என் மேகம் ???

Showing posts with label ஃபீலிங்ஸ். Show all posts
Showing posts with label ஃபீலிங்ஸ். Show all posts

Monday, June 22, 2009

குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்

"நானே சாப்பிடறேன் அம்மா", என்றபடி கையில் இருந்த தட்டை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள் குட்டிப்பெண். என்ன செய்வது என்று ஒரு நொடி புரியாமல், அவர்களாகவே சாப்பிடும் பெண்களைப் பார்த்தேன். பெரியவள் ஒவ்வொரு கவளமாக சிந்தாது சாப்பிட்டாள். சின்னவள் எடுத்த கவளத்தில் பாதி கீழேயும் மீதி வாயுள்ளும் சென்றது. இந்த ஒரு கவளம் சோறு முன்பெல்லாம் உள்ளே செல்ல முன்பு என்னென்ன செய்ய வேண்டி இருக்கும்!!!

கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

எத்தனை கதைகள் உருவாயின? காகம், மயில், குயில் கிளி எல்லாம் சோற்றுருண்டையை முட்டையாகப் பாவித்து "என் முட்டை நீ சாப்பிடவில்லையா?" என்று என் நா வரள குரல் கொடுத்து கெஞ்சும். மீன் குஞ்சை எடுத்துச் சென்ற முதலையைத் தேடியும், முயல்குட்டியைக் கடத்திச் சென்ற டினோசரைத் தேடியும் நீங்கள் செய்த வீர சாகசங்கள் நினைவில் இருக்குமா? மீன் அம்மாவும் , முயல் அம்மாவும் வேறு அம்மாவிடம் போய் விட்டார்களோ?

உனக்கு சொன்ன கதையொன்றை நான் புத்தகமொன்றுக்கு அனுப்ப, எனக்கு கிடைத்த ஆறுதல் பரிசே மிகச் சிறந்த பரிசாக மின்னுகிறது. ஸ்கூலுக்கு செல்வதால் புத்திசாலியான யாழ் பாப்பா கதை தோழியால் இன்னொரு பள்ளியில் சொல்லி குழந்தைகள் இரசித்ததும் எனது மகிழ்ச்சியான தருணங்கள். நான் குரலெடுத்து பாடிய தாலாட்டில் நிம்மதியாக நீங்கள் தூங்கிய பொழுதுகள் தந்த நிம்மதி வேறெதற்கும் ஈடாகாது.

காணாமல் போன குழந்தையைத் தேடி வண்டிடம் வினவ, வண்டு நான் தோட்டத்தில் தான் திரிவேன், காற்றைக் கேள் என்று கூற, காற்றிடன் சொன்னவுடன் ஊரைச் சுற்றிய காற்று சற்று தொலைவில் குகையில் தூங்கும் குழந்தையைச் சொல்ல நீங்கள் அந்த குழந்தையை அம்மாவிடம் சேர்த்தது போன்ற கதைகள் பொக்கிஷமாக என் நினைவுகளுக்குள். இன்னும் உங்களுக்கு சமயம் பார்த்து சொல்ல தேவதைகளும், பட்டாம்பூச்சிகளும் , பூக்களும் , பறவைகளும் , விலங்குகளும் , பூஞ்சோலைகளும், நிலவும், தென்றல் காற்றும் என்னுள் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது எல்லாம் உங்கள் அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதிலை வலையில் தேடுகிறேன். இது வரை குழந்தைதனங்களை இரசித்த மனம், இனி, அறிவாற்றலையும் தனித்தன்மையும் இரசிக்க தயாராக வேண்டும். என் கற்பனையைத் தூண்டிய செல்வங்கள் இனி என் அறிவுக்கும் சவால் விடுவார்கள். பெருமிதம் கலந்த ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கிறேன்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


"அம்மா நீயே ஊட்டி விடேன்", உடல் முழுதும் சோற்றுப் பருக்கைகள் அலங்கரிக்க குட்டிப்பெண் அழகாக சிரித்தாள். "கை கழுவிட்டு வா, ஊட்டி விடறேன்" என்றேன். "இப்ப ஊட்டறேன். இனிமேல் நீ வளர்ற, நீயாவே சாப்பிடணும் சரியா?" என்றபடி புதிய கதைகளைத் தேடியது என் மனம்.

Friday, December 19, 2008

ஒரு தாயின் பரவசம்




கிட்டதட்ட 4 வருடங்களுக்கு முன், சற்றே ஓய்வு கிடைத்திருந்த பொழுது, புத்துணர்வு பெற்ற மனம், வார்த்தைகளைக் கோர்த்து விளையாடியது. பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என தாய்மை தந்த பரவசத்தை ஒரு நோட்டுப்புத்தகத்தில் பொன்னிற எழுத்து பதியும் பால்பாயிண்ட் பேனாவின் உதவியுடன் உருவானது "என் வானம்". "முதலில் என்னை கவனி" என்னும் விதமாக அடிக்கடி என் குழந்தைகளால் அது ஒளித்து வைக்கப்படும். இரண்டு வருடங்களுக்கு முன் என் தோழியரிடம் பகிர்கையில், முல்லையின் யோசனைப்படி பதிவுலகில் உருவானது "என் வானம்". "என் நட்சத்திரங்களை" மட்டுமே வலையேற்றப்பட்ட நேரத்தில் காணாமல் போனது, சமீபத்தில் கிடைத்தது. அதில் குழந்தையின் முதல் சில வளர்ச்சியைப் பற்றி எழுதிய தாய்மையின் பரவசத்தை, இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

"எனக்குப் பிடித்த சில நினைவுகளை பதித்துக் கொள்ள ஆசை. பசுமரத்தாணி போல் சில பதிந்தது என எண்ணினாலும். மணலில் பதித்த எழுத்துக்களாய் காலமெனும் அலைகள் கலைப்பதைத் தடுக்க முடியவில்லை. சில பொன்னான நினைவுகளைப் பொன்னெழுத்தில் பொறிக்க விழைந்தேன்.

நந்தினி, யாழினி என இருமலர்களின் நறுமணம்.
நந்தினி - இள ரோஜா நிறத்தில் நாவை நீட்டி கொட்ட கொட்ட விழித்துப் பார்த்த அழகு
யாழினி - வெள்ளை ரோஜாவாக கண்களை மூடித் தூங்கிய அழகு

இது பிறந்தவுடன் கண்ணில் கண்ட நீங்கா நினைவுப் பதிப்பு.

இந்த செல்லங்களின் சேட்டை எண்ணாற்றவை. பூவொன்று மலர்வது கண்முன்னே தெரியாமல் நிகழ்வது போல் தான் குழந்தையின் வளர்ச்சி. வாழ்க்கையை அழகுப்படுத்துவதே குழந்தைகள் தான். KIDS MAKE THE LIFE COLORFUL. அம்மா, அதன் பொக்கை வாய்ச் சிரிப்பும், மின்னும் கண்களும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. வள்ளுவரும், பாரதியும் எழுதியதை அனுபவித்தாலன்றி முழுதாக உணரமுடியாது. அந்த பிஞ்சு கைகள் மடங்கி இருப்பது அழகு என்றால், அக்கைகளுக்குள் என் விரல் உறங்குவது, பூ மெத்தையில் புரளும் சுகம். கண் மலர்ந்து சிரித்தாலும், கண் மூடி உறங்கினாலும், சிரிப்பின்றி பார்த்தாலும் ... ஒவ்வொரு அசைவிலும் உள்ளம் சிலிர்க்கின்றது.

குழந்தை பாலருந்தி, என் அருகாமையில், அணைப்பில் உலகத்தைப் பற்றிய கவலையின்றி மயங்குவதென்பது விவரிக்க இயலா இன்பமயமானது. வளர, வளர அதன் சேட்டைகள் சிலிர்ப்பானது. அந்த கைகளும், கால்களும் தூக்கத்தில் தான் ஓய்வெடுக்குமா? கைகளைச் சுழற்றுவதும், கைகளைப் பிசைவதும், கையால் காலைப் பற்றுவதும், பிஞ்சு காலால் என் மார்பில் உதைப்பதும், கொடுக்கும் பொருளைப் பற்றிக் கொண்டு அதைப் படுத்தும் பாடும்.. அப்பப்பா... அந்த கணத்தின் இனிமை விளக்க இயலாதது.

கடவுள் குழந்தையின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு விலங்காக உடைப்பாராம், கண், காது, கைகள் என ...அதன் பிறகே கண் தெரிவது, காது கேட்பது , ஒரு சாய்வது, குப்புற விழுவது என்று ஒவ்வொரு வளர்ச்சியுமாம், என் பெரியம்மா கூறுவார். பிறந்து சில நாள் கழித்து , தலையை இடதும் வலதுமாக உருட்டும் அழகென்ன.. வேகமென்ன .. பின் மெள்ள, மெள்ள குப்புற விழ எடுக்கும் முயற்சிகள்... ஒருசாய்ந்து படுத்து, கையை ஊன்றி, உடலைத் திருப்பி, பின் தலையை உருட்டி, தலையைத் தூக்கியவுடன் வெற்றிப் பெருமிதத்தில் சிரிக்கையில் இமயத்தைத் தொட்ட மகிழ்ச்சி ஒரு தாயிடம்.

அந்த தொட்டிலில் செய்யும் குறும்புகள்.. அழகாக சேலையை ஜன்னல் திரை போல் விலக்கி, எட்டிப் பார்த்து சிரிக்கும் அழகென்ன.. தடாலென தலையைத் தொங்க விட்டு "ஏய்" என்று அழைக்கும் அழகென்ன.. வலக்கையால் இடக்காலைத் தூக்கிப் பிடித்துத் தூங்க எங்கே கற்றாய் பெண்ணே? உன் அக்கா இப்படி இருக்கையில் கால் மேல் கால் போட்டுத் தூங்கும் அழகே தனி. நீ தொட்டிலுள் மீன் போல் கால்களை உதைத்து உதைத்து நீந்தும் தங்க மீன்."