என் மேகம் ???

Sunday, June 13, 2010

அருவிக் குளியல்

வழக்கமான ஊட்டி கொடைக்கானல் அல்லாது எங்கு செல்லலாம் என்ற பொழுது நினைவு வந்தது கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் அண்ணியின் அழைப்பு. எனவே அருவியில் நனைந்து வருவோம் என பிடித்தோம் நெல்லை எக்ஸ்ப்ரஸ். அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருந்தது கல்லிடைக்குறிச்சி. வெயில் இருந்தாலும் வழியெங்கும் பசுமை மனதையும் கண்ணையும் குளிர்வித்தது. கோவையின் சிறுவாணி நீர் சுவை சென்னை வந்ததோடு மறந்து போயிருந்தது. மீண்டும் இனிப்பான தாமிரபரணி நீரை ருசிக்க இனிமையாக இருந்தது.




அலுப்பு தீர குளித்து, உண்டு உறங்கி முதலில் சென்றது பாபநாசம் தலையணை. தண்ணீர் அழகாக ஓடிக் கொண்டிருந்தது. சிறிதாக வழிந்து விழும் இடத்தில் படிகள் போன்ற அமைப்புண்டு. அதில் அமர்ந்து குளிக்கலாம்... அப்படியே மேலேறி நீரில் நடக்கலாம். அருகில் இருந்து படம் எடுக்க இயலவில்லை... கூட்டம்... எனவே அகஸ்தியர் அருவி போகும் வழியில் இருந்து ஒரு வியூ.

தலை அணை


மறுநாள் ப்ளான் அகஸ்தியர் அருவி , காரையார் அணை. (வருடம் முழுதும் தண்ணீர் இருக்குமாம்) அகஸ்தியர் அருவியில் ஆசை தீர குளித்து விட்டு அருகில் ஒரு வியூ பாயிண்ட்; அதன் பின் காரையார் அணை சென்றோம். மூன்று வகை குரங்குகள் காண முடிந்தது; மிலா ஒன்று குறுக்கே ஓடியது; புள்ளிமான் கூட்டம் ஒன்று மரங்களுக்கிடையே வேடிக்கை பார்த்தது; ஆங்காங்கே மயிலகளும் தட்டுபட்டன.


அகஸ்தியர் அருவி


வியூ பாயிண்ட் வியூஸ்



பசுமை


உணவு உண்ண ஓர் இடம்



நீரோட்டம் என்றால் மீன் பிடிக்காமலா? (கிடைத்தது தலைபிரட்டை... அதாங்க tadpole)


அன்பான குடும்பம்




காரையார் அணையில் படகு மூலமாக பாண தீர்த்தம் செல்லலாம் ; ஒருவருக்கு 20 ரூ படகில் செல்ல. "சின்ன சின்ன ஆசை" பாடலி வரும் இடம் என்று சொல்லிக் கொண்டே சென்றோம். படகு நெருங்கும் பொழுதே "சோ" என்று என்று கொட்டும் அருவி மனதைக் கவர்ந்தது. நல்ல வெயில். அருவி என்றாலே அதை அடைய நாம் கொஞ்சம் மேலேறத் தான் செல்ல வேண்டும்... வெயில் என்பதால் நீரளவு கம்மி... எனவே மழைக்காலங்களை விட கூடுதலாக நடந்து சென்று அருவியின் அருகில் ஒரு துளியாக உணர்ந்தோம். "ஆண்கள்", "பெண்கள்" என்று மாற்றி மாற்றி சிறிது நேரம் குளிக்க அனுமதித்தார்கள். தண்ணீ "சில்லென்று" மேலேவிழுந்தது. முதல் நிலை நீர் என்பதால் சுவையோ சுவை. இடத்தை விட்டு அகல மனமே இல்லை.

பாண தீர்த்தம்




காரையார் படகு பயணத்தின் பொழுது தெரிந்த காட்டுத்தீ


மறுநாள் கல்லிடைக்குறிச்சி ஆற்று நீரில் ஆசை தீர நீராடினோம்.



அன்று மாலை "ஆதிவராக" சுவாமி கோவிலுக்கு ஒரு விசிட். இங்கே அக்ரகாரம் இருக்காம் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அம்மாவிடம் "அதுக்கென்ன" என்றேன். இல்லை... வீடெல்லாம் நீளமா இருக்குமாம் என்றார். சட்டென்று மருமகள் அவள் தோழி இல்லத்துள் அழைத்துச் சென்றாள். பக்கவாட்டில் அறைகள் இல்லாமல் நெடுகச் சென்றது வீடு. ஒரு நூறு வருஷத்துக்கு முன்பு நான் இருந்திருந்தால் இங்கு கால் வைத்திருக்க முடியாது என்று எண்ணிக்கொண்டேன். அதன்பின் கோயில் விசிட்... மடியில் இலட்சுமியைத் தாங்கி வராக அவதாரத்தில் பெருமாள் காட்சி தந்தார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் பெரிதாக இருந்தது.


மறு நாள் மணிமுத்தாறு அருவி. டேமில் இருந்து வரும் நீர் ஆதலால் சில்லென்று இல்லை. என்றாலும் அருவி நீரில் மூச்சு முட்ட குளிப்பது சுகம் தானே!!! யாரும் இல்லை... நானும் என் பெண்ணும் அருவியில் அமர்ந்து குளித்தோம். ஆசை தீர குளித்துவிட்டு மணிமுத்தாறு அணையை ஒரு பார்வை பார்த்து விட்டு புறப்பட்டோம் குற்றாலம் நோக்கி.


மணிமுத்தாறு



குற்றாலத்தில் தண்ணீர்வரத்து இல்லை. ஐந்தருவியில் குழாயில் வருவது போலவும், மெயின் ஃபால்ஸில் தலையை நனைக்கும் அளவுக்கும் நீர் வர, அதற்கும் ஒரு க்யூ நின்றது. சொம்பு வைத்து நீர் பிடித்து குளிக்கவும் செய்தனர். அங்கிருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது செங்கோட்டை. அங்கிருந்து தினமும் புனலூருக்கு ஒரு பாசஞ்சர் ட்ரெய்ன் உள்ளது. இயற்கை காட்சிகளை இரசித்து செல்ல அருமையான வாய்ப்பு. 9:45க்கு ஒன்று புறப்பட்டது. நபர் ஒருவருக்கு 4 ரூபாய் என்று தென்மலைக்கு டிக்கட் வாங்கிக்கொண்டோம்.



பச்சை பசேல் என்று இயற்கை சிரிக்கிறாள்.



வழியில் மூன்று குகைப்பாதைகள். அதில் ஒன்று கிட்டதட்ட ஒரு மைல் நீளமாம். கும்மிருட்டில் நல்ல வேளையாக கோச்சில் லைட் எரிகிறது. மற்ற இரண்டும் சின்ன குகைகள் தான்.




தென்மலையில் இறங்கினோம். சுற்றுவதற்கு நிறைய இடம் இருந்தாலும், சற்று தொலைவில அணைக்கும், மான் சரணாலயத்திற்கும் ஒரு பஸ்ஸில் டூர் இருந்தது. அதன் பின் காரில் பாலருவி சென்றோம். நல்ல வெயில். ஆனால் அருவியை நோக்கி நகர நகர சில்லென்று இருந்தது. இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனி இடம். பெண் காவலர்களும் உண்டு. உடைமாற்றும் அறைக்கு சென்ற பொழுது பெண்காவலர் அமைதியாக வந்து காவல் இருந்து விட்டு பின் மீண்டும் அருவி நோக்கி சென்றார். பாலருவி குளியலுடன் அருவிப்பயணம் முடிந்தது.


தென்மலையில் இருந்து இறங்கும் வழியில் இரயில் செல்லும் பாலம்


தாமிரபரணி நீரின் சுவையோடு அழகான நினைவுகளும் மனதோடு ஒட்டிக்கொண்டது.

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டகாசம்ங்க..
நாங்களும் ஒவ்வொருமுறையும் இந்த் லிஸ்டை வச்சிக்கிட்டு போகாமலே கடத்திட்டிருக்கோம்.. இம்முறை கூட இந்தா போனவாரம் நெல்லையோட முடிச்சிக்கிட்டேன் ட்ரிப்பை.. உங்களூது பாத்து எப்படான்னு ஆகுது எனக்கு.. ;)

ப்ரியமுடன் வசந்த் said...

பசுமையான கண்ணுக்கு குளிர்ச்சியான புகப்படங்கள் இடுகைக்கு தலைப்பு எங்கே மேடம்?

நட்புடன் ஜமால் said...

போட்டோக்கள் இரசனையோடு எடுக்கப்பட்டுள்ளன

இப்படி தண்ணீர் பார்த்து வெகு காலம் ஆயிற்று

சந்தனமுல்லை said...

super!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. கொடுத்து வச்சவங்க போங்க!! ரொம்ப ஏங்க வச்சிட்டீங்க!!

//அன்பான குடும்பம்// மட்டுமல்ல, அளவான குடும்பமும்கூட!!

;-)))))

பின்னோக்கி said...

photos romba nalla irukku. azhagana payana katturai. konjam petchu tamilil ezhuthi irukkalaame :)

அன்புடன் நான் said...

அனைத்து படங்களும் மிக அழகு.

ராமலக்ஷ்மி said...

ஆகாகா, எங்க ஊர் பக்கம் போய் வந்து படங்களுடன் தந்திருக்கும் பதிவு அருமையோ அருமை. இந்த அருவியெல்லாம் நானும் போனதுண்டு, சின்ன வயதில். மீண்டும் போகும் ஆசையை ஏற்படுத்தி விட்டீர்கள். இடுகைக்கு நன்றி அமுதா. படங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

Dhiyana said...

என் க‌ண‌வ‌ரின் அண்ண‌ன் திருநெல்வேலியில் இருக்கிறார். கிர‌க‌பிர‌வேச‌த்திற்கு போயிருந்தோம். தாமிர‌ப‌ர‌ணியில் குளித்தோம். சூப்ப‌ரா இருந்த‌து. ஒரு முறை ம‌ற்ற‌ இட‌ங்க‌ளுக்கும் போக‌ வேண்டும்.