என் மேகம் ???

Thursday, January 6, 2011

ஊரில் வீடு

சொல்லிக்கொண்டு தான் கிளம்புவோம்
கலகலக்கும் பேச்சுக்கிடையே
இன்னும் தங்கல் நீளாதா என
உறவுகள் கையசைக்க
அடுத்த பயணம் எப்பொழுதென
கேள்விகளுக்கு பதிலாக
விடுமுறை தினங்களையும்
பயண ஆயத்தங்களையும்
தேடிக் குறிக்கும் மனம்....

சொல்லிக்கொள்ளாமல் கிளம்பும்
வேளையும் வந்து சென்றது
காலத்தின் கட்டாயம்
நினைவுகளால் நிரப்பப்பட்டு
மெளனத்தால் பூட்டப்பட்டு
தனிமையில் விடப்பட்டது வீடு...
உறவாடி சென்ற இடம்
இன்று மாறியது
இளைப்பாறிச் செல்ல...

சொல்லிக்கொள்ள யாருமின்றி
நினைவுகளைத் தூண்டிவிட்டு
கிரீச்சிடும் கதவாக
ஒலிக்கும் வீட்டின் குரல்
அடுத்த பயணம் எப்பொழுதென...
மீண்டும் வரும் காரணம்
என்னவாக இருக்குமென
தேடலுடன் பூட்டப்படுகிறது
ஊரில் வீடு....

9 comments:

Chitra said...

சொல்லிக்கொள்ள யாருமின்றி
நினைவுகளைத் தூண்டிவிட்டு
கிரீச்சிடும் கதவாக
ஒலிக்கும் வீட்டின் குரல்

.....என்ன அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!

ராமலக்ஷ்மி said...

மனம் தொட்ட கவிதை.

//மீண்டும் வரும் காரணம்
என்னவாக இருக்குமென
தேடலுடன் பூட்டப்படுகிறது
ஊரில் வீடு....//

அருமை அமுதா.

சாந்தி மாரியப்பன் said...

//அடுத்த பயணம் எப்பொழுதென
கேள்விகளுக்கு பதிலாக
விடுமுறை தினங்களையும்
பயண ஆயத்தங்களையும்
தேடிக் குறிக்கும் மனம்....//

ஹைய்யோ... அசத்தலா இருக்குப்பா.. ஊரிலிருந்து கிளம்பும்போதே அடுத்த பயணத்துக்கான விதையும் விழுந்துதான் விடுகிறது!!

ஆயிஷா said...

//காலத்தின் கட்டாயம்
நினைவுகளால் நிரப்பப்பட்டு
மெளனத்தால் பூட்டப்பட்டு
தனிமையில் விடப்பட்டது வீடு...
உறவாடி சென்ற இடம்
இன்று மாறியது
இளைப்பாறிச் செல்ல...//


நல்லா எழுதி இருக்கிறீர்கள்!

சிவகுமாரன் said...

ஊரில் பெரிதாய் வீட்டை பூட்டி வைத்துக் கொண்டு பொழப்புக்காக வெளியூரில் அகதி மாதிரி வாழும் என் மனதின் வலியை அப்படியே பிரதிபலித்தது கவிதை

தமிழ் said...

நினைவுகளில்
நனைந்து கொண்டு இருக்கின்றேன்

அவ்வப்பொழுது என்றாலும்
அருமையான கவிதைகள்
அகத்தைத் தொடும் வரிகள்

வாழ்த்துகள்

அமுதா said...

நன்றி சித்ரா, ராம்லஷ்மி மேடம், அமைதிச்சாரல்

நன்றி ஆயிஷா, சிவகுமாரன், திகழ்

தமிழ் அமுதன் said...

இதை படிக்கும்போது...! உங்கள் திண்ணை கவிதை நினைவுக்கு வருகிறது...!

அமுதா said...

/*தமிழ் அமுதன் said...
இதை படிக்கும்போது...! உங்கள் திண்ணை கவிதை நினைவுக்கு வருகிறது...! */
நன்றி தமிழ் அமுதன். திண்ணையின் தொடர்ச்சி தான் ஊரில் பூட்டப்படும் வீடு :-(