என் மேகம் ???

Tuesday, September 29, 2009

இன்பத்தைத் தேடி...

இளம்வெயிலை அனுப்பி
புன்னகை பரப்பினான்
காலை இளஞ்சூரியன்

மகிழ்ச்சியை அள்ளிக்கொண்டு
மென்மையாகக் கடந்தது
மெல்லிய இளங்காற்று

ஆனந்தத்தைத் தெளித்து
அள்ளச் சொன்னது
குழந்தையின் சிரிப்பு

எதையும் கவனிக்காமல்
இன்பத்தைத் தேடுவதாக
சொல்லிக்கொண்டு...
தொலைத்(ந்)துக் கொண்டிருந்தேன்!!!

ஊஞ்சலாடும் நினைவுகள்

சமீபத்தில் ஊருக்கு சென்று வீடுகள் நிறைந்த ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அம்மா சொன்னார் "இங்க தான் நாங்க சோத்தைக்கட்டிட்டு வந்து ஊஞ்சல் விளையாடுவோம். அப்ப இது காடா கிடக்கும். இப்ப பாரு", என்று. ஊஞ்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விஷயம். இன்றைக்கும் பூங்காக்களில் "குழந்தைகளுக்காக" என்று போட்டிருந்தாலும் விளையாடும் பெரியவர்களைக் காணலாம். சட்டென்று மனம் ஊஞ்சல் நினைவுகளைத் தேடியது;

கோவையில் வனச்சரகக் குடியிருப்பு தான் நான் வளர்ந்த இடம். வீட்டருகில் நிறைய புளிய மரங்கள் நாங்கள் விளையாட நிழலை விரித்துக் காத்திருக்கும். சிறுவர்களின் விளையாட்டுத் திடல் அது தான். அதன் மரக்கிளைகளில் தொங்கி ஊஞ்சல் ஆடிய பொழுதுகள் இன்றும் பசுமையாக... அந்த நிழலின் குளுமையாக....அதன் பின் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வராண்டா வந்தது. நல்ல தாம்புக் கயிறும், சின்னதாக ஊஞ்சல் பலகையும் வாங்கி அப்பா ஊஞ்சல் போட்டுத் தந்தார்.எனக்கும் என் தம்பிக்கும் இடையில் ஊஞ்சல் யாருக்கு என்று அடிக்கடி யுத்தம் நடக்கும். சில சமயம் ஊஞ்சலில் தட்டாமாலை சுற்றி, தாம்புக்கயிறில் முடியும் சுற்றி, கத்திரிக்கோல் உதவியின்றி நான் எழுந்தது இல்லை. என்றாலும் ஊஞ்சலும் தட்டாமாலையும் அடிக்கடி நடக்கும்.

பின் வீடு மாறியதால் சற்றே நீளமான வராண்டா... தாம்புக்கயிறு இரும்புச் சங்கிலி ஆனது... "ஜிவ்வென்று" மேலே வரை ஊஞ்சலாடி இறங்குவதே பறப்பது போல் இருக்கும். சில சமயம் நிலைப்படி தட்டி கொஞ்சம் கீழே இறக்கிவிடும். அதில் தான் நந்தினியும் சிரித்துக் கொண்டே ஊஞ்சல் ஆடுவாள். இப்பொழுது அவள் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைக்கும் சம்பவமாக ஊஞ்சல் ஆனது. ஆடிக்கொண்டிருந்தவளை நோக்கி அவள் தந்தை கை நீட்ட, சட்டென்று கையை விட்டவளைப் பிடிக்க இயலவில்லை. வாய் முழுதும் இரத்தம். டாக்டரிடம் போய், மருந்து போட்டு ஒரு மணி நேரத்தில் எல்லாம் சரியானது. சில மாதங்கள் கழித்து தான் பார்த்தோம், பல்லில் கறை போல்... ஏதோ வளர்ச்சி தடைபட்டுவிட்டது போலும்...வேர்கள் நன்கு வளர்ந்தபின், பதின்ம வயதில் தான் அதற்கு வைத்தியம் பார்க்கலாமாம்... ம்ஹ்ம்... ஊஞ்சல் ஆசை...


எனக்கு சினிமாவில் வருவது போல் பெரிய ஊஞ்சல் ஹாலில் போட்டு படிக்க, படுக்க வேண்டும் என்று ஆசை. வீடு கட்டும்பொழுது மாமாவிடம் சொல்ல, அவரே மரம் பார்த்து வாங்கி ஒரு ஆள் படுக்கும் அளவு ஊஞ்சல் பலகை செய்து வாங்கினார். வீட்டுக்கூரையிலும் கொக்கி எல்லாம் வைத்தாயிற்று... ஆனால் வீட்டுள் ஊஞ்சலுக்கு இடம் கொடுத்தால் வேறு எதற்கும் இடம் தான் இல்லை. எனவே ஊஞ்சல் வீட்டு முகப்பிற்கு வந்தது. ஆசை தீர உட்கார்ந்து, படுத்து , படித்து.... அதன் பின் கார் வந்து அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.

இப்பொழுது ஊஞ்சல் பலகை ஓய்வெடுக்கிறது. அதன் இரும்பு சங்கிலி தொட்டில் கட்டவும் பிரம்பு கூடை ஊஞ்சல் தொங்கவும் உதவுகிறது. அந்த பிரம்பு ஊஞ்சலில் தான் மாமா அமர்ந்து யாழினியைத் தோளில் சாய்த்து உறங்க வைப்பார். இப்பொழுது அந்த ஊஞ்சல் சும்மா காற்றில ஆடிக்கொண்டு இருக்கிறது. வீட்டிற்கு யாரேனும் வந்து அதில் அமர்ந்தால் தான் அதற்கு சண்டை துவங்கும். வாழ்க்கையே ஊஞ்சல் தான்!!!! நாம் உட்கார்ந்து இருக்கிறோம்... யாரோ ஆட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... சுகமாகவும் இருக்கும் சுமையாகவும் இருக்கும்... நிறுத்தவும் தோன்றும்... ஆடிக்கொண்டே இருக்கவும் தோன்றும்....நிற்கும் வரை இந்த ஆட்டம்தான்...

Wednesday, September 23, 2009

என்றும் நானறியேன்

இன்றும் கூர் மழுங்காத கத்தியும்
ஓயாமல் ஓடும் சுவர்க்கடிகாரமும்
முகம் பார்த்திராத தாத்தாக்களை
நினைவுக்கு கொண்டுவரும்

வெற்றிலை இடிக்கும் பாத்திரமும்
ஓரமாகக் கிடக்கும் நார்க்கட்டிலும்
கதைகள் சொன்ன பாட்டிகளின்
நினைவுகளை அள்ளி வருகின்றன

விளாம்பழம் கண்டவுடன்
பிரியமாக வாங்கி வைத்து
மறக்காது கொடுத்தனுப்பிய
சின்ன அத்தையின் நினைவு

தோட்டத்து மலர்கள் முதற்கொண்டு
கருப்பட்டி மிட்டாய் இலந்தை வடை
என்று சின்ன சின்ன விஷயங்களும்
எண்ணிலா இன்னும் பல விஷயங்களும்
அன்பைப் பொழிந்த மாமாவின்
நினைவுகளால் மனதை நெகிழ்த்தும்

என்றும் நானறியேன்...
என்னை நினைவுறுத்த
என்ன இருக்கும் என்று!!!

Thursday, September 17, 2009

பால் சோறும் பக்கடாவும்

"இன்னிக்கு உங்க வீட்ல என்ன டின்னர்?" - இந்த கேள்விக்கு "ரொம்ப சிம்பிள்" என்று சற்றே மழுப்பலுடன் புன்னகைப்பேன். பதில் சொன்னால் , "அது உங்க குழந்தைகளுக்கு... உங்களுக்கு?" என்று கேள்வி வரும். பால் சோற்றின் ருசி அறியாதவரிடம் பேசி என்ன பயன்? அதன் பிறகும் தொடரும் கேள்விகள்..

"எப்படி சாப்பிடுவீங்க? சர்க்கரை போட்டா?"
"இல்லை. உப்பு சேர்த்தே தான். சிலர் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுவாங்க. அவங்க வழக்கம்"
"எப்படி சாப்பிடுவீங்க? நான் கேள்விப்பட்டதே இல்லை. குழந்தைகளுக்கு தான் கொடுப்பாங்க"
"எங்க ஊர்ப்பக்கம் அப்படி தாங்க"
"சும்மா கதை விடாதீங்க... வீட்லனு சொல்லுங்க... ஊரே சாப்பிடுமா? "


என்ன சொல்வேன்? "பால்சோறும் பக்கடாவும் வேலாயுதம் கடையில் விற்கப்படுவதாகவும் ஏழு மணிக்குள் காலியாவதாகவும் நான் கேள்விப்பட்டதையா? இரவு நிச்சயம், மறுநாள் திருமணம் என்ற வழக்கம் ஆதலால் நிச்சயதார்த்த இரவு உணவில் "பால்சோறும் பக்கடாவும்" ஸ்பெஷல் என்பதையா? திருமணப்பேச்சுகளின் ஒன்றில் "அமெரிக்காவில் இருந்தாலும் என் பையனுக்கு நைட் பால்சோறு சாப்பிட்டாகணும்" என்று காதில விழுந்த பேச்சையா?

அதென்னவோ இந்த பால்சோறு இல்லாவிட்டால் எனக்கு இரவு உணவு உண்ட திருப்தி இராது. இதே பால்சோறு எனக்கு பகலில் பிடிக்காது. சென்னையில் வந்து விடுதியில் தங்கிய பொழுதுதான் பால்சோறின் அருமை தெரிந்தது. சாம்பாரும், இரசமும் (இரண்டும் கிட்டதட்ட ஒண்ணுதான்) கண்டு பெருமூச்சு விட்டு சில இரவுகள் பழத்துடனோ வெளியே சாப்பிடும் ஸ்நாக்சுடனோ முடிந்துவிடும். வெந்நீர் வைக்க மட்டும் என்று ஸ்டவ்வுக்கு விடுதியில் அனுமதி கிடைத்த பொழுது, நைசாக பால் வாங்கி காய்ச்சி பால்சோறு உண்டபொழுதுதான் மனம் நிறைவுற்றது (விடுதி மக்கள் ஓவர் ஆர்வமாகி ஒரு நாள் பாகற்காய் பொறியல் பண்ண, இதையும் போடு என்று ஒருத்தி "ஆஞ்சநேயர் கோயில் வெண்ணெய் பிரசாதம்" சேர்க்க, கமகம என்ற வாசனை சூப்பர்வைசரை ஈர்த்து, ஸ்டவ் வைக்க தடை வந்தது வேறொரு விஷயம்)

பால்சோற்றுடன் ஊறுகாய், புளிக்குழம்பு என்று எல்லாம் ஒத்துப்போனாலும் பக்கடா (அதுவும் ஊர்ப்பக்க பக்கடா ) தான் "ஏ" க்ளாஸ் காம்பினேஷன். சமீப காலத்தில் இரவு அரிசி உணவு சாப்பிட்டால் எடை கூடுகிறது என்று எனக்கு நானே பால்சோறுக்கு "தடா" போட்டுவிட்டேன். குழந்தைகளுக்கு ஊட்டி விடும் பொழுதெல்லாம் நாவூறும். என்றாலும் ஊரில் இருந்து பக்கடா வந்துவிட்டால் எனது இரவு உணவு "பால் சோறும் பக்கடாவும்" தான்.

டிஸ்கி: "என்ன டின்னர்" என்று கேட்டவர்கள் எவரும் டின்னருக்கு வர விருப்பப்படுவதில்லை :-)

Tuesday, September 15, 2009

"என் வானம்" வந்த கதை

"என் வானம்" வந்த கதை சொல்லச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார் தீபா. ஆங்காங்கே பதிவுகளில் சொன்ன கதை தான் என்றாலும் நினைவுகள் என்றுமே "நினைத்தாலே இனிக்கும்".

வாசிப்பை அறிமுகப்படுத்திய பெற்றோர் தான் என் எழுத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள். கட்டுரைப் போட்டிக்கு அப்பாவிடம் கேட்க, அவர் லைப்ரரிக்கு அழைச்சுட்டு போய், படிச்சு எழுதுனு சொல்ல, நானும் அங்க இங்க புரட்டி எழுத... பரிசு கிடைக்க... ஆரம்பிச்சது காகிதங்களுக்கு வேட்டு. வெத்து டைரி எல்லாம் என் கையெழுத்தால நிரம்புச்சு... யாரும் படிக்கலைங்கறது வேற விஷயம். சந்தோசம்னாலும் சோகம்னாலும் அந்த டைரிகளுக்குள் புதைந்து பழைய பேப்பர் கடையில் புகுந்துவிடும். இது ரொம்ப நாள் போச்சு...

அப்புறம்... கல்யாணம் பண்ணிட்டு ஆஸ்திரேலியா போனேன். அங்க இருந்து என் தோழிக்கு மின்னஞ்சல் அனுப்ப, அவள் "என்ன அழகா கோர்வையா எழுதற..." என்று பின்விளைவுகளை யோசிக்காமல் கூற, அடிமனதில் "ஆகா... நாம் எழுதறதையும் நல்லா இருக்குங்கறாங்களே!!!" என்ற எண்ணம் விழ ஆரம்பித்தது. இதுக்கு நடுவில் "சிட்னியில் வசந்தம்" என்று ஒரு கவிதையை நான் இணையத்தில் போட... நல்லா இருக்குனு இரண்டு பேர் மின்னஞ்சல் அனுப்ப... அந்த கவிதையைப் பாதுகாக்க மறந்து , இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன். இந்த தேடல் தான் என் வானத்தை உருவாக்கியது.

எங்க வீட்ல ஒரு பொருளை வச்சா "வைக்கப்போரில ஊசி தேடற" மாதிரி. யாழ் பிறந்திருந்த சமயம் கொஞ்ச நாள் ப்ரேக் எடுத்திருந்தேன். குழந்தைகள் பற்றி கவிதையை எப்பவும் போல ஒரு நோட்ல எழுதி வச்சிருந்தேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பத்திரமா வச்சிருக்கணும்னு வைக்கறது எல்லாம் கண்டிப்பா இருக்காது இல்லையா? என் பொஸ்தகம் மட்டும் தப்புமா? இதை எப்படி பத்திரமா வச்சிக்கிறதுனு நான் யோசிக்கற நேரம் முல்லை தன்னோட "சித்திரக்கூடத்தை" தெரியாமல் என் கண்ல காட்டிட்டாங்க...

ப்ளாக் எழுதறதுனு முடிவு பண்ணினேன். "சித்திரக்கூடம்" மாதிரி அழகான பெயர் தேடினேன் ... ஒண்ணும் அகப்படலை. என் நிலவுகள் பத்தி எழுதற எண்ணம் என்பதால் "என் வானம் - என் எண்ணங்கள்" என்று 2006-ல் ஆரம்பிச்சேன். என் வானத்தை "நிலவுகள்" "சூரியன்" என்று அமைத்தேன். ஈ-கலப்பையில் தமிழ் தட்டச்சு செய்ய, தமிழ் மணத்தில் இணைக்க என்ற அறிமுகம் எல்லாம் முல்லை தான். பின்னூட்டம் காண மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எனக்கு பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லவோ, பின்னூட்டம் இடவோ தெரிந்திருக்கவில்லை. மெல்ல அனுபவங்கள், எழுதிய கதைகள், பாட்டி சொன்ன கதை என்று பதிவு செய்தேன். கவிதைகளை "நட்சத்திரங்களாக" வானத்தில் பதித்தேன். அப்பொழுது லேபிளுக்கும் தலைப்புக்கும் எனக்கு வித்யாசம் தெரியாது... பின்பு தெரிந்து லேபிள் போட ஆரம்பித்தேன்... அடிக்கடி Save செய்யும் பொழுது "Save as Unicode" செய்ய மாட்டேன். அதனால் எழுதனது எல்லாம் "நீரில் எழுதிய எழுத்தாக " மாயமாகிடும்.

அதன் பிறகு அவ்வளவு சுறுசுறுப்பு இல்லை. "கழுதை கெட்டால் குட்டிச்சுவர்" என்று, என் வானத்தையும் தமிழ்மணத்தையும் மறந்து பூமியில் நடமாடிக்கொண்டிருந்தேன். மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு ஒரு நட்சத்திரம் தேவைப்பட்டது. முல்லை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக மின்னுவதைக் காண வந்த நான், மெல்ல மெல்ல தமிழ்மணத்துடன் ஒன்ற ஆரம்பித்தேன். எதையாவது எழுதி "முல்லை இதைக் கொஞ்சம் ரெவ்யூ பண்ணிக் கொடு" என்று டார்ச்சர் பண்ணிவிட்டு அப்புறம் தான் பதிவுலகத்தை டார்ச்சர் செய்வேன். வர்ற ஒண்ணு ரெண்டு பின்னூட்டத்துக்கு வானத்துக்கு குதிப்பேன். அப்புறம் நானே முல்லை மேல பரிதாபப்பட்டு டார்ச்சரைக் குறைச்சுட்டேன்.

சில சமயம் என்னத்துக்கு எழுதிட்டு, யாராவது சிரிக்கப் போறாங்க என்று யோசிப்பேன். அப்பொழுதெல்லாம் ஃபாலோ பண்ணி ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஜீவன், ஆயில்யன் , அமித்து அம்மா எல்லாம். பின்னூட்டம் வழியாக இராமலஷ்மி மேடம், வேணு வேணாம் எல்லாம் நல்ல ஊக்கம் அளித்தார்கள். மெல்ல மெல்ல இன்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஊக்கமளிக்கின்றனர்.

நடுவில் இரண்டு நாள் ப்ளாகில் login பண்ண இயலவில்லை. என்ன என்று தவித்த பொழுது ஆயில்யன் மற்றொருவருக்கும் இப்படிதான் ரெண்டு நாள் வேலை செய்யவில்லை, அப்புறம் சரியாகிடுச்சு, உங்களுக்கும் ஆகும் என்று சாட்டில் தைரியம் கொடுத்தார். கவலை மறந்து இருக்க இரண்டு நாளில் சரியானது. நண்பர் ஜமாலின் பதிவால் Import/Export" blog தெரிந்து கொண்டேன். "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு". நான் கற்றுள்ளதோ கைமண் அளவு இல்லை, மணல் துகள் தான் என்பது போல் இன்னும் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. ஒரு கெட்ஜட் போடுவது என்பது இன்றும் எனக்கு பெரிய விஷயம் தான். எந்த டவுட் என்றாலும் அருகில் முல்லை இருக்கிற தைரியமோ? வலைப்பூ குழுக்களில் சேர, ஜி-டாக், லே-அவுட் என்று எல்லாமே முல்லை ட்யூஷன் தான்.

வலைப்பூ நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோ பார்த்தது, படித்தது, கேட்டது, அனுபவித்தது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இதயம் துடிக்கிறது. மனதை ஊக்கப்படுத்தும் அங்கீகாரத்தை அள்ளி அள்ளி வழங்குபவர்கள் வலைப்பூ நண்பர்கள் அல்லவா?
என் வானத்தை தொட்ட ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் ஒருமுறையேனும் சென்று பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட வேண்டும் என்பது என் ஆசை. சில முறை செய்துள்ளேன். பதிவெழுதுவதும், பின்னூட்டமிடுவதும் ஆணிகளுக்கும் கடப்பாறைகளுக்கும் இடையில் கிடைக்கும் சில சைக்கிள் கேப்புகள் என்பதால் பல முறை அது சாத்தியப்படுவதில்லை. என்றாலும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் தோழ/தோழியருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் எழுதாதவர்கள் உங்கள் கதையையும் பதிவில் சொல்லுங்கள்... கேட்போம்... இரசிப்போம்...பதிவுலகம் பதிவுகள் போடுவதற்கே!!!!

Wednesday, September 9, 2009

என்னைப் பற்றி இன்னும் கொஞ்சம்...

நண்பர் "அரங்க பெருமாள்" அவர்கள் என்னை அழைத்திருக்கிறார். அழைப்பிற்கு எனது நன்றிகள்.

கொஞ்சம் ஆணி எனவே தாமதம். மன்னிக்கவும்.

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


1. அன்புக்குரியவர்கள்: சுற்றமும், நட்பும்
2. ஆசைக்குரியவர்: அன்புக் கணவர்
3. இலவசமாய் கிடைப்பது: அறிவுரை
4. ஈதலில் சிறந்தது: ஈதலே சிறந்தது
5. உலகத்தில் பயப்படுவது: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவருக்கு
6. ஊமை கண்ட கனவு: சுவாரசியம்
7. எப்போதும் உடனிருப்பது:மனசாட்சி
8. ஏன் இந்த பதிவு: அரங்கபெருமாள் அவர்களின் அழைப்பால்...
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது: மழலைச் செல்வம்
10. ஒரு ரகசியம்: ************
11. ஓசையில் பிடித்தது: மழலையின் சிரிப்பு
12. ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு
13. (அ)ஃறிணையில் பிடித்தது:வீடு... நுழைந்ததும் நிம்மதியைக் கொடுப்பதால்

1. A – Available/Single? No
2. B – Best friend? : to whom I can openup
3. C – Cake or Pie?: Cake
4. D – Drink of choice? : Fresh Juice
5. E – Essential item you use every day? :Spectacles
6. F – Favorite color? : Pink
7. G – Gummy Bears Or Worms?: ???
8. H – Hometown? - Sivakasi
9. J – January or February? ???
10. K – Kids & their names? Nanthini & Yazhini
11. L – Life is incomplete without? – Love
12. M – Marriage date? 27 Nov
13. N – Number of siblings? 1 brother
14. O – Oranges or Apples? Apple pieces and orange juice
15. P – Phobias/Fears? Anxiety
16. Q – Quote for today? : Where there is a will there is a way
17. R – Reason to smile? : No Reason needed
18. S – Season? Rainy
19. T – Tag 4 People? ஜீவன், அமித்துஅம்மா (ஹையா...இரண்டு பேரையும் முந்திட்டேன்), ஆயில்யன், நிஜமா நல்லவன்20.
U – Unknown fact about me? Let me start searching...
21. V – Vegetable you don't like?
22. W – Worst habit? Anger
23. X – X-rays you've had? Neck, Hand
24. Y – Your favorite food? Mom's cooking