என் மேகம் ???

Wednesday, February 4, 2009

அறிவுஜீவமே!

எடக்கு மடக்காக ஏதாவது என் சுட்டிகள் செய்தால், "அறிவுஜீவியே!" என்போம். அது என் சுட்டிப் பெண்ணின் மொழியில் "அறிவுஜீவமே!" ஆனது. சுட்டிகளின் அறிவு ஜீவம் மற்றும் அறிவார்ந்த பேச்சுகள் சில...

*******************************
திரைப்படம் ஒன்றுக்கு சென்றிருந்தபொழுது, டிக்கட் கிடைக்கவில்லை.
சுட்டி: இனிமேல் இந்த தியேட்டருக்கே வரக்கூடாதும்மா
நான் : ஏண்டா செல்லம்?
சுட்டி : பாரும்மா, அப்பா டிக்கட் வாங்கறேன்னு சொல்றாங்க , ஆனால் டிக்கட் தரமாட்டாங்களாம். இனிமேல் இங்கே வரக்கூடாது

*******************************
சின்னவள் 3 வயதாகும் வரை அடிக்கடி கடி்த்து வைத்து விடுவாள். அவள் அக்கா தான் அதிகமாகக் கடிபடுவது. ஒரு நாள் தான் கண்ட கனவு என்று பெரியவள் கூறியது , கனவோ கற்பனையோ இன்றும் நாங்கள் நினைத்து மகிழும் சுவாரசியம் தான். "நாங்கள் எல்லாம் விளையாட்டிட்டு இருக்கோம்மா. அப்ப பெரிய டினோசர் வந்துச்சு. நாங்கள் எல்லாம் பயந்து ஓடலாம்னு பார்க்கறோம். திடீர்னு டினோசர் ஓடுது. என்னடானு பார்த்தால் யாழ் டினோசரைக் கடிச்சுட்டாள். அது ஐயோ சாமி காப்பாத்துனு ஓடிடிச்சு". அதானே கடிபட்டவளுக்கு தானே தெரியும் கடியோட வேதனை...
********************************



கைக்குள் அடங்கும் இரப்பர் பந்தொன்று வாங்கி இருந்தோம். "இதுக்கு ஸ்ட்ரெஸ் பால் அப்படீனும் பெயர். கோபம் வந்தால் இதைக் கசக்கினால் கோபம் குறையும் என்றேன்". "எனக்கு கோபம் வருது அதைக் கொடு" என்று வாங்கிக் கசக்கினாள். பின், "சிரிச்சா இதை வச்சிக்ககூடாதா", என்றாள். "இதை வச்சு ஷூ கூட பாலிஷ் போடலாம் போல இருக்கே " என்றாள். அவளது கற்பனையில் நாங்கள் சிரிக்க ஆரம்பிக்க "முதுகு சொறியலாம், தூசி தட்டலாம்..." என்று பறந்த கற்பனைக் குதிரையோடு என்னால் பறக்க முடியவில்லை.

******************************

ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அவளுக்குத் தெரியும். விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொண்டிருந்தேன். சின்னவள் "C" பிரிவு, பெரியவள் "B" பிரிவு. நான் அவள் L.K.G "C" என நிரப்பிக் கொண்டிருந்தேன். குட்டிப் பெண் வந்தாள்.

"எனக்கு தானே முதல்ல எழுதற?"
"இல்லை அக்காவுக்கு"
"இல்லை. நீ "C" போட்டிருக்க. அக்காக்குனா "B" போட்டிருப்ப..."

என்னால் அவள் அறிவுக்கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை

******************************

திடீரென்று ஒரு நாள் "அம்மா , அரிசி ஊசியில் இருந்தா வந்துச்சு?", என்றாள். எப்படி இப்படி ஒரு கேள்வி என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. "அரிசி செடியில் வரும். அப்பா கிட்ட சொல்லி உனக்கு காட்டச் சொல்றேன்" என்றேன். ஊருக்குச் சென்ற பொழுது வயலைக் காட்டி அவள் அப்பா "இங்க தான் அரிசி வரும். முதல்ல நெல் வரும், அப்புறம் அதை அரிசி ஆக்குவாங்க" என்றார். உடனே அவள் "அப்பா, இது எனக்கு ஏற்கனவே தெரியும்", என்றாள். அப்பப்ப மேடம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ஆவார்கள். மழலையில் இதில் மகிழும் மனம், சற்று விவரம் தெரிந்தால் "கற்றது கைமண் அளவு" எனப் புரிய வைக்க விழைவது ஏன்?

*******************************

Tuesday, February 3, 2009

ஏன் இப்படி?

திருவண்ணாமலை சென்றிருந்தேன். கோயிலைச் சுற்றி எந்த வீதியில் நின்றாலும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களோ அல்லது வயதானவர்களோ வந்து கையேந்தி நின்றனர். கையில் இருந்த சில்லறைகளைக் கொடுத்தாலும், ஏன் இப்படி என மனம் கலங்கியது.

கோயிலுள் தரிசன்ம் முடித்து வரும்பொழுது "அம்மா, உங்களால் முடிந்த அளவு வயதானவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள்" என்றவுடன் சட்டென ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டேன். சாப்பாடு கொடுங்கள் என்று நான் கூறும் பொழுதே எனக்கு புரிந்து விட்டது அது ஒரு நாடகம் என. சட்டென் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன். மனதில் இம்முறை எனக்கு கோபம் இல்லை, ஏன் இப்படி என வேதனை தான்.

கையேந்தி நிற்கவோ ஏமாற்றியோ இவர்கள் வாழ்க்கையை ஓட்டி எவ்வளவு சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் வாழ வழி இல்லையா? எனக் கேள்விகள். சென்னையில் வீட்டைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆள் கிடைக்காது எவ்வளவோ வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆள் தேடுகிறார்கள். எனக்கு தெரிந்த பல இடங்களில் வருபவர்கள் எல்லாம் உணவு, உடை, உறைவிடம் , கணிசமான தொகை கொடுத்து, கனிவாக இருந்தாலும் யாரும் நிலைப்பதில்லை.

வேலை இன்றி சிலர், வேலைக்கு ஆள் கிடைக்காது சிலர் என்று ஏன் இந்த முரண். ஏன் இப்படி?

இதன் தொடர்ச்சியாக எழுந்த எண்ணங்கள்:
இப்பொழுது விலைவாசி இருக்கும் நிலையில், அதுவும் கிராமங்களில் வாழ்வை ஓட்ட பொருள் ஈட்ட என்ன வழி இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சுய உதவி குழுக்கள் பற்றி பல செய்திகள் வந்தாலும் அது இன்னும் இது போன்ற மக்களை சென்றடையவில்லையா அல்லது இவர்கள் உழைக்க விருப்பப்படவில்லையா? எத்தனையோ உதவும் இல்லங்கள் இருந்தாலும் பலர் உதவினாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லையே? ஏன் இப்படி?

சில வருடங்களுக்கு (தற்போதைய நிலை எனக்கு தெரியாது) முன்பு சிவகாசியில் பிச்சைக்காரர்களைக் காண முடியாது, வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். இதற்கு காரணம் சுற்றி இருந்த தொழிற்சாலைகள். எனக்குத் தெரிந்து பல குடும்பங்கள் கட்டு ஒட்டியே வாழ்வில் உயர்ந்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் ஆண்பிள்ளைகள் ஒழுங்காக வருமானம் ஈட்டி வராத நிலையில் பெண்கள் மட்டுமே கட்டு ஒட்டி, வீடு கட்டியதோடு அவர்கள் திருமணத்திற்கும் சேர்த்து வைத்தனர். பல கடைகளில் "வேலைக்கு ஆள் தேவை" என்று எப்பொழுதும் அறிவிப்பு இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் பொருள் ஈட்ட வ்ழி இருந்ததால் தான்.


மற்றொரு விஷயம் தலைமை பற்றியது.
என் தந்தை ரேஷன் ஆபீஸுக்கு சென்று ரேஷன் கார்டு வாங்கும் சூழ்நிலையில், அங்கு சென்று காலையிலேயே நிற்பார். அப்பொழுது தான் நண்பகலில் வேலை முடியும் வாய்ப்பு உள்ளது என்று. ஒரு முறை வேலைகள் சரியான நேரத்திற்குத் தொடங்கி விரைவாக நடந்தன. ஏன் இப்படி? என்று விசாரித்தால் வந்த பதில் "ஆபீஸர் கொஞ்சம் கெடுபிடி". ஆக, தலைமை சரியாக வழி நடத்தினால் தான் வேலை நடக்கும் என்பதற்கு இந்த சின்ன உதாரண்ம் போதும்.


நம் தலைவர்களை இது போன்று கையேந்தி மக்கள் நிற்கும் இடங்களுக்குத் தனியாகத் தலைவனாக அல்லாது ஒரு குடிமகனாக அனுப்ப வேண்டும். சுற்றி கையேந்தி மொய்க்கும் மக்களைக் கண்டு கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி தோன்றாதா? ஏன் இப்படி?

Monday, February 2, 2009

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் (தொடர் பதிவு)

அமிர்தவர்ஷினி அம்மா வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். எனக்கு உடனே எப்பவோ படிச்ச தமிழ் பாடம் நினைவுக்கு வந்தது. அதில நான் தமிழ்னு நினைச்சுட்டு இருந்ததை எல்லாம் வடமொழி, பாரசீகம், லத்தீன் போன்ற மொழிகளில் இருந்து வந்ததுனு இருக்கும். எனவே எது உண்மையில் தமிழ்ச்சொல் என்பதில் எனக்கு எப்பொழுதுமே குழப்பம் தான்.

இந்த தலைப்பைப் பார்த்ததும் சொல்வழக்கா, நூல் வழக்கா அப்படீனு கன்ஃப்யூஷன். ஆமாங்க பேச்சு வழக்கில் ஆங்கிலம் பேசுவது, எழுதும் பொழுது தமிழில் எழுதுவோம். பாருங்க கன்ஃப்யூஷன் (குழப்பம்) , டிஸ்கஷன் (கலந்துரையாடல்), கப்(கோப்பை), ஸ்பூன் (தேக்கரண்டி), ஸாரி (மன்னிப்பு) , தாங்க்யூ (நன்றி) etc etc...(இன்ன பிற).

அதனால் சொல்வழக்கே எடுத்துக்கிட்டேன். இந்த சொற்கள் இன்னும் சில இடங்களில் புழக்கத்தில் இருக்கலாம் , சில இடங்களில் வேறு சொற்கள் வந்து மறைந்தும் இருக்கலாம். சின்ன வயசில வாசல் தெளிச்சு கோலம் போடுங்கறதை "முத்தம் (முற்றம்) தெளிச்சு , கோலம் போடு" என்பார்கள். இப்பொழுது முற்றங்கள் குறைந்து விட்டதாலோ என்னவோ, இவ்வழக்கு இப்பொழுது "வாசல்" என்றே மாறி விட்டது. புழக்கடை என்று பின்வாசலைக் குறிப்பார்கள். இதுவும் இப்பொழுது பின்னால் என்று மாறிவிட்டது. பரண் மேல போடற பொருள் எல்லாம் இப்ப "லாஃப்ட்--ல" போடச் சொல்றாங்க. இரும்பு கிராதி இரும்பு கேட் ஆய்டுச்சு. புகைப்படத்துக்கு சட்டம் போடறது ஃப்ரேம் அப்படீனு இப்ப தான் நினைவுக்கு வருது. காரை எப்படி எனக்கு மொட்டை மாடியாச்சுனு யோசிக்கிறேன்.

எங்கம்மா அழைத்து நான் கேட்டு உள்ள ஒரு உறவுமுறை மாம்டக்கா. மாமன் வீட்டு அக்கா என்பதே இது. இப்பொழுது யாரும் அழைப்பதாகத் தெரிவதில்லை. மாமன் மகளை மதினி என்பார்கள். நான் அழைத்த பொழுது ஒருவர் "அண்ணி" என்று அழை , மதினி என்பது பட்டிக்காடு போல் உள்ளது என்றார்கள். அவர்கள் இருப்பது ஒரு பட்டிக்காடு என்பது வேறு விஷயம். இதுக்கெல்லாம் விசனப்பட முடியுமா? அப்பப்ப "ஃபீல்" பண்ணுவேன்.

வழக்கில் இருந்தாலும் வீட்டில் இல்லாது போனதால் வழக்கொழிந்த சொற்கள் அம்மி, குழவி, உரல், உலக்கை, சல்லடை, சிணுக்கரி (சிடுக்கெடுக்க உபயோகிப்பது. கம்பி போல் இருக்கும்), ஊதாங்குழல். குழந்தைக்கு மருந்து புகட்ட சங்கு பயன்படுத்துவோம். இப்பொழுது தான் ப்ளாஸ்டிக் குப்பிகள் மருந்தோடு வந்துவிட்டனவே!! வாக்கர் வந்ததால் நடைவண்டியும், சிம்னியால் புகைபோக்கியும், சோப்பினால் படிகாரமும் வழக்கொழிந்து போயின.


தமிழைச் செம்மொழி ஆக்கிய அரசே இன்னும் பலரால் கவர்ன்மெண்ட் என்றே அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட்டை ஆகத்தாகக் அழைக்கும் கட்சிகள் ஆடி/ஆவணியாக அழைத்தால் , தமிழ்த் தேதியில் பிறந்த நாளைத் தலைவர்கள் கொண்டாடினால் தமிழ் மாதங்கள் வழக்கொழியாமல் இருக்கும். இன்றும் என் அம்மா உறவினரோடு பேசுகையில் தமிழ் மாதங்களில் தான் நாங்கள் பிறந்த தேதியைக் கூறுவார். இவர்களைப் போன்றோராலும், மாதங்களுடன் சேர்ந்து விட்ட பண்டிகைகளாலும் (தைப்பூசம், மாசி மகம் ....), கல்யாணம், கோயில் காரியத்திற்கான பத்திரிக்கைகளாலும் இன்னும் தமிழ் மாதங்கள் உயிரோடு இருக்கின்றன.

வாழ்க தமிழ்!!!

இப்பதிவைத் தொடர நான் அழைக்க விரும்புவோர்:

முத்துச்சரம் இராமலஷ்மி மேடம்
தமிழ் திகழ்மிளிர்
மழைக்கு ஒதுங்கியவை அ.மு.செய்யது