என் மேகம் ???

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, March 28, 2026

வரையறைகள்

 வரையறைகள் 

------------------


உயிரை வரையறுப்பான் ஒருவன்

உணவை வரையறுப்பான் ஒருவன் 


ஒழுக்கம் வரையறுப்பான் ஒருவன்

ஒற்றுமை வரையறுப்பான் ஒருவன்


கடவுளை வரையறுப்பான் ஒருவன்

கருத்தை வரையறுப்பான் ஒருவன்


காலத்தோடு மாறும் என்பான் ஒருவன்

காலத்தால் மாறாதென்பான் ஒருவன்


தனக்கென மாற்றுவான் ஒருவன்

தனக்கல்ல என மாற்றுவான் ஒருவன்


வரையறைப்பவனிடம் கேள்வி‌ கேட்டால்

வரையறைக்குள் சிக்காதவர் ஈனர் என்பான்


தொல்லை...

அவரவர் வரையறைக்குள் இருப்பதல்ல 

அடுத்தவர் வரையறையை சீண்டுவதால்

Friday, March 27, 2026

டீக்கடை நினைவுகள்

 உண்ட மயக்கத்தில் 

சாய்வு நாற்காலியில் 

டீக்கடை நினைவுகளை 

இதமாக அசைபோடும்...

தாத்தாவின் மனம்.


தேநீர் போடும் நேரம்

கணக்கில் கொண்டு 

சற்றே கண்ணயர்வாள்

டீக்கடை கடந்து செல்வதே

போராட்டமாகக் கடந்த பாட்டி

Sunday, March 8, 2026

மகளிர் தினம்

 சிறகொடிந்தாலும்

சிறகிழந்தாலும்

கற்களால் வீழ்ந்தாலும்

கண்ணாடித் திரையிட்டாலும்

எல்லோருக்குமான வானில்

தன் இடம் இருத்திக் கொள்ள

காலம் காலமாக போராடுபவள்...



அன்பெனும் போர்வையில் அழுத்தம் ..

ஆகாதென்று கூக்குரல் ..

இயலாது என்று முட்டுக்கட்டை ..

போதாதா என்று போர்க்குரல்..

சில பறவைகளின் வரவுக்கே

வானம் வசமானது என கூக்குரல்கள்


மனம் தளருவதில்லை  அவள்

கடக்கும் ஒவ்வொரு அடியும் 

நாளைய பெண்ணிற்கு

வானம் வசப்படும் வழி



மகளிர்...

தொட்டு விட்ட உயரம்

கடந்து வந்த தூரம்

கொண்டாட மட்டுமல்ல


தடைகளும் திரைகளும் 

சமூகம் தகர்க்க

விழிப்புணர்வு தரும் தினம்


எல்லோருக்கும் வானம் வசப்பட

இனிய மகளிர் தின வாழ்த்துகள்💐

Sunday, February 8, 2026

பச்சோந்தி!

 இயற்கை வரைந்த ஓவியம் 

அதுவே  ஒரு நிறம்

நிறக் கண்ணாடி கண்களுக்கு 

அதுவே வேறு நிறம்

கவி வடித்த கவிதை 

உதிர்த்த கருத்து ஒன்று

மனக்கண்ணாடி வாசிப்பில்

உதித்த கருத்தோ வேறொன்று...

Monday, December 1, 2025

ஓய்வு

 மழை ஓய்ந்துவிட்டது 

பேச்சு ஓயவில்லை


காற்று ஓய்ந்துவிட்டது 

கதைகள் ஓயவில்லை 


கண் ஓய்ந்துவிட்டது

கனவுகள் ஓயவில்லை 


கை ஓய்ந்துவிட்டது 

வேலைகள் ஓயவில்லை 


கால் ஓய்ந்துவிட்டது 

பயணங்கள் ஓயவில்லை 


மனம் ஓய்ந்துவிட்டது 

எண்ணங்கள் ஓயவில்லை


எது ஓய்ந்தாலும்

பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...

Monday, September 8, 2025

சிவப்பு நிலா

செங்கதிரோன் ஒளியோ சுடும்

செந்நிலவோ தண்மை தரும்


வெட்கமல்ல வெறுப்புமல்ல கோபமல்ல

வெண்ணொளிதான் அள்ளித் தந்தது


தன்னொளி அல்ல என்றாலும்

 தண்ணொளி தந்தது முழுமதி 


புவி மங்கை தந்ததோ  நிழல் திரை

புவி மாந்தர் தந்ததோ தூசும் மாசும்


வெண்ணொளியும் அதில் சிதறியது

வெண்ணிலவும் சிவந்து தெரிந்தது


கவியின் வரிகள் வண்ணம் கொண்டது

கதை பின்னுவோர் கற்பனை கூடியது


வல்லுநர்கள் ஆராய்ச்சி விரிந்தது

வலை எங்கும் இதுவே செய்தி ஆனது


நிழல் திரையும் விலகியது

நிலவும் பால் நிறம் கொண்டது


காலம் காலமாக திகழும் இது

காலம் பிறழாது நிகழும் இது


காலம் நழுவும் மனிதனுக்கு ...

காலத்தோடு பிறழும் மனதுக்கு...

காட்சிகள் எல்லாம் அதிசயமே


Tuesday, August 5, 2025

இயற்கை

 இயற்கை 

---_--------

புழுதி படர்ந்த காற்றில்

வண்ணம் பூசி சிறகடித்தது

வண்ணத்துப்பூச்சி ஒன்று


நடை பயிற்சியாளர்கள் நகர்ந்த பின்

நடை பயின்று உலாவரும்

மாடப்புறாக்கள் தன் இணையோடு


விரைந்து செல்லும வண்டிகளிடையே

ஊர்ந்து சென்று பிழைத்தோம் என

கூட்டுக்குள் புகுந்த நத்தைகள் 


ஒய்யார வீட்டருகே

தன் கூட்டை வைத்த மகிழ்ச்சியில்

உணவு தேடிச் செல்லும் காகம்


மரத்தில் கூடு எனக்கும்தான் என

இலை மூடி காற்றில் அசையும்

எறும்புகளின் இல்லங்கள் 


விட்டார்களா நம்மை இவர்கள் என

சீட்டி அடித்து அதிசயிக்கும்

இரட்டை வால் குருவிகள்


மனிதன் ஆக்கிரமிப்பு செய்தாலும்

ஓயாத காற்றின் சுழற்சியாக

தன்னை மீட்டுக் கொண்டே இருக்கும்...

 இயற்கை

Sunday, July 27, 2025

நினைவு நல்லது வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம்-ஆண்டு விழா கவியரங்கம்



நினைவு நல்லது வேண்டும் 

----------------------------------------------

தமிழ்த் தாய்க்கு 

முதல் வணக்கம் 

நற்றமிழ் போற்ற

கூடி இருக்கும் அவையோர்க்கு

தமிழ் வணக்கம் 


இன்று தமிழ் அன்னை எனக்களித்த தலைப்பு 

மகாகவியின் நல் வரிகள் ...

'நினைவு நல்லது வேண்டும் ' 


நினைவு என்று எதைச் சொல்வீர்?


கடந்த காலத்தின் தடங்களா?

இக்கணத்தின் மனதின் துடிப்பா?

இல்லை

நாளைய பொழுதின் கனவா?


நினைவென்பது

நனவின் முத்திரைகளா?

அல்லது 

கனவின் சித்திரங்களா?


பாரதி கூறும் நினைவோ...

கனவுகளை மெய்ப்படுத்தும்...(2)


நினைவை

 சிந்தையில் நிறுத்தினால் அன்றோ

கனவுகள் நனவாகும்


 நிகழ்வுகள் நலமாக...

உலகம் உய்ய...

நினைவு நல்லது வேண்டும்


உயிரின் படைப்பில்..

உடலுக்கு உருவம் உண்டு 

மனதிற்கு வடிவம் இல்லை...


மனதை...நாம்

வடிவமைக்க வேண்டும் ...

சுயமாக சிந்தித்து 


செதுக்க வேண்டும் ...

சிந்தையில் 

எண்ணங்கள் நிலைக்க செய்து


எனவே...

வாழ்வை நிர்ணயிக்கும்...

மனதிற்கு வடிவம் இல்லை 


மனம் ஒன்று இல்லை எனில்

மனிதன் என்று சொல்வோமா?

குணம் அது திரிந்து விட்டால்

மனிதம் மறைந்து போகாதோ? 


உண்பது நாழி உடுப்பவை இரண்டே 

என்பதே வாழ்க்கை என்றானால்

தமிழில் திளைத்து மனமுருக

சங்கமம் இங்கே நடந்திடுமா? 


மிருகங்களுக்கும் மனமுண்டு

அவற்றுக்கென குணமுண்டு

மனிதனின் குணமென எதைச் சொல்வீர்?

தங்கக் கோட்டையில் வாழ்ந்தாலும் 

கள்ளமும் கயமையும் நிறைந்திருந்தால்

உதடுகள் மட்டும் புகழ் பாடும்

உள்ளம் அதையே நகையாடும்


மனிதம் தழைக்க உலகம் சிறக்க

நினைவு நல்லது வேண்டும் crescendo - 2


அல்லவை சொல்ல தேவையில்லை 

தரணி அறிய தானாக வலம்வரும்

நல்லவை சொல்வது அரிதென்றாலும்

காரிருள் சூழ்ந்தாலும்

ஒற்றை தாரகையாக வழிகாட்டும்


இருள் படர்கிறது என

இருளோடு உறைவீரோ?

மின்னும் நட்சத்திரத்தின்

ஒளித்துகளாய் ஒளிர்வீரோ?

ஒளித்துகளாக நினைத்தால் அன்றோ

கதிராக இருள் விலக்க

வழி தோன்றும் 


வாழ்வும் மிளிரும் உலகும் ஒளிரும்

நினைவு நல்லது வேண்டும்


உடலின் திண்மை ஊன் வளர்க்கும்

மனதின் திண்மை உயிர் வளர்க்கும்

நன்மை பயக்கும் செயலால் தான்

திண்மை என்பதே மேன்மையுறும்

செயல்கள் நலமாய் அமைந்திட

நினைவும் நலமாய் வேண்டும் 

உணர்ந்தே வரம் வேண்டினான் மகாகவி 

நினைவு நல்லது வேண்டும்  என...


எண்ணியது ஈடேற்றும்

நினைவென்பது...

காலத்தின் முகவரி

மனதின் முகம்

உயிரின் நாதம்

உடலின் மறைபொருள் 

வாழ்வின் நிலை 

இன்று கனவின் பிம்பம் 

அதுவே

நாளை நனவின் உருவம்..


எனவே நாளை

நாமும் நலம்பெற

உலகில் யாவும் நலம்பெற

நினைவு நல்லது வேண்டும் 


வாழ்வது ஒருமுறை தான்

அதில்

பாரதி சொன்ன

வேடிக்கை மனிதராக வீழ்ந்திட வேண்டாம் 

வழி காட்டும் 

துருவ நட்சத்திரமாக வாழ்ந்திட வேண்டும்(2)

அதற்கு

நமக்கும் வரம் வேண்டும் 

நினைவு நல்லது வேண்டும்


மகாகவியின் வரிகளைப் பகிர நல் வாய்ப்பளித்ததற்கு நன்றி. வணக்கம்


Saturday, October 19, 2024

சுழல் (ழகரக் கவியரங்கம்)

 


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் - ழகரக் கவியரங்க கவிதைகள்


சுழல் (ழகரக் கவியரங்கம்)

--------------------------------------------

உலகமே சுழலும்

சுழல் அங்கு தொடங்கும்

உலகம் சுழலாது போனால்

உறைபனிதானே மிஞ்சும்

உலகம் உய்யத் தேவை சுழலே

சுழல் பற்றி படைத்தளிக்க வந்தேனே!

 

வற்றா நதியாம் தமிழ்

எழில்மிகு மொழியில்

சொற் சுழலில் தேடி

கவிதை கொணர்ந்தேனே

 

நாவைச் சுழலச் செய்யும்

சிறப்பு ழகரமே...

 உன் உச்சரிப்பு சுழலில்

என் நா பிறழாது

சுழல் பற்றி

உரைத்திட

விழைகிறேன்

 

உலகமே சுழலும்

சுழல் இங்கு தொடங்கும்

 

சுழலும் பூமியில்

சுழலும் வாழ்க்கையில்

எத்தனை சுழல்கள்?

 

 பிறப்பு இறப்பு

இன்பம் துன்பம்

வெற்றி தோல்வி

நிழல் அழல்

புகழ் இகழ்

நன்மை தீமை

எழல் விழல்

இவற்றின் சுழலன்றோ

வாழ்க்கை...

 

நீரின்றி அமையாது உலகு

சுழலின்றி நிலையாது நீர்

நீர் காற்றின் சுழல் வேண்டும்

மழைக்கு...

பருவங்களின் சுழல் வேண்டும்

மண்ணுயிரின் உய்வுக்கு

 

உலகமே சுழலும்

சுழல் அங்கு தொடரும்

உலகமே சுழலும்

சுழல் அங்கு தொடரும்

 

எதிர் விசைகளின்

சந்திப்பில் உண்டாகும்

அலைபாய விடும் ...

சுழல்

 

விசைகள் தேவை இல்லை

வாழ்வில் உழலும்

சுழல்களுக்கு

 

சுழல் காற்றின் இலைகளாக

உணர்விழைகளின் சுழல்

மனித மனம்

 

இதயங்களின் இழுப்பில்

மனங்களைச் சிறையிடும்

காதல் எனும் சுழல்

 

மழலையின் மிழற்றலில்

மயங்க வைக்கும்

அன்பு எனும் சுழல்

 

கோப தாபங்களால்

மனிதன் விழுவது

மருளெனும் சுழல்

 

பொன் மண் புகழ்

என உள்ளிழுக்கும்

ஆசை எனும் சுழல்

 

நாவின்‌ சுழலில்

 வன்சொல் சுட்டால்

மனமாகும் ஆழ் சுழல்

 

உலகமே சுழலும்

சுழல் அங்கு மயக்கும்

உலகமே சுழலும்

சுழல் அங்கு மயக்கும்

 

முதலும் இன்றி

முடிவும் இன்றி

இயங்கும் சுழல்

 

பேரண்டத்தில் நிலைக்க

அண்டங்கள் சுழலும்

அண்டத்தில் நிலைக்க

கோள்கள் சுழலும்

 

கோள்கள் சுழல

ரவியும் சுழலும்

ரவி சுழல

உயிர்கள் சுழலும்

ரவியோடு

நிழலும் சுழலும்

 

அன்பு சூழ் உலகம்

தாய்மையால் சுழலும்

 

அன்பு சூழ் உலகம்

தாய்மையால் சுழலும்

 

குழவியின் உலகம்

தாயிடம் சுழலும்

 

காற்று சுழல

குழலும் இசைக்கும்

 

தழல் சுழல

கருவிகள் உருவாகும்

 

குப்பை சுழல

இயற்கை உரமாகும்

விழலும் பசுமையாகும்

 

சுழல் விளக்கு

சுழன்று வழிகாட்டும்

சுழல் திட்டம்

அதிக வாய்ப்புகள் தரும்

சுழல் கோப்பை

மீண்டும் நம்பிக்கை ஊட்டும்

 

இறைவனின்

சங்கு சக்கரமென்றாலும்

மனிதனின்

வண்டி சக்கரமென்றாலும்

சக்கரத்தின் சுழலன்றோ

உலகை இயக்கும்

 

உலகமே சுழலும்

சுழல் அங்கு இயக்கும்...

உலகமே சுழலும்

சுழல் அங்கு இயக்கும்...

 

ஈசனின் கழலடி சுழல

தாண்டவம் உதித்தது

 

பாற்கடலில் மேரு சுழல

அமிழ்தம் கிடைத்தது..

அமிழ்தம் மட்டுமா...

ஆலகாலமும் உருவானது

 

வாழ்வில் உழல்கிறோம்

நாளும் சுழல்கிறோம்

நன்றும் தீதும் நம்முடனே..

மனதை அகழ்ந்து

 மனஞ்சுழல் விலக்கினால்

வாழ்க்கை அமிழ்தமே

மனஞ்சுழல் விலக்கினால்

வாழ்க்கை அமிழ்தமே

 

ஓடும் நீரில்

சிக்கும்வரை

தெரிவதில்லை

சுழலின் இருப்பு

 

இயற்கையின்

சுழல் நீரோ ..

சுழல் காற்றோ..

மீள்வது கடினம்

 

தட்டாமாலை சுற்றில்

சுழலின்

ஒருதுளி உணர்கிறோம்

 சட்டென மீள்கிறோம்

நிலை கொள்கிறோம்

 

வாழ்வின் சுழல்கள்

மாயச் சுழல்கள்

மனம் வைத்தால்

தட்டாமாலை சுற்றென

மீண்டு வரலாம்

 

உலகமே சுழலும்

சுழல் நம்மை செதுக்கும்

உலகமே சுழலும்

சுழல் நம்மை செதுக்கும்

 

நல்லதை நினைப்போம்

அல்லதைத் தவிர்ப்போம்

எண்ணச் சுழல்தனை

வண்ண மயமாக்குவோம்..

நம்..

எண்ணச் சுழல்தனை

வண்ண மயமாக்குவோம்..

Monday, September 16, 2024

அம்மாவும் பண்டிகைகளும்

 ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொருவருக்கும் 

பார்த்து பார்த்து 

செய்வாள் அம்மா 


பண்டிகை என்றால் 

கடவுளுக்கும் சேர்த்து 

பார்த்து செய்வாள் 

அம்மா 


பள்ளிக்கு விடுமுறை

அலுவலுக்கு விடுமுறை 

அம்மாவுக்கு அன்று

கூடுதல் வேலை


சில அம்மாக்களுக்கு 

வேலைதான் ஊக்கம் 

முத்தான வியர்வையில் கூட

முகமெல்லாம் புத்துணர்ச்சி


சில அம்மாக்களுக்கு

அயர்ச்சி தான் என்றாலும் 

அன்பாலும் ஆசையாலும்

முகமெல்லாம் மலர்ச்சி 


மலர்ச்சி பழகியதால் 

தெரிவதே இல்லை

அயர்ச்சி ஆசை

ஏக்கங்கள்...


வேலை பகிர்ந்து 

மனதும் பகிர்ந்து 

கொண்டாடும் பண்டிகைகள்

மேலும் சுவை கூடின

பகிர்ந்து பன்மடங்கான

அன்பின் சுவையால்....

Tuesday, September 3, 2024

உலக கடித தினம் (Sep 1)

கடிதம் என்றவுடன்

சிறகடிக்கும் மனது...

உறவுகளின்... உணர்வுகளின்...

சிறகல்லவோ அவை?


தூரத்தால் பிரிந்த

 உறவுகளைப் பிணைத்த 

காகித இழையன்றோ?


தபால் அட்டையில்

நுணுக்கிய எழுத்துக்கள் ...

எழுத இடமின்றி

எழுதாத சொற்களைத்

தேடும் மனம்


கொஞ்சம் காசிருந்தால்

நீலக் காகிதம்

பிறர் அறியாமல் கதைக்கவோ

மிக முக்கியம் என சொல்லவோ...

என்றாலும்,

இடப் பற்றாக்குறை தான்



சுழியுடன் துவங்கி..

நலம் விசாரித்து..

செய்திகள் பகிர்ந்து ..

அன்பான கையெழுத்துடன்

உள்ளம் தொட்ட கடிதங்கள் 


பிறப்பு இறப்பு

கொண்டாட்டங்கள் சண்டைகள்

கோப தாபங்கள்

என நம் வாழ்வின் சுவடுகள்

கடிதங்கள் 


கையெழுத்தின் உணர்வுகளை

மின்னெழுத்துக்கள் பிரதிபலிப்பதில்லை

கோபத்தில் கடிதத்தை

கிழிக்கும் திருப்தி

மின்னுருவை அழிப்பதில் 

கிடைப்பதில்லை 


எப்பொழுதோ எடுத்து வைத்த

ஒற்றைக் கடிதமது..

எழுதியவர் இல்லை என்றாலும் 

இன்றும்  சொல்கிறது 

அவரின் அன்பை...


பாட்டிக்கு எழுதத் தெரியாது 

பேரப்பிள்ளைகள் 

கையெழுத்தில்

செய்தி வரும்


அம்மாவின் கையெழுத்து

முத்து முத்தாக 

நலம் விசாரிக்கும்


அப்பாவின்

கையெழுத்து 

கிறுக்கலாக

ஆறுதல் சொல்லும்


கையெழுத்து 

எப்படி இருந்தாலும் 

மனதின் மொழி

புரிந்து விடும்

ஐந்திணை கவிதைகள்

 

இயற்கையை
அறிந்த மனிதர்கள்
நிலம் ஐவகை என்றனர்
வாழ்வியலை இணைத்து
ஐந்திணை என‌ப்
 பண்பாடினர்
வாழ்க்கை கொண்டாட்டமானது

இயற்கையை 
அரித்த மனிதர்கள் 
சுயநலமாக வாழ்ந்து 
மண்ணுலகை வருத்தி
நானிலமும் பாலையாக
பாழ்செய்ய
வாழ்க்கை திண்டாட்டமானது

....

மலையைத் தெய்வமாகக்
கொண்டாடி வளம்காக்க
மழை பொழிந்தது
மரங்கள் வளர்ந்தன
மலை தான் என
பந்தாடுகிறான் மனிதன் 
மண் சரிந்தது
மரங்கள் வீழ்ந்தன
குறிஞ்சி நிலம் ...
நஞ்சென மாறுமோ?


மானுண்டு மயிலுண்டு
மந்தியுண்டு களிறுண்டு 
வனவளம் மிகுதி உண்டு
மனிதன் ஆசை கொண்டு
அளவுக்கு மீறிக் கொண்டு 
முல்லை நிலம்...
இல்லை என்றாகுமோ?

பசுந்தாவரங்கள் சிலிர்த்தாட
ஆவினங்கள் அசைபோட
நீரோடைகள் நிறைந்தோட
செழித்து மலர்ந்திருக்க
அழித்துப் பார்க்கிறான் மனிதன் 
மருத நிலம்...
கருகிடுமோ அதன் வளம்?


கடலின்றி பூமியில்லை
அதன் அழகுக்கோர் எல்லை இல்லை
பல்லுயிர் வாழும் உலகமது
காற்றும் அலைகளும் சொன்னால்தான்
காலங்கள் நமக்கு இசைவாகும்
காக்கும் கடல்... மனிதனால்
இன்று குப்பைத் திடல்
நெய்தல் நிலம்...
தொய்வதும் முறையோ?


திரிந்து வரும் நிலமெல்லாம்
பாலையானால்
பூவுலகின் அழிவன்றோ...
கொற்றவையை வேண்டி‌ நின்றேன்
நகைத்தாள் அவள்

சுற்றும் இந்த பூமி
பல்லாயிரம் ஆண்டுகள் 
பல்லுயிர்களைக் கொண்டது
பூமகளுக்குத் தெரியும் 
தன்னைக் காத்துக்கொள்ள 

வளங்களைக் காத்தால்
மனிதகுலம் வாழும்
வளங்களை அழித்தால்
மனிதகுலம் அழியும்

பெருமழையொன்றில்
தன்னை மீட்டுக் கொள்ளும் 
ஆற்றைப் போல்
பூமி தன்னை மீட்டுக்கொள்ளும்

நீ அழித்துக் கொண்டிருப்பது
உன் இருப்பிடத்தை அல்ல
உன் இருப்பை...
நீ மீளும் வழி உன் கையில் ...
என்றே சிரித்தாள் அன்னை

Sunday, August 25, 2024

முதுமையிலும் உழைப்பு


தள்ளாத வயதிலும்

துள்ளும் மனமும் 

துடிப்புடன் உடலும்

உழைக்கும் முனைப்பும்

இருந்தால் வரம்


தள்ளாத வயதிலும்

இயலாமை என்றாலும்

உழைத்தால் தான்

உணவென்றால்

கொடுமை கொடுமை


வரம் கிடைப்பது

கடவுள் அருள் மற்றும் 

தன் மன உறுதியால்...

கொடுமை என்பது

மனமில்லா மனிதர்களால்..

Wednesday, May 17, 2023

கால சுழற்சி

 சுழன்று கொண்டே இருக்கிறது 

காலம் ...

நினைவுகளும் அப்படியே ...


அப்பா சாவி கொடுத்த வரை 

அது மாம்ப்பாவின் கடிகாரம் 

அப்பாவின் காலம் முடிந்தவுடன் 

அப்பாவின் நினைவுகளுடன் 

ஆடிக் கொண்டிருக்கிறது 

கடிகாரத்தின் பெண்டுலம் 


நினைவுகளை அடுக்கி 

ஓடிக் கொண்டே இருக்கிறது காலம் 

ஊசலாடப் போகும் நினைவுகளை 

உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம் 

ஒவ்வொரு கணமும் 


கடிகாரத்தின் ...

கடந்து போன துளியாக 

ஊசலாடும் நினைவாக 

உறைந்து போகும் 

ஒரு கணம் நோக்கி...

Tuesday, January 22, 2019

வீடென்பது ...

வீடென்பது ...
கல்லும் மண்ணுமல்ல
உணர்வுகளின் பின்னல்
நினைவுகளின் குவியல்

பூச்சூடி புதுப்பெண்ணாக
கால்பதித்த தருணம்
புது உறவுகள் பூத்திட
விளக்கேற்றிய பொழுது

ஊடலும் காதலும்
உலாவிய நினைவுச் சிதறல்கள்
நட்பும் உறவும் அளவளாவிய
விழாக்கால  கொண்டாட்டங்கள்

வளைபூட்டி வழியனுப்பி
மழலையுடன் வரவேற்று
கிள்ளை இன்பத்தில்
திளைத்த தருணங்கள்

புது உறவுகளை வரவேற்று
பகிர்ந்து கொண்ட மணித்துளிகள்
இறப்பென்ற நிகழ்வோடு
உறைந்து போன கணங்கள்

வீட்டைச் செப்பனிட்டு
நினைவுகளை மீட்கிறோம்
கூடி மகிழ்ந்து
உணர்வுகள் பகிர்கிறோம்


வீடென்பது ...
கல்லும் மண்ணுமல்ல
உணர்வுகளின் பின்னல்
நினைவுகளின் குவியல்

Thursday, March 9, 2017

என் சொல்வேன்? - அதீதத்தில்



அழகான உலகம்
அன்பான மனிதர்கள்
சில தீயவர்கள்
பார்த்து இரு பாப்பா
என்று சொல்ல ஆசை...

என் சொல்வேன்?

அக்கம் பக்கம் பழகாதே
அசுரர்கள் உண்டு என்றா?

தலை நிமிர்ந்து சென்றால்
ஆயுதத்தால் தாக்குவார்கள் என்றா?

எனக்கு புரியவில்லை.. எவ்வயதில்
உன் கையை நான் விடுவேன்?

பதின் வயதில் என் அம்மா
வயிற்றில் நெருப்புடன் நின்றாள்

அப்படி இல்லை நான் என
பெருமை பேச வந்தேன்

பெற்றவுடன் கட்டிக்கொள்ள
எரிமலை கொடுக்கிறது சமூகம்

என்றாலும் பெண்ணே...
என்றென்றும் போராட்டமே!!

தலை நிமிர்ந்து வாழ்வோம்
தலை குனிந்து ஒதுங்கோம்!!!

தேவை தனிமனித ஒழுக்கம் என்றே...
ஓங்கி குரல் கொடுப்போம்!!!


அதீதம்  #மகளிர் தின சிறப்புக் கவிதை. சுட்டி என் சொல்வேன்? - அதீதத்தில்

Friday, September 23, 2016

மௌனத்திரை


வெறித்துக் கிடக்கிறது
வீதி ஒன்று

அமைதியைக்
கிழித்து வருகிறது
வண்டிக்காரன் குரலோ..
பூக்காரி குரலோ...

பேரம் பேசும் குரல்கள்
புன்னகை பரிமாறல்கள்
மனிதர்களின் மௌனத்திரை
கிழித்து செல்கிறார்கள்
நடமாடும் வியாபாரிகள்

Saturday, August 25, 2012

மழை

மழை நினைவுகள்
------------------------------

ஓயாத கதைகளாக
பெய்கிறது மழை

ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒன்றாக

மண்தொடும் மழையோடு 
கிளரும் நினைவுகள்

மண்வாசனை போல்
சுகமாக

அடித்து வரும் குப்பை போல்
வலிகளாக

சாரல் போல்
இதமாக

சூறாவளி போல்
கொடுமையாக

மழை வெறித்தவுடன்
வெறித்து போயின



மழைப் பேச்சு
---------------------

சில்லென்ற காற்றோடு
கண்மூடி
மனதோடு பேசுகிறேன்

காகிதக் கப்பல்
பயணங்களை
மழலையோடு  பேசுகிறேன்

மழைக்கால
நினைவுகளை
உறவோடு பேசுகிறேன்

மழைப் பேச்சோடு
விழித்து வருகின்றன
உறங்கிக் கிடந்த  பேச்சுக்களும்


மழை இரவு
------------------------------

இலை நுனியில்
நட்சத்திரங்கள்

சாலை ஓரத்தில்
நிலவுகள்

மேகங்களோடு
மனிதர்கள்


 

Tuesday, June 26, 2012

நினைவுகள் பூட்டிய வீடு



பூட்டிய வீடு
கண்ணில் பட்டதும்
உருகத் தொடங்கிடும்
நினைவுகள்

எத்தனை முறை
பூட்டித் திறந்தாலும்
சுற்றிக் கொண்டே இருக்கும்
நினைவுகள்

எத்தனை முறை
பெருக்கித் துடைத்தாலும்
புதுவெள்ளமாக பொங்கும்
நினைவுகள்

ஒவ்வொரு கணமும்
உறைந்து போகின்றன
காலத்தின் துகளாய்
என்றென்றும் பூமியில்


பூட்டப்படும் பொழுதெல்லாம்
மனதோரத்தில்
உறைந்து நிற்கின்றன
நினைவுத் துகள்கள்