என் மேகம் ???

Monday, March 9, 2009

விரியும் உன் உலகம்...



என் கருவில் நீ இருந்தாய்
உருண்டாய் புரண்டாய்
எனக்கே எனக்குள்ளே
நான் மட்டும் உன் உலகமென...

அழுகையுடன் கூடிய
உன் வருகையில்
புன்னகைகள் மலர்ந்தன
வீடு உன் உலகமானது...

அழுது ஆர்ப்பரித்தாய்
குப்புற விழுந்து நோட்டமிட்டாய்
தவழ்ந்து வந்து ஆராய்ந்தாய்
நின்று பார்த்து மகிழ்ந்தாய்
நடந்து நடந்து ஓய்ந்தாய்
சிரித்துப் பேசி வசீகரித்தாய்
மெல்ல மெல்ல நுழைந்தனர்
உறவுகள் உன் உலகில்...

என்றாலும்...
என்னை விட்டு அகலமாட்டாய்
ஓடி ஆடும் பிள்ளைகள் இருந்தாலும்
விளையாட விழைந்தாலும்
உனக்கு நான் வேண்டும்
என்ற நிலை மாறி...

என் இருப்பை மறந்தாய்
ஓடி விளையாடினாய்
நீயே விரித்துக் கொண்டாய்
தெருவுக்குள் உன் உலகை...

பள்ளி செல்லத் தொடங்கினாய்
சற்றே என் நிழல் விட்டு
ஒரு வட்டம் அமைத்துக் கொண்டாய்
உன் உலகில் நட்பு பூத்தது...

என்றாலும்...
என்னை விடுத்து
வெகு தொலைவு சென்றதில்லை

இன்று...
மிதிவண்டி மிதித்து
அக்கம்பக்கம் செல்கிறாய்
கவலையோடு நான் காண
எனக்கு தைரியம் சொல்கிறாய்
நெஞ்சை சூழும் பயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே ஆறுதல்

ஆஸ்கர் விருதுகளை ஆராய்கிறாய்
ஸ்மைல் பிங்கியைப் புரிந்து கொள்கிறாய்
வெளி உலகம் இன்று உன் உலகில்...


மெளனமாக இரசிக்கிறேன்...
மெல்ல மெல்ல...
விரியும் உன் உலகம்
உன் முன் சுருங்கும் அதிசயத்தை!!!!








18 comments:

ஆயில்யன் said...

சூப்பர் அக்கா!


கூடவே இருந்து கவனித்த, கவனிக்கும் விதத்தினை அற்புதமாய் கவிதைகளாய் வர்ணித்திருக்கிறீர்கள் :)))

நட்புடன் ஜமால் said...

நான் வளர்கிறேனே மம்மி

சந்தனமுல்லை said...

//கவலையோடு நான் காண
எனக்கு தைரியம் சொல்கிறாய்
நெஞ்சை சூழும் பயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே ஆறுதல்//

சூப்பர் அமுதா!

அப்துல்மாலிக் said...

சொல்ல வார்த்தைகளில்லை இந்த‌ வரிகளை படித்துவிட்டு

Ungalranga said...

அருமை..!!!
அனைத்து தாய்மார்களின் உணர்வையும் பிரதிபலிக்கும் கவிதை.

வாழ்த்துக்கள்..

அப்துல்மாலிக் said...

//என் கருவில் நீ இருந்தாய்
உருண்டாய் புரண்டாய்
எனக்கே எனக்குள்ளே
நான் மட்டும் உன் உலகமென...

//

கருவில் இருக்கும் குழந்தை

பாச மலர் / Paasa Malar said...

குழந்தைகள் வளர வளர இப்படியெல்லாம் தோன்றும்...நல்லா எழுதிருக்கீங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு படியும் அப்படியே கண் முன் விரியும் படி எழுதியிருக்கிறீர்கள்.

நன்றாக வந்திருக்கிறது.

தமிழ் அமுதன் said...

சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்க ''டச்சிங்''

இனிமை!

/// நெஞ்சை சூழும் பயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே ஆறுதல்//

இதுதான் அமுதா மேடம்!!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையா எழுதியிருக்கீங்க அமுதா.

//வெளி உலகம் இன்று உன் உலகில்...


மெளனமாக இரசிக்கிறேன்...
மெல்ல மெல்ல...
விரியும் உன் உலகம்
உன் முன் சுருங்கும் அதிசயத்தை!//

மெளனமாக இரசிக்கிறேன் நானும் இவ்வரிகளை!!

ஆதவா said...

கவிதையில ஒரு குழந்தையைவே பெற்றெடுத்திருக்கீங்க..

உங்கள் வலையே, குழந்தைகள் சம்பந்தமான பதிவுகள் நிறைந்திருக்கு.... எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்..

நல்லாருக்குங்க.

ஹேமா said...

அமுதா,உங்கள் குழந்தையை அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.அருமை.

Unknown said...

Same blood...!

// பாச மலர் said...

குழந்தைகள் வளர வளர இப்படியெல்லாம் தோன்றும்...நல்லா எழுதிருக்கீங்க..// repeatay!

அமுதா said...

நன்றி ஆயில்யன்
நன்றி ஜமால்
நன்றி முல்லை
நன்றி அபுஅஃப்ஸ்ர்
நன்றி ரங்கன்
நன்றி பாசமலர்
நன்றி அமித்து அம்மா
நன்றி ஜீவன்
நன்றி ராமலஷ்மி மேடம்
நன்றி ஹேமா
நன்றி ஆதவா
நன்றி கெக்கே பிக்குணி

"உழவன்" "Uzhavan" said...

அருமை. வாழ்த்துக்கள்!

அமுதா said...

நன்றி உழவன்

Sanjai Gandhi said...

//இன்று...
மிதிவண்டி மிதித்து
அக்கம்பக்கம் செல்கிறாய்
கவலையோடு நான் காண
எனக்கு தைரியம் சொல்கிறாய்
நெஞ்சை சூழும் பயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே ஆறுதல்//

வாவ்..வாவ்..

எவ்ளோ அழகா அனுபவிச்சி எழுதி இருக்கிங்க.. பாப்பா இதை படிக்கும் போது ரொம்ப நெகிழ்சியா இருக்கும்.

ரொம்ப உணர்வுப் பூர்வமா இருக்கு. பாராட்டுக்கள் மேடம்.

Anonymous said...

கவிதை தலைப்பும், கவிதையும் ரொம்பவே நல்லாருக்கு!

வாழ்த்துக்கள்!