என் மேகம் ???

Monday, July 26, 2010

சக்குவின் ஆபீஸ் உத்யோகம்

என் பேரு சக்கு... சகுந்தலானு சொன்னா யாருக்கும் தெரியாது. தலைப்பைப் பார்த்து ஆபீஸ்ல உத்யோகம்னு நினைச்சுடாதீங்க... நான் வீட்டு வேலை பார்க்கற ஆளு. அப்புறம்னு கேக்கறீங்களா, என் ஆபீஸ் உத்யோகம் பத்தி சொல்லித்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி செல்வி பத்தி சொல்லணும்.

செல்வி ஒட்டு உறவெல்லாம் கிடையாது... என் சிநேகிதி. சின்ன வயசு சிநேகமும் கிடையாது. ஒரு நாலஞ்சு வருஷப் பழக்கம் ... அவ்வளவுதான். அதுக்குள்ள நகமும் சதையுமா பழகிட்டோம். அவ புதுசா எங்க பேட்டைக்கு குடி வந்தாள்... நல்ல சிரிச்ச மூஞ்சி, நைச்சியமான பேச்சுனு எனக்கு பிடிச்சு போச்சு. என்னவோ ஒரு பாசம்... நிறைய உதவி செய்வேன். அதெல்லாம் சொல்ல வரலை...அவளும் நல்லா தான் பழகுவாள்... அப்பப்ப கொஞ்சம் வியாபார புத்தியைக் காட்டுவானாலும் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன்...

ம் அவ ஒண்ணும் வியாபாரி இல்லை... என்னை மாதிரி வீட்டு வேலை செய்யறவ தான்.. அப்பப்ப கையில காசு இருந்தால் அப்பளம், துணினு இங்கிட்டு வாங்கி அங்கிட்டு வித்துடுவா. அவசரத்துக்கு என்கிட்ட கைமாத்து வாங்கினால் உடனே கொடுக்காமல் புது சேலையைக் கட்டிட்டு வந்து அழகா இருக்கானு கேட்பாள். அடுத்த மாசம் திருப்பி கொடுக்கறேம்பா. அடுத்த மாசம் துணில காசைப் போட்டுட்டு "கொஞ்சம் இருக்கா, காசு புரட்டிடறேன்" அப்படீம்பா. அந்த காசை இட்லிகடை ஆயாவுக்கு நான் கடனா கொடுத்திருந்தா மாசம் ஒரு தரம் இட்லியாவது தரும். இவ என் காசை வச்சிட்டு வியாபாரம் பண்ணுவாள்... நான் கம்னு இருப்பேன்... அதென்னவோ மனசுல தோணினாலும் கண்டுக்காமல் இருப்பேன். ஆனால் காசைக் கரெக்டா திருப்பி கொடுத்துடுவா.

சரி.. இப்ப என்ன அவளுக்குங்கறீங்க... நான் யமுனாக்கா வீட்ல வேலை பார்த்துட்டு இருந்தேனா... அந்த அக்கா என்னை அவங்க வேலை பார்க்க்ற ஆபீஸ்ல சேர்த்து விட்டாங்க. எனக்கும் ஆபீஸ் உத்யோகம் கிடைச்சுது... உத்யோகம் என்ன உத்யோகம்... அதே பெருக்கறதும் தொடைக்கறதும் தான்.. ஆபீஸ் போறேன்னு சொல்லிக்கலாம். இப்ப செல்விக்கு ஆபீஸ் ஆசை வந்துடுச்சு. "யக்கா... அந்தம்மாட்ட சொல்லி எனக்கொரு வேலை போட்டு கொடுக்க சொல்லேன்" அப்படீனு ஆரம்பிச்சுது. எனக்கு சங்கடமா போச்சு. யமுனாக்காக்கு செல்வியை ஏனோ பிடிக்காது "அவ பேச்சும், பார்வையும்... ரொம்ப தளுக்கா பேசறா...எனக்கு பிடிக்காது" அப்படீனு சொல்லி வீட்டு வேலைக்கே அவளை எடுத்துக்கலை. இதை அவகிட்ட சொல்லி மனசைக் கஷ்டப்படுத்த இஷ்டமில்லாமல், நேரம் கிடைக்கிறப்ப யமுனாக்காகிட்ட சொல்லி பார்க்கலாம்னு இருந்தேன்.

ஒரு நாள் பார்த்தால் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாமேனு வெளிய நின்னுட்டு இருந்தது. அன்னிக்கு யமுனாக்காவை வழில பார்த்தேன். "யக்கா... நம்ம செல்வி வந்துருக்கு. நல்ல பொண்ணு தான். உங்க ஊர்ப்பக்கம் தான் அது. பேச்சு இருந்தாலும் வீட்ல பிக்கல் பிடுங்கல் கிடையாது ஒழுங்கா வேலைக்கு வரும்னேன்". அக்கா சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க. அதுக்கு வேலை கிடைச்சிடுச்சு. அட!!! ஒரே இடம் வேலை; எனக்கு ஒரே சந்தோஷம்... மறு நாள் அவளைப் பார்க்கறேன்; மூஞ்ச வெடுக்குனு வெட்டிகிட்டு போறாள். எனக்கு ஒண்ணும் புரியல... சரி வேலை கிடைச்ச பவுசுனு விட்டுட்டேன்.

சிரிச்ச மூஞ்சியா தெரிஞ்ச முகம் விடியா மூஞ்சியா மாறிடிச்சு. தினம் அது கூட முகத்த தூக்கி வச்சுட்டு வேலை செய்ய வேண்டியதா போயிடிச்சு. ஒரு நாள் மனசு கேக்காம "ஏண்டி செல்வி என்ன ஆச்சு உனக்கு?" அப்படீனேன். அவ்ளோதான் "வெளங்குவியாடீ நீ.. எனக்கு வேலை கிடைக்க கூடாதுனு என்ன மாய்மாலம் பண்ணின... எனக்கு இந்த ஊரு இல்ல... பிக்கல் பிடுங்கல் கிடையாதுனு சொன்னியாமே!!! இதெல்லாம் சொன்னால் இவ அடிக்கடி ஊருக்குப் போய்டுவாள், சொகுசுக்காரி வேலைக்கு வர மாட்டானு வேலை தர மாட்டாங்கனுதான செஞ்ச...நீயெல்லாம் ஒரு பொம்பளைனு பழகினேன் பாருனு" காறி துப்பிட்டாள்.

எனக்கு யார் கூடயும் சண்டை போட பிடிக்காது. நல்லது செய்யப் போய் இப்படி பேச்சு வாங்கினதுல மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. இப்படி செஞ்ச உதவி எல்லாம் மறந்து எப்படி பழிபோடறானு மனசு தவிச்சுது... எனக்கும் காறித் துப்பத்தெரியும். போய் தொலையுதுனு விட்டுட்டேன். தினம் முகத்துல முழிக்கறது விதி... இனி ஜென்மத்துக்கும் புது சிநேகிதம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இது தான் கதையானு கேக்கறீங்களா? கடைசியா ஒண்ணு சொல்லணும். இரண்டு மாசத்தில ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. ரெண்டு பேரும் திரும்ப வீட்டு வேலை தான் செய்யறோம். இப்ப நான் இருக்கேன், செல்வி இருக்கா, எங்க மனக்கசப்பு இருக்குது ஆனால் மனக்கசப்புக்கு காரணமான ஆபீஸ் உத்யோகம் தான் இல்ல.

2 comments:

Chitra said...

இப்ப நான் இருக்கேன், செல்வி இருக்கா, எங்க மனக்கசப்பு இருக்குது ஆனால் மனக்கசப்புக்கு காரணமான ஆபீஸ் உத்யோகம் தான் இல்ல.


...... வட்டார வழக்கு பேச்சும், கதையும் உங்கள் எழுத்து நடையும் ரொம்ப நல்லா இருக்குதுங்க.... ரசித்தேன்.

பின்னோக்கி said...

இந்தப் பதிவுக்கு எதோ உட்கருத்து இருக்குன்னு நினைக்கிறேன். என்னன்னு தான் தெரியலை.