என் மேகம் ???

Tuesday, February 3, 2009

ஏன் இப்படி?

திருவண்ணாமலை சென்றிருந்தேன். கோயிலைச் சுற்றி எந்த வீதியில் நின்றாலும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களோ அல்லது வயதானவர்களோ வந்து கையேந்தி நின்றனர். கையில் இருந்த சில்லறைகளைக் கொடுத்தாலும், ஏன் இப்படி என மனம் கலங்கியது.

கோயிலுள் தரிசன்ம் முடித்து வரும்பொழுது "அம்மா, உங்களால் முடிந்த அளவு வயதானவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள்" என்றவுடன் சட்டென ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டேன். சாப்பாடு கொடுங்கள் என்று நான் கூறும் பொழுதே எனக்கு புரிந்து விட்டது அது ஒரு நாடகம் என. சட்டென் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன். மனதில் இம்முறை எனக்கு கோபம் இல்லை, ஏன் இப்படி என வேதனை தான்.

கையேந்தி நிற்கவோ ஏமாற்றியோ இவர்கள் வாழ்க்கையை ஓட்டி எவ்வளவு சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் வாழ வழி இல்லையா? எனக் கேள்விகள். சென்னையில் வீட்டைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆள் கிடைக்காது எவ்வளவோ வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆள் தேடுகிறார்கள். எனக்கு தெரிந்த பல இடங்களில் வருபவர்கள் எல்லாம் உணவு, உடை, உறைவிடம் , கணிசமான தொகை கொடுத்து, கனிவாக இருந்தாலும் யாரும் நிலைப்பதில்லை.

வேலை இன்றி சிலர், வேலைக்கு ஆள் கிடைக்காது சிலர் என்று ஏன் இந்த முரண். ஏன் இப்படி?

இதன் தொடர்ச்சியாக எழுந்த எண்ணங்கள்:
இப்பொழுது விலைவாசி இருக்கும் நிலையில், அதுவும் கிராமங்களில் வாழ்வை ஓட்ட பொருள் ஈட்ட என்ன வழி இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சுய உதவி குழுக்கள் பற்றி பல செய்திகள் வந்தாலும் அது இன்னும் இது போன்ற மக்களை சென்றடையவில்லையா அல்லது இவர்கள் உழைக்க விருப்பப்படவில்லையா? எத்தனையோ உதவும் இல்லங்கள் இருந்தாலும் பலர் உதவினாலும் வறுமையை ஒழிக்க முடியவில்லையே? ஏன் இப்படி?

சில வருடங்களுக்கு (தற்போதைய நிலை எனக்கு தெரியாது) முன்பு சிவகாசியில் பிச்சைக்காரர்களைக் காண முடியாது, வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். இதற்கு காரணம் சுற்றி இருந்த தொழிற்சாலைகள். எனக்குத் தெரிந்து பல குடும்பங்கள் கட்டு ஒட்டியே வாழ்வில் உயர்ந்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் ஆண்பிள்ளைகள் ஒழுங்காக வருமானம் ஈட்டி வராத நிலையில் பெண்கள் மட்டுமே கட்டு ஒட்டி, வீடு கட்டியதோடு அவர்கள் திருமணத்திற்கும் சேர்த்து வைத்தனர். பல கடைகளில் "வேலைக்கு ஆள் தேவை" என்று எப்பொழுதும் அறிவிப்பு இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் பொருள் ஈட்ட வ்ழி இருந்ததால் தான்.


மற்றொரு விஷயம் தலைமை பற்றியது.
என் தந்தை ரேஷன் ஆபீஸுக்கு சென்று ரேஷன் கார்டு வாங்கும் சூழ்நிலையில், அங்கு சென்று காலையிலேயே நிற்பார். அப்பொழுது தான் நண்பகலில் வேலை முடியும் வாய்ப்பு உள்ளது என்று. ஒரு முறை வேலைகள் சரியான நேரத்திற்குத் தொடங்கி விரைவாக நடந்தன. ஏன் இப்படி? என்று விசாரித்தால் வந்த பதில் "ஆபீஸர் கொஞ்சம் கெடுபிடி". ஆக, தலைமை சரியாக வழி நடத்தினால் தான் வேலை நடக்கும் என்பதற்கு இந்த சின்ன உதாரண்ம் போதும்.


நம் தலைவர்களை இது போன்று கையேந்தி மக்கள் நிற்கும் இடங்களுக்குத் தனியாகத் தலைவனாக அல்லாது ஒரு குடிமகனாக அனுப்ப வேண்டும். சுற்றி கையேந்தி மொய்க்கும் மக்களைக் கண்டு கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி தோன்றாதா? ஏன் இப்படி?

6 comments:

butterfly Surya said...

தலைவர்கள் திருந்த மாட்டார்கள்..

மக்கள்தான் திருந்த வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

உழைப்பின் அருமை புரிவதில்லை.
உடம்பின் சொகுசு விடுவதில்லை.
எடுத்துச் சொல்லித் திருத்த எவருமில்லை. நீங்கள் கடைசியாகச் சொல்லியிருக்கும் வழி அருமை. அரசே காரியத்தில் இறங்கினால்தான் இம்மக்கள் சற்று செவி சாய்ப்பர். நல்ல பதிவு அமுதா.

ஆதவா said...

நம் தலைவர்களை இது போன்று கையேந்தி மக்கள் நிற்கும் இடங்களுக்குத் தனியாகத் தலைவனாக அல்லாது ஒரு குடிமகனாக அனுப்ப வேண்டும். சுற்றி கையேந்தி மொய்க்கும் மக்களைக் கண்டு கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி தோன்றாதா? ஏன் இப்படி?



ஏற்ற தாழ்வுகள் இருப்பதுதான் உலகம்... சமநிலை தோன்றவேண்டும் என்பது உங்களைப் போன்ற ச்மூக ஆர்வலர்கள் மட்டுமே எண்ணக் கூடியதொன்று..

தலைவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார்கள்.... ஏனெனில் அவர்கள் எந்த நிலைக்கும் இறங்கி (ஓட்டு கேட்கத்தான்) அலசக்கூடியவர்களாயிற்றே!!!

உங்கள் சமூக உணர்வுக்கு என் மரியாதைகள்.

நட்புடன் ஜமால் said...

\\நம் தலைவர்களை இது போன்று கையேந்தி மக்கள் நிற்கும் இடங்களுக்குத் தனியாகத் தலைவனாக அல்லாது ஒரு குடிமகனாக அனுப்ப வேண்டும். சுற்றி கையேந்தி மொய்க்கும் மக்களைக் கண்டு கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி தோன்றாதா? ஏன் இப்படி? \\

ஹையோ ஹையோ

இவிங்கள்ளாம் அங்கிருந்து வந்தவய்ங்கதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைவர்கள் பிச்சை எடுக்க அனுப்பனுமா

அதுதான் அப்ப அப்ப ஓட்டு பிச்சை கேட்டு வராங்களே.
மக்களாகிய நாம்தான் அப்ப எஜமானர்கள். திருமங்கலம் தெரியுமில்ல.

பிச்சை - இது சோம்பேறிகளின் வேலைவாய்ப்பு மையம்.
இதில் குழந்தைகளை மையப்படுத்துவதுதான் ரொம்ப கொடுமை.

ஜீவா said...

ரொம்ப நாளா மனதில் நெருடிய விஷயம் . கை நீட்டி பிச்சை எடுப்பவர்களை கண்டால் மனதில் எங்கோ வலிக்கேறது .