மொட்டவிழ்ந்த மலரின்
புத்துணர்ச்சியுடன்
இளஞ்சூரியனில் மின்னும்
மலர் போன்ற புன்னகை
காற்றில் சிலிர்த்து
மழையில் மிளிரும்
கொடி போன்றது
அவள் இரசிப்பு
அதிகாலை நேரத்துப்
பனித்துளி போல்
தூய்மை பொங்கிடும்
அவள் அன்பு
சிறு குழந்தையின்
தீரா ஆர்வம்
அவள் தேடலில்
நிலவின் தண்மை
இரவியின் ஒளிர்வு
சேர்ந்தது அவளது
மெ(மே)ன்மை மனது
அமைதியாக செல்லும்
நீரோடையில் ஒருதுளி
அவளைச் சொல்லும்
இந்த கவிதை
அவள் பெயரின்
பொருள் தேடினேன்
கனவு கற்பனை என்றது
கனவு நனவாகக்
காண்பது வரமன்றோ
கல்பனா...
உன் பொன்விழா
ஆண்டுப் பரிசாக
சொற்களைத் தேடித்
தொடுத்து விட்டேன் தோழி