செங்கதிரோன் ஒளியோ சுடும்
செந்நிலவோ தண்மை தரும்
வெட்கமல்ல வெறுப்புமல்ல கோபமல்ல
வெண்ணொளிதான் அள்ளித் தந்தது
தன்னொளி அல்ல என்றாலும்
தண்ணொளி தந்தது முழுமதி
புவி மங்கை தந்ததோ நிழல் திரை
புவி மாந்தர் தந்ததோ தூசும் மாசும்
வெண்ணொளியும் அதில் சிதறியது
வெண்ணிலவும் சிவந்து தெரிந்தது
கவியின் வரிகள் வண்ணம் கொண்டது
கதை பின்னுவோர் கற்பனை கூடியது
வல்லுநர்கள் ஆராய்ச்சி விரிந்தது
வலை எங்கும் இதுவே செய்தி ஆனது
நிழல் திரையும் விலகியது
நிலவும் பால் நிறம் கொண்டது
காலம் காலமாக திகழும் இது
காலம் பிறழாது நிகழும் இது
காலம் நழுவும் மனிதனுக்கு ...
காலத்தோடு பிறழும் மனதுக்கு...
காட்சிகள் எல்லாம் அதிசயமே