என் மேகம் ???

Sunday, December 19, 2010

பாட்டும் பரதமும்


இந்த பாட்டும் பரதமும் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க அனுப்பியதென்னவோ படிப்பைத் தவிர ஏதேனும் கற்றுக் கொள்ளட்டும் என்று தான். அவளுக்கு மிக விருப்பம். எனவே தொடர்கிறது. என்றாலும், எனக்கோர் ஏக்கமுண்டு... எனக்கு இதெல்லாம் தெரியாது... அவளைப் பாடச்சொல்லியோ ஆடச்சொல்லியோ இரசிக்கும் பொறுமையும் கிடையாது. டி.வி.யில் “தகதிமி” என்றோ “சரிகம” என்றோ இருந்தால் அடுத்த சேனலுக்கு ஓடும் ஆள் நான்.

இப்படி இருக்கையில் தான் பெண்ணுக்கு சலங்கை அணி விழா வந்தது. அதாவது, இதுவரை காலை வைத்து சத்தம் செய்து நடன்ம் ஆடியவர்கள், இனி, சலங்கை அணியும் தகுதி அடைந்து சலங்கை ஒலியில் ஆடும் தகுதி பெறுகிறார்கள். ஒரு level என்று வைத்துக் கொள்ளலாம் (என் புரிதல் தவறெனில் திருத்தவும்). நெருங்கிய உறவினர்களை உரிமையாகவும் , நெருங்கிய தோழமைகளை முடிந்தால் வரவும் என்று வற்புறுத்தாமலும் அழைத்தேன். எனக்கே பாட்டும் பரதமும் போர் என்றால், அவர்கள் பாவம் எனக்காக வந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமே என்றுதான் அளவான அழைப்பு.


ஆனால் சலங்கை அணி விழா சிறப்பாகவே அமைந்தது. எனக்கு அது ஒரு வித்யாசமான் சுவாரஸ்யமான அனுபவம். ஆசிரியர் ஒவ்வொரு தாளக்கட்டு மற்றும் முத்திரை பற்றி சொல்லி அபிநயம் பிடிக்க வைத்ததில் சுவாரசியமாகச் சென்றது நிகழ்ச்சி. முடிவில் “தீராத விளையாட்டுப் பிள்ளை...” என்று கண்ணனுடன் ஆடியபொழுது எல்லோரும் சொக்கித்தான் போனோம். பரதம் கூட சுவாரஸ்யமாக இருக்கும் என்று பலரிடமும் சொல்லத் தொடங்கினேன்.

அடுத்து பாட்டு... கச்சேரி என்றால் என்ன என்று அவளுக்கு அறிமுகப்படுத்த “சென்னையில் திருவையாறு” செல்ல டிக்கட் எடுத்தார் அவள் அப்பா. எனவே... கச்சேரி களைகட்டியது. “மிருதங்கம்”, “கடம்”, “தம்புரா”, “கஞ்சிரா”, “வயலின்” என்று பக்கவாத்தியங்களை அவளுக்கு அறிமுகப்படுத்தினேன் (எல்லாம் கேள்வி ஞானம் தான்). “தம்புரா” சத்தமே கேட்கலையே அது எதுக்கு என்றாள். (கேட்ட ஆளைப் பாருங்க...). என்றாலும் மனம் தளராது, அவளுக்கு “தம்புராவின்” ஒலியை உணர்த்தி (ஒருமாதிரி அதுதான் தம்புரா சத்தம் என்று அறிந்திருந்தேன்), அது இலயம் சேர்க்கும் என்றேன் (இலயம்??... no explanations please....). ஏன் நிறைய இராமர் பாட்டு என்றாள். பாடப்பட்ட சிவன் பாட்டு ஒன்றை நினைவுறுத்தினேன். என்றாலும் நிறைய இராமர் பாட்டு என்றாள்.

"இவர் பட்டம்மாள் என்ற இசை மேதையின் பேத்தி” என்று அவளுக்கு சில அறிமுகங்கள் கொடுக்க முயன்றேன். அவங்க அம்மா யாரு... அவங்க இவங்க பாடறதைப் பார்க்க வரலையா என்ற கேள்விகளுக்கு நான் விழித்திருந்தேன். சில பாடல்களுக்கு அவள் தாளம் போட்டாள் (இராகம் தெரியவில்லை, தாளம் தெரிந்திருந்தது; எனக்கு ரெண்டும் ஒண்ணு தான்). எல்லோரும் தலையையோ கையையோ ஆட்ட நான் கொஞ்சம் கூச்சத்துடன் விழித்துகொண்டிருந்தேன். ஆனால், “நித்யஸ்ரீ” அவர்களின் பாடல் கேட்க மிக இனிமையாக இருந்தது. இராகம், தாளம், சுருதி, இலயம் எதுவும் தெரியாவிட்டாலும் இசைவெள்ளம் மனதை மகிழ்வித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் மெய்மறந்து பாடுவதைக் கண்ட பொழுது “Bliss" என்று தோன்றியது என்றார் கணவர். பக்கவாத்தியங்களின் இசைமட்டும் இருந்த நொடிகளும் இசையின் இனிமையைப் பறைசாற்றின.

மனதில் இருக்கும் சில "prenotions" தள்ளி வைத்துவிட்டு பார்த்தால்தான் சில விஷயங்களின் அழகை சிறிதேனும் இரசிக்க இயலுகிறது.

ஓசை விரிவடைந்தால் இசை
அசைவு விரிவடைந்தால் நடனம்
புன்னகை விரிவடைந்தால் சிரிப்பு
மனம் விரிவடைந்தால் தியானம்
வாழ்க்கை விரிவடைந்தால் விழா
பக்தன் விரிவடைந்தால் இறைவன்
உணர்ச்சிகள் விரிவடைந்தால் மெய்மறந்த இன்பம்
வெறுமை விரிவடைந்தால் பேரின்பம்

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


6 comments:

Chitra said...

மனதில் இருக்கும் சில "prenotions" தள்ளி வைத்துவிட்டு பார்த்தால்தான் சில விஷயங்களின் அழகை சிறிதேனும் இரசிக்க இயலுகிறது.


..... Nice thought of the day. Thank you.

தேவன் மாயம் said...

பாட்டும் பரதமும் என் குழந்தைக்கும் சொல்லித்தருகிறேன்! நல்ல ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்வது சந்தோசமாக உள்ளது.

pudugaithendral said...

மனதில் இருக்கும் சில "prenotions" தள்ளி வைத்துவிட்டு பார்த்தால்தான் சில விஷயங்களின் அழகை சிறிதேனும் இரசிக்க இயலுகிறது.//

ஆமாம் இந்த மனோபாவம்தான் நம் ரசிப்புத் தன்மையைக்கூட்டி மனதை ரிலாக்ஸாக்கும் வழிகளைத் தருகிறது.

மகளுக்கு வாழ்த்துக்கள். தாயின் பெருமிதம் கலந்த பதிவு

Philosophy Prabhakaran said...

// என் புரிதல் தவறெனில் திருத்தவும் //

அந்த அளவுக்கு ஞானம் எனக்கும் இல்லை...

ஏன் இன்ட்லியில் இணைக்கவில்லை...

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு அமுதா. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வரிகளும் பொருத்தமாக..

அம்பிகா said...

\\ராமலக்ஷ்மி said...
நல்ல பகிர்வு அமுதா. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வரிகளும் பொருத்தமாக..\\:-)))