என் மேகம் ???

Wednesday, December 6, 2006

சுட்டிப் பெண்களுடன் ஒரு விமானப் பயணம்




அவசரமாக மதுரை போக வேண்டிய அவசியம். திரும்பி வர டிரெய்ன் டிக்கட் கிடைக்கவில்லை. விமானத்தில் வர முடிவு செய்தோம். குழந்தைகள் விமானப் பயணத்தை எஞ்சாய் செய்வார்கள் என்ற எண்ணம் எங்கள் முடிவை உறுதியாக்கியது. எனது இரண்டு சுட்டிப் பெண்களுடன் (ஒன்று 7 வயது ஒன்று 2 வயது) ஒரு இனிய மாலைப் பொழுதில் எங்கள் பயணம் துவங்கியது.
என் சின்ன பெண் கைகுழந்தையாக இருந்த பொழுது, ஒரு முறை விமாத்தில் சென்று, காதில் பஞ்சு வைப்பதில் குழப்பம் ஏற்பட்டு, ஊரில் காது வலி வந்ததும், அதற்கு ஊசி போட போக, கத்தி போய் வாள் வந்த கதையாக, தொடையில் சீழ் பிடித்து , அறுத்து தழும்பான அனுபவம் இருந்தது. எனவே ஒரு சின்ன பஞ்சு கட்டு வாங்கி சென்றோம்.
செக்கின் முடிந்து விமானம் வர காத்திருந்தோம். கொஞ்ச நேரம் மற்ற விமானங்க்ளை நாங்கள் ஆவலுடன் காட்டினோம்.முதலில் ஆர்வமாக பார்த்தாற் போல் இருந்தது, அப்புறம் கவனம் பஞ்சின் மேல் திரும்பியது. முதலில் என் பெரிய பெண், கொஞ்சம் பஞ்சு வாங்கி காதில் வைத்தாள். சின்னது சமர்த்தாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், பெரியவள் காதில் பஞ்சு இல்லை. ஆழ்ந்து ஆராய்ந்ததில், பஞ்சு காதுள் போயிருப்பதை அறிந்து என் கணவர் இலாவகமாக அதை எடுத்தார். அவரது engg. திறமை அங்கு தான் வெளிப்பட்டது. என் பெண்ணுக்கு ஒரே சந்தோஷம், அவள் காது அழுக்கெல்லாம் போய்விட்டதாம்.
என் சின்னப் பெண், அவளிடம் சமர்த்தாக இருக்க சொல்லிவிட்டு, பெரியதாக வைக்க அறிவுரை வழங்கியது. பின் செய்முறை விளக்கமாக, கை நிறைய பஞ்சு எடுத்துக் கொண்டு பந்து போல் காதில் வைக்க முயற்சித்து , தோற்று, மொத்தமாக பஞ்சை கீழே போட்டது. அளவாக பஞ்சு மீந்த நேரத்தில், கடவுள் அருளால், விமானத்தில் ஏற அழைத்தார்கள்.
ஆரம்பித்ததடா ஒரு ஸீட் பெல்ட் சண்டை... நான் ஸீட் பெல்டை எடுக்க, எனக்கு என்று சிறியது கூற, சரியென்று, அவளையும் சேர்த்து கட்டினேன். Air hostess வந்து, அழகு ஆங்கிலத்தில், தயவு செய்து ஸீட் பெல்டில், உங்களை மட்டும் கட்டிக் கொள்ளுங்கள், குழந்தையை கையில் வைத்துக்கொள்ளுங்க்ள் என்றார். அடுத்த நிமிடம் "வீல் என்று ஒரு அலறல்". அது என் அருமை வாண்டு தான். Air hostess ஓகே சொல்லி அகலும் வரை அந்த சத்தம் ஓய்வதாக இல்லை. ஒரு வழியாக செட்டில் ஆகி, இரண்டு பேர் காதிலும் பஞ்சு வைத்து, அக்கடா என்று அமர்ந்தோம். விமானம் takeoff செய்யும் நேரம் பார்த்தால், சின்னவள் காதில் பஞ்சை காணோம். பழைய அனுபவத்தை நினைத்து, பதறினால், அது நிதானமாக, "பஞ்சு இல்லேனா என்ன ஆகும்?" என்று சிரிக்க, நாங்களும் சிரித்தோம்... வேறு வழி?
அடுத்து, வீட்டில் என்றுமே பசிக்காத என் கண்ணின் மணிகளுக்கு, அங்கு தான் அகோர பசி எடுத்தது. Air hostess கொண்டு வந்த ஸ்நாக்ஸ் எல்லாம் வேண் டும் என்று ஒரே அடம். ஸீட் பெல்ட் போட அலறிய என் சின்ன குட்டி, இப்போது, எடு என்று அலறியதோடு அல்லாமல், வாக்கிங் போக தலைப்பட்டது. என் பெரியது, ஜன்னலை திற என்று ஒர் ஆர்ப்பாட்டம். திறப்பதற்கு இல்லை என்றால், ஜன்னல் எதற்கு என்ற கேள்வியின் சுட்டித்தனத்தை மெச்ச முடிந்ததே ஒழிய பதில் கூற இயலவில்லை. வேடிக்கை பார்க்க என்று கூறி, நான் ஒரு ஜோக்கராக விரும்பவில்லை. விமானப்பயணத்தில் குதூகலிப்போம் என்ற எண்ணம் போய், எப்போதடா தரை இறங்குவோம் என்று காத்திருந்தோம்.
விமானத்தில் இருந்து டெர்மின்ஸ¤க்கு ஒரு சொகுசு பேருந்து அழைத்துச் சென்றது. அங்கு என் குழந்தைகளிடம் நான் கண்ட குதூகலம் தான் நான்
விமானப்பயணத்தில் எதிர்பார்த்தது. அங்கு இருந்த விமானங்கள் அவர்கள் கருத்தைக் கவரவே இல்லை. பல நேரங்களில், நாம் குழந்தைகளைப் புரிந்து கொள்வது இப்படி தான் தவறாகிறது. எவ்வளவு விலை உயர்ந்த பொம்மை வாங்கினாலும் அவர்களுக்கு, செப்பு சாமான் தான் அலுக்காத விளையாட்டு. என்றாலும் வீட்டில் மற்ற விளையாட்டு சாமான்க்ள் தான் இறைந்து கிடக்கிறது. விமானம் என்பது ஏறி பறப்பதை விட "ஏய் ஏரோப்ளேன்" என்று ஓடுவது தான் மகிழ்ச்சி என்பது புரிய சில ஆயிரங்கள் செலவழிக்க வேண்டி இருந்தது.

3 comments:

சேதுக்கரசி said...

சிரிப்பு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றாக அனுபவித்து (பட்டு) எழுதி இருப்பீர்கள் போல:))
ஒரிருமுறை போனபின் விமானப்பயணம் குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை.உண்மைதான்.
இந்த முறையும் ரயில் இல்லையா என கேட்கிறார்கள். ஒரே இடத்தில் கட்டி வைத்தார்ப்போல் இருப்பதை விரும்புவதில்லை அவர்கள்.

டண்டணக்கா said...

Cute kids...nicely written and pleasent to read.