என் மேகம் ???

Friday, May 29, 2009

கடிதங்களில் தவறியவை...

"சிறகு இல்லாமல் பறவை ஒன்று
தேசம் எங்கும் திரியும்
பிடிபட்டால் திறந்து விடும். அது என்ன? "

"ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?"


கிட்டதட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் ஒட்டி அத்தை மாமாவால் பிரிக்கப்பட்டு இருந்த கடிதம் , சமீபத்தில் மீண்டும் நான் பிரித்து படிக்க கிடைத்தது. கடிதத்தின் வாசனையும் எழுத்துக்களும் அப்படியே இருப்பதாகத் தோன்றியது. காலத்தைக் கடக்கச் செய்யும் கருவியாக அந்த கடிதம் தெரிந்தது.

சிறு வயதில், நாங்கள் கோவையில் இருப்போம். பெற்றோரின் உறவினரெல்லாம் சிவகாசியில். என் அண்ணன் (பெரியம்மாவின் மகன்) ஒருவர் சிவகாசியில் இருந்து வாரம் ஒரு கடிதம் போடுவார். நாங்கள் குவார்ட்டர்ஸில் இருந்தோம். அப்பாவின் அலுவலகத்திற்கு தான் கடிதம் வரும். தினம் அப்பா வரும்பொழுது கடிதத்திற்காக நானும் அம்மாவும் ஓடிப்போய் அவரை வரவேற்போம். ஊரில் நடக்கும் எல்லா விசயங்களும் அந்த கார்டில் இருக்கும். அந்த அண்ணனுக்கு மணமானவுடன் அடுத்த அண்ணன் கடிதம் எழுதும் வேலையை எடுத்துக் கொண்டார். அவருக்கு மணமானவுடன் அடுத்த அண்ணன். அதன் பிறகு தொலைபேசி வந்துவிட்டது.

அப்பொழுது இன்லாண்ட் லெட்டர் வசதியானவர்கள் எழுதுவதற்காகவோ மிக முக்கிய விசயம் எழுதுவதற்காகவோ இருக்கும். வெளிநாட்டு தபால்கள் தனியாகத் தெரிந்து பெறுநரை ஆச்சரியமாகப் பார்க்கச் செய்யும். தபால்களில் இருக்கும் தபால்தலைகளுக்காகக் குழந்தைகள் இடையே சண்டைகள் நடக்கும்; அதைக் கொடு நான் இதைத் தரேன் என்று பண்ட மாற்றங்கள் நடக்கும்.

தொலைபேசி வந்தாலும், சில நாட்கள் பொங்கல்/தீபாவளி/பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்பட்டன. பொங்கல்/தீபாவளி வரும்பொழுதே கடையில் சென்று கட்டு கட்டாக வாழ்த்து அட்டைகள் வாங்கி வந்து, யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று பட்டியலிட்டு, எது யாருக்கு என்று நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் வாழ்த்து அட்டைகள் அஞ்சலில் சேர்க்கப்படும். அலைபேசிகள் வந்த பின் இந்த பரிமாற்றமும் குறுஞ்செய்தியாகி விட்டது.

மீண்டும் கடிதங்களைக் காணும்பொழுது அதன் தகவல் பரிமாற்றத்தின் வலிமை புரிகிறது. தொலைபேசியில் ஐந்து நிமிடம் பேசுவதை கடிதத்தில் எழுத எவ்வளவு நேரம் எடுப்போம்? யோசித்து யோசித்து எழுதுவதே ஒரு அழகு. நான் வீட்டை விட்டு விலகி இருந்த நேரங்களில் எல்லாம், தொலைபேசி பேச்சுக்கள் அந்த நிமிட சுகம் மட்டுமே தரும். கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் அம்மா அருகே இருப்பது போன்ற உணர்வு தரும். விடுதியில் கடிதம் இல்லாமல் வெற்றாக இருக்கும் கடிதப்பெட்டி கொடுக்கும் வெறுமை கொடியது. உறவுகளுக்கு அன்போடு எழுதும் கடிதங்கள் எழுதுவோருக்கும் படிப்போருக்கும் எத்தனை பக்கங்கள் இருந்தாலும் அலுப்பைத் தருவது இல்லை, புத்துணர்ச்சியைத் தரும் ஏதோ ஒன்று அந்த கடிதத்துடனே வந்திருக்கும்.

ஒரு முறை சித்தப்பாவிற்கு எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை. ஏன் என்று விசாரித்தால் இனிஷியல் போடாது அவர் பெயரை முகவரியில் எழுதியதை மரியாதை குறைவாக அவர் கருதி இருந்ததே காரணம் என்று தெரிந்தது. இப்படி தான் எனக்கு இனிஷியலுக்கு பலர் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிந்தது.

என் கடிதங்கள் "அன்புள்ள" என்று தொடங்கி "நலம். நலமறிய ஆவல்" என்று தொடர்ந்து "இப்படிக்கு அமுதா" என்றே முடிந்துள்ளன. ஒவ்வொரு கடிதத்திலும் வீட்டில் உள்ள அனைவரும் நலம் விசாரிக்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு வரச் சொல்லும் அழைப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். அது பாவனையாகத் தெரிந்ததில்லை. நேரில் சொல்ல முடியாத பல விசயங்கள் கடிதங்களில் அழகான வடிவம் பெறும். மனதை மிக அழகாகத் திறந்து காட்டும் திறவுகோலாக கடிதங்கள் இருந்தன.

இன்று என் குழந்தைகள் பள்ளியில், விடுப்புக்கு கூட விண்ணப்பம் நிரப்பித்தர வேண்டி உள்ளதே அன்றி கடிதம் இல்லை. என்றாலும் அவர்களுக்கு கடிதம் எழுதுதல் பற்றி பாடம் உண்டு. உனக்கு பிடித்த யாருக்கேனும் கடிதம் எழுது பாப்பா என்றேன். ஊரில் இருக்கும் அவள் தங்கையை நலம் விசாரித்து, எப்படி எல்லாம் அவளுடன் இங்கு நேரம் செலவழிக்க விருப்பபடுகிறாள் என்று எழுதினாள். அன்பை வெளிப்படுத்திய மிக அழகான கடிதம் அது. இன்று கடிதங்கள் எழுதாமல் பல அழகான விசயங்களைத் தவறவிடுகிறோம்.

Wednesday, May 27, 2009

ஓசை ஒத்தப்பாக்கள்

திகழ்மிளிரின் ஓசை ஒத்தப்பாக்கள் பதிவு படித்தவுடன் எழுந்த ஆவலில் எனது முயற்சி இது. இந்த முயற்சிக்கு திகழ்மிளிரின் ஊக்கத்திற்கும் உதவிக்கும் எனது நன்றிகள்.






மழலை முகத்தில் சிரிப்பு
பட்ட வலிகள் மறந்து
மனதில் வந்தது பூரிப்பு






மலர்ந்து மின்னும் பூக்கள்
மரங்களிலும் சுவர்களிலும்
சீரியல் மின் விளக்குகள்





தொலைந்து போனது கனவு
தேடிச் சென்றதில்
கலைந்து போனது நனவு






பரந்து கிடக்கும் புல்வெளி
அழகாக சிரிக்கும்
பூவின் மீதொரு பனித்துளி


<படங்கள்: இணையம்>

ஒரு நாள் நானும்...

ஒவ்வொரு வயதிலும் பெரிதானால் என்னவாக ஆக வேண்டும் என்ற கேள்வி வரும். சிறுவயதில் முதலில் டீச்சர் டாக்டர் என்று தான் பிம்பங்கள் மனதில் ஈர்க்கும். அதன் பின் அது மாறி மாறி நினைத்தது (அ) நினைக்காதது என்று ஏதோ ஒன்றில் முடியும்.

நான் பெரியவள் ஆனால் என்ன ஆகணும் என்று எங்களிடம் கேள்வி எழுப்பிய யாழ்குட்டி , இப்பொழுது முடிவு செய்து விட்டாள்.. டாக்டர் ஆக. அவளும் அவள் தோழியும் டாக்டர் ஆகிறார்களாம். எனவே கிடைக்கும் புத்தகமெல்லாம் படிக்கிறார்கள், கிடைக்கும் இலையையும் பூவையும் மருந்தாக்க முயல்கிறார்கள். "டாக்டராகி என்ன செய்வ?" என்றேன், காசு வாங்காமல் ஊசி போடுவாளாம்.

ஒரு டி.வி ஷோவில் கூட நான் டீச்சர் ஆவேன் என்ற நந்துவுக்கு இப்பொழுது அது விருப்பமில்லை. "நான் பெரியவளாகி என்ன ஆக" என்று என்னிடம் கேட்டாள். "நீ வளர வளர உனது விருப்பங்கள் பொறுத்து , நீ ஆக நாங்கள் உதவுவோம்" என்றேன். சற்று யோசித்து விட்டு டீச்சர் , சயண்டிஸ்ட் இல்லாமல் ஏதோ ஒன்று என்றாள். ஏன் என்றேன். க்ளாஸ் லீடரா இருந்தே இந்த பசங்க தொல்லை தாங்கலை. இதில் டீச்சர் ஆனால் அவ்ளோதான், நான் மாட்டேன்பா என்றாள். சயண்டிஸ்ட் என்றால் என்ன கண்டுபிடிக்கணும்னு இரவு பகலாக யோசிக்கணுமாம். அதனால் வேண்டாமாம்.

இன்னும் இவர்கள் என்ன எல்லாம் ஆக ஆசைப்பட்டார்கள் என்று பதிவு செய்து அவர்கள் ஏதோ ஆகும் பொழுது கொடுத்தால் என்ன சொல்வார்கள்? (உனக்கு வேற வேலையே இல்லையா அம்மா என்று?)

Monday, May 25, 2009

பரிமாறல்

குழந்தையின் குறும்புகள்
பிள்ளையின் பிரதாபங்கள்

அளவிலா அறிவுரைகள்
அலுவல் தகவல்கள்

குடும்ப விடயங்கள்
உலக நடப்புகள்

அசட்டுக் கேள்விகள்
அன்பு ததும்பும் பேச்சுகள்

சின்ன சின்ன கோபங்கள்
கேலிகள் சிரிப்புகள்
வருத்தங்கள் வாழ்த்துகள்

என்று...
வாழ்வின் ருசிகளின்
பரிமாறலுக்கு சாட்சியாக
உணவு மேசையில்
பலவண்ணத்தில் சிதறிக்கிடக்கும்
மிச்ச பருக்கைகள்

Thursday, May 14, 2009

பனியுலகப் பயணம்

பனி பொழியும் இடத்திற்கு
அழைத்துச் செல்ல
ஆசைப்பட்டாள் சின்ன மகள்

மறுக்க மனமின்றி
மென்மையாகச் சிரித்து வைத்தேன்
மெளனம் சம்மதம் என
கற்பனையில் மிதந்தாள்

பனிநீரில் மீன் பிடிக்க
மண்புழு வாங்கி வந்தாள்

எழில்மிகு உருவங்கள்
பனிக்கட்டிகளில் உருவாகின
பனிச்சறுக்கு விளையாட்டில்
இருவரும் களித்திருந்தோம்

தாயாக உருமாறி
போர்வை தந்தாள்
பக்குவமாக சமைத்து
ருசியாகப் பரிமாறினாள்

பனிபிரதேசத்தின் பிரவேசத்தில்
களைத்து கண் மலர்ந்தாள்
பனிபூத்த மலர்போன்று
புன்னகையுடன் அவள்
மற்றொரு கற்பனை தேசத்தில்...

அவள் நிம்மதியின் தாக்கத்தில்
மனதில் அமைதி பூத்தது

பசியின் கொடுமையும்
யுத்தத்தின் கொடூரமும்
பிஞ்சுகளின் நிம்மதியை
பறிக்கும் நினைவு
மனதில் வலியை விதைத்தது

புவி எங்கும் அமைதி பூக்கட்டும்
என்ற பிரார்த்தனைகளோடு
முடிந்ததது பனியுலகப் பயணம்

Wednesday, May 6, 2009

மின்சாரமில்லா ஒரு பொழுதில்...

மரங்களைத் தொலைத்துவிட்டு
சுவாசிக்க மட்டுமே காற்றுள்ள
இடமல்லாத ஓரிடத்தில்...
மின்சாரமில்லா ஒரு பொழுதில்...

சுழன்று சுழன்று
வெளிக்காற்றைத் துரத்திய
மின்விசிறி நின்றது

சன்னல்கள் திறந்ததால்
சுதந்திரமாக நுழைந்தன
காற்றும் வெளிச்சமும்

சுட்டிகளைக் கட்டி போட்ட
தொலைகாட்சியின் அமைதியில்
புதுப்புது விளையாட்டுகள்
ஆரவாரத்துடன் உதயமாயின

வெகுநாளாகக் காத்திருந்த
பேச்சுக்கள் வீட்டிற்குள்
கலகலப்போடு கேட்டன

அலமாரியில் தூங்கிய
புத்தகங்கள் எழுப்பப்பட்டு
வாசிக்கப் பட்டன

அம்மி இருந்த வீட்டில்
கைமணத்துடன் அரைத்த
குழம்பின் வாசனை நுழைந்தது

இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்கின் ஒளியில்
காட்சிகள் மாயமாயின