”பங்குனி ஆமை” என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இவை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையுள்ள காலங்களில் முட்டையிட கரைக்கு வரும். ”ஆலிவ் பச்சை” நிறத்தில் இருப்பதால் “ஆலிவ் ரிட்லி” ஆமைகள் என்றழைக்கப்படுகின்றன. இவை கடலாமைகளிலேயே சிறியவை; இரண்டரை அடி நீளம் மற்றும் அகலம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முட்டையிடும். ஒவ்வொருமுறையும் சராசரியாக 100 முட்டைகள் இடும்.
இந்த கடலாமைகளின் முக்கியமான ஆபத்துகள்:
- trawlers எனப்படும் மீன்பிடி கப்பலகள்; கிடைப்பதை வலையில் இழுத்துவிடும்... ஆமையையும் சேர்த்து
- ஆமை முட்டைகளை உண்ண எடுத்துச் சென்றுவிடுவார்கள்
- முட்டைவிட்டு வெளிவரும் ஆமைக்குஞ்சுகள், வழக்கமாக நிலா, நட்சத்திர ஓளியில் கடல் நோக்கி செல்லும். ஆனால், இப்பொழுது கரையில் பளீரென இருக்கும் விளக்குகளை நோக்கி நகரும். 24 மணி நேரத்திற்குள் கடலுள் சென்றால் மட்டுமே அதனால் தாக்கு பிடிக்க முடியும்.. கரை நோக்கி வரும் ஆமைகள் சூரிய ஒளியால் dehydrate ஆகி இறக்கலாம், நாய் (அ) பூனைகளால் உண்ணப்படலாம்.
- இவற்றைக் கடந்து கடலுள் செல்லும் ஆமைக்குஞ்சுகளில் ஆயிரத்தில் ஒன்று மட்டுமே உயிர் பிழைக்கும்
(தகவல்கள் நன்றி : http://sstcn.org/)
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்களில், இரவில் கடலோரம் நடந்து, ஆமைமுட்டைகளை எடுத்து பத்திரமாக hatchery-ல் வைத்து கடலில் விடுவர் “SSTCN” என்ற சேவை அமைப்பினர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்களில் வெள்ளி சனிக்கிழமைகளில், நீலாங்கரை தொடங்கி பெசண்ட் நகர் வரை சுமார் 7 கி.மீ மக்களிடையே இதைப் பற்றிய விழிப்புணர்வுக்காக வெள்ளி, சனிக்கிழமைகளில் மக்களுடன் சேர்ந்து இப்பணி எவ்வித கட்டணமும் இன்றி நடக்கும்.
கிட்டதட்ட நள்ளிரவில் கும்பலாக பீச்சில் நடப்போம். மீனவர்களின் கட்டுமரங்களையோ, வலையையோ தொடாமல் செல்ல வேண்டும். முன்னால் SSTCN அமைப்பினர் சென்று ஆமை எதுவும் வருகிறதா (அ) இருக்கிறதா என்று கவனிப்பார்கள். ஆமை வருகிறது என்றால், எங்களைக் காத்திருக்கச் சொல்வர். ஆமை முட்டையிட ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும். முட்டை இடும் முன் அது ஏதேனும் ஃபீல் செய்தால் மீண்டும் கடல் நோக்கி சென்றுவிடும். ஆனால் முட்டையிட ஆரம்பித்தால் என்ன நடந்தாலும் அசையாது. எனவே முட்டையிட ஆரம்பித்த உடன் நாம் சென்று பார்க்கலாம்.
சென்றமுறை அப்படிதான் ஆமையைக் கண்டோம். ப்ளாஷ் கூடாது என்று அவர்கள் எவ்வளவோ கூறியும், ஆமை முட்டை இடுவதை ப்ளாஷில் குளிப்பாட்டி விட்டனர் நம்மக்கள். பாவம் அந்த ஜீவன் என்ன திட்டு திட்டியதோ? அழகாக டென்னிஸ் பந்து சைஸில் இருந்தன முட்டைகள். சுமார் 100 முட்டை இட வேண்டிய ஆழத்திற்கு குழி தோண்டி இருந்தது. முட்டை குழியில் இருக்கும் தட்பவெட்பம் பொறுத்து ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகும். அந்த குழியின் நீளம், அகலம், தட்பவெட்பம் குறித்துக் கொண்டு SSTCN அமைப்பினர் அம்முட்டைகளை hatchery-க்கு எடுத்துச் செல்ல, சாலையில் காத்திருக்கும் அவர்கள வேனுக்கு கொடுத்து விடுவர். 45-60 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டுவிடுவார்கள். 12 (அ) 13 வருடங்கள் கழித்து மீண்டும் பிறந்த கரைக்கே முட்டையிட வருமாம். கிட்டதட்ட ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கு வந்து முட்டையிடுகின்றன ஆமைகள். ஒரிஸாவிற்கும் நிறைய செல்லுமாம்.
ஆமை தோண்டும் குழி ஆழமாக இருந்தாலும் முட்டை உடையாது. ஏனெனில், முட்டை இடப்படும் பொழுது இரப்பர் பந்து மென்மையாக இருக்கும். முட்டை ஓடு சில விநாடிகள் கடந்தே கடினமாகும். ஆமை வந்து சென்ற தடமிருந்தால், முட்டை இட்டுள்ளதா எனத் தேடி அறிந்து, அம்முட்டைகளையும் பத்திரமாக hatchery-ல் சேர்த்து விடுவர்.
மேலும் விவரங்களுக்கு ”http://sstcn.org/” செல்லவும். சென்னையில் ஆமைநடை பற்றிய விவரங்களும் உண்டு.
மேலும் படங்களுக்கு இங்கே செல்லவும்
http://sstcn.org/gallery/
இயற்கையின் அதிசயங்களை சிறுவர்களுக்குப் புகட்ட ஒரு நல்ல வழி... என்ன கொஞ்சம் நடக்க வேண்டும் (ECR சாலையில் ஷேர் ஆட்டோ இருப்பதால், நடுவில் கூட ஒரு ஆமை கண்ட பின் பிரிந்து வந்துவிடலாம்; முழு 7 கிமீ நடக்க வேண்டாம்... ஆனால் அதற்குள் ஆமையோ முட்டையோ கண்ணில் பட வேண்டும்)