என் மேகம் ???

Thursday, December 14, 2006

கோணங்கள்

கோணம் - 1
"வாண்ணா", இராகினி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். "அண்ணி வரலையா?" கேள்விக்குறியுடன் நோக்கினாள்.
"இல்லம்மா, ஒரு க்ளையண்ட்ட பார்க்க இந்த பக்கம் பார்க்க வர வேண்டி இருந்தது. அப்படியே உன்னை பார்க்கலாம்னு வந்தேன்", என்றான் இராகவன்."வாண்டு எங்கே", கண்களால் அரவிந்த்தை துளாவினான். "அரவிந்த்தை தானே கேட்கற, அவன் அத்தையோட கோவிலுக்கு போயிருக்கிறான். ஒரு நிமிடம் அவனும் அவங்களை விட்டு இருக்க மாட்டான், அவங்களும் நான் ஆ·பீஸிலிருந்து வந்துட்டேன்னு என்கிட்ட உடனே விட மாட்டாங்க", என்றாள். அவள் மாமியாரைப் பெருமையாக கூறுவது போல் இருந்தாலும், குழந்தை தன்னிடம் வெகு நேரம் இருப்பதில்லை என்ற ஏக்கம் தெரிந்தது. வார விடுமுறையில் பிறந்த வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம், "இப்ப தான் என் பிள்ளையுடன் இருக்க முடிகிறது", என்று கூறுவது இதனால் தானோ? சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினான்.
இரவு...
வித்யா பிந்துவைத் தூங்க வைத்து விட்டு அவனருகே வந்து அமர்ந்தாள். "என்னம்மா, வாலு இன்னிக்கு ரொம்ப படுத்திடுச்சோ?", புன்னகையுடன் வினவினான். "ம்ம்... ஆ·பீஸிலிருந்து வந்திருக்கேன்னு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண விட்டால் நல்லா இருக்கும். உள்ளே நுழைஞ்ச உடனே என் கையில் ஒப்படைச்சுட்டு போயிடறாங்க...", பெருமூச்சுடன் கூறியனாள் வித்யா.
தங்கையின் ஏக்கத்தையும், மனைவியின் பெருமூச்சையும் நினைத்து இராகவன் மெல்லப் புன்னகைத்தான்.

கோணம் - 2
'ப்ரியா, கொஞ்சம் பால் குடிம்மா", வசந்தியின் குரலுக்கு செவிசாய்க்காது ப்ரியா ஓடி மறைந்தாள். "ம்ம்... உடம்பை கவனிக்க இந்த பொண்ணுகளுக்கு யாராவது சொல்ல மாட்டாங்களா? டயட், கியட்னு உடம்பை கெடுத்துக்கறாங்க...", புலம்பியபடி வசந்தி சென்றாள். இது பல நாட்களாக நடக்கும் விஷயம்.
சில நாட்கள் கழித்து...
"அம்மா பால்...", என்று கேட்டு குடித்த பெண்ணை அதிசயமாக பார்த்தாள் வசந்தி. "என்னடி ஆச்சரியம்... உன் டயட் எல்லாம் என்ன ஆச்சு?" என்றாள் ஆச்சரியமாக. "அதுவா, நான் டயட் இருந்து யாருக்கும் உதவற மாதிரி தெரியலை, அதான் உடம்பை கொஞ்சம் தேத்திக்கலாம்னு பார்த்தேன். புரியலையா? நேத்து காலேஜ்-ல இரத்த தானத்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. ஊருக்கு உதவலாமேன்னு போனால், அண்டர் வெய்ட்-னு அனுப்பிட்டாங்க. இந்த மாதிரி நல்ல விசயத்துக்கு உதவாத மாதிரி என்ன கண்ட்ரோல்-னு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்".

4 comments:

குடந்தை அன்புமணி said...

டயட்- க்கு அர்த்தம் தெரிந்தால் இப்படியெல்லாம் பெண்கள் யோசிக்கமாட்டாங்க. ஒல்லியாக ஆசைப்பட்டு பட்டினி கிடப்பதால் ஏற்படும் விளைவுகளை ஏற்கனவே ஒரு பதிவில படிச்சேன். எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பெண்கள்!

Kavinaya said...

கோணங்களை அழகா எடுத்துக் காட்டியிருக்கீங்க!

ராமலக்ஷ்மி said...

கோணங்கள் அருமை. இதைப் படிக்கத் தவறியிருக்கிறேனே:)! வலைச் சரம் வழியே வந்தேன்.

அமுதா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புமணி, கவிநயா & ராமலஷ்மி மேடம்