என் மேகம் ???

Friday, February 25, 2011

ட்வீட்ஸ்

கடிதத்தைக் கிழித்து போடும் திருப்தி மெயிலை டெலீட் செய்வதில் இல்லை

பெளர்ணமி... பூரண நிலவு... நிலவொளி பூரணமாகவில்லை... தெருவெங்கும் மின்விளக்குகள்

நீலக்கடல்; நீல வானம்; செவ்வானம்; வெண்மேகம்; மீண்டும் பூமிக்கு தான் திரும்ப வேண்டும் கண்கள்...

வாழ்க்கையைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால் பாதி பிரச்னைகள் காணாமல் போய்விடும்

கேள்வி கேட்கும் குழந்தையின் சுட்டித்தனம்; அதற்கு சளைக்காது பதில் அளிப்பவரின் பொறுமை - இரண்டுமே சுவாரசியம் தான்

ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....

காலையில் கடற்கரையில் தான் நடைபயிற்சி என்றாலும் சூர்யோதயத்தை இரசிப்பது மிஸ்ஸிங்... வாழ்வின் ஓட்டத்தில் இப்படி மிஸ்ஸாவது நிறைய....

வெளிச்சம் பொறுத்து சுற்றுகிறது நிழல்... நீண்டோ, குறுகியோ... காலடியில் ஒட்டிக்கொண்டிருந்த வரை கவனித்ததில்லை...

பால்யத்திற்கு திரும்ப வாய்ப்பிருந்தால்... இதமான கனவு, ஆனால் படித்து , பரீட்சை எழுத வேண்டும் என நினைத்தால் அது டெரர் கனவு...

பிள்ளைங்க முன்னாடி பெத்தவங்க சண்டை போடக்கூடாதுனு சொன்னால், முதல்ல பிள்ளைங்க கூட பெத்தவங்க சண்டை போடக்கூடாதாம்#நான் வளர்கிறேனே அம்மா

Tuesday, February 22, 2011

உறுத்தல்

என்றோ பேருந்தில்
சில்லறை இன்றி
தவித்த வேளையில்
முகமறியா நட்பின்
ஒற்றை ரூபாய்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

அறிந்தோ அறியாமலோ
கொட்டிவிட்ட சொற்கள்
தெரிந்தோ தெரியாமலோ
மறுத்த நியாயங்கள்
உணரும் வேளையில்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

பலன் நோக்கி
செய்ததல்ல என்றாலும்
பழியாக மாறி
மனம் வதைக்கும் வேளையில்
செய்த உதவி
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

சின்ன சின்னதாய்
திருப்பாத நன்றிகளும்
சின்ன சின்னதாய்
செய்த தவறுகளும்
சின்ன சின்னதாய்
சந்தித்த துரோகங்களும்
உறுத்திக் கொண்டேயிருக்கிறது
மனதின் ஓரத்தில்...

Friday, February 11, 2011

”சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்”

சென்ற பதிவில் டர்ட்டில் வாக் பற்றி எழுதி இருந்தேன். சென்ற வாரம் குட்டீஸ் போக வேண்டும் என்று சொன்னதால் கிளம்பினோம். அருண் அவர்களுக்கு அலை பேசினால், நிறைய கூட்டம் இரண்டு வாரம் கழித்து வந்தால் கூட்டம் கம்மியாக இருக்கும் என்றார். பொறுமையின் சிகரங்களான குட்டீஸ் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே நந்து, யாழ், அவர்கள் நண்பர்கள் சுபிக்‌ஷா, அஸ்வின் என்று பிள்ளை கூட்டமுடன் 11 மணிக்கு போனால்.... அங்கு ஒரு ஸ்கூலே நிற்கிறது.

முந்தின நாள் ஹிண்டுவில் வந்திருந்ததால் இருக்கலாம். எல்லா சுட்டீஸும் கையில் வாட்டர் பாட்டிலுடன் உற்சாகத்தோடு நள்ளிரவில் இருந்தது கண்டு சோம்பிக் கிடந்த நானும் சுறுசுறுபுற்றேன். வழக்கமாக சற்று நேரம் சென்று சென்றால் ஆமை பார்க்கும் வாய்ப்பு அதிகம். சற்று நேரம் ஆமைகள் பற்றி பேசுவார் அருண். முதலில் சுட்டீஸ் டைம். குழந்தைகள் கேள்வி கேட்ட அழகே தனி. அதற்கு பொறுமையாக பதில் சொன்ன அருணின் பொறுமை பாராட்டிற்குரியது. (யாழ் குட்டி தானாக யோசித்து, அக்காவிடம் ஆங்கிலத்தில் எப்படி கேட்பதென தெரிந்து, கைவலிக்கும் வரை கையைத் தூக்கி கேள்வி கேட்டது கொள்ளை அழகு) உண்மையில் குழந்தைகளின் கேள்வி கேட்கும் அழகில் இலயித்த எனக்கு, பதில்கள் மறந்துவிட்டது. நந்தினி நோட் பண்ணியதால் சிலவற்றுக்கு பதில் உண்டு. சளைக்காது கேள்வி கேட்ட சுட்டீஸின் கேள்விகள்:

1. olive ridley-க்கு ஏன் அந்த பெயர்? (olive-ஆலிவின் நிறம்... ரிட்லி... அது ஒரு புதிர் என்பதால்... )
2. எத்தனை வகையான ஆமைகள் (7 வகை Olive Ridley, Kemps Ridley, Hawks bill, Green trutle (இவர் சுத்த சைவம்), Flat back, Leather Back(இவர் ஜெல்லிடேரியன் அதாவது ஜெல்லி மீன் மட்டும் உணவு)
3. olive ridley எவ்வளவு பெரிசு? (இரண்டு அடி)
4. ஆமைகள் எவ்வளவு கிலோ? (olive ridley 40-50 கிலோ , லெதர் பேக் 500-1000 கிலோ)
5. டார்ட்டாய்ஸ் , டர்ட்டில் என்ன வித்யாசம் (சாரி, அவர் சொன்ன பதிலை நான் மறந்துட்டேன்)
6. ஆமை எப்படி குழி தோண்டும்? (பின்பக்க flippers)
7. ஆமை எப்படி நடக்கும்? (flippers இழுத்துகிட்டே நடக்கும்)
8. முட்டை போட எவ்ளோ நேரம் ஆகும்? (குழி தோண்டி முட்டை போட்டு, மூடிப் போக 1.5 மணி நேரம், குழி தோண்டவே 45 நிமிஷம் மேல ஆகும்)
9. முட்டை உடையாதா? (முட்டை போடும் பொழுது மென்மையா இருக்கறதால் உடையற சான்ஸ் கம்மி... கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஓடு கெட்டியாகும். ஆனாலும் போடும் பொழுதே உடையவும் சான்ஸ் உண்டு)
10. ஆமை அழுமா? (அழாது, ஆனால் எக்ஸ்ட்ரா உப்பை வெளியிடறது கண்ணீர் வழியா தான்)
11. குட்டி ஆமை என்ன சாப்பிடும்? (கடல் தாவரங்கள்)
12. ஆமைக்கு எப்படி கரை இருக்கிற பக்கம் தெரியும் (அதற்கு ஒரு திசையுணர்வு உண்டு. பிறந்த இடத்துக்கே வந்து முட்டை இடும் உணர்வு போல்)
13. ஆமைக்கு எதிரிகள் உண்டா? (குட்டி ஆமைக்கு பல எதிரிகள். அது வளர 15 வருஷம் ஆகும். 1000-ல் ஒண்ணு தான் பெரிசாகும். பெரிசான பிறகு ஒரே எதிரி தான்... கண்ணடியில் பாருங்க...)
14. ஆமை வேகமா நீந்துமா? (வேகமா நீந்தும், நடக்கிறது தான் மெதுவா இருக்கும்)
15. எத்தனை தடவை முட்டை போடும் (வருடத்திற்கு 3 தடவை )
16. ஆமைக்குஞ்சுகள் எப்படி மண்ணுக்குள்ளே இருந்து வெளியே வரும்? (நிறைய சேர்ந்து பொரிக்கும். ,மண்ணைத் தள்ளிட்டு மேலே வரும்)
17. ஒண்ணை ஒண்ணு இழுத்து கீழே போயிடாதா? மேலே வர முடியாதே? (அது இழுக்காது; எல்லாம் சேர்ந்து மண்ணைத் தள்ளிட்டு வெளியே வரும்)
18. குஞ்சு பொரிக்க எவ்ளோ நாள் ஆகும் ? (45 நாள் கழிச்சு பொரிக்க ஆரம்பிக்கும், 2 நாள்ல வெளியே வரும்)
19. எவ்ளோ முட்டை போடும் (100-130, அதுக்கு மேலேயும் போகலாம். லெதர் பேக்கு 500 கூட போடும்)
20. இங்கே olive ridley மட்டும் தான் வருமா? (ஆமாம்... மலேசியாவில லெதர் பேக் பார்க்கலாம்)
21. ஆமை மீன் வலையில் சிக்குமா?(ஆமாம், சிக்கி மூச்சு திணறி இறக்கவும் வாய்ப்புண்டு)
22. எவ்ளோ வருஷம் உயிரோட இருக்கும் (ரொம்ப வருஷம்... 100 வருஷம் கூட)

கேள்விகளுக்கு முடிவே இல்லை. 12 மணிக்கு உற்சாகமாக கேள்வி கேட்ட குழந்தைகள். 2 வாரத்திற்கு உற்சாகம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறியவரிடம், பெரியவர்கள் கேட்ட பலவற்றுள் 2 மட்டும் சொல்கிறேன்....

1. இந்த ஆமையைக் காப்பற்றுவதால் மனிதர்களுக்கு என்ன லாபம்? (இலாபம் என்று சொல்ல இயலாது. ஒரு ecological balance... லெதர் பேக் ஜெல்லி மீனை, சாப்பிடாவிட்டால் ஜெல்லி மீன் சாப்பிடும் மீன்கள் அழிந்துவிடும். அது என்ன செய்யும் என்பது போல்... என்றாலும் நாங்கள் செய்வது எங்கள் மனதிருப்திக்காக, நாங்கள் வாழ்வதில் ஒரு அர்த்தம் ஏற்படும் ஒரு மன நிறைவு)

2. மீனவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? உதவுவார்களா? (மீனவர்கள்... எங்களுடன் நட்பாக இருப்பார்கள்... உதவுவார்கள்... ஆனால் அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் தான். பழைய முறை மீன்பிடிப்பு இப்பொழுது இல்லை. கடலில் மீன்கள் இல்லை. ட்ராலர்ஸ் வந்து எல்லாவற்றையும் அழிக்கிறது. மீனவர்கள் தங்கள் குழந்தைகளை மீனவர்கள் ஆக்க நினைப்பதில்லை... அவர்களும் பாதிக்கப்பட்டவர்களே!!!!)

ஒரு வழியா கிளம்பினோம் ஆமையைத் தேடி... வீடு வந்துடுச்சு... எல்ல குட்டீஸும் உற்சாகமா வர, எங்க குட்டீஸ் கால் வலி தூக்கம் என்று புலம்பல் ஆரம்பிக்க... வீட்டுக்கு போகலாம்னு நினைக்கறப்ப ஆமை முட்டைகள் கிடைச்சுது. 103 முட்டை 32 செ.மீ குழி, 3 முட்டை உடைஞ்சுடுச்சு. குட்டீஸுக்கு ஒரே சந்தோசம்; முட்டையைத் தொட்டு பார்த்து, குழிக்குள்ள கைவிட்டு, ஆமை வந்த தடத்தைப் பார்த்து... இரண்டாவது ஆட்டம் முடியற நேரத்தில் வீட்டுக்கு திரும்பினோம். மீதி குழந்தைகள் எப்படி போனாங்களோ!!! அந்த உற்சாகம் நிஜமாவே ஒரு அழகு தான்.

சில சமயம் எல்லா ஆமையும் ஒரே இடத்தில் முட்டை போடுமாம். “அரிபாடா” அப்படீனு சொல்லுவாங்க. இனி மார்ச் மாசம் இப்ப போடற முட்டை எல்லாம் பொரிக்குமாம். பெசண்ட் நகர்ல ஒரு hatchery இருக்காம், அடையார் ஆத்துக்கு இந்த பக்கம் ஒண்ணு, அந்த பக்கம் ஒண்ணாம். hatchery-னால் பீச்ல ஓரிடத்தில் இதே மாதிரி குழி தோண்டி முட்டையை வச்சு கொஞ்சம் கூலா இருக்க கூரை போடுவாங்களாம். முட்டை இருக்கிற சூடு பொறுத்து தான் ஆணோ பெண்ணோ உருவாகுமாம். இப்போலாம் கடற்கரையில் டெம்பரேச்சர் ஜாஸ்தியா இருக்கறதால்... ஒரே வகையா போக வாய்ப்பு அதிகமாம். hatchery-l ஆமை பொரிச்சு வந்தால் கடல்ல விடுவாங்களாம்.ஏதோ tag பண்ணினால் அதை கண்காணிக்கலாம் போல். மார்ச் மாசம் 5:30 மணிக்கு மேல போனால் பார்க்கலாமாம். போனால் போஸ்ட் போடறேன்.

Thursday, February 10, 2011

அன்புள்ள மாமாவுக்கு...

உருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்; மாமாவுடன் விவாதம் செய்தால் நேரம் ஓடுவது போல்....

”ஹாலில் இந்த சுவரை ஒரு ரெண்டு அடி இழுத்தால் தான் கொஞ்சம் நல்லா இருக்கும்”, மாமா சொன்ன பொழுது மனம் ஒப்பவில்லை தான். ஒரு அர்த்தமற்ற விவாதத்திற்குப் பின் அரைமனதுடன் ஒத்துக்கொண்டேன். ஆனால் இப்பொழுது அந்த ரெண்டடி இழுப்பின் அத்தியாவசியம் தெரியும். இப்படி வீட்டின் ஒவ்வொரு அடியிலும்....

தென்னங்கன்று நட இடமில்லை என்று நான் அம்மாவிடம் விவாதம் செய்து மறுத்து வர, ஆனால் மாமா தென்னங்கன்றை வாங்கி வந்து இடம் பார்த்து வைத்து.. இன்று வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி தோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும்....

ஐயாப்பா டெய்லி நைட் வந்து எங்களை மட்டும் பார்த்துட்டு போவார் என்று இன்னும் சொல்லும் கிள்ளைகளின் மழலையிலும்...

ஒவ்வொருமுறை சுற்றுலா செல்லும் பொழுது, அப்பா இருந்தால் வந்திருப்பார் என்று கணவரும், மாமாவுக்கு இப்படி வர்றது பிடிக்கும், நிறைய விஷயம் சொல்லுவார் என்று நானும் சுற்றுலாவின் ஒவ்வொரு சுற்றிலும்...

என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நினைவுகள் நிழலாக உடன் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.


இந்த வருடம் ரொம்பவே மிஸ் செய்கிறோம். முன்பெல்லாம் ஊருக்குப் போகக் காரணம் தேவையில்லை. அது ஒரு திட்டமிட்ட பயணம். இப்பொழுது... அத்தையும் இங்கிருப்பதால் காரணமின்றி செல்லத் தோன்றுவதில்லை.

எத்தனை விவாதம் அவருடன்!!! புத்தகம், சுற்றுலா, உறவுகள், பெண்ணுரிமை, பிள்ளை வளர்ப்பு, ஆத்திகம், நாத்திகம், சமையல், தோட்டம், நினைவுகள் என்று.... அப்பாவுடன் சண்டை போடும் உரிமையுடன் எத்தனை பேச்சுக்கள்/விவாதங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ எல்லாம்... குறைத்திருக்கலாமோ? இல்லை... மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....

Monday, February 7, 2011

முகங்கள்

எங்கெங்கும் கடந்து
செல்லும் முகங்கள்...

புன்னகை பூத்து
பார்ப்பவருக்கும் பரவிட

மனவலி கொண்டு
வேதனை ததும்பிட

எண்ணிய கிடைக்காது
ஏக்கம் உறைந்திட

ஏதோ ஒன்று
ஏமாற்றமாக ஒன்றிட

எரித்து விடும்
கோபம கொந்தளிக்க

ஏதோ எண்ணத்தில்
யோசனையில் ஆழ்ந்திட

உணர்வுகள் அற்று
வெற்றாய் வெறித்திட

கடக்கும் முகங்களுடன்
கடந்து செல்லும் எண்ணம்...

கவலை ஏதுமின்றி
கபடம் ஏதுமின்றி
பிள்ளைச் சிரிப்பை
சுமக்கும் முகமாக
எல்லாம் மாறினால்....

Wednesday, February 2, 2011

ட்வீட்ஸ்

இந்த ஒற்றை வரி ட்விட்டர் மிகவும் ஈர்த்தது. இதுவரை ட்வீட் செய்தவை...

வலைதளம் “என் வானம்” என்றால் ட்விட்டர் தளம் “என் மேகம்”? #மே I கம்

வீடு முழுதும் பூத்துக்குலுங்குகிறது # குழந்தையின் கைவண்ணம்

உன் கரம் பிடித்து செல்லும் பொழுது சாலைகள் முடிவதில்லை... மனதின் ஆசைகள் போலவே...

பட்டுபூச்சிகளின் வர்ணம் மேலும் மிளிர்கிறது ... குழந்தையின் இரசிப்பிலும் வர்ணிப்பிலும்

அழுதால் சாதி தெரிந்துவிடும் என்று அழவில்லை என்று படித்த அதே பத்திரிகையில் தான் “ராமானுஜர் cult" என்று பெருமையுடன் நினைவு நாடா சுழல்கிறது

ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னவாயினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் #http://www.smile.org.in/Sadhana_Main.aspx

முதலாளிகள் யுக்தி “பன்ச் தந்திரம்” என்றால் தொழிலாளிகள் யுக்தி “கைப்புள்ள”? # இவன் ரொம்ப நல்லவன்டா...

பிறந்த நாள் முடிந்தவுடன், அடுத்த பிறந்தநாளின் countdown-ஐ உளமார்ந்த மகிழ்ச்சியுடன் துவக்குபவர்கள் குழந்தைகள் தான் ; Happy Birthday Mohita

துள்ளிச் செல்லும் குழந்தைகளின் சிரிப்பு... அள்ளிக்கொண்டால் மனம் நிறையும்

”சத்தம் போடாதே” என்று சொன்னவுடன் அமைதியாகிவிடும் குழந்தையிடம் சொல்லத் தோன்றுகிறது “சொல் பேச்சு கேளாதே” என்று...

வாரநாள்னா ஆபீஸ்ல வேலை, வார இறுதினா வீட்ல வேலை

இந்த வாரமாவது ஏதாவது உருப்படியாக நடக்காதா என்ற நம்பிக்கையுடன் தான் விடிகிறது திங்கள் காலை... ஒவ்வொரு வாரமும்.

குழந்தையின் ஏக்கம் - எப்பொழுது வளர்வோம் என்று... பெரியவர்கள் ஏக்கம் - எதற்கு வளர்ந்தோம் என்று...

பள்ளி நாட்களில் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் பெற்றோர் ; விடுமுறை நாட்களில் சீக்கிரம் எழுந்து பெற்றோரை எழுப்பும் குழந்தை

எந்த நொடியிலும் நிற்கப்போகும் இந்த இதயம்தான் அதற்குமுன் எதற்கெல்லாம், எப்படியெல்லாம் துடிக்கிறது!!!

இன்பம் பகிர்ந்து கொள்ளும் நொடிகள் அழகு; துன்பம் பகிர்ந்து கொள்ளும் இதயம் அழகு

Tuesday, February 1, 2011

மரணம்

குறுஞ்செய்தி வந்தவுடன்
தொடர்பு எல்லைக்கப்பால்
மரணம்

---------------------------

பல நாள் கழித்து
பல நட்புகளின் சந்திப்பு
புன்னகை பரிமாற்றமில்லை
துக்க வீடு

----------------------------
மிகச் சில நேரமே ...
காத்திருப்பு
ஆறுதல்
மனவலி
பகிர்வு

நீங்கியவுடன்
காத்திருக்கும்
அவரவர் உலகம்
நிற்காமல்
சுழன்று கொண்டே!!!

----------------------------
உயிரற்ற உடல் சுற்றி
உற்றார் உறவினர்
உடல் சுமந்து சென்றபின்
இழப்பை சுமப்போருக்கு
இழப்பின் ஆழத்தில்
இழுக்கும் இரவொன்று
விழுங்கக் காத்திருக்கும்
தனிமையில்....

--------------------------