என் மேகம் ???

Monday, February 23, 2009

எங்க வீட்டுக்கு டெய்ஸி வந்தாச்சு...

குட்டீஸை டிராயிங் கிளாஸ் அனுப்ப ஆரம்பிச்ச உட்னே வீட்டு சுவர் இப்படி ஆய்டுச்சு (யாழினியின் கைவண்ணம்).



ம்ஹும், இதுக்கு கலர் கலரா அடிச்சாலாவது நல்லா இருக்குமே, முடியுமானு நினைச்ச சமயம், முல்லையோட இந்த பதிவு நம்பிக்கை தந்துச்சு. வீட்ல போய் குட்டீஸ்ட்ட நாம் சுவருக்கு பெயிண்ட் அடிக்கலாம்னு சொன்னவுடனே அப்பாவோட போய் பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டாங்க. டோராவை வீட்டுக்குக் கொண்டு வரலாம்னு திட்டமிட்டோம். சரினு முதல்ல ஒரு ட்ரையல் பார்த்தோம். மொட்டை மாடிக்கு போகிற வழில இருக்கிற சுவரைக் கொடுத்தேன். நந்தினி பூ வரைஞ்சு வண்ணம் தீட்டினாள். யாழினியும் தான். நந்தினிக்குப் பிடித்த பின்க் சட்டையும், நீல ஸ்கர்ட்டும் வண்ணம் தீட்டிக் கொண்டன...



அன்னிக்கு அவங்க சித்தப்பா வந்து ஆர்வமாகி அவளோட சேர்ந்து டோராவுக்கு பதிலா டெய்ஸியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. ரொம்ப நாளா தள்ளிப் போன வண்ணம் தீட்டல் நேற்று நிறைவு பெற்றது. இந்த முயற்சில ஒரு தடவை யாழ் நீலவண்ணத்தில் குளிச்சு டர்பண்டெய்ன் தேய்ச்சு குளிச்சாள். எனவே குட்டீஸ் வண்ணம் தீட்டறதை கொஞ்சம் கட்டுப்படுத்தி, ஆமைக்கு மட்டும் நந்தினி வண்ணம் தீட்டினாள். மீதி எல்லாம் அவள் அப்பா & சித்தப்பா வேலை. எப்படி இருக்கு? இனி அடுத்து இதை ரூமுக்குள்ள கூட்டிட்டு வரலாம்னு இருக்கோம்... எப்ப முடியுமோ தெரியல...






இதுக்கு நடுவில் பெரியவங்களை உற்சாகப்படுத்த குட்டீஸ் செஞ்ச ஒரு "ஷோ" எங்களை ஆச்சரியப்படுத்தியது. இதில் நடித்தவர்கள் யாழினி-4 வயது நிவேதா-3 வயது ... எழுத்தும் இயக்கமும் நந்தினி - 10 வயது.
நந்தினி சொல்கிறாள், யாழினி வ்ருகிறாள் ஓரிடத்தில் டினோசர் பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
(இதோ வருகிறாள் சிண்ட்ரல்லா. அவள் ஒரு காட்டில் மாளிகைக்குள் செல்கிறாள். உடனே கதவுகள் மூடுகின்றன (நந்தினி கை தட்டி கதவுகள் மூடும் ஓசை ஏற்படுத்துகிறாள்). அங்கே மான்ஸ்டர்ஸ் இருக்கின்றன (பொம்மைகள்). உடனே "ஸ்னோவைட்" வந்து மான்ஸ்டர்ஸைக் கொல்கின்றாள் (நிவேதா வந்து பொம்மைகளை வெட்டிச் சாய்க்கிறாள்). அவர்கள் தோழிகள் ஆகிறார்கள். "நான் சிண்ட்ரல்லா, உன் பெயர் என்ன?". "நான் ஸ்னோவொயிட்.". "we are friends"
ஷோ முடிகிறது.

அவர்களாக செய்த இந்நாடகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளை engage பண்ண எனக்கு ஒரு வழியும் காட்டியது. இனி எங்கள் வீட்டில் அடிக்கடி குட்டி ஷோக்கள் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

Saturday, February 21, 2009

மங்கையராய் பிறப்பதற்கே



துள்ளித் திரிந்த மான்குட்டிக்கு
பிரச்சனைகள் ஏனோ??

அடைந்தாலும் அடையாவிட்டாலும்
பருவம் ஒரு பிரச்சனை



பயணங்கள் திட்டமிடலில்
மாதம் ஒரு பிரச்சனை

மாதப்பிரச்னை நின்றுவிட்டால்
எலும்பைத் துளைக்கும் பிரச்சனை

மாதப்பிரச்சனை மறையா விட்டால்
கருவறையே பிரச்சனை

கருவொன்று உருவாகி
உயிர் பெற்று அழுவதற்குள்
நித்தம் ஒரு பிரச்சனை

இயற்கை தரும் இன்னல் போதாதென
பெண் இலக்கணம் என்ற பெயரில்
சமூகம் தரும் ...
எண்ணில்லா பிரச்சனைகள்

யார் சொன்னது ...
மங்கையராய் பிறந்திடவே
மாதவம் செய்திடல் வேண்டும் என்று?

என்ற தீராத கோபம்
மறைந்து போனது கண்ணே
உன் மத்தாப்புச் சிரிப்பினிலே!!!



என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் ஈன்றிடவே?

என்புருகிப் போனால் என்ன?
உருக்குலைந்து போனால் என்ன?
உன் முல்லைச் சிரிப்பினிலே
வாழ்ந்திடுவேன் காலமெல்லாம்...


(படங்கள்: இணையம்)

Thursday, February 19, 2009

என் வழி தனிவழி

"உன் பெயர் என்ன", இது நந்தினியின் 4 வயதில் பலராலும் அவளின் மழலைக்காகக் கேட்கப்படும் கேள்வி. "நந்தினி என்ற சுதந்திரா என்ற லஷ்மி தேவி என்ற ஏஞ்சல் என்ற..." என்று கிட்ட தட்ட ஒரு நிமிடத்துகு நீளும் பதிலில் "நந்தினி" தவிர ஒன்றும் புரியாது. இதில் ""நந்தினி என்ற சுதந்திரா" மட்டுமே நாங்கள் வைத்தது, மீதி அவள் பிடித்து வைத்துக்கொண்டது. இப்பொழுது யாழினியிடம் உனக்கு இன்னொரு பெயர் வைக்கலாம்னு பார்க்கிறேன் என்றால் "இல்லைமா, யாழினி மட்டும்தான் என் பெயர். வேற எதுவும் கிடையாது, அப்படியே கூப்பிடுங்க..." என்கிறாள்.

அவளிடம் வெளிப்படும் தன்னம்பிக்கையும், தனித்தன்மையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இன்று ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் செல்ல அவளுக்கு உடை தேர்ந்து எடுத்துக்கொண்டிருந்தேன்.
"அம்மா, நான் இதைத் தான் போட்டுக்குவேன்"
"இது கொஞ்சம் கிழிஞ்சிருக்குமா"
"தச்சு கொடு.."

நான் தைக்க முயற்சித்தேன். தையல் இயந்திரம் கொஞ்சம் மக்கர் செய்தது.

"குட்டிமா, தைக்க முடியலைடா, நீ அத்தைட்ட தைக்கச் சொல்லி வாங்கிக்கறியா?"
"இல்லம்மா, நீ தான் எனக்கு அம்மா, நீதான் தைக்கணும்"

இதற்கப்புறம் நான் தைத்துக் கொடுக்காமல் இருக்க முடியுமா? என்றாலும் எனக்கு அவ்வுடை சற்று விருப்பமில்லை, அவள் அத்தை சொன்னால் கேட்பாள் என்றெண்ணினேன். எனவே ,

"நான் இன்னொரு ட்ரெஸ்ஸும் வைக்கிறேன். அத்தை கிட்ட நீ கேளு, அவங்க சொல்றத போட்டுக்க.."
"இல்லம்மா, எந்த ட்ரெஸ் போடணும்னு நான் தான் சொல்வேன்"

அவளது தெளிவான பதிலில் நான் வாயடைத்துப் போனேன்.
*******************************************************

சரி... சின்னவங்களை மட்டும் சொன்னால் பெரியவங்க என்னை கேள்வி கேட்பாங்க. அதனால் அவங்களைப்பத்தி....

இரண்டு வருஷம் முன்னால அவங்க வகுப்பாசிரியர் சொன்னது என்னன்னா "hats off to you parents!!!. உங்கள் குழந்தையை நன்னடத்தையோடு வளர்த்துள்ளதற்கு எனது பாராட்டுக்கள்", என்று எங்களை மகிழ்வித்தார். இப்பொழுது அவர் மீண்டும் அவளுக்கு ஒரு பாடத்திற்கு ஆசிரியர். வகுப்பாசிரியர்களைச் சந்திக்கும் பொழுது அவரையும் காணச் சென்றிருந்தேன்.

"உங்களை நான் வரச் சொல்லலையே!!!"
"இவ தான் இழுத்துட்டு வந்தா மேடம்"
"ஓ... obedient, good mannered, helping nature, ..." என்று ஒரு பத்து வார்த்தைகள் கூறிவிட்டு "The good thing is these things have not got into her head", என்றார் (அவள் தலைக்குள்ள இதெல்லாம் ஏறி இன்னும் தலை கனமாகலையாம்). மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

"ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்"


நன்றி மகளே உன்னால் நாங்கள் பெருமை அடைகிறோம்
************************************************************

Wednesday, February 18, 2009

நமக்கான நேரம் ...



காலை நேரத்து பரபரப்பில்
காணாமல் போனதோ?

அலுவல்களின் தீவிரத்தில்
அமிழ்ந்து போனதோ?

மாலை நேரத்து அலுப்பில்
மறைந்து போனதோ?

பொழுது முடிந்த அயற்சியில்
பொய்த்துப் போனதோ?

வாழ்க்கையின் சலிப்போ?
வருடங்கள் தந்த அலுப்போ?

என்று எண்ணங்களின் நடுவே
வந்தது ஒரு நாள் பிரிவு

நம் இருப்பை மட்டுமே
யாசித்த இதயங்கள்
பறைசாற்றின நம் காதலை...

நமக்கான நேரம் பத்திரமாய்...
நம் நெஞ்சோடு உள்ளது
எங்கும் போகவில்லை
என்ற புரிதலோடு

மீண்டும் தொடங்கியது
சுறுசுறுப்பான காலை

Tuesday, February 17, 2009

இரத்தம் - மின்னஞ்சலில் வந்த சில தகவல்கள்

இந்த பதிவில் உள்ள சுட்டிகளைக் குறித்துக் கொள்ளுங்கள். என்றேனும் யாருக்கேனும் பயன்படும். இவை மின்னஞ்சலில் வந்த தகவல்கள்

1. BLOOD to 9600097000 - BLOOD DONOR WILL CALL U

2. சுட்டிகள்
http://www.indianblooddonors.com/
http://www.bharatbloodbank.com/
http://www.chennai-madras.com/emergencynumbers/bloodbanks.htm
http://www.friendstosupport.org


3. இரத்த வகையைப் பற்றி சில தகவல்கள்:

இரத்தவகை - மக்களிடம் இருக்கும் சதவீதம்

O + ...... 40 %
O - ...... 7 %
A + ...... 34 %
A - ...... 6 %
B + ...... 8 %
B - ...... 1 %
AB + ...... 3 %
AB - ...... 1 %


என் அனுபவம்:
மீட்டிங் செல்லும் அவசரத்தில் இருந்த பொழுது எட்டிப்பார்த்தது இரத்தம் வேண்டி ஒரு மின்னஞ்சல். வந்து பார்ப்போம் என்று தலைகாட்டிய எண்ணத்தை மாற்றி "forward" என்று அனைவருக்கும் அனுப்பிவிட்டு சென்று விட்டேன்.

மின்னஞ்சல்கள் நிறைய மக்களைச் சென்றடைவதாலும், இரத்த தானம் பற்றிய விழிப்புணர்ச்சி உள்ளதாலும், இரத்தம் கிடைப்பது எளிதென்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.

அன்று ஐந்து மணிக்குள் நான்கு யூனிட் இரத்தம் கிடைத்தால் மறுநாள் அறுவை சிகிச்சை நடக்கும் என்பது நிலை. AB+ இரத்தம் நான்கு யூனிட் தேவைப்பட்டது. இரத்த வங்கிகளில், நமக்கு நான்கு யூனிட் இரத்தம் தேவை என்றால், நான்கு பேர் இரத்ததானம் செய்தபின் வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில், ஒருவருக்கு இரத்தம் கொடுக்க எண்ணம் இருந்தது என்றாலும், அவர் இருந்தது தேவைப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில். எனவே வந்து கொடுக்க இயலவில்லை. என் அலுவலகத்திலிருந்து ஒருவர் சென்றார். இரத்ததானத்திற்காக இரத்தத்துடன் தங்கள் பொன்னான நேரத்தையும் செலவிடுபவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேற்சொன்ன சுட்டியில் இருந்து கிடைத்த எண்களில் சிலரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. சரியாக நான்கு மணி போல்தான் இரத்தம் கொடுக்க நால்வரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. இரத்தம் தேவைப்பட்டவர்கள் சின்ன நகரத்தில் இருந்து வந்ததால் அவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். இரத்தம் கிடைத்த பின் தான் அவர்கள் சற்று தெளிவு பெற்றனர். மின்னஞ்சலும், சுட்டிகளும் மிகவும் உதவின என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது.


இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை இயன்ற அளவு பயன்படுத்தி உதவுவோம். எனவே, முடிந்தால் இரத்ததானம் செய்யுங்கள், இல்லை என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை "forward" பண்ணுங்கள், இரத்தம் இன்னும் தேவைப்பட்டது எனில், யாரேனும் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

Friday, February 13, 2009

உங்களுக்கு ஆண்குழந்தையா பெண்குழந்தையா?

"ஞாநி" அவர்கள் "நெருப்பு மலர்கள்" என்ற புத்தகத்தின் பின்னுரையில் குறிப்பிட்டிருப்பார், "இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல் வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல் வளர்ப்பதுதான்"

எங்கள் வீட்டில் ஒரே பெண் குழந்தைகள் மயம்.
யாரோ கூறினார்கள், "அம்மாடி... ஒரே பொம்பளைப் பிள்ளையா இல்ல இருக்கு?".
"அதான் வீடு கலகலனு இருக்கு. ஒரு விழானா இதுங்க எல்லாம் அழகா ட்ரெஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கும்", பெண்கள் கூறினோம்.
உள்ளிருந்து ஒரு தந்தையின் குரல் "ஆனால் வேலை எல்லாம் நாங்க மட்டும் இல்லை இழுத்து போட்டு செய்யணும்?".
"ஏன் அதுதான் குறைனா, பொண்ணுங்களையும் வேலை எல்லாம் செய்யற மாதிரி வளருங்க", நாங்கள் கூறினோம்.

இவ்விடத்தில் எனக்கு ஞாநி அவர்களின் கருத்து நினைவிற்கு வந்தது. இரண்டுமே அவசியம் என்று தோன்றியது. கணவன் மனைவி என்ற உறவில் அடிக்கடி விரிசலுக்கு காரணம் ஈகோவாக இருக்கும். புரிதலுடன் பகிர்ந்து வாழும் உறவுகளின் இனிமையே நீடிக்கும். "நானும் சமம், நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும், நீ செய்.." என்ற அணுகுமுறை ஈகோவைக் கிளர்ந்தெழச் செய்து மோதலுக்கு வித்திடும். "வேலைல என்ன வித்யாசம். நானும் செய்யறேன். சேர்ந்து செய்வோம்" என்ற அணுகுமுறை அன்பைக் கிளர்ந்தெழச் செய்து காதலுக்கு வித்திடும். ஆண் வீட்டு வேலை செய்கிறான் என்றால் பெண் வெளி வேலை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். இது போன்ற நல்ல எண்ணம் வருமாறு வளர்ப்பு இப்பொழுது பெற்றோர் கையில் உள்ளது. அப்பொழுது தான் இது ஆண்/பெண் செய்யும் வேலை என்ற நிலை மாறி நாம் வாழ செய்யும் வேலைகளாக உருபெறும்.

"ஞாநி" அவர்களின் "நெருப்பு மலர்கள்" என்ற புத்தகத்தின் பின்னுரையில் இருந்து சில பகுதிகள்:

"...பெண் மீது ஆணுக்கு இருக்கும் இந்த சார்புகள் எல்லாம் உரிமையாகவும், அதிகாரமாகவும் இருக்கின்றன. மகனை தாய் பேணுவது எனப்து அவள் கடமை. அவனுக்கு அது உரிமை. கணவனை மனைவி பராமரிப்பது என்பது அவள் கடமை, அது அவனுக்கு உரிமை"

"...எந்த ஆணிடமும் பேட்டியின் இறுதியில் இப்படி, "வீட்டு வேலைகளையும் சேர்த்து எப்படி உங்களால் கவனிக்க முடிகிறது", என்று யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் அந்த ஆணின் பொறுப்பாக யாரும் பார்ப்பதே இல்லை. அதை பெண்ணின் உழைப்பாகவும் மதிப்பதில்லை". "உங்க மனைவி என்ன செய்றாங்க?" என்று கேட்டால் , வெளிவேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் மனைவியுடைய கணவர்கள் பெரும்பாலோர் சொல்லும் பதில், "சும்மா இருக்கா" என்பதுதான். "வீட்டைக் கவனிச்சுக்கறாங்க" என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்"

"வெளிவேலைக்குச் செல்லும் பெண் மீது சுமத்தபடும் இரட்டிப்பு சுமைகள் (மூன்றாம் சுமை குழந்தை பராமரிப்பு) இன்று இரண்டு விதமான் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெளி வேலைகளுக்குச் செல்லும் படித்த, படிக்காத பெண்கள் எல்லாருமே கூடுதல் சுமைகளை சுமக்க வேண்டியவ்ர்களாகி விட்டார்கள். வீட்டையும் கவனித்துக் கொண்டு வெளிப்பொறுப்பையும் கவனிப்பது சாதனை என்று நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி சுமக்க முடியாமல் திணறுபவர்களோ பெண்ணுக்கேற்ற இடம் வீடுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பயோகெபிஸ்ட்ரி முதல் வெப் டிசைனிங் வரை என்ன படித்திருந்தாலும், அந்தத் திறமையைப் பயன்படுத்தி வெளிவேலைக்குச் செல்வதை விட வீட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு "நிம்மதி"யாக இருந்து விடலாம் என்ற மன நிலையை நோக்கி பெண்கள் துரத்தப்படுகிறார்கள்.


...இன்றைய சமூக சூழல் பெண்கள் பல உரிமைகளையும் வசதிகளையும் அடைந்துவிட்டது போன்ற வெளித்தோற்றத்டதைக் காட்டினாலும், அடிப்படைகள் மாறாமலே தான் இருக்கின்றன. ஒன்றுமே நடக்கவில்லை என்று இதற்கு அர்த்தமில்லை. நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த பல தளைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், விடுபட் வேண்டிய தளைகள் இன்னமும் ஏராளமாக இருக்கின்றன என்பது கசப்பானாலும் யதார்த்தம்.
இன்னமும் பெண்ணால் தயக்கமின்றி கவிதைகூட எழுத முடியவில்லை, விரும்பிய உடையை அணிய முடிவதில்லை, நினைக்கும் கருத்தைப் பேச முடிவதில்லை. எண்ணுவதெல்லாம் ஏப்பமாக வெளியிடும் உரிமை ஆணுக்கு இருக்கிறது. பெண்ணுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. இவையெல்லாம் அடிப்படையில் மாறாமல் இருக்கும் சமூக ஒடுக்குமுறையின் சின்னச் சின்ன வெளிப்பாடுகள் தான்.

...

குடும்பத்திலிருந்து தான் எல்ல மாற்றங்களும் தொடங்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பிலிருந்தே அது தொடங்கப்பட வேண்டும். "வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்துப் போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள்" என்று கவிஞர் அ.வெண்ணிலா ஒரு கவிதையிலே கேட்பார். குடும்பம் தான் கற்றுக் கொடுத்தது. ...

பெண்ணுக்கு சம உரிமையை மறுக்கும் ஆண் எப்படி உருவாக்கப்பட்டான் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஏழெட்டு வயதில் பெண் குழந்தை அம்மாவுக்கு சிறு உதவிகள் செய்யத் தொடங்கும் வேளையில், அதே வயதில் ஆண் குழந்தை சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுகிறது. நான் (ஆண்) சாப்பிட உட்கார்ந்தால் ஒரு கை தட்டை எடுத்து வைக்கிறது, இன்னொரு கை தட்டிலேயே கை கழுவ நீர் ஊற்றுகிறது. சமயங்களில் சோற்றை குழம்புடன் பிசைந்தே வைத்து விடுகிறது. சாப்பிட்டு முடித்து எழும்போது ஒரு கை மறுபடியும் நீர் ஊற்றுகிறது, துகைக்கத் துண்டு நீட்டுகிறது. இத்தனை கைகளும் பெண்களுடையவை - என் அம்மா, பெரியம்மா , அக்கா.

இப்படி தனக்கு பணிவிடை செய்வதற்கே பெண்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற மன நிலையில் சுமார் 16 ஆண்டுகள் வளர்க்கப்படுகிற நான், 17வ்து வயதில் பெண்ணை சம மனுஷியாக எப்படி பார்ப்பேன்? ஆண்-பெண் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டால் , பெண்ணுக்கு அடைவதற்கு ஒரு பொன்னுலகமே காத்திருக்கலாம். ஆனால் ஆணாகிய எனக்கு ஏராளமான் சலுகைகள், வசதிகள் எலாம் இழக்கப்பட வேண்டியவையாக அல்லவா இருக்கின்றன. கற்கத் தொடங்கும் மழலையிலேய எனக்கு ஆண்-பெண் இருவரும் சம உரிமை உடைய மனிதர்கள் என்பதும் கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த சிக்கல் எனக்கும் இல்லையல்லவா?

எனவே, இன்றைய தேவை பெண் குழந்தையை ஆண் போல் வளர்ப்பதல்ல. ஆண் குழந்தைகளை பெண் போல் வளர்ப்பதுதான். சிஉ வயதிலிருந்தே அடுப்படியில் உதவிகள் செய்யவும், வளர வளர சமைக்கவௌம், பாத்திரம் தேய்க்கவும், வீடு பெருக்கவும், கழிப்பறை கழுவவும், கோலம் போடவும் கற்கிற, கற்பிக்கப்படுகிற சிறுவனே சக சிறுமிகளை சமமானவர்களாக நடத்தும் பார்வை பெறுவான்.
...

உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

Thursday, February 12, 2009

கற்றுக்கொடுங்கள்... கற்றுக்கொள்ளுங்கள்...

குழந்தைகளின் குணநலன்கள் அமைவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. என்னை யோசிக்க வைத்த சில நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

யோசிப்போமா பெற்றோர்களே...?
என் மகள் என்னிடம் அவள் தோழி அடிக்கடி தன் ஆசிரியருக்கு ஒன்றும் தெரியாது என்றோ, கோபமானவர் என்றோ கிண்டலாகக் கூறுவதாகக் கூறினாள். ஓரிருமுறை அவள் தாயார் ஆசிரியர் பற்றி அவள் முன்னே விமர்சிப்பதைக் கவனித்துள்ளேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு மரியாதை இருந்தால் தானே கற்றல் முழுமையாகும்? ஆசிரியர்களும் மனிதர்கள் தான், குறைகள் இருக்கலாம். அதைக் குழந்தைகள் முன் கிண்டலாக விமர்சித்தால், குழந்தைகள் எப்படி மரியாதை கற்றுக் கொள்வர்? குறை களைய என்ன வழி என்று யோசிப்பதே நல்வழி, குழந்தைகள் முன் விமர்சிப்பது அல்ல. ஆசிரியர் என்று அல்ல மரியாதை கொடுக்கப்பட வேண்டிய எவருக்குமே இது தகும். யோசிப்போமா?

கொஞ்சம் தனியாக சுவாசிக்கட்டுமே?
எல்.கே.ஜி செல்லும் என் மகள் பள்ளியில், பல நாட்களாகப் பெற்றோர் வகுப்பறை வரை அனுமதிக்கப்படுவர். இதனால் ஏற்பட்ட ஒரு சில குழப்பங்களைத் தவிர்க்க, குழந்தைகளை வாசலில் விட்டுச் செல்லக் கூறினர். வாசலில் இருந்து பத்தடி தூரத்தில் வகுப்பறைகள் ஆரம்பித்து விடும். பள்ளியில் தான் நாம் குழந்தைகளின் விரலை விட்டு கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுவோம். எனவே இதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளை வழி நடத்த ஆசிரியர்களும், ஆயாக்களும் நின்று கொண்டுதான் இருக்ககின்றனர். என்றாலும் சிலர் வந்து போடும் கூச்சல் இருக்கின்றதே!!!! ஒவ்வொரு குழந்தையையும் விரல் பிடித்து வகுப்பறையில் விட வேண்டும் என்றால், என்று தான் அவர்களை சுவாசிக்க விடப்போகிறோம்?

விதிகளை மதிப்போமா?
என் பெண்ணிற்கு அப்பொழுத் எட்டு வயது. பூங்கா சென்றிருந்தோம். சில பெரியவர்கள் தங்கள் சின்ன புத்தியால் குழந்தைகளின் ஊஞ்சலில் ஆடுவார்கள். அதுவும் சிலர், அருகே ஏக்கத்துடன் நிற்கும் குழந்தைகளைக் கூட கவனியாது, கூறினாலும் கேட்காது ஆடுவார்கள். அப்படி ஒரு பூங்காவில், ஒரு சிறிய இராட்டினம் "6 வயதுக்குட்பட்டோர் மட்டும்" என்ற அறிவிப்புடன் இருந்தது. அவளுக்கு மிகவும் ஆசை, ஆனால் அறிவிப்பைக் கண்டவுடன் அவள் விலகி விட்டாள். "உனக்கு 2 வயது தான் அதிகம், தெரியாது ஏறிக் கொள்", என்றேன். அவள் மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு என்னை யோசிக்க வைத்தது. அறிவிப்பைக் காட்டி விதிகளை மதிக்க அவளுக்குப் புரிய வைக்க வேண்டிய நானே விதிகளை மிதிக்கக் கற்றுக் கொடுப்பது நியாயமா? ஊஞ்சலில் ஆடுவோரைக் குறை கூறும் தகுதி கூட இழந்து விடுகிறேன். இது போன்ற விஷயங்களிலும் சற்று கவனம் செலுத்தினால், நற்குணங்கள் என்றும் அவ்ர்களிடம் இருக்கும். அவளைப் பாராட்டினேன் விதிகளை மதித்ததற்கு

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...
"வெயிலில் ஆடாது, கருத்து போய்டுவ...", இது என் குழந்தைகளிடம் எப்பொழுதாவது நான் கூறும் சொற்கள். இவை எனக்குத் தவறாகத் தெரியவில்லை, எனது தோழி கூறும்வரை. அவளது பிள்ளை நல்ல நிறம். வெயிலில் ஆடியதால் கருத்தாலும், "நீ கருத்துவிடுவாய்" என்று கூற அவள் விழையவில்லை. காரணம்... கருப்பு நல்ல நிறம் அல்ல என்ற எண்ணம் அவனுக்கு உருவாகக்கூடாது என்பதால். எனவே "நீ களைத்து விடுவாய்" என்பாளாம். ஆனால் அவள் பையன் அவளை மிஞ்சி விட்டான். "கருப்பா கூட ஆகுது... ஆனால் என்ன கருப்பும் நல்ல நிறம் தானே!!" என்றானாம். நிறம் பற்றிய தவறான எண்ணங்கள் உருவாகுவதைத் தவிருங்கள்.

Tuesday, February 10, 2009

மாமாவின் நினைவுகள்

பிப். 10. அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? நாட்கள் உருண்டோடி வருடமாகிவிட்டது. காலம் வலிகளின் தீவிரத்தைக் குறைக்கிறது. சென்ற ஆண்டு மறைந்துவிட்ட மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். எனது மரணத்தைப் பற்றிய பதிவுகள் அவரது பிரிவின் தாக்கமே...

பெண்ணுக்கு வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் கணவன் மட்டுமல்ல புகுந்த வீட்டு சொந்தங்களும் புரிதலுடன் வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களுடன் உண்டாகும் பிணைப்பு அன்பினால் மட்டுமே. திருமணம் என்ற பந்தத்தினால் கிடைக்கும் புது சொந்தங்களின் பிணைப்பும் அவ்வாறே.

திருமணமான ஒரு வாரத்துள் அருகில் இருப்பவர்களுக்கு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பூண்டு உரித்துக் கொண்டிருந்தவரை ஆச்சரியமாகப் பார்த்தேன். ஆண்கள் அடுப்படியில் உதவுவது என்பது எனக்கு ஆச்சரியம். அந்த ஆச்சரியம் தொடர்ந்து கொண்டே இருந்தது. எனது வளைகாப்பிற்கு பூச்சடை செய்ய பூ தொடுத்தார். கேலி செய்து சிரித்த பெண்களிடம் "நம்ம வீட்டுப் பெண்ணுக்கு தானே செய்கிறேன்" என்றார். ஈகோ வீட்டிற்குள் தலையெடுக்காது இருந்தால் இன்பமே என்று புரிய வைத்தார். வீட்டு வேலை என்றாலும் அலுவலக வேலை என்றாலும் அதே சுறுசுறுப்பு, வேகம் மற்றும் உழைப்பைக் காணலாம்.

வீட்டில் உறவுகளுக்குள் ஒரு பிரச்னை என்று நான் கலங்கி இருந்த பொழுது அவர் கூறிய அறிவுரை கோடி பொன் பெறும். "வாழ்க்கை என்றால் பிரச்னை வரும் , போகும். இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்கலாமா? தைரியமா என்ன பண்ணணும்னு பார்க்கணும்.
நீ கவலைப்படாமல் இரு நான் கவனிச்சுக்கிறேன்" என்றார். இன்றும் பிரச்னை என்றாலே எனக்குள் ஒலிக்கும் இச்சொற்களால் பிரச்னை ஒன்றுமில்லாததாகத் தோன்றிவிடும்.

அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேலை, வீடு என்று திணறிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு பொறுப்பை முழுமையாக ஏற்றார். முழுமை என்றால்... சமையல், தோட்டம், குழந்தை வளர்ப்பு என்று அனைத்தும். இதற்கு நடுவில் அவரை அலுவலக நிமித்தமாக உதவி கேட்போருக்கும் உதவிக்கொண்டு... எப்படி அவருக்கு அவ்வளவு வலிமையோ?

நான் கருவுற்றிருந்த பொழுது, சிறுநீரகக் கல்லுக்கு மருந்து உட்கொள்ளக் கூடாது என்றார் மருத்துவர். சாப்பிடும் எனக்கு தினமும் வாழைத்தண்டும், கீரையும் அலுத்துப் போனது, அவருக்கு நறுக்கி சமைக்க அலுக்கவில்லை. மனைவி, மகன், மருமகள் என அனைவருக்குமே அவர் ஒருமுறையாவது மருத்துவமனையில் உதவி இருப்பார். தனக்கு என்று இருந்த பொழுது யாரையும் இருக்க விடமாட்டார். "போய் குழந்தைகளைக் கவனி", அவ்வளவுதான்.

வீடு நிறைய குழந்தைகள் இருந்தால் புன்முறுவலுடன் இரசித்துக் கொண்டிருப்பார். குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிக் கொண்டு அவர்கள் இழுப்புக்குச் சென்று கொண்டிருப்பார். மதுரையில் இருந்து யார் வந்தாலும் பேத்திகளுக்கு சாத்தூர் சேவு வந்து விடும். அது பெரிதல்ல, எனக்கு கருப்பட்டி மிட்டாய் பிடிக்கும் என அவர் சாத்தூர் செல்லும் பொழுதெல்லாம் மறக்காது வாங்கி வருவார். மருதமலையில் இலந்தை வடை கேட்டு என் கணவரிடம் கெஞ்சும் நேரத்தில் அவ்ர் ஒரு இலந்தை வடை கடையே கொண்டுவந்து கையில் கொடுத்துவிட்ட பாசத்தை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. "அமாவாசையாவது ஒண்ணாவது சிக்கன் சாப்பிடுங்க" என்று எங்களிடம் கூறுவார். அமாவாசைக்கு நீங்க சாப்பிடாதீங்க என்று சொல்லும் அத்தையின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து அவர் சாப்பிட மாட்டார்.

திருமணமான புதிதில் முதலில் பயம் கலந்த மரியாதை உண்டு. புத்தக வாசிப்பினால் தான் அது உரிமை கலந்த மரியாதை ஆனது. தந்தை போன்ற உரிமையுடன் சரிசமமாக பேசும் உரிமையைத் துவக்கி வைத்த பொன்னியின் செல்வனுக்கு என் நன்றிகள். எனக்கு பிடித்த "உடையார்" நாவலை அவரிடமும் படிக்கக் கொடுத்து , கட்டிடம் பற்றியும் அவருக்குத் தெரியும் ஆதலால், கோயில் கட்டியது பற்றி எனக்குப் புரியாத்தை அவரிடம் பேசி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். எத்தனை பகுதிகள் படித்தாரோ தெரியவில்லை..

முடிந்தவரை ஏதேனும் வேலைகள் செய்து கொண்டிருப்பார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து, யோகா செய்துவிட்டு, டி.வி பார்த்தவாறு வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, காய்கறிகள் எல்லாம் அரிந்து விடுவார். தோட்ட வேலையும் நடுவில் பார்த்துக் கொள்வார். ஏதேனும் செடிகள் புதிதாக வளர்த்துக் கொண்டே இருப்பார். சமையல் செய்ய வேண்டுமெனில் அதுவும் முடித்துவிடுவார். நடுவில் அலுவலக நண்பர்களுக்கு அலுவல் விஷயமாகவும் உதவிக் கொண்டிருப்பார். உறவு நட்பு என எவ்வட்டத்திலும் குடும்பம், அலுவல் என எதுவாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தன்னால் இயன்றவரை உதவுவார்.

சாத்தூர் அருகே உள்ள சிற்றூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு ஒரு நாள் வேலை முடித்துவிட்டு, மறுநாள் சென்னையில் நண்பர் வீட்டு கல்யாண்த்திற்கு வந்திருப்பார். எதைப் பற்றி வேண்டுமென்றாலும் அவரிடம் பேசாலாம். எப்படியாவது தெரிந்து வைத்திருப்பார். வீட்டில் என்ன ஒரு செயல் என்றாலும் நாங்கள் மட்டுமல்ல என் பெற்றோர் கூட அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்தால் தான் திருப்தி. நான்கு வருடங்களாகத் தான் மதுரையில் இருந்தார். அதற்கு முன் எங்களுடன் சென்னையில் இருந்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார். எனது இரு குழந்தைகளின் வளர்ச்சியில் அவரது பங்கு மிக உண்டு. அதன் பிறகும் இங்கு ஓரிரு நாட்களுக்கு வந்தால் கூட அதிகாலையில் வெங்காயம், பூண்டு உரிக்கப்பட்டு இருக்கும். எத்தனை சிறு இடைவேளையிலும் முடிந்த அளவு உதவிடுவார்.

அவர் மருத்துவமனையில் இருக்கும் தகவல் அறிந்து, உடனே அதிர்ஷ்டவசமாக ட்ரெய்னில் என் கணவருக்கு இன்னொருவரின் டிக்கட் கிடைத்தது. எல்லாம் நல்லவையாக அமையும் என்று எண்ணினோம். தந்தையைக் காணக் கிளம்பியவர், செல்ல முடிந்தது என்னவோ தாயின் துக்கத்திற்குத் தோள் கொடுக்க. சர்க்கரை நோய் இருந்ததால் நெஞ்சு வலியின் தீவிரம் தெரியாது போய், வாயுத் தொல்லையாக எண்ணிவிட்டு, தெரிந்த பொழுது மருந்துகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

நட்பு, உறவு என ஒரு பெரிய வட்டம் வந்த பொழுது புரிந்தது எத்தனை பேருக்கு அவர் உதவி இருக்கிறார் என்று. வாழ்ந்தால் இப்படி எல்லோரும் "இப்படி ஒரு நல்லவர் இனி இல்லையே" என்று சொல்லுமாறு வாழ்ந்திருக்க வேண்டும் என்று புரிய வைத்தது.

Wednesday, February 4, 2009

அறிவுஜீவமே!

எடக்கு மடக்காக ஏதாவது என் சுட்டிகள் செய்தால், "அறிவுஜீவியே!" என்போம். அது என் சுட்டிப் பெண்ணின் மொழியில் "அறிவுஜீவமே!" ஆனது. சுட்டிகளின் அறிவு ஜீவம் மற்றும் அறிவார்ந்த பேச்சுகள் சில...

*******************************
திரைப்படம் ஒன்றுக்கு சென்றிருந்தபொழுது, டிக்கட் கிடைக்கவில்லை.
சுட்டி: இனிமேல் இந்த தியேட்டருக்கே வரக்கூடாதும்மா
நான் : ஏண்டா செல்லம்?
சுட்டி : பாரும்மா, அப்பா டிக்கட் வாங்கறேன்னு சொல்றாங்க , ஆனால் டிக்கட் தரமாட்டாங்களாம். இனிமேல் இங்கே வரக்கூடாது

*******************************
சின்னவள் 3 வயதாகும் வரை அடிக்கடி கடி்த்து வைத்து விடுவாள். அவள் அக்கா தான் அதிகமாகக் கடிபடுவது. ஒரு நாள் தான் கண்ட கனவு என்று பெரியவள் கூறியது , கனவோ கற்பனையோ இன்றும் நாங்கள் நினைத்து மகிழும் சுவாரசியம் தான். "நாங்கள் எல்லாம் விளையாட்டிட்டு இருக்கோம்மா. அப்ப பெரிய டினோசர் வந்துச்சு. நாங்கள் எல்லாம் பயந்து ஓடலாம்னு பார்க்கறோம். திடீர்னு டினோசர் ஓடுது. என்னடானு பார்த்தால் யாழ் டினோசரைக் கடிச்சுட்டாள். அது ஐயோ சாமி காப்பாத்துனு ஓடிடிச்சு". அதானே கடிபட்டவளுக்கு தானே தெரியும் கடியோட வேதனை...
********************************



கைக்குள் அடங்கும் இரப்பர் பந்தொன்று வாங்கி இருந்தோம். "இதுக்கு ஸ்ட்ரெஸ் பால் அப்படீனும் பெயர். கோபம் வந்தால் இதைக் கசக்கினால் கோபம் குறையும் என்றேன்". "எனக்கு கோபம் வருது அதைக் கொடு" என்று வாங்கிக் கசக்கினாள். பின், "சிரிச்சா இதை வச்சிக்ககூடாதா", என்றாள். "இதை வச்சு ஷூ கூட பாலிஷ் போடலாம் போல இருக்கே " என்றாள். அவளது கற்பனையில் நாங்கள் சிரிக்க ஆரம்பிக்க "முதுகு சொறியலாம், தூசி தட்டலாம்..." என்று பறந்த கற்பனைக் குதிரையோடு என்னால் பறக்க முடியவில்லை.

******************************

ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அவளுக்குத் தெரியும். விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொண்டிருந்தேன். சின்னவள் "C" பிரிவு, பெரியவள் "B" பிரிவு. நான் அவள் L.K.G "C" என நிரப்பிக் கொண்டிருந்தேன். குட்டிப் பெண் வந்தாள்.

"எனக்கு தானே முதல்ல எழுதற?"
"இல்லை அக்காவுக்கு"
"இல்லை. நீ "C" போட்டிருக்க. அக்காக்குனா "B" போட்டிருப்ப..."

என்னால் அவள் அறிவுக்கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை

******************************

திடீரென்று ஒரு நாள் "அம்மா , அரிசி ஊசியில் இருந்தா வந்துச்சு?", என்றாள். எப்படி இப்படி ஒரு கேள்வி என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. "அரிசி செடியில் வரும். அப்பா கிட்ட சொல்லி உனக்கு காட்டச் சொல்றேன்" என்றேன். ஊருக்குச் சென்ற பொழுது வயலைக் காட்டி அவள் அப்பா "இங்க தான் அரிசி வரும். முதல்ல நெல் வரும், அப்புறம் அதை அரிசி ஆக்குவாங்க" என்றார். உடனே அவள் "அப்பா, இது எனக்கு ஏற்கனவே தெரியும்", என்றாள். அப்பப்ப மேடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆவார்கள். மழலையில் இதில் மகிழும் மனம், சற்று விவரம் தெரிந்தால் "கற்றது கைமண் அளவு" எனப் புரிய வைக்க விழைவது ஏன்?

*******************************

Tuesday, February 3, 2009

ஏன் இப்படி?

திருவண்ணாமலை சென்றிருந்தேன். கோயிலைச் சுற்றி எந்த வீதியில் நின்றாலும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களோ அல்லது வயதானவர்களோ வந்து கையேந்தி நின்றனர். கையில் இருந்த சில்லறைகளைக் கொடுத்தாலும், ஏன் இப்படி என மனம் கலங்கியது.

கோயிலுள் தரிசன்ம் முடித்து வரும்பொழுது "அம்மா, உங்களால் முடிந்த அளவு வயதானவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள்" என்றவுடன் சட்டென ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டேன். சாப்பாடு கொடுங்கள் என்று நான் கூறும் பொழுதே எனக்கு புரிந்து விட்டது அது ஒரு நாடகம் என. சட்டென் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன். மனதில் இம்முறை எனக்கு கோபம் இல்லை, ஏன் இப்படி என வேதனை தான்.

கையேந்தி நிற்கவோ ஏமாற்றியோ இவர்கள் வாழ்க்கையை ஓட்டி எவ்வளவு சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் வாழ வழி இல்லையா? எனக் கேள்விகள். சென்னையில் வீட்டைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆள் கிடைக்காது எவ்வளவோ வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆள் தேடுகிறார்கள். எனக்கு தெரிந்த பல இடங்களில் வருபவர்கள் எல்லாம் உணவு, உடை, உறைவிடம் , கணிசமான தொகை கொடுத்து, கனிவாக இருந்தாலும் யாரும் நிலைப்பதில்லை.

வேலை இன்றி சிலர், வேலைக்கு ஆள் கிடைக்காது சிலர் என்று ஏன் இந்த முரண். ஏன் இப்படி?

இதன் தொடர்ச்சியாக எழுந்த எண்ணங்கள்:
இப்பொழுது விலைவாசி இருக்கும் நிலையில், அதுவும் கிராமங்களில் வாழ்வை ஓட்ட பொருள் ஈட்ட என்ன வழி இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சுய உதவி குழுக்கள் பற்றி பல செய்திகள் வந்தாலும் அது இன்னும் இது போன்ற மக்களை சென்றடையவில்லையா அல்லது இவர்கள் உழைக்க விருப்பப்படவில்லையா? எத்தனையோ உதவும் இல்லங்கள் இருந்தாலும் பலர் உதவினாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லையே? ஏன் இப்படி?

சில வருடங்களுக்கு (தற்போதைய நிலை எனக்கு தெரியாது) முன்பு சிவகாசியில் பிச்சைக்காரர்களைக் காண முடியாது, வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். இதற்கு காரணம் சுற்றி இருந்த தொழிற்சாலைகள். எனக்குத் தெரிந்து பல குடும்பங்கள் கட்டு ஒட்டியே வாழ்வில் உயர்ந்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் ஆண்பிள்ளைகள் ஒழுங்காக வருமானம் ஈட்டி வராத நிலையில் பெண்கள் மட்டுமே கட்டு ஒட்டி, வீடு கட்டியதோடு அவர்கள் திருமணத்திற்கும் சேர்த்து வைத்தனர். பல கடைகளில் "வேலைக்கு ஆள் தேவை" என்று எப்பொழுதும் அறிவிப்பு இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் பொருள் ஈட்ட வ்ழி இருந்ததால் தான்.


மற்றொரு விஷயம் தலைமை பற்றியது.
என் தந்தை ரேஷன் ஆபீஸுக்கு சென்று ரேஷன் கார்டு வாங்கும் சூழ்நிலையில், அங்கு சென்று காலையிலேயே நிற்பார். அப்பொழுது தான் நண்பகலில் வேலை முடியும் வாய்ப்பு உள்ளது என்று. ஒரு முறை வேலைகள் சரியான நேரத்திற்குத் தொடங்கி விரைவாக நடந்தன. ஏன் இப்படி? என்று விசாரித்தால் வந்த பதில் "ஆபீஸர் கொஞ்சம் கெடுபிடி". ஆக, தலைமை சரியாக வழி நடத்தினால் தான் வேலை நடக்கும் என்பதற்கு இந்த சின்ன உதாரண்ம் போதும்.


நம் தலைவர்களை இது போன்று கையேந்தி மக்கள் நிற்கும் இடங்களுக்குத் தனியாகத் தலைவனாக அல்லாது ஒரு குடிமகனாக அனுப்ப வேண்டும். சுற்றி கையேந்தி மொய்க்கும் மக்களைக் கண்டு கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி தோன்றாதா? ஏன் இப்படி?

Monday, February 2, 2009

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் (தொடர் பதிவு)

அமிர்தவர்ஷினி அம்மா வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். எனக்கு உடனே எப்பவோ படிச்ச தமிழ் பாடம் நினைவுக்கு வந்தது. அதில நான் தமிழ்னு நினைச்சுட்டு இருந்ததை எல்லாம் வடமொழி, பாரசீகம், லத்தீன் போன்ற மொழிகளில் இருந்து வந்ததுனு இருக்கும். எனவே எது உண்மையில் தமிழ்ச்சொல் என்பதில் எனக்கு எப்பொழுதுமே குழப்பம் தான்.

இந்த தலைப்பைப் பார்த்ததும் சொல்வழக்கா, நூல் வழக்கா அப்படீனு கன்ஃப்யூஷன். ஆமாங்க பேச்சு வழக்கில் ஆங்கிலம் பேசுவது, எழுதும் பொழுது தமிழில் எழுதுவோம். பாருங்க கன்ஃப்யூஷன் (குழப்பம்) , டிஸ்கஷன் (கலந்துரையாடல்), கப்(கோப்பை), ஸ்பூன் (தேக்கரண்டி), ஸாரி (மன்னிப்பு) , தாங்க்யூ (நன்றி) etc etc...(இன்ன பிற).

அதனால் சொல்வழக்கே எடுத்துக்கிட்டேன். இந்த சொற்கள் இன்னும் சில இடங்களில் புழக்கத்தில் இருக்கலாம் , சில இடங்களில் வேறு சொற்கள் வந்து மறைந்தும் இருக்கலாம். சின்ன வயசில வாசல் தெளிச்சு கோலம் போடுங்கறதை "முத்தம் (முற்றம்) தெளிச்சு , கோலம் போடு" என்பார்கள். இப்பொழுது முற்றங்கள் குறைந்து விட்டதாலோ என்னவோ, இவ்வழக்கு இப்பொழுது "வாசல்" என்றே மாறி விட்டது. புழக்கடை என்று பின்வாசலைக் குறிப்பார்கள். இதுவும் இப்பொழுது பின்னால் என்று மாறிவிட்டது. பரண் மேல போடற பொருள் எல்லாம் இப்ப "லாஃப்ட்--ல" போடச் சொல்றாங்க. இரும்பு கிராதி இரும்பு கேட் ஆய்டுச்சு. புகைப்படத்துக்கு சட்டம் போடறது ஃப்ரேம் அப்படீனு இப்ப தான் நினைவுக்கு வருது. காரை எப்படி எனக்கு மொட்டை மாடியாச்சுனு யோசிக்கிறேன்.

எங்கம்மா அழைத்து நான் கேட்டு உள்ள ஒரு உறவுமுறை மாம்டக்கா. மாமன் வீட்டு அக்கா என்பதே இது. இப்பொழுது யாரும் அழைப்பதாகத் தெரிவதில்லை. மாமன் மகளை மதினி என்பார்கள். நான் அழைத்த பொழுது ஒருவர் "அண்ணி" என்று அழை , மதினி என்பது பட்டிக்காடு போல் உள்ளது என்றார்கள். அவர்கள் இருப்பது ஒரு பட்டிக்காடு என்பது வேறு விஷயம். இதுக்கெல்லாம் விசனப்பட முடியுமா? அப்பப்ப "ஃபீல்" பண்ணுவேன்.

வழக்கில் இருந்தாலும் வீட்டில் இல்லாது போனதால் வழக்கொழிந்த சொற்கள் அம்மி, குழவி, உரல், உலக்கை, சல்லடை, சிணுக்கரி (சிடுக்கெடுக்க உபயோகிப்பது. கம்பி போல் இருக்கும்), ஊதாங்குழல். குழந்தைக்கு மருந்து புகட்ட சங்கு பயன்படுத்துவோம். இப்பொழுது தான் ப்ளாஸ்டிக் குப்பிகள் மருந்தோடு வந்துவிட்டனவே!! வாக்கர் வந்ததால் நடைவண்டியும், சிம்னியால் புகைபோக்கியும், சோப்பினால் படிகாரமும் வழக்கொழிந்து போயின.


தமிழைச் செம்மொழி ஆக்கிய அரசே இன்னும் பலரால் கவர்ன்மெண்ட் என்றே அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட்டை ஆகத்தாகக் அழைக்கும் கட்சிகள் ஆடி/ஆவணியாக அழைத்தால் , தமிழ்த் தேதியில் பிறந்த நாளைத் தலைவர்கள் கொண்டாடினால் தமிழ் மாதங்கள் வழக்கொழியாமல் இருக்கும். இன்றும் என் அம்மா உறவினரோடு பேசுகையில் தமிழ் மாதங்களில் தான் நாங்கள் பிறந்த தேதியைக் கூறுவார். இவர்களைப் போன்றோராலும், மாதங்களுடன் சேர்ந்து விட்ட பண்டிகைகளாலும் (தைப்பூசம், மாசி மகம் ....), கல்யாணம், கோயில் காரியத்திற்கான பத்திரிக்கைகளாலும் இன்னும் தமிழ் மாதங்கள் உயிரோடு இருக்கின்றன.

வாழ்க தமிழ்!!!

இப்பதிவைத் தொடர நான் அழைக்க விரும்புவோர்:

முத்துச்சரம் இராமலஷ்மி மேடம்
தமிழ் திகழ்மிளிர்
மழைக்கு ஒதுங்கியவை அ.மு.செய்யது