக்கே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு


கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

எத்தனை அழகான பாடல்கள்? குழந்தைகளும் இரசிக்க நாமும் இரசிக்க வாழ்க்கையை சுவாரசியமாக்கும் அழகான பாடல்கள்.

Wednesday, December 9, 2009

மொறு மொறு தோசை

மொறு மொறு தோசை பிடிக்காத குழந்தைகள் இருப்பரா என்று எனக்கு தோன்றியது நேற்று மொறு மொறு தோசை சுட்டு சுட்டு கை வலித்த பொழுது. (தோசை பிடித்தவர்கள் எல்லாம் குழந்தைகள் மாதிரியா என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது). இரண்டு நிமிடத்தில் என்று விளம்பரப்படுத்தப்படுபவை எல்லாம் இந்த தோசைக்கு முன் நிற்காது.

உண்மையில் இட்லி தோசை கண்டுபிடித்தவர்களுக்கு மொறுமொறு என்று தோசை, மல்லிகைப் பூவாக இட்லி கொடுத்து வாழ்த்தவேண்டும். பெரும்பான்மையான பரபர குடும்பங்களின் சாப்பாடு இந்த இட்லி தோசை மாவில் தான் ஓடும். “அரிசி மாவு உளுந்து மாவு கலந்து சுட்ட தோசை” என்று சிம்பிளாக சொன்னாலும் அவ்வளவு எளிதல்ல மாவரைப்பது... க்ரைண்டரே அரைத்தாலும்...

என் சிறுவயதில் உளுந்தை ஊற வைத்து அதை களைந்து (ஒரு தோல் இல்லாமல் உளுந்து கழுவறத பார்க்கறதிலேயே பொழுது போயிடும்), அப்புறம் உரல்ல போட்டு ஆட்டுவாங்க. நான் பக்கத்தில் உட்கார்ந்து மாவைத் தள்ளி தள்ளி விடுவேன். இப்ப அப்படி இல்லை, உளுந்து ஒரு அரை மணிக்கு ஊற வச்சு க்ரைண்டர்ல போட்டு எடுத்தடலாம். தள்ளறதைத் தள்ளி தான் ஆகணும். "பட்டனை தட்டினா ரெண்டு இட்லியும்..." அப்படீனு வந்தாலும் யாராவது மாவை அரைக்கத்தானே வேணும்?

முதலில் உளுந்து அரிசி விகிதம் ஒன்றுக்கு மூன்றா நான்கா என்று தொடங்கி , உளுந்து பொங்க வேண்டும் (பாக்கெட் வாங்காதே, மளிகைகடையில் மூட்டையிலிருந்து வாங்கு என்ற அறிவுரையுடன் சில சமயம் இந்த டிப்ஸ் கேட்டதற்காக ஊரில் இருந்து உளுந்து சுமந்து வர வேண்டி இருக்கும்), முழு உளுந்து , சாப்பாட்டு அரிசி என்றால் இட்லி மென்மையாக இருக்கும் என்று அறிவுரைகளைப் பின்பற்றி, மாவைப் பதமா கரைக்காட்டி இட்லி வராது என்று பக்குவமாகக் கலக்கி உப்பு போட்டு புளிக்க வைத்தால், “ஒரு சில கைக்கு மாவு பொங்காது” என்ற கமெண்ட்டுக்கு மனம் பொங்கும். ஆனால் ஒரு வழியாக இந்த டெக்னிக் எல்லாம் கற்று மாவு ஆட்டி வைத்து விட்டால் டிபனுக்கு யோசிக்க வேண்டாம். இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஊற்றிக் கொண்டே இருக்கலாம் மாவு தீரும் வரை. தீரப்போகிற சமயத்தில் கூட ரவை, கோதுமை எல்லாம் சேர்த்து இரவா தோசை, கோதுமை தோசை என்று அவசரத்துக்கு கை கொடுக்கும் இட்லி தோசை மாவே மாவு. திடீர் விருந்தினர் வந்தாலும் கவலை இல்லை தோசை மாவு இருந்தால்...

இந்த தோசையில் தான் எவ்வளவு வெரைட்டி... புள்ளைங்களுக்கு அப்படியே கண்ணாடி மாதிரி தோசை சுட்டுக் கொடுத்தால், ஊத்தற கை வலிக்கும் வரை உள்ளே போய்கிட்டே இருக்கும். சில பெரியவங்க... இப்படி சாப்பிட்டால் உடம்புல ஒட்டுமா என்று சும்மா கிண்ணுனு சுடுவாங்க பாருங்க... ஒண்ணு சாப்பிட்டால் ஒரு நாளை ஓட்டிடலாம் ... என்ன ஒரு புள்ளையும் தொட்டு கூட பார்க்காது. இன்னும் சிலரு ஓலையாவும் இல்லாமல், ஊத்தப்பமாவும் இல்லாமல், மாவு ஊத்தி சுடறதெல்லாம் தோசை தான்னு கொடுப்பாங்க...ஏதோ ஒண்ணு வயத்துக்கு கிடைச்சா சரிதான்.

இந்த இட்லி ... அரைச்ச மாவுல மொத நாள் இட்லி நல்லா வரும். அதுக்கப்புறம் அது தோசைக்கு தான் நல்லா இருக்கும். ஆனா எல்லாருக்குமே மல்லிப்பூ மாதிரி வந்துடாது... கொஞ்சமா கல்லு மாதிரி... அட!! கல்லை சாப்பிட்டாலும் செரிக்கற மாதிரி உடம்பு வேண்டாமா? அப்புறம் குஷ்பூ இட்லியாமே ... மல்லிப்பூ தோத்தது போங்க... மாவரைக்கும் பொழுது ஆமணக்கு கொஞ்சம் சேர்க்கணுமாம் ஒருத்தர் டிப்ஸ் கொடுத்தார்... நாங்க கல்லையே செரிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க கேட்டவுக...

இது போக மாவுக்கு போடற உளுந்தையே வறுத்து, அது கூட உப்பு மிளகாய் சேர்த்து அரைச்சு நல்லெண்ணைய் ஊத்தி அப்படியே இன்ஸ்டண்டா தொட்டுக்க இட்லிபொடி கண்டுபிடிச்சவங்களை எப்படி பாராட்டறது? அதுல கொஞ்சமா வெல்லம் சேர்த்து திரிச்சிட்டா புள்ளைங்க அப்படியே மொறு மொறு தோசை, தொட்டுக்க இட்லி பொடினு தினமும் சாயங்காலம் ஸ்நாக்ஸா சாப்பிட சலிக்கறதில்லை.

இப்ப இந்த இட்லி தோசையிலயே ஆயிரத்தெட்டு வெரைட்டி பண்ணலாம்; சாப்பிட யாராவது ரெடினா... என்ன திடீர்னு இட்லி தோசைனு கேட்டீங்களா? இப்ப புள்ளைங்க வயத்துல சாப்பாடு இறங்க திரும்ப சமையலறையில் ஏ,பி,சி,டி எல்லாம் படிக்க வேண்டி இருக்கே? நல்ல வேளையா இட்லி இன்னும் வட்டமா தான் இருக்கு :-)



Tuesday, December 8, 2009

நினைவுகள்

மார்கழி குளிரில்
கம்பளியின் கதகதப்பில்
அம்மாவின் அணைப்பு
மனதை இதமாக்கும்

சுட்டெரிக்கும் வெயிலில்
மரத்தின் குளிர் நிழலில்
அப்பாவின் அரவணைப்பு
தென்றலாக மனதைத் தீண்டும்

பெருமழையில் தெறித்த
மழைத்துளி ஒன்று
உன் முத்தத்தின் நினைவில்
மனதைக் கரைக்கும்

பூங்காற்றின் தீண்டலில்
மழலையின் ஸ்பரிசம்
மனம் தொட்டு
மீண்டும் மீண்டும் தழுவும்

பெருங்கூட்டத்தில் ஒட்டாமல்
தனித்து நிற்கையில்
உறவுகளின் நினைவுகள்
உறங்காமல் உடன் வரும்

வாடிச் சருகாக
எரியக் காத்திருக்கும் வேளையில்
உயிரோட்டமாக நினைவுகள்
உயிர் துடிக்க வைக்கும்...

Wednesday, December 2, 2009

புத்தம் புது கவிதைகள்

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கின கவிதைகள்
பூப்பறிக்க சென்ற மகள்
பறித்து வந்தாள் கொத்தாக

வாசமாக வீட்டினுள் பரவியது
கணநேரம் மெய்மறந்து ... பின் மறந்துவிட்டோம்
வாசிக்கச் சொல்லி வீட்டைச் சுற்றின
அழகான குட்டிக் கவிதைகள்

சமைத்துக் கொண்டிருந்தேன் நான்
படித்துக் கொண்டிருந்தார் கணவர்
விளையாடிக் கொண்டிருந்த மகளுடன்
ஓட்டிக் கொண்டது குட்டிக் கவிதையொன்று

மகளின் புன்னகையாக, மழலையாக
கோபமாக, அழுகையாக என
நித்தம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்
புத்தம் புது கவிதைகளை...

Tuesday, December 1, 2009

வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா?

”வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா?”
“எண்ண வாழ்நாள் போதாது”


படித்த ஒரு புத்தகத்தில் மனதில் நின்ற வரிகள். வாசிப்புக்குப் பொருந்தும் வரிகள். பதிவுலகம் மூலம் தான் எத்தனை எழுத்துக்களை , புத்தகங்களை அறிந்து கொள்ள முடிகிறது. படிக்க தான் வாழ்நாள் போதாது போலும்... புத்தகங்கள் படித்து முடித்தவுடன் அந்த எழுத்துக்களின் ஆக்ரமிப்பில் மனதில் தோன்றும் உணர்வை என்னென்பது? சிலருக்கு தான் அதை அழகாக விமர்சிப்பது கைவந்த கலை. எனக்கு வருவதில்லை அருமை, நன்றாக இருக்கிறது என்பது தவிர சொல்லத் தெரிவதில்லை. சமீபத்தில் அமித்து அம்மாவின் பகிர்வில் படித்தது “மாலன் சிறுகதைகள்”. யதார்த்தமான நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சொல்லும் சிறுகதைகள். மனதில் நின்றவை சிலவற்றை சொல்ல முயற்சிக்கிறேன்:


தப்புக்கணக்கு

இந்த தொகுப்பு தப்புக்கணக்கோடு தான் தொடங்குகிறது. இதைப் படித்தபின் அடுத்த கதை தொடர மனமின்றி இந்த கதையையே சுற்றியது மனம். 2X7=14 என்பதை 7X2 என்று எழுதிய ஜனனிக்கு மதிப்பெண் இல்லை. அதை அவர் தாத்தா கேட்க பள்ளியின் வெவ்வேறு பொறுப்பில் உள்ளவரை அணுக... நமக்கு நம் மனப்பாடக்கல்வியின் முட்டாள்தனமும், செக்கு மாடு போல் சுற்றும் பாதையில் இருந்து விலக இயலா மனமும் தெரிகிறது. முடிவில் 2X7=14 என்பதை 7X2 என்று அவள் எப்படி சிந்தித்தாள் என அறிந்து அவள் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறார் தாத்தா. ஆனால் பெற்றோர் கவலைபடுகின்றனர். ஏன்? அவள் பெண் குழந்தை என்பதால்... கொடுத்தமாதிரி அல்லாது வேறு மாதிரி யோசிக்கும் குழந்தை பின்னால் நிறைய கேள்வி கேட்பாள்... காயப்படுவாள்...உலகோடு ஓவ்வாதிருந்து அவளுக்கும் அவஸ்தை மற்றவருக்கும் இம்சை. எனவே “டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்கு போடு. அதிகப்பிரசிங்கத்தனமெல்லாம் பண்ணாதே” என்று அறிவுறுத்தப்படுகிறாள்.

நான் கதை படித்து சற்று நேரம் உறைந்து போனேன். என் பெண் ஆடி, பாடி இன்னும் பல தன் திறமைகளை வெளிப்படுத்துபொழுதெல்லாம் மனதுள் “இறைவா... இவள் பின்னாளில் கஷ்டப்படக்கூடாது” என்னுள் ஒலிக்கும் குரலை உரத்து கூறினாற் போல் இருந்தது கதை. இந்த வருத்தம் கொஞ்சம் மிகையாகத் தெரிந்தாலும் பெண்ணின் திறனை பார்க்கும் பொழுதெல்லாம் திருமணத்திற்குப்பின்(அது காதல் என்றாலும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது என்றாலும்) சிறகுகள் வெட்டப்பட்டு காம்ப்ரமைஸ் என்று ஊமை வலியுடன் உலவும் சில பெண்களின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.


இதெல்லாம் யாருடைய தப்பு?

தமிழ் மீது காதல் கொண்டு தமிழ் படித்த பெண் வேலை இன்றி தவிக்க, தமிழை நிராகரித்து ஆங்கிலம் படித்த சகோதரி வசதியாக செட்டிலாகிறாள். மேடைப்பேச்சாளர் ஆகிறாள் தமிழ் படித்த பெண்... அருவி போல தமிழ்க்கவிதை சொல்லவில்லை...துணுக்கு, கவிதை, மேற்கோள், சிலேடை என்று பேசுகிறாள். கூட்டம் சிரிக்கிறது கை தட்டுகிறது. “எனது தமிழால் யோசிக்க வைக்க முடியவில்லை. கிச்சுகிச்சு மூட்ட முடிகிறது” என்று முடிக்கும் பொழுது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.


வித்வான்

வயலின் வித்வானுக்கு அவரது சிஷ்யன் தரும் பரிசு எதையும் கற்றுக்கொண்டு துல்லியமாக செய்யும் “யஷ்ணி” என்னும் யந்திரம். எல்லாம் செய்யும் அது அவரது வயலின் மட்டும் தொட அனுமதி இல்லை; சங்கீதம் கற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது. ஒரு நாள் அதன் இசையில் மயங்கும் அவர் இயந்திரத்தின் இசை என அறிந்தவுடன் கோபம் கொள்கிறார். யஷ்ணி தன் சங்கீதத்தை அவர் கோபம் கண்டு அழித்துவிடுகிறது. சிறிது நேரம் மனப்போராட்டத்திற்குப் பிறகு ஏற்கும் மனதுடன் வருபவர் யஷ்ணி சங்கீதத்தை மறந்தது அறிந்து அதற்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார்.

சென்ற வாரம் திருமண நாளுக்காக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்றிருந்தோம். கோயில் சென்றால் அபிஷேகம், அலங்காரம் என்பதற்கு எல்லாம் எனக்கு பொறுமை இருப்பதில்லை. அன்று கோவிலில் நான்கைந்து பேர் கணீரென பாடிக்கொண்டிருந்தார்கள். மனதை ஈர்த்து அங்கே என்னை நிறுத்தியது அந்த பாடல்கள்... அந்த குரல்களில் இருந்த உயிர்ப்பு... அது மனிதர்களின் சங்கீததத்தை நேரில் கேட்பதன் உயிர்ப்பு என்று தோன்றியது. மின்வடிவில் கேட்டிருந்தால் இவ்வளவு உயிர்ப்பு இருக்காதோ என்று தோன்றியது... மனப்பிரமையோ? யஷ்ணி நினைவுக்கு வந்தது.


பிரச்னையின் பெயர்: சந்திரலேகா

கல்லூரியில் தேர்தலில் நிற்கும் சந்திரலேகா... போட்டியிடும் திமிர் பிடித்த ஆணால் அவமானப்படுத்தப்பட்டாலும் , போராட்ட மனப்பான்மையுடன்அதையே ஆயுதமாக மாற்றும் சந்திரலேகா...வாழ்க்கையில் சராசரி இல்லத்தரசியாகத் தான் வாழ்கிறாள். நீயா என்று வியக்கும் நண்பனிடம் அவள் கூறுவது தான் இன்றைய பல சந்திரலேகாக்களின் விலங்கு... ”கல்லூரிக்குள் கலவரம் வரலாம். குடும்பத்தில் கூடாது நண்பா.”

பெரும்பான்மையான பெண்கள், என்ன தான் சம உரிமை என்று பேசினாலும் குடும்பம் என்னும் கூடு கலையாதிருக்க காம்ப்ரமைஸ் செய்து வாழ்கின்றனர் என்பது தான் உண்மை.


ஆதலினால் இனி

”புத்தகங்களைப் படித்து வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற மயக்கங்களில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன்” என்று துவங்கும் கடிதத்தில் அதற்கான அனுபவம் சொல்லப்படுகிறது. தான் படித்த மருத்துவ கல்லூரியில் தன் சட்டையை சுண்டி இழுத்து, இரண்டு ரூபாய் பிச்சை கேட்கும் கை உடைந்த பையனைக் கண்டு சினம் கொள்கிறான் முன்னாள் மாணவன். பின் அது பிச்சை அல்ல, வைத்தியம் பார்க்க கேட்கப்படும் இலஞ்சம் என அறிந்து டீன் வரை பிரச்னை கொண்டு செல்கிறான். “நீ இவனுக்கு என்ன உறவு” என்ற கேள்விக்கு , “நான் முன்னாள் மாணவன். ஊனங்கள் இருந்தும் நாம் நம் தேசத்தை விரும்புவதில்லையா. அது போல் இது என் கல்லூரி என்பதில் எனக்கு ஒரு விதமான பெர்சனல் பிரைடு (Pride). அதுவே என்னை உங்கள் முன்வரை இழுத்து வந்திருக்கிறது” என்பான். “நானும் பெருமைப்பட விரும்புகிறேன்” என்று கூறி டீன் மேற்கொண்டு அந்த பையனின் சிக்கிச்சைக்கு ஏற்பாடு செய்வார்.
“புத்தகத்தில் படித்த தத்துவங்கள் என்னைப் போராடத் தூண்டவில்லை. சட்டையை சுண்டி இழுத்த வாழ்க்கை தான் என்னை ஏதாவது செய் என்று உந்தியது” என்ற வரிகள் யதார்த்தம்.

ஒவ்வொருவருக்குள்ளும் இந்த பிரைடு இருந்தால் எல்லாம் தானாக சரியாகிவிடுமோ?


மாறுதல் வரும்

அரசியலால் கள்ளச்சாராயத்ததை எதிர்த்து உயிரைக் கொடுத்த ஒருவனின் வாழ்க்கையின் உண்மைகள் துவக்கும் நண்பர்களுகிடையான உரையாடல். முடிவில் மாறுதல் வரும் என்று சொல்லப்படும் வரிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. “... ஆட்கள் மாறுவதன் மூலம் ஆட்சி மாறலாம். அரசியல் மாறாது. உங்கள் கலாச்சாரத்தை நசிவில் இருந்து மீட்டு எடுக்காதவரையில் உங்கள் அரசியல் மாறாது. அதற்கு என்ன செய்யப் போகிறாய்?”

ஆம் என்ன செய்யப் போகிறோம். எது கலாச்சாரம்? சக மனிதரை மனிதராக பார்ப்பது நம் கலாச்சாரம் என்று எப்பொழுது தலை நிமிர்ந்து சொல்வோம்?


காணாமற் போனவர்கள்

“எங்களை வயலினின் மூன்று தந்திகள் என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் அதுதான் அன்று உண்மை” என்று துவங்கும் மூன்று பேர் தோழிகளான கதையும் ஒருத்தியின் காதலை சேர்த்து வைத்த கதையும்.

முடிவு? ரகளையில் செருப்பு வீசிக் கவிதையைக் காப்பாற்றிய அருணாவுக்கு நானும், கை வளையலைத் தானம் செய்து கல்யாணம் நடத்திய கீதாவுக்கு அவளும் ஆயுசு முழுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது. ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் வாழ்க்கை


சில நாட்களுக்கு முன் தொடர்பதிவாக கவிதா/மீனா கடிதம் பதிவுலகில் வலம் வந்தது. பெரும்பாலானவை திருமணத்திற்கு பின் மாறிவிட்ட பெண்களின் வாழ்க்கையையும் ஏக்கங்களையும் பிரதிபலிக்கும். எங்கள் கல்லூரியில் கூட எங்கள் மூவருக்கு “த்ரீ மஸ்கிட்டீஸ்” என்றார் எங்கள் ஆசிரியர். ஆனால், இன்று யார் யார் எங்கு எப்படி இருக்கிறோம் என்று எங்கள் மூன்று பேருக்குமே தெரியாது.

முத்து முத்தாக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு கதையும் சிந்தனையைத் தூண்டுகிறது, ஏன் என்று யோசிக்க வைக்கிறது. அருமையானதொரு தொகுப்பு.